Tuesday, December 30, 2008

ஆரம்பமே கோளாறாய் இருக்கிறது – பகுஜன் சமாஜ் கட்சி!



உத்திரபிரதேசத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து ஆண்டு கொண்டிருக்கும் குமாரி மாயாவதி அம்மையாருக்கு, சின்ன சின்ன ஆசையில் ஒரு ஆசை நாட்டின் பிரதமராவது. தமிழகத்தில் ஏற்கனவே ஒரு செல்வி அம்மையார் இருப்பதால், இவரை குமாரி என அழைக்கிறார்கள் என நினைக்கிறேன்

ஒரு மாநிலத்திலேயே இருந்தால், பிரதமராக முடியாது என்று நினைத்தவர் பல மாநிலங்களுக்கும் தன் கட்சியை பரவ செய்வதற்கான முயற்சிகளை இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார்.

பிரதம வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் உத்திரபிரதேசத்தின் பங்கு அதிகம். ஏனென்றால்...இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்திரபிரதேசம். மக்கள் தொகை அடிப்படையில் அங்கு தான் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம். மக்களைவையில் 85 எம்பிக்கள். ராஜ்யசபாவில் 31 எம்பிக்கள். (தமிழ்நாடு சார்பாக - மக்களவையில் 39. ராஜ்யசபாவில் 18 எம்பிக்கள்).

பிரதமர்களின் வரலாறும் அப்படித்தான் இருக்கிறது. இந்தியாவை ஆண்ட பல பிரதமர்கள் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

இதன் அடிப்படையில் தான்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு சகோதரத்துவ மாநாட்டை சென்னையில் நடத்தி முடித்தார். சிதறிக்கிடக்கும் தலித் அமைப்புகளை ஒன்று சேர்த்து வலுவான கட்சியாக மாற்ற போகிறார்களாம்.

இந்த மாநாட்டுக்கு பிறகு, இரண்டு நிகழ்வுகள் பகுஜன் சமாஜ் கட்சியைப் பற்றி அறிமுகத்தை அறிய முடிகிறது..

ஒரு நிகழ்வு – ஒரு பொறியாளர் கொலை. மாயாவதி அவர்களுடைய பிறந்த நாள் ஜனவரி 15யாம். இதற்காக அவருடைய கட்சி 1000 கோடி என இலக்கு வைத்து வசூலை தொடங்கியிருக்கிறார்களாம்.

ப.ஜ. கட்சியின் எம்.எல்.ஏ. சேகர் திவாரியினுடைய ஆட்கள் வசூல் வேட்டையில்... அவுலியா மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் குப்தாவின் வீடு புகுந்து, அவருடைய மனைவியை குளியறையில் தள்ளி அடைத்து, கேட்ட பணத்தை கொடுக்கதாததால் அவரை அடித்தே கொன்றுவிட்டார்கள்.

உத்திர பிரதேச அரசும் இந்த கொலையில் சேகர் திவாரிக்கு சம்பந்தம் உண்டு என ஒப்புக்கொண்டிருக்கிறது. இப்பொழுது அந்த எம்.எல்.ஏ. சிறையில் இருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக இந்த நிகழ்வு உ.பியை கலக்கி கொண்டிருக்கிறது. மாயாவதியை ராஜினாமா செய்ய சொல்லி, எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு செய்தி. இவர் தனது கட்சியை இந்தியா முழுவதும் எடுத்து செல்ல ஆசைப்பட்டது எல்லாம் சரி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, உத்திரபிரதேசத்தில் அதன் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 800 கோடிக்கு திட்டம் போட்டிருக்கிறார்களாம். அந்த செய்தியை தமிழ்நாட்டில் எல்லா தினசரிகளிலும் முழுப்பக்க விளம்பரம் செய்துள்ளனர். விளம்பரத்தின் கீழே பகுஜன் கட்சி பெயர் இருக்கும் எனப் பார்த்தால்... உத்திரபிரதேசத்தின் அரசு விளம்பரமாக இருக்கிறது.

அடப்பாவிகளா! தமிழ்நாட்டிலும் பார்க்கிறோம். அடிக்கல் நாட்டப்பட்டதோடு பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுவிடும். 800 கோடி திட்டம் 80 கோடி அளவிற்காவது நிறைவேற்றப்படும் என்பது ஒரு கேள்விக்குறி. இவர்கள் போடும் திட்டத்தின் நிலை இப்படியிருக்க... தன் கட்சியை வளர்க்க மக்கள் வரிப்பணத்தை இலட்சகணக்கில் வாரி இறைப்பது எந்த விதத்தில் சரி?

ஏற்கனவே இங்குள்ள கட்சிகள் எல்லாம் மோசமாக இருக்க, உத்திரபிரதேசத்தில் இறக்குமதியாகும் கட்சியும் இன்னும்
மோசமாக இருந்தால்? சிரமம். நாட்டையும், நாட்டு மக்களையும் நினைத்தால் பாவமாக இருக்கிறது.

Wednesday, December 17, 2008

பேச்சிலர் சமையல் – அத்தியாயம் 3


பேச்சிலர் சமையல் பற்றி நாம் ஏற்கனவே இரண்டு அத்தியாயங்களில் பேசியிருக்கிறோம்.

“சமையல்” – அதன் தன்மை, முறை, அதில் உள்ள சிக்கல்கள் பற்றி பேசுவது இடையிடையே வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது சமையல் – வகைகளை ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

இந்த பதிவில் – ‘ரெடிமேடு சாம்பார்’

மெட்ரோ சிட்டி பர பர வாழ்வில் பல நாள்கள் எங்களுக்கு உதவியது இந்த சாம்பார் தான்.

இந்த சாம்பார் இட்லி அல்லது தோசைக்கு தான். சாப்பாட்டுக்கு உதவாது. (சாப்பாட்டுக்கு ருசி குறைவாக இருக்கும்).

நம் வசிக்கிற எல்லா பகுதிகளிலும் அரைத்த மாவு எளிதாக கிடைக்கும். நல்ல பிராண்டாய் தேடிப்பிடித்து வாங்குவது நம் திறன் சார்ந்தது. எங்கள் பகுதியில் 5 இடங்களில் மாவு கிடைக்கும். ஒவ்வொரு இடமாய் வாங்கி பயன்படுத்தி, சோதித்து, ஐந்தாவது இடத்தில் கிடைத்த மாவு நன்றாக இருந்து இப்பொழுது தொடர்ச்சியாக வாங்குகிறோம்.

தேவையான பொருட்கள் : பச்சை பருப்பு அல்லது துவரம் பருப்பு அரை டம்ளர். (டம்ளரின் கொள்ளளவு - 125 மிலி). 1 தக்காளி,சாம்பார் (சின்ன) வெங்காயம் 10 துண்டுகள். இரண்டு காய்ஞ்ச மிளகாய், சிறிதளவு - மஞ்சள் பொடி, கடுகு உளுந்து, கறிவேப்பிலை, 5 மிலி எண்ணெய். (மூன்று பேருக்கு தேவையானதை குறிப்பிட்டிருக்கிறேன்)

செய்முறை :

செய்முறையில் எல்லா வகைகளுக்கும் சில சமையல் பாத்திரங்கள் அடிக்கடி வரும். அதையெல்லாம் வாங்கி நிரந்தரமாய் வாங்கி வைத்து கொள்வது நல்லது.

5 லி, 10 லி. குக்கர் ஒன்று. தோசைக்கல்

முதலில் (5லி.) குக்கரில் பருப்பை போட்டு இரண்டு முறை தண்ணீரில் கழுவி.. பிறகு, பருப்பின் அளவை விட நான்கு மடங்கு நல்ல தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். அதில் 5 வெங்காய துண்டுகளை (உறித்து) சின்னதாய் வெட்டியும் போடலாம், முழுதாகவும் போடலாம். 1 தக்காளியை 4 துண்டுகளாக வெட்டி போட்டு கொள்ளவும். சிறிதளவு மஞ்சள் பொடி, தேவையான உப்பு பொட்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும். பச்சை பருப்பு என்றால் 8 நிமிடம். துவரம் பருப்பு என்றால் 11 நிமிடம் வேகவிட வேண்டும்.

பிறகு, ஒரு தாளிப்பதற்கு ஒரு பாத்திரம் எடுத்து, அடுப்பில் வைத்து, கொஞ்சம் எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் சுட்டதும், சிறிதளவு கடுகு உளுந்து, கருவேப்பிலை போட வேண்டும். சட சட வெடிக்கும். அப்பொழுது காய்ஞ்ச மிளகாயை போட்டு, வெட்டி வைத்துள்ள மீதி 5 வெங்காய துண்டுகளை போட்டு, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு, குக்கரில் உள்ளதை இந்த பாத்திரத்தில் ஊற்றினால்... ரெடிமேடு சாம்பார் ரெடி.

பின்குறிப்பு : இதில் எங்கேனும் தவறு நடக்கும் பட்சத்தில், அது சாம்பாரில் பிரதிபலிக்கும்.

எங்களுடைய அனுபவத்தில்... இந்த சாம்பாரில்..

ஒருமுறை, குக்கரில் எல்லாம் போட்டுவிட்டு அடுப்பில் வைத்து விட்டு வந்த பின்பு 10 நிமிடம், 15 நிமிடம் ஆகிவிட்டது. விசில் வந்த பாடில்லை. போய் பார்த்தால்... அடுப்பை பற்ற வைக்கவேயில்லை.

Tuesday, December 9, 2008

போய் சேரும் இடம் – பாகம் 2 ( final Destination – part 2)


கனமழை வெள்ளத்தில் வீட்டில் மாட்டிக்கொண்டு, எங்கும் வெளியில் செல்லமுடியாத நிலை. நண்பர்களிடம் வாங்கி வைத்து நேரம் இல்லாமல் பார்க்காத சில படங்களை மின்சாரம் அபூர்வமாய் வந்த பொழுது, பார்த்தோம்.

***
அதில் ஒரு படம் “போய் சேரும் இடம்” (கதைப்படி இப்படித்தான் மொழி பெயர்க்க முடிகிறது என்னால்)

கதையை சுருக்கமாய் சொல்வதென்றால்...

நண்பர்களுடன் பிக்னிக் கிளம்புகிறாள் ஒரு இளம்பெண். செல்கிற வழியில் முக்கிய சாலையில், ஒரு சிக்னலில் காத்திருக்கும் பொழுது....இன்னும் சில நிமிடங்களில் கோர விபத்து நடக்க போவதாய் காட்சி படிமங்களாய் தெரிகிறது.

சுயநினைவுக்கு வந்தால் காட்சி படிமங்களாய் தெரிந்தது உண்மையில் ஒவ்வொன்றாய் நிகழ்கிறது. பதட்டமாகி அழுது வண்டியை மேற்கொண்டு நகர்த்தாமல்... வழி மறித்து நிற்க ஒரு போக்குவரத்து போலீஸ் விசாரிக்கிறார். விவரம் சொல்கிறாள். இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, அவள் சொன்ன மாதிரியே அங்கு கோர விபத்து நடக்கிறது. (நானும் 10 ஆண்டுகளாக மேலை நாட்டு படங்கள் பார்த்திருக்கிறேன். இப்படி மனம் பத பதைக்க வைக்கிற விபத்தை எந்த படத்திலும் பார்த்ததில்லை)

இதுவரை.. இ.எஸ்.பி. சக்தி என நாம் ஏற்கனவே நாம் தெரிந்த கதை தான். இனிமேல் தான் கதையில் நாம் அறியாத திருப்பம் இருக்கிறது.

ஏற்கனவே இதே முறையில், விமான விபத்து முன்கூட்டியே அறியப்பட்டு, தப்பித்த சில பேர் அடுத்தடுத்து கோரமான முறையில் ஒவ்வொருவராக சாகிறார்கள். (முதல் பாகம் என நினைக்கிறேன்)

அதே மாதிரி இப்பொழுதும் நடந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். பயந்த படியே, நாயகிக்கு காட்சி படிமமாய் தெரிந்த விபத்தில் எந்த வரிசையில் இறந்தார்களோ அதே வரிசையில் ஒவ்வொருவராக நமக்கு குலை நடுங்கிறபடி மரணத்தால் அடுத்தடுத்து துரத்தப்பட்டு கோரமாய் சாகிறார்கள்.

இறுதியில்... நாயகியும், போலீஸாக வருகிற நாயகனும் ஒரு ஜிம்மிக்ஸ் வேலை பார்த்து, மரணத்திலிருந்து தப்பிக்கிறார்கள் (!).

***

கதை – பூ சுத்தல் கதை. விதிவசக் கோட்பாடு. நம்மூர் மொழியில் சொல்வதானால் எமன் பாசக்கயிறை வீசிவிட்டால், உயிரை எடுக்காமல் விடமாட்டான்.
இந்த படத்தைப் பார்த்த பிறகு, வருங்காலங்களில் ஏதேனும் விபத்தில் தப்பினால், இந்த படம் நிச்சயமாய் நம் மனக்கண்ணில் வரும்.

திரைக்கதையும், காட்சி நகர்த்துகிற விதம் தான் இந்த படத்திற்கு மிகப் பெரிய பலம். அடிதடி, திகில் படம் பார்க்கிறவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.
****

Friday, December 5, 2008

பெட்ரோல் விலை குறைப்பும் இறக்க முடியாத விலைவாசியும்!


டிசம்பர் இறுதியில் தான் விலை குறைப்போம் என திமிர்தனமாக அறிவித்த அரசு, பெட்ரோல் விலை குறைப்பிற்காக நாடு முழுவதும் எழுந்துள்ள பல போராட்டங்களுக்கு பிறகு விலை குறைத்துள்ளார்கள். அதிலும், கண்டிசன் அப்ளை என்கிற சில நிபந்தனைகளுடன்.

உலகச் சந்தையில் கச்சா பேரல் உயரும் பொழுதெல்லாம், இங்கு விலை ஏற்றியவர்கள் 47 டாலருக்கும் கீழாக குறைந்த பிறகும், குறைக்க மனது வர மறுக்கிறது. இது ஒரு பிரச்சனை. இதற்கு பின்னணியில் வேறு ஒரு பிரச்சனையும் எழுகிறது. இந்த நிலையற்ற தன்மையில் பாதிக்கப்படுவது பெரும்பான்மை மக்களே!

ஒரு உணவகத்தில் வழக்கமாக சாப்பிடுவேன். மூன்று மாதங்களுக்கு முன்பு வரை டீ-யின் விலை ரூ. 3. இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ. 4. இரண்டு நாள்களுக்கு முன்பு, ரூ. 5 என மாற்றிவிட்டார்கள். இதே நிலை தான், அந்த உணவகத்தில் உள்ள எல்லா வகைகளுக்கும்.

இந்த கடுமையான விலைவாசி உயர்வுக்கு பல காரணங்களில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வும் ஒரு காரணம்.

இப்பொழுது, விலை குறைந்திருக்கிறது. அதன் எதிரொலிப்பு விலைவாசி குறைய வேண்டுமல்லவா! குறையாது. மொத்தத்தில் அவஸ்தைபடுவது மக்கள் தான்.

இந்த வருட துவக்கத்தில் நான் வாங்கிய சம்பளத்தின் மதிப்பு இன்றைக்கு 30% குறைந்திருக்கிறது. பல்வேறு செலவுகளை குறைத்து தான் சென்னையில் வாழமுடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு ஜனவரியில் தான் இருக்கும். நிலவுகிற பொருளாதார மந்த நிலையில் எல்லா முதலாளிகளும் நெருக்கடியில் இருக்கிறார்களாம். இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடையாது என இப்பொழுதே அறிவித்து விட்டார்கள்.

வேறு அலுவலகத்திற்கு நகரலாம் என்றால், பல அலுவலங்களிலிருந்து பல்வேறு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதாக பழக்கத்தில் H.R. கள் தெரிவிக்கிறார்கள். இப்பொழுது உள்ள சூழ்நிலையில், இருக்கிற வேலையை காப்பாற்றிகொள்வது தான் புத்திசாலித்தனம் எனவும் ஆலோசனை சொல்கிறார்கள்.

முதலாளிகளின் நெருக்கடி தொழிலாளிகளுக்கு நேரடியாக இறங்குகிறது. ஆனால், என்றைக்கும் தொழிலாளர்களின் நெருக்கடி முதலாளிகளை பாதிப்பதேயில்லை.

Monday, December 1, 2008

மழையால் நகரம் நரகமானது


மழை சென்னையை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. ஒருவழியாக மழை நின்றாலும், ஏரி உடைப்பெடுத்து பல பகுதிகளில் வீடை விட்டு சென்ற மக்களை இப்பொழுதும் குடியேற விடமால் தடுக்கிறது.

வீட்டிற்குள் தண்ணிர் வராத, மாதத்திற்கு தேவையான மொத்த பொருட்களையும் வாங்கி வைத்திருக்கிற குடும்பங்கள் தப்பித்துவிட்டன. எல்லா மழையிலும் ஏழைகள் தான் நிறைய பாதிக்கப்படுகிறார்கள். அன்றாடம் வேலை செய்து, அதில் அரிசி, பருப்பு வாங்கி சமைத்து சாப்பிடுகிற குடும்பங்களின் நிலை கையறுநிலை தான்.

மின்சாரம் இல்லை. அத்தியாவசிய பொருட்கள் கூட நிறைய தட்டுப்பாடாகிவிட்டது. பால் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் சில பகுதிகளில் அரை லிட்டர் பால் 20 ரூபாயாம். எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரைக்கும் லாபம்.

ஏற்கனவே அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தால் வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, வாடகை உயர்வு என சிக்கித் தவித்த மக்கள் தான் சிறுக சிறுக சேமித்த கொஞ்ச பொருட்களையும் இந்த மழை கொண்டு போய்விட்டது.

எல்லாவற்றையும் இழந்து தலைவிரி கோலமாய் நிற்கிற மக்களை பார்க்கும் பொழுது, காண சகிக்கவில்லை. துயரம் தான் பீறிட்டு எழுகிறது.

பிரச்சனைகள் வருவதற்கு முன் காப்பாற்றுகிற அரசு மக்கள் நலன் நாடு அரசு எனலாம். செத்தப் பிறகு போஸ்ட்மார்ட்டம் செய்ய வருகிற அரசை என்ன சொல்வது?

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கு, அரசு 10 கிலோ அரிசியும், ரூ. 2000 பணம் என அறிவித்து இருக்கிறது. மழையில் அல்லாடுகிற மக்களை காப்பாற்ற வக்கற்ற அரசு, இந்த இழப்பீட்டு பணத்தை அமுக்க எத்தனை பிரயத்தனப்படுகிறார்கள் என இனி பார்க்கத்தான் போகிறோம்.

நகரம் வளர்ச்சியடைவதாக சொல்கிறார்கள். வேதனை கலந்த சிரிப்பு தான் வருகிறது. உடலில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் சரியாக ஊட்டம் போய் சேர்ந்தால் அது ஆரோக்கியம். ஒரு இடத்தில் குவிந்தால் அது வளர்ச்சி இல்லை. வீக்கம் . உடனடியாக மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டிய நோய். இந்த நோயை குணப்படுத்தாமல், பெரும்பான்மை மக்களுடைய துயர மழை நிற்க போவதேயில்லை.

Thursday, October 16, 2008

பேச்சிலர் சமையல் - அத்தியாயம் 2


முன்குறிப்பு : நாம் ஏற்கனவே பேச்சிலர் சமையல் பற்றி ஒரு பதிவில் பேசியிருக்கிறோம். சமையலுக்குள் போவதற்கு முன் இது தொடர்பான வேறு சில விசயங்களைநாம் பேசிக்கொள்வோம்.


முதலில் சமையல் செய்வதற்கு நேரம் நிறைய முக்கியம்.

காலையில் அடித்துப் பிடித்து வேலைக்கு கிளம்பவே நமக்கு நேரம் இல்லாத பொழுது, சமைக்க எங்கிருக்கிறது நேரம்? என்பார்கள். இது ஒரு வகையில் உண்மை. இன்னொரு விதத்தில் பொய்.

பல உணவகங்களில் பலவற்றை சுவைக்காகவும், பல சமயங்களில் பற்றாக்குறையால், சிக்கனக்கத்திற்காவும் சுமாரான உணவகங்களில் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொண்ட பிறகு தான், சமைப்பது என்ற முடிவுக்கு வருகிறோம். ஆகையால், நெருக்கடியில் தள்ளபட்டுத்தான் நாம் சமைக்க முனைகிறோம்.


மேலும், இரவு நெடுநேரம் கண்விழித்திருந்து உருப்படியில்லாத பல வேளைகளை (தொலைக்காட்சி பார்ப்பது, மொக்கைப் பதிவு,பின்னூட்டம் போடுவது, குமுதம் படிப்பது) செய்கிறோம். அதைக் குறைத்து விரைவாக தூங்க தொடங்கிவிட்டால், காலையில் விரைவாக எழுந்துவிடலாம்.
சென்னையில் அமைதியான சூழ்நிலை, சுத்தமான காற்று எல்லாம் கிடைப்பது அதிகாலையில் தான். அதை அனுபவிக்காதவர்கள் அவர்களின் ஆயுளில் 5 ஆண்டைநிச்சயமாய் கழித்துவிடலாம்.

காலையில் விரைவாக எழ வேண்டும் என்பது எனக்கு பல நாள் ஆசை. நண்பர் ஒருவர் இதை வேறு சொல்லிவிட்டார் "இந்த உலகத்தில் நிறைய சாதனை செய்தவர்கள் அதிகாலையில் எழுந்தவர்களாம்". ஆசையை நிறைவேற்றவதற்கு பெரிய போராட்டமாக இருந்தது. மேலே உங்களுக்கு சொன்ன ஆலோசனைகளைசெய்தால் கூட விரைவாக எழ முடியாத பிரச்சனை வந்தது.

தோல்வி - 1


அலார்ம் வைத்து தூங்கினால், நாம் சோம்பல் பட்டு எழுவதற்குள் அறையில் உள்ள எவராவது அதை அணைத்துவிடுவார்கள்.

பகுதி வெற்றி - 1

"பாடி அலார்ம்" முயலலாம் என செய்துப்பார்த்தேன். நிறைய தண்ணீர் குடித்து தூங்கினால், காலையில் உடலே எழுப்பிவிடும். சில நாள்கள் பயன்பட்டது. அதற்கு மறக்காமல் நிறைய தண்ணிர் குடிக்க வேண்டும். மறந்துவிட்டால், அடுத்த நாள் எழ முடியாது.

பகுதி வெற்றி - 2

"பழங்குடியினர் சூரியன் மறைந்த பிறகு எதையும் உண்ண மாட்டார்களாம். அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார்களாம்". இதை செய்துப் பார்க்கலாம் என முயற்சித்தேன். பசி நடுநிசியில் பலமுறை எழுப்பியது. தூக்கம் கெட்டது. காலையில் எழும்பொழுது நிறைய பசியோடு சோர்வாக எழுந்தேன். இந்த முறை பழங்குடியினருக்கு தான் சரிப்பட்டுவரும் என முடிவுக்கு வந்தேன். நாம் நகரவாசி இதில் பாதியை கடைப்பிடிக்கலாம் என முடிவெடுத்து,பாதி வயிறு சாப்பிடுவது என முடிவுக்கு வந்தேன். பலன் தந்தது.

பகுதி வெற்றி - 3

நமக்கு மருத்துவ ரீதியான புத்தகங்கள் படிப்பதில் ஒரு ஆர்வம். வயிறு பற்றி படிக்கும் பொழுது, ஜீரணம் சம்பந்தமாய், மண்டையில் ஒரு யோசனை எழுந்து, மைதா வகைகள், மசாலா அதிகமுள்ள அயிட்டங்கள், அசைவ வகையறாக்கள் இரவு உணவில் தவிர்த்துக்கொண்டு, எளிதாய் ஜீரணிக்க முடிகிற இட்லி, இடியாப்பம் வகைகள் சாப்பிட பழகினேன். காலையில் சோம்பல் இல்லாமல் விரைவாக எழ முடிந்தது.

பகுதி வெற்றி - 4

மேலே சொன்ன பகுதி வெற்றிகள் எல்லாவற்றையும் செய்து போராடினால் கூட சோம்பல் பலமுறை ஜெயித்தது. மேலும் தீவிரமாய் சிந்தித்து, 2கி.மீ அருகேஉள்ள பூங்காவில் காலையில் ஒட ஆரம்பித்தேன். அதிலும் சில நாள்கள் தோல்வியாகி, உற்சாகம் வருவதற்கு ஒரு பெண்ணை தொடர்ந்து ஓட ஆரம்பித்தேன். அது சில நாள்கள் பலன் இருந்தது. அந்த பெண் ஏதோ காரணத்தினால், வராமல் போய்விட, நானும் ஓடுவது தற்காலிகமாய் நிறுத்திவிட்டேன்.

வெற்றி

இறுதியில் வெற்றி பெற்றேன். இப்பொழுதெல்லாம், 5 மணிக்கு எழுந்து, 5.30 மணிக்கு போய் 6.15 வரையும் அருகில் உள்ள ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்து6.30க்கெல்லாம் வீட்டில் வேலை செய்யத் தொடங்குகிறேன்.
நான் செய்தது எல்லாம்

* செல்லில் அலார்ம் வைப்பது. யாரும் அமர்த்தாமல் பார்த்துக்கொள்வது.

* தண்ணீர் நிறைய குடிப்பது.

* பாதிவயிறு சாப்பிடுவது.

* எளிதாய் ஜீரணிக்க கூடிய உணவு வகைகளை சாப்பிடுவது.

* ஜிம்முக்கு தொடர்ச்சியாய் போவது.

இன்னமும் சொல்வேன்.

பின்குறிப்பு : சமையல் பற்றி பேச ஆரம்பித்து, எங்கெங்கோ போகிறேன் என நினைக்கிறேன். நீங்கள் இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

Monday, October 13, 2008

ஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில் உங்கள் உயிர் போலீசால் பறிக்கப்படும்!


ஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில் 100 லஞ்சம் கொடுக்க தயாராய் இருங்கள். இல்லையெனில் உங்கள் உயிர் போலீசால் பறிக்கப்படும். புரியவில்லையா?

மதுரையில் மூன்று நாள்களுக்கு முன்பு, ஒரு கொலை. பத்திரிக்கைகளில் விபத்து என செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

சுரேஷ்குமார், வயது 32. மதுரையில் பில்ட்ரான் என்ற நிறுவனத்தில் கலெக்சன் வசூலிக்கும் பணிபுரிகிறவர். அன்றைக்கு மதுரையிலிருந்து கிளம்பி திருப்பரங்குன்றம் வரை கிளம்பியவர், ஹெல்மெட் அணியாமல் போயிருக்கிறார். போகும் வழியில் ஒரு செக்போஸ்டில் முருகன் என்றொரு போலீஸ்காரர் வழிநிறுத்தியிருக்கிறார்.

நிறுத்தினால் 100 ரூபாயைபிடுங்கிவிடுவார்களே என எண்ணி, நிற்காமல் செல்ல... திருடனைப் பிடிக்கக் கூட ஓடாத போலீஸ் "கைக்கு எட்டிய ரூ. 100 வாய்க்கு எட்டவில்லையே!" என பதறி, வண்டியுடனே ஓடி தன் குண்டாந்த்தடியை வண்டிக்குள் திணிக்க சுரேஷ்குமார் தடுமாறி, எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி, ஸ்பாட்டிலேயே உயிர் போய்விட்டது.

இது முதல்முறை அல்ல எனவும் மக்கள் சொல்கிறார்கள். ஏற்கனவே அந்த செக்போஸ்ட் வருகிற போவோரை எல்லாம் நிறுத்தி கல்லா கட்டுவதில் நிறைய பேமஸாம். இதற்கு முன்பு இதே மாதிரி தடியை விட்டு அப்பொழுது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள் இது விபத்தா? கொலையா?

சுரேஷ்குமாருக்கு 4 மாதத்திற்கு முன்பாகத்தான் திருமணம் நடந்திருக்கிறது. அவர் மனைவி இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறாராம்.

மக்கள் கூட்டமாய் கூடி போலீஸை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். போலீசு அன்பாய் கவனித்து(!) கலைத்து அனுப்பி விட்டார்கள்.
ஒரு உயிர் அநியாயாமாக பறிக்கப்பட்டு விட்டது. இந்த செயலை செய்த முருகன் என்ற போலீசு மீது வழக்கு போட்டிருப்பார்கள் என நினைத்தால் நீங்கள் அப்பாவி. அங்கு வந்த மேலாதிகாரி இந்த கொலை பற்றி என்ன சொன்னரென்றால் ...
"அந்த அரசு பேருந்து ஓட்டுநர் கொஞ்சம் கவனமாய் இருந்திருந்தால், இந்த விபத்தை (!) தவிர்த்திருக்கலாம். மேலும், உயிர் போகும் அளவுக்கு கவனக்குறைவாக வண்டி ஓட்டியதால் சுரேஷ் மீது வழக்கு பதியப்படும்" என்றார்.

நன்றி - தினமலர்

Wednesday, October 8, 2008

இறப்புச் சடங்கில் கலந்து கொண்ட நொந்த அனுபவம்!


சென்னையில் பலரும் ஒரு விசயத்தை ஒப்புக்கொள்வார்கள். 'பக்கத்து வீட்டுகாரர்களுடன் ஒட்டாமல் வாழ்வதை'. இதை செய்தித்தாள்களில் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.


சமீபத்தில் கூட ஒரு சென்னையின் புறநகரில் ஒரு வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்து, கொள்ளையடித்து போய்விட்டார்கள். அடுத்த நாள் வரை யாரும் பார்க்க்வில்லை எனசெய்திகள் படித்தோம்.

இந்த விசயம் நம் விசயத்தில் நடந்துவிடக்கூடாது என முடிவெடுத்தேன். அதை அமுல்படுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமும் வாய்த்தது. எங்களுக்கு எதிரே உள்ள வீட்டைஉள்ள வீட்டில் ஒரு வயதான அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அன்றைக்கு இரவு உயிர் பிரிந்தது.

அந்த வீட்டு குழந்தை என் அண்ணன் குழந்தையோடு எங்கள் வீட்டில் வந்து விளையாடும். இது போதாதா! இறப்புச் சடங்கில் கலந்து கொள்வோம் என முடிவெடுத்தேன். உறவைப்பலப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

சாமியானா பந்தல் போடப்பட்டு, காலையில் 20 பேர் குழுமியிருந்தார்கள். 9 மணிக்கு வேலைக்கு கிளம்பிய பொழுது, அங்கு நின்றிருந்த ஒருவரிடம் கேட்டேன். "எப்ப தூக்குவாங்க?"மாலை 4 மணி என்றார்.

அலுவலகம் போனதும், முதல் வேலையாக 4 மணிக்கு போவதற்கு பர்மிசன் வாங்கினேன். வேலையெல்லாம் அவசரம் அவசரமாய் முடித்துவிட்டு 4 மணிக்கு போய் வீட்டுக்குப்போய் சேர்ந்தேன்.


50 பேர் வரை குழுமியிருந்தார்கள். வண்டிகள் நிறைய நிறுத்தி வைத்திருந்தார்கள். போய் வண்டியை நிறுத்தும் பொழுது, ஒரு வண்டியை பதட்டமாய் தட்டிவிட்டுவிட்டேன். வரிசையாய் 4 வண்டிகள் சரிந்தன. டெத் வீட்டில் வந்திருந்த எல்லோரும் திரும்பி பார்த்தார்கள். தர்ம சங்கடமாய் போய்விட்டது.

பிறகு, ஒருவாறு சமாளித்து சோகமாய் முகம் மாறி, கூட்டத்தோடு கலந்து நின்றேன். "எப்பத் தூக்குவாங்க?" என கேட்டால், 5 மணி என்றார்கள். வரிசையாய் நிறைய சடங்குகள் செய்துஅவர்கள் தூக்கி நகரும் பொழுது, மணி மாலை 6.

வண்டியில் போகலாமா என யோசித்தேன். மரியாதையாக இருக்காது. நடந்தே போவோம் என முடிவெடுத்து, போனேன். தூக்கும் பொழுது, 60 வரை இருந்தவர்கள், வண்டி நகரும்பொழுது, மொத்தம் 10 பேர் மட்டுமே உடன் வந்தனர். அந்த தெரு மக்களில் நான் ஒருவன் மட்டுமே! சென்னை அப்படித்தான். நாம்தாம் மாற்றிக்காட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

வந்த 10 நபர்களில் இறந்தவர்களின் மகன்கள் இருவர். ஒருவர் ஒரு மகனைத் தாங்கிபிடித்தவாறு வந்தார். வண்டி இழுத்துக்கொண்டு வந்தவர் ஒருவர். மீதம் 6 பேர். அதில் மூவர்அந்த வண்டியை அலங்கரித்த பூ தோரணங்களை இழுத்து, இழுத்து உதிர்த்துக் கொண்டே வந்தனர். அப்படியே மூன்று குரங்குகள் செய்கிற சேட்டை தான் நினைவுக்கு வந்து போனது.


மீதி மூவரில் இருவர் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தனர். அதில் ஒருவர் இறந்த அம்மாவின் தம்பியாம். மீதம் இருந்த ஒருவர் மட்டுமே நடந்து வந்தார். கொஞ்ச தூரம் போனதும்,என்னருகே வந்தவர் ஒரு ஏரியாவை சொல்லி இங்கிருந்து எப்படி போவது என்றார். இங்கிருந்து குறிப்பிட்ட தூரம் ஷேர் ஆட்டோ. பிறகு, எல்லா பகுதிக்கும் பஸ் உண்டு என்றேன்.பேசிக் கொண்டே ஒரு ஷேர் ஆட்டோ வந்தது. ஏறிப் போயேவிட்டார்.


இப்பொழுது நான் தன்னந்தனியாக சோகமாய் நடந்து போனேன். இப்படியே திரும்பி போய்விடலாமாஎன நினைப்பு வந்தது. சே! அது மரியாதையாக இருக்காது. வந்தது வந்துவிட்டோம். கடைசி வரை போய்விடுவோம் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

இரண்டு கி.மீ. சுடுகாடு போய் சேர்ந்தோம். அப்படியே யூ டர்ன் எடுத்து, காலாற நடந்து வந்தேன். கரு கரு வென சூழ்ந்து நின்றிருந்த மேகம், இடி மழையுடன் பெய்ய ஆரம்பித்தது. மனிதர்களை நினைத்து, அவசர அவசரமான வாழ்வை நினைத்து நொந்து கொண்டு மழையில் நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்தேன்.

பின்குறிப்பு : இப்படி தெருவில் யாரும் வராத பொழுது, உறவினர்கள் யாரும் வராத பொழுது, உடன் சென்றேனே! பலன். அதற்கு பிறகு வந்த நாட்களில் அந்த இறந்த போன அம்மாவின் மகன் பார்வையில் ஒரு பழகிய சிநேகம் பார்வையில் வந்திருக்க வேண்டும் அல்லவா! ம்ஹீம். சுத்தமாக இல்லை. சென்னை மக்கள் திருந்த பல காலமாகும்.

Tuesday, October 7, 2008

மாண்புமிகு முதல்வர் அவர்களே!


தமிழகம் முழுவதும் மின்சார வெட்டு அதிகமாகி கொண்டே போகிறது. சிறு தொழில் செய்கிற ஒரு சிறு முதலாளி "மின்சார வெட்டால், ஏதும் உற்பத்தி செய்ய முடியவில்லை. அரசு ஏதாவது மான்யம் தருகிறதா" என அப்பாவியாய் கேட்டார்.

மின்சார வெட்டு விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஏனென்றால், சமீபத்தில் நமது மின்சார துறை அமைச்சர் வீராசாமி அடுத்த தேர்தலில் ஜெயிக்க முடியாது போனால், அதற்குமின்சார வெட்டுதான் முக்கிய காரணமாக இருக்கும்" என்கிறார்.

நாங்கள் இருக்கும் பகுதி சென்னையின் புறநகர் பகுதி. காலையில் 9 முதல் 11 மணி வரையும், மதியம் 2 முதல் மாலை 4 மணிவரையும் மின்சாரம் வெட்டு இருக்கும். நேற்று முதல் இரவு 9 முதல் 11 மணிவரை மின்சாரத்தை இல்லாமல் செய்துவிட்டார்கள். ஆக மொத்தம் தினமும் 6 மணி நேரம்.


சென்னையின் புறநகர் பகுதியே இப்படி இருக்கிறது என்றால்... கிராமங்களை நினைத்தால் பரிதாப நிலைதான்.

அலுவலகம் சென்றுவிடுவதால், பகல் நேர வெட்டால் பாதிப்பு ஏதும் நமக்கு தெரிவதில்லை. நேற்று இரவு 9 மணிக்கு மின்சார வெட்டு ஆனதும், மெழுகுவர்த்தி கடை கடையாக ஏறி பத்தாவது கடையில் மெழுகுவர்த்தி கிடைத்தது. கிடைக்கும் பொழுது மணி 10.15.

ஆகையால், மாண்புமிகு முதல்வர் அவர்களே!

மின்சாரம் தான் தரவில்லை!

நல்ல மெழுகுவர்த்தி கொடுக்க வழி செய்யுங்கள்!

Saturday, October 4, 2008

பேச்சிலர் சமையல்!

வேலைக்காக தன் சொந்த ஊர், மற்றும் குடும்பத்தை விட்டு விட்டு, சிறு நகரங்களில், மெட்ரோ சிட்டிகளில் வாழும் பல இலட்சகணக்கான இளைஞர்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சனை சாப்பாடு.
சென்னையில் 10 ஹோட்டல்கள் ஒரு ஏரியாவில் இருந்தால்... ஒன்று மட்டுமே ஏதோ தோறும். நல்ல ஹோட்டலாய் பார்த்து, பார்த்து சாப்பிடுவதற்கு நேரமும் இருப்பதில்லை. போதுமான பணமும் இருப்பதில்லை.
விளைவு. அல்சர். ஒரு குறிப்பிட்ட காலம் பிறகு தான் இந்த பிரச்சனை எழும். ஆனால், வந்துவிட்டால் பல்வேறு அவஸ்தைகள். அதற்கு பிறகு ஒரு வேளை கூட கவனம் இல்லாமல் இருக்க முடியாது. காரல் இல்லாமல், உறப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். இல்லையெனில், தொல்லை தான்.
பல்வேறு பேச்சிலர் நண்பர்கள். பல்வேறு பிரச்சனைகள். இதிலிருந்து தப்பிக்க அறையிலேயே சமைப்பது என்ற முடிவுக்கு வரும் பொழுது, என்னசமைப்பது. எப்படி சமைப்பது என்ற பிரச்சனை எழுகிறது.
எங்களுக்கும் இந்த பிரச்சனை வந்து, ஒரு சுபயோக சுபதினத்தில்(!) ஏற்கனவே சமைத்த அனுபவத்தை மூலதனமாக வைத்து சமைக்கத் தொடங்கினோம். அதிலும் பல்வேறு பிரச்சனைகள். ஒரு புரிதலுடன் பரஸ்பரம் பேசி, விவாதித்து வெற்றிகரமாய் சமைத்து அதில் சமையலில் பல அனுபவங்கள் கண்டோம்.

மேலும், சமைக்கத் தொடங்கியதும், சமையலில் எங்களுக்கு இருந்த அறிவு மிக குறைவு என அப்பொழுது தான் புரியத் தொடங்கியது. எலுமிச்சைப் பழ சோறு கிண்டலாம் என செய்ய ஆரம்பித்தால், செய்முறையில் எங்கோ தப்பி... சட்டி முழுக்க கருப்பாய் ஏதோ லேகியம் போல ஆகிவிட்டது.

கருப்பட்டியில் டீ போடலாம் என யோசித்து, போட்டால் பால் திரிந்தது. "கெட்டுப்போன பாலை கொடுத்திட்ட! கடைக்காரனோடு மல்லுக்கட்டி, புதுப்பால்வாங்கி திரும்பவும் முயற்சித்தால், மீண்டும் திரிந்தது. பிறகு தான் தெரிந்தது "கருப்பட்டியில் பால் திரியும்" என்பது.



கறிக் குழம்பு வைக்க ஆரம்பித்து... 99% சதவிகித வேலைகள் முடித்து, கொஞ்சம் வற்றியதும் இறக்கி வைக்க வேண்டிய வேலை மட்டும் பாக்கி இருக்கும்.ஏதாவது பேச ஆரம்பித்து ஆர்வத்தில் பேச்சு நீளும் பொழுது, ஒரு கருகிய வாடை அடுப்படியிலிருந்து வரும். போச்சு..அருமையான கறிக்குழம்பு... கருகிய குழம்பாய் மாறியிருக்கும்.

கடைகளில் நிறைய புத்தகங்கள் விற்கிறார்களே! என வாங்கி பார்த்தால், ஏற்கனவே சமையலில் புலியாய் இருப்பவர்களுக்கு பயன்படுகிற புத்தகங்கள் தான்அதிகம். அல்லது வெரைட்டிக்காக புத்தகங்கள் போட்டிருப்பார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் எத்தனை புது முயற்சிகள் செய்தாரோ! அதைவிட அதிகமாய் முயற்சிகள் செய்தோம். பல தோல்விகள். சில வெற்றிகள். அவற்றை பகிர்ந்துகொள்ளும் விதமாக மாதம் ஒரு பதிவோ, அல்லது இரண்டோ எழுத உத்தேசம். மற்றபடி... உங்கள் பதில்கள் கண்டு. பதிவர்கள் பலர் இந்த பிரச்சனைகளைஎதிர்கொண்டு இருப்பீர்கள். நீங்களும் இது சம்பந்தமாக கருத்து சொல்லலாம்.

Monday, September 29, 2008

மொக்கை, கும்மி என்றால்?


//நான் வலைப்பதிவுகளுக்கு சற்று புதியவன். இந்த மொக்கை கும்மி போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று விளக்கினால் உதவியாக இருக்கும். ஈஸ்வரன்//

முன்குறிப்பு : என்னைப் பார்த்து, வலையுலகிற்கு புதியவரான ஈஸ்வரன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம். என்னால் இயன்றவரை பதில் சொல்ல முயன்றிருக்கிறேன். எனக்கு அதில் பெரிய அனுபவம் இல்லை.
மொக்கையில், கும்மியில் மன்னர்கள், மன்னிகள், இளவரசுகள், இளவரசிகள் என ஒரு ராஜ்யமே நடத்துகிறவர்கள் இந்த கேள்விக்கு விடையளிக்க முயலுங்கள்.
ஈஸ்வரன்,
மொக்கை, கும்மி என்றால்...
சும்மா மாதிரி. அதற்கு பல அர்த்தங்கள் உண்டு.
நான் அறிந்த வரை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.
உள்ளடக்கமே இல்லாமல் பதிவிடுவது. அதில் விவாதிக்க தகுதியே இல்லாத விசயங்களை, பல பின்னூட்டங்களில் விவாதிப்பது.
பதிவர்கள் தங்களுக்குள்ளே சொறிந்து கொள்வது. பதிவர்கள் தங்களுக்குள்ளே புகழ்ந்து கொள்வது.
அனானியாக வந்து, அவர்களுக்குள்ளே உள்குத்து குத்துவது. பல நேரம் இதற்காக ஒதுக்கி, உள்குத்து குத்துவது யார் என்பதை கண்டுபிடிக்க தீவிரமாய் ஆராய்வது.
படிக்காமாலே, ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக எதையோ உளறிக்கொட்டுவது.
மொத்தத்தில், வலையுலகத்தை ஒரு கூட்டம் குட்டிச் சுவராக பயன்படுத்துவது மட்டும் இதன் பயன்.
பின்குறிப்பு : மொக்கை, கும்மி போன்றவற்றுக்கு நெகட்டிவாக சொல்லிவிட்டேன். சிலர் பாசிட்டிவாகவும் சொல்லக்கூடும். மற்ற பதிவர்களும் இதுபற்றி கருத்துச் சொல்லலாம்

Saturday, September 27, 2008

மொக்கை, கும்மி பின்னூட்டங்கள் - ஒரு கலகலப்பான விமர்சனம் (!)


சமீபத்தில் காயத்ரி அக்கா ஜெயங்கொண்டம் படத்தைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதன் கதை, கதாபாத்திரங்கள், டெக்னிக்கலான விசயத்தை எல்லாம் அலசியிருந்தார். மொத்தத்தில் மொக்கையான படம் என முடித்திருந்தார். அந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு, "படம் ஒரு மொக்கையென்றால், உங்க விமர்சனம் ஒரு மொக்கை. விமர்சனத்தில் விளையாட்டுத் தனம் இருக்கிறது" என பின்னூட்டமிட்டேன்.


அதற்கு காயத்ரி அக்கா ஏதும் பதில் சொல்லவில்லை. அதற்கு முந்தி எல்லா மொக்கை பின்னூட்டங்களுக்கும் சின்சியராக பதில் சொல்லிக் கொண்டே இருந்தவர், என்னுடைய பின்னூட்டத்திற்கு ஒன்றும் சொல்லவில்லை. இதனால் எனக்கு ஒரு பெரிய வருத்தமில்லை. என் பதிவுகளுக்கு கூட ஒன்று அல்லது இரண்டு பின்னூட்டங்கள் தான் வருகின்றன. மொக்கை பின்னூட்டங்கள் வருவதற்கு பதிலாக வராமலே இருக்கலாம். இம்மாதிரியான பின்னூட்டங்கள் பதிவிட்டருக்கு ஒரு பயனும் விளையபோவதில்லை. பின்னூட்டமிடுகிறவருக்கும் ஒன்றும் நேரப்போவதில்லை. இருவருக்கும் நேரம் தான் விரயம்.

இந்தப் போக்கு வலைப்பதிவில் பொதுவானது தான். விளையாட்டுத்தனமாய் பதிவு போடுவதும், பலரும் ஒன்று சேர்ந்து கும்மியடிப்பதும் இங்கு சகஜம் தான்.

வலைப்பதிவைப் பற்றி சில ஆச்சரியங்கள் எனக்கு எப்பொழுதும் இருக்கின்றன.

* பலருக்கு வலைப்பதிவில் செலவிட இவ்வளவு நேரம் எப்படி கிடைக்கிறது?

* இவர்கள் வாழுகிற சமூகம், பல கோடி மக்கள் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கே அல்லல்படுகிற சமூகம். வலைப்பதிவர்கள் பலரும் இதை எல்லாம் அறிந்த மக்கள் தான். ஒரு அன்றாடம் காய்ச்சிக் தன்னுடைய அன்றாட தேவைகளுக்கு அல்லல்படுவதே அவர்களின் பாடாய் இருக்கிறது.


அல்லல்படுகிற அவர்கள் சமூகத்தின் போக்கு புரிந்துகொள்வதும், அதற்காய் எதிர்வினை ஆற்றுவதும் நடைமுறையில் சிரமமானதாய் இருக்கிறது. ஆனால், இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையிலும் அவர்கள் போராடுகிறார்கள். ஆனால் சமூகம் பற்றி அறிந்து, இவ்வளவு நேரம் கிடைக்கிற வலையுலக மக்கள் ஏன் இதைப் பற்றி எழுத்தில் கூட எதிர்வினை ஆற்ற ஏன் மறுக்கிறார்கள்? இந்த மனநிலையை என்னவென்பது?

"ரோம் எரிந்து கொண்டிருந்த பொழுது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்" என்கிறார்கள். இவர்களை நீரோ மன்னனின் வாரிசுகள் என அழைக்கலாமா?

இவ்வளவு சொல்லியும் மொக்கையும், கும்மியும் குறையுமா என்ன? நொந்தகுமாரனால் நொந்து கொள்ளத்தான் முடியும். ஆனால், வரலாறு இவர்களை மன்னிக்காது.

பின்குறிப்பு - இனி, ஜெயங்கொண்டான் பட விமர்சனத்தைப் பார்க்கலாம். இந்த படத்தில் முக்கியமாய் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் இருக்கிறது - ஒரு சராசரி தமிழ் படத்திற்கானதிரைக்கதை, அதில் சில திருப்பங்கள், தொழில்நுட்பம் என எல்லா தகுதிகளும் இருக்கின்றன. கூடுதலாய் ஆபாசம் இல்லாமல் இருக்கிறது. பெண்கள் கதாபாத்திரங்களை ஊறுகாய் மாதிரி பயன்படுத்திக்கொள்ளாமல், உருப்படியாய் கொஞ்சம் வடிவமைத்து இருக்கிறார்கள்.

இந்த படத்தில் உள்ள முக்கியமாக விமர்சனம் செய்யப்பட வேண்டியது என்னவென்றால்....
ஒரு நடுத்தர வர்க்கம் சார்ந்த ஒரு இளைஞன் தன் வாழ்வின் பாதையில் கவனமாய் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு ரவுடி குறுக்கிடுகிறான். அவனோடு மற்ற கதாநாயகன்மாதிரி நேருக்கு நேர் மோதாமல், வீர வசனம் பேசாமல் புலம்பிக்கொண்டே ஒதுங்கி போகிறார்.


கதையின் போக்கில், கதாநாயகனோடு மோதலில், தன் மனைவியை தானே கொன்று விடுகிற வில்லன், இதற்கு காரணம் கதாநாயகன் தான், அவனை ஒழித்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கிறார். கதையின் முடிவில், கதாநாயகனும், வில்லனும் கட்டிப்புரண்டு சண்டையிடுகிறார்கள். இறுதியில்... வில்லனை தன் உடல் வலுவில் ஜெயித்து, ஒரு மெஸேஜ் சொல்கிறார்.

"நான் இவ்வளவு நாள் ஒதுங்கி போனதற்கு காரணம், எனக்கென்று கமிட்மென்ட்ஸ் இருக்கின்றன. (சுற்றி இருக்கிற பொதுமக்களையும் கைகாட்டி) எல்லோரும் ஒதுங்கி போகிறார்கள் என்றால், இது தான் காரணம். அதை நீ கோழைத்தனம் என நீ கருதக்கூடாது"
இந்த வசனத்தில் உள்ள கருத்தின் மூலம் தான், நடுத்தர வர்க்கம் தன் காரியவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் மறைத்துக் கொள்கின்றன. இவை எப்படி வெளிப்படுகிறது என்றால்...மற்ற வர்க்கங்கள் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் பொழுது, தன் பிள்ளை அமெரிக்காவிலும், லண்டனிலும் செட்டிலாவதைப் பற்றி மட்டும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் கவலைப்படுகிறது. ஆனால், தனக்கு ஒரு சின்ன பிரச்சனையென்றாலும், உலகமே தட்டிக் கேட்க வேண்டும் என்று குதிக்கும்.

இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். கோபம் கன்னாபின்னாவென்று வருகிறது. பிறகு ஒரு முறை நிதானமாய் எழுத முயற்சிக்கிறேன்.

Sunday, September 14, 2008

மேலே சட்டை, துண்டு! கீழே பேண்ட்டா?

மக்கள் தொலைக்காட்சி செய்திகளை, ஆண் செய்தி வாசிப்பாளர்களை பார்த்திருப்பீர்கள். வெள்ளைச் சட்டையும், தோளில் துண்டுமாக செய்தி வாசிப்பார்கள்.

நேற்று ஒருவர் "அவர்கள் வேட்டி கட்டாமல், கீழே பேண்ட் போட்டிருப்பார்கள்" என உறுதியாய் சொன்னார்.

அதை மேலும், உறுதி செய்யத்தான் இந்த பதிவு. மக்களே இது உண்மையா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பின்குறிப்பு: அப்படியே, கீழே பேண்ட் போட்டிருந்தாலும், அது பெரிய குற்றமில்லை. ஒரு தகவலுக்காக கேட்கிறேன்

Monday, September 8, 2008

1ரூ அரிசி! அர‌சு போடும் பிச்சை!



தமிழகத்தில் ரேசன் கடையில் ஏற்கனவே 2ரூபாய்க்கு அரிசி என அறிவித்த பிற‌கு, இன்றைக்கு வ‌ரைக்கும் தொடர்ச்சியாக அரிசி கடத்தல் என செய்திகள் வந்து கொண்டே இருக்கின்ற‌ன.

இப்பொழுது, அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி, கிலோ 1 ரூபாய்க்கு அரிசி என அறிவித்து இருக்கிறார்கள். அண்ணாவின் மிகப்பெரிய கனவுத்திட்டமாம். சந்தோசம்.

தென் தமிழகத்தில் மதுரையில் என் நண்பன் ஒருவன் ஒரு எடை போடும் மிசினில் வேலை பார்த்தார். ரேசன் கடை அரிசி எடை போட லாரி வரும் பொழுது, சோதனை செய்ய ஒரு அதிகாரியும் உடன் வருவாராம். அந்த பகுதியில் ஒரு அரிசி அரவை மில்லைச் சேர்ந்த ஒருவர் ஒரு கவரில் பணத்தை கொண்டு வந்து, தந்து விட்டு போவாராம். எதுக்காக? அரசு தருகிற அரிசி அவருடைய அரவை மில்லுக்கு போகும். அரவை மில்லிலிருந்து வேறு அரிசி ரேசன் கடைக்கு போகுமாம். இந்த‌ திட்ட‌த்தின் ல‌ட்ச‌ண‌ம் இது தான்.

தின‌த்த‌ந்தியில், அடித்தட்டு மக்களிடம் இந்த அரிசித் திட்ட‌த்தைப் ப‌ற்றி க‌ருத்துக‌ள் கேட்கும் பொழுது, க‌டையில் முன்பு 15க்கு விற்ற அரிசி எல்லாம், இப்பொழுது 25க்கு விற்கிற‌து. வாங்கி சாப்பிட‌ முடியவில்லை என்கிறார் ஒருவ‌ர்.

இன்னொருவ‌ர், ஏற்க‌னவே 2ரூ. அரிசியால் இர‌ண்டு வேளை சாப்பிட்டோம். இனி மூன்று வேளை வ‌யிறார‌ சாப்பிடுவோம் என்கிறார் இன்னொரு பொதுஜ‌ன‌ம்.

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களை சீராட்டி, பாராட்டி வளர்த்து, சிறு தொழில்க‌ளை அழித்த‌தின் மூல‌ம் ப‌ல‌ கோடி ம‌க்க‌ளை பிச்சைகார‌ர்க‌ளாக‌ மாற்றிவிட்ட‌து இந்த‌ அர‌சு.

1ரூ அரிசி என்ப‌து, க‌ருணாநிதி என்னும் ம‌ன்ன‌ன் த‌ன் குடிம‌க்க‌ளின் வ‌றிய‌ நிலை க‌ருதி, போட்ட‌ பிச்சையாக‌ இருக்கிற‌து.

இன்னும் எத்த‌னை கால‌ம் தான் இதையெல்லாம் பொறுப்ப‌து?
*****
இனி வ‌ருவ‌து, முன்பு எழுதிய‌து.
******
தமிழகத்தில் தி.மு.க அரசு கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

இப்பொழுது, ஆந்திராவில் ஆளும் காங்கிரசு கட்சியும் கிலோ 2.50 க்கு அரிசி வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது.

கர்நாடக காங்கிரசு கட்சியும், தமிழகம் போலவே.. தேர்தல் வாக்குறுதியாக, கிலோ 2 ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் தருவதாக அறிவித்து இருக்கிறது.

அந்த இரண்டு ரூபாய் அரிசியை கடந்த வாரம் வேலை தேடிக் கொண்டு இருக்கும், ஒரு நண்பரின் அறையில் சாப்பிட்டேன். அப்படி ஒரு கெட்ட வாடை. ' தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டியது தானே' என்றேன். நான்கு முறை கழுவியதாக கூறினான். அதிர்ச்சியாய் இருந்தது.இந்த அரிசியை தான் கேரளாவுக்கு கடத்துவதாக அடிக்கடி பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில மூட்டைகளோடு ஆந்திராவுக்கு ரயில் ஏற தயாராக நின்றிருந்த ஒரு வயதான அம்மாவை பிடித்து, சோதனை செய்யும் பொழுது, அது நம்ம ரேசன் அரிசி.

இப்படி இந்த அரிசிக்காகத் தான் இத்தனை களேபரம் என்றால், நாடு வளர்ச்சி விகிதத்தில் செல்கிறது என சொல்கிற நம்முடைய பொருளாதார புலிகள் மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் காகிதப்புலிகள் தானா?

சென்னையில், இரவில் குடிப்போதையில் அல்லது கன்ட்ரோல் இல்லாமல் எந்த வண்டியாவது நிலை தடுமாறினால், அன்றைக்கு மூன்று முதல் 5 மக்கள் செத்துப்போகிறார்கள். செய்தி தாள்களில் பார்க்கிறோம். இருக்க வீடு இல்லை.

தமிழக கிராமங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன. காரணம் விவசாயம் நொடித்துப் போய், சிலர் வெளிநாடு நகர்ந்து விட்டார்கள். பலர் நகர்ப்புறம் நகர்ந்துவிட்டார்கள். செய்ய வேலை இல்லை.

இப்படி, மக்களுடைய வண்ண மயமான வாழ்க்கையை சோகமயமாய் கருப்பு வெள்ளையாய் மாற்றிவிட்டு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் கொடுப்பவர்களை என்ன சொல்வது? வக்கிரப்புத்திகாரர்கள் எனலாமா?இல்லையெனில்...என்ன சொல்ல வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!

Monday, August 25, 2008

போட்டாவில் சிக்கிய போலீஸ்




நன்றி : தினமலர்




தமிழக போலீசார்
உலகப்புகழ் பெற்றவர்கள்.
அவர்களின்
திறமைகளைப் பாராட்டி
தமிழக அரசு
தங்கப்பதக்கம் தருகிறது.
வீடுகள் கட்டித்தருகிறது.
மற்றத் துறைகளைவிடவும்
பல சலுகைகளை
அள்ளித்தருகிறது.

இருப்பினும்...
லஞ்சம் வாங்கி
வயிறு வளர்க்கும்
சுகம் இருக்கிறதே!
அடடா!

அந்த சுகத்தை
எந்த தங்கப்பதக்கமும்
தருவதில்லை


Thursday, August 14, 2008

'ஜ‌ன‌ க‌ன‌ ம‌ன' - கவிதை


நூல் நூற்கிறாள்
என்னுடன் போட்டி போட்டு
படித்த தனம்

டீ க‌டையில்
கிளாஸ் க‌ழுவுகிறான்
முத்து முத்தாய் எழுதும்
முத்துராசு

கணக்கு பாடத்தில்
100க்கு 100 வாங்கும்
க‌ருப்பு ச‌ந்தான‌ம்
வெல்டிங் பட்டறையில்
கொஞ்சம் கண் அயர்ந்ததில்
செத்துப் போனான்

இருப்பினும்...
நெஞ்சு நிமிர்த்தி பாட‌லாம்
'ஜ‌ன‌ க‌ன‌ ம‌ன'

பின்குறிப்பு : அக்கா பெண் 9ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளியில் ஆண்டுவிழாவிற்காக கவிதை கேட்கிறார்கள். எழுதி தாருங்கள் என்றாள்.

'நீயே எழுதுவது தான் சரி.எழுதி கொண்டு வா! திருத்துகிறேன்' என்றேன்
ஒன்றும் எடுபடவில்லை. அடம்பிடித்து எழுதி வாங்கிப் போனாள். கவிதை நன்றாக இருந்ததாக பாராட்டி, பள்ளி இதழில் வெளியானது.

கவிதையில் வரும் பாத்திரங்கள் நிஜமானவர்கள். இரவில் என்னுடன் பேசி போன ஒரு மணி நேரத்தில் செத்துப்போனான். அடுத்த நாள் அதிகாலையில் மார்ச்சுவரியில் பார்த்த சந்தானத்தின் உடலை நினைத்தால், இன்றைக்கும் என்உடல் புல்லரிக்கும். நெஞ்சு கணத்துவிடும். இறக்கும் பொழுது அவனுக்கு வயது 15.

Saturday, August 9, 2008

இனி அடிக்கடி எழுதுவேன் - நொந்தகுமாரன்






முன்குறிப்பு : அதிக வேலை காரணமாக சில காலம் வலையுலகில் இருந்து விலகியிருந்தேன். வலையுலகில் இன்னமும் கும்மியும், ஜல்லியும் குறைந்தபாடில்லை. இனி அடிக்கடி வலம் வருவேன்.
"எழுத சொல்லி பல பதிவர்கள் நிறைய பின்னூட்டமிடுகிறார்கள். பதிவுலக நண்பர்கள் அன்பு தொல்லை செய்கிறார்கள்" இப்படியெல்லாம் புருடா விடமாட்டேன்.
இடைக்காலத்தில் நிறைய நொந்த அனுபவங்கள். எனக்கே ஆறுதலாய் இருக்கட்டுமே என்று தான் எழுதுகிறேன்.

இன்று சாலை கடக்கையில் ஒரு வாசகம் பார்த்தேன்.

சாலையில் செல்கையில்
செல்போன் பேசாதீர்.
அழைப்பது
எமனாக கூட இருக்கலாம்.

எப்பொழுதும் கட்டளைகளாக, அறிவுரைகளாக எழுதிருப்பார்கள். படித்ததும் பிடித்திருந்தது.

Wednesday, August 6, 2008

ஹெல்மெட் - சில குறிப்புகள்!



கவனிக்கவும் - திருவாளர் டிராபிக் ராமசாமி அவர்கள்
பல வண்டிகளில்
வண்டியின் உறுப்பாய்
லாக்கரில் துருப்பிடித்து
பரிதாபமாய் தொங்குகிறது.

வழுக்கைத்தலைகாரர்கள்
பெரும்பாலும் அணிவதில்லை
அவர்கள் விதிவிலக்கு
பெற்றிருக்கிறார்களா என்ன?

ஹெல்மெட் அணிவதால்
முடி கொட்டுவதாய்
நண்பன் புலம்புகிறான்
விசேஷ ஷாம்பூ
தயாரிக்கிறார்களா?

தெரிவியுங்கள்
நாலு செல்
ஆறு ஹெல்மெட்
மறந்து தொலைத்ததாய்
பட்டியல் தருகிறான்
ஹெல்மெட் அணிவதால்
மறதி அதிகமாகுமா?

ஹெல்மெட் சட்டம்
டிராபிக் போலீஸ்க்கு
அரசு மறைமுகமாய்
அறிவித்த போனஸ் அறிவிப்பா?
ரூ. 100 கொடுத்தால்
விட்டுவிடுகிறார்கள்.

தென்மாவட்டங்களில் - யாரும்
அணிவதேயில்லை
நண்பர்கள் சொன்னார்கள்.
டிராபிக் ராமசாமி
சென்னையில் மட்டும் இருப்பதலா?!

Friday, May 2, 2008

சாத்தான் வேதம் ஓதுகிறது!


மெல்ல மெல்ல கொல்லுகின்ற
மெத்தனால்
கடைசி வரை கொல்லுகின்ற
கள்ளச்சாராயம்
கொடிய விஷத்தன்மை கொண்ட
போலி மதுபானம்

இவற்றைக் குடிப்பதால் வரும் கேடுகள்:

1. கண்பார்வை, உயிர் பறிபோகும்
2. நல்ல குடும்பம் நடுத்தெருவிற்கு வரும்
3. மானம் மரியாதை அடியோடு போகும்
4. உறவும், நட்பும் ஒதுங்கிச் செல்லும்
5. குடும்பத்தை அழித்து குப்பை மேடாக்கும்

உணருங்கள்! திருந்துங்கள்!!
கள்ளச்சாராயம், போலி மதுபானம் காய்ச்சாமல்,
குடிக்காமல் உயந்தவராக வாழுங்கள்

சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை
- இப்படி சென்னை முழுவதும் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த நாட்டு குடிமக்களுக்கு..

* தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான தனியார் கல்லூரிகள்.
மேலும், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருக்கின்றனவாம். விரைவில் அரசு அனுமதி தர தயாராய் இருக்கிறது.

மக்களுக்கு கல்வி கொடுக்கும் பொறுப்பில்லை. தனியார் கல்லூரிகள் தரமான கல்வி தரும். அரசு நம்புகிறது.

* நல்ல குடிநீருக்காக 20 லிட்டர் தண்ணீர், ரூ. 20 க்கு மக்கள் வாங்கி குடிக்கின்றனர்.

குறைந்தபட்சம், மக்களுக்கு தரமான குடிநீர் கொடுக்க பொறுப்பில்லை. தனியார் தரமான குடிநீர் தருவார்கள். அரசு நம்புகிறது.

* ஆனால், இந்த அரசுகள் தனது குடிமக்களின் நலன் கருதி, தனியாரிடமிருந்து புடுங்கி, கண்ணும் கருத்துமாய் தரமான சாராயம் தயாரித்து, அலைச்சலின்றி வாங்க தெருவுக்கு ஒரு டாஸ்மார்க் கடை திறந்து, இரவு 11 மணி வரைக்கும் பொறுப்பாக சப்ளை செய்கிறது.

எனக்கு ஒண்ணு மட்டும் புரியலைங்க!

அரசு விற்கிற சாராயத்தை குடிச்சா

உசிரு போகாதா!
குடும்பம் தெருவுக்கு வராதா!
மான, மரியாதை போகாதா!

மக்களே!
நீங்க தான் எனக்கு இதை விளக்கனும்!

Wednesday, April 30, 2008

மே தினம் - சில கேள்விகள்


"அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!


மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?"


நாளை மே தினம். எங்கள் அலுவலகத்தில் 'விடுமுறை' என நோட்டிஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள்.

பிளாக்கில், பலரை போல மொக்கையாய் ஏதும் போடாமல், உருப்படியாய் எதாவது எழுதலாம் என யோசித்ததில்....

மே தினம் பற்றி என அலுவலக நண்பர்களிடம் கேட்டால், ஒருத்தருக்கும் உருப்படியாக ஒன்றும் தெரியவில்லை.

பிறகு, கொஞ்சம் தமிழ் விக்கிபீடியாவில் தேடியதில், சில தகவல்கள் சேகரித்தேன். சில கேள்விகளும் எழுந்தது.

18ம் நூற்றாண்டுகளில் வளர்ந்த நாடுகளில், தொழிற்சாலைகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட எல்லா தொழிலாளர்களும் 12 மணி நேரம், 18 மணி நேரம் வேலை செய்ய மிரட்டப்பட்டு இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில், சாசன இயக்கம் என்ற தொழிலாளர் இயக்கம் 10 மணி நேரம் வேலை என்ற கோரிக்கை உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வைத்து போராட துவங்கி இருக்கிறது.

அதற்குப் பிறகு, உலகம் முழுவதிலும் தொழிலாளர் இயக்கங்கள் குறிப்பாக கம்யூனிச இயக்கங்கள் 8 மணி நேரம் வேலைக்காக தொடர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள்.

பல இலட்சகணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். போராட்டங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல தொழிற்சங்க தலைவர்கள் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்கள்.

தொடர் போரட்டத்தின் வழியே, 1889 ஆண்டில் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைப்பிடிக்க வழிவகுத்தது.

................. இதெல்லாம் வரலாறு.

என் கேள்வி என்னவென்றால்...

8 மணி நேரம் வேலைக்காக 150 ஆண்டுகளுக்கு முன்பு போராடியிருக்கிறார்கள்.

அதற்கு பிறகு எல்லா நாடுகளும் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடுகளாக மாறியிருக்கின்றன.

பொருளுற்பத்தியில் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்த பல நவீன அறிவியல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தி வருகின்றன.

மக்கள் தொகை பத்து மடங்காக பெருகியிருக்கிறது.

அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!

மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?

இது பற்றி, ஒரு நண்பரிடம் கேட்டதற்கு,

"எப்பொழுதுமே, ஒரு மக்கள் கூட்டம் வேலை இல்லாமல் இருந்தால் தான், முதலாளிகளுக்கு குறைவான கூலிக்கு ஆள் கிடைக்கும். எல்லா அரசுகளும் முதலாளிகளுக்கு ஆதரவாக இதை கவனமாக பார்த்து கொள்கிறது" என்றார்.

நம் நாட்டில் 5 டிஜிட், 6 டிஜிட் சம்பளம் வாங்கும், கணிப்பொறி வல்லுநர்கள் பாவம். மற்ற தொழிலாளர்களை விட நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். சம்பளம் அதிகம். உரிமைகள் குறைவு. சின்ன சின்ன விசயங்களுக்காகவே, அல்லது காரணம் என்னவென்று அறியாமலேயே வேலையை விட்டு தூக்கி விடுகிறார்களாம்.
வருங்காலத்தில், கணிப்பொறி வல்லுநர்கள் தான், மே தினப் போராட்டங்களில் முன்நின்று போராடுவார்கள் என நினைக்கிறேன்.
எங்க மானேஜிங் டைரக்டர் கூலாக சொல்வார். "நீ போயிட்டா, எனக்கு லட்சம் பேர் க்யூவில நிற்கிறார்கள்" என்பார்.

ஆதலால், என் நண்பர் சொன்ன கருத்து எனக்கு சரியெனப்படுகிறது. உங்களுக்கு!

Tuesday, April 29, 2008

பட்ஜெட்


ஒவ்வொரு
25 - தேதியிலும்
மனம் சபதமிடுகிறது

'இனி - சிக்கனமாய்
செலவழிக்க வேண்டும்'

Friday, April 25, 2008

அழகிய யுவதிகள்


கி.பி. 1000
அப்பொழுது - நான்
பிறந்திருக்கவில்லை

கி.பி. 2000
அப்பொழுது - நான்
துடிப்பான இளைஞன்

கண்ணில்படுகிற
இளம்பெண்களில்
பத்தில் இருவர் - அழகாய்
இருந்தார்கள்

கி.பி. 2004
பத்தில் ஏழு பெண்கள்
அழகாய் தெரிந்தார்கள்.

இப்பொழுதெல்லாம்
எல்லா இளம்பெண்களும்
மிக அழகாய் தெரிகிறார்கள்

சீக்கிரம்
கல்யாணம் பண்ணிடனும்

Sunday, April 20, 2008

"ஓ" வென அழுதுவிடுகிறேன்!




வானம் வெறித்து கிடக்கிற
ஒரு உடலாவது
வாரம் ஒருமுறை கண்ணில்படுகிறது

முதலாளிக்கு பயந்து - ஓடி
தண்டவாளம் கடக்கும் மனிதர்களை - தினம்
பயத்துடன் பார்க்கிறேன்.

இயந்திர வாழ்க்கையில்
தொடரும் பயணங்களில்
மனம் மரத்துப் போய் - பார்க்க
பழகிகொண்டது.

இருப்பினும்
மோதி தெறித்து விழும்
சிதைந்த உடலிருந்து - நகைகளை
அறுத்து ஓடுகிற மனிதர்களை
கண்டால் தான்
மனம் பொறுக்காமல்
"ஓ"வென அழுதுவிடுகிறேன்.

* சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் ரயிலில் அடிபட்டு ஏழு ரயில்வே ஊழியர்கள் உட்பட 90 பேர் பலி.

தற்கொலைகள், தண்டவாளம் கடக்கிறவர்கள், வேலை செய்கிற ரயில்வே ஊழியர்கள் என கடந்த மூன்று மாதத்தில் சென்ட்ரல் - கும்முடிபூண்டி-ஆவடி பாதையில் 60 பேர்களும், சென்ட்ரல் செங்கல்பட்டு பாதையில் 30 பேர்களுமாய் 90 பேர்கள் பலி.

இதில் வேதனை என்னவென்றால் போலீசார் சம்பவ இடம் போகும் முன்னரே சிலர் இறந்துகிடக்கும் உடல்களில் இருந்து பணத்தையும், நகைகளையும் முதலிலேயே எடுத்துவிடுவதாக கூறப்படுகிறது.


- தினத்தந்தி - 20.04.2008 பக். 19 லிருந்து.



Friday, April 18, 2008

நகரவாசி - கவிதை



விடிகாலையில்
சூரிய உதயம் பார்த்து
வருடங்களாயிற்று.

கடற்கரையில்
அலைகளோடு விளையாடி
சில மாதங்களாயிற்று.

நண்பர்களோடு
அரட்டையடித்து
சில வாரங்களாயிற்று

அவசர அவசரமாய் இயங்கி
தானாய் புலம்பி
தனித்தீவாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.

பாவம் நான்
எனக்காய் இரக்கப்படுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாய்
நகரவாசியாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.

Thursday, April 17, 2008

கருப்பு வெள்ளை வாழ்க்கையும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும்!




தமிழகத்தில் தி.மு.க அரசு கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

இப்பொழுது, ஆந்திராவில் ஆளும் காங்கிரசு கட்சியும் கிலோ 2.50 க்கு அரிசி வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது.

கர்நாடக காங்கிரசு கட்சியும், தமிழகம் போலவே.. தேர்தல் வாக்குறுதியாக, கிலோ 2 ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் தருவதாக அறிவித்து இருக்கிறது.

அந்த இரண்டு ரூபாய் அரிசியை கடந்த வாரம் வேலை தேடிக் கொண்டு இருக்கும், ஒரு நண்பரின் அறையில் சாப்பிட்டேன். அப்படி ஒரு கெட்ட வாடை. ' தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டியது தானே' என்றேன். நான்கு முறை கழுவியதாக கூறினான். அதிர்ச்சியாய் இருந்தது.

இந்த அரிசியை தான் கேரளாவுக்கு கடத்துவதாக அடிக்கடி பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில மூட்டைகளோடு ஆந்திராவுக்கு ரயில் ஏற தயாராக நின்றிருந்த ஒரு வயதான அம்மாவை பிடித்து, சோதனை செய்யும் பொழுது, அது நம்ம ரேசன் அரிசி.

இப்படி இந்த அரிசிக்காகத் தான் இத்தனை களேபரம் என்றால், நாடு வளர்ச்சி விகிதத்தில் செல்கிறது என சொல்கிற நம்முடைய பொருளாதார புலிகள் மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் காகிதப்புலிகள் தானா?

சென்னையில், இரவில் குடிப்போதையில் அல்லது கன்ட்ரோல் இல்லாமல் எந்த வண்டியாவது நிலை தடுமாறினால், அன்றைக்கு மூன்று முதல் 5 மக்கள் செத்துப்போகிறார்கள். செய்தி தாள்களில் பார்க்கிறோம். இருக்க வீடு இல்லை.

தமிழக கிராமங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன. காரணம் விவசாயம் நொடித்துப் போய், சிலர் வெளிநாடு நகர்ந்து விட்டார்கள். பலர் நகர்ப்புறம் நகர்ந்துவிட்டார்கள். செய்ய வேலை இல்லை.

இப்படி, மக்களுடைய வண்ண மயமான வாழ்க்கையை சோகமயமாய் கருப்பு வெள்ளையாய் மாற்றிவிட்டு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் கொடுப்பவர்களை என்ன சொல்வது? வக்கிரப்புத்திகாரர்கள் எனலாமா?

இல்லையெனில்...

என்ன சொல்ல வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!

Wednesday, April 16, 2008

காருக்கு ஒரு நீதி: பைக்குக்கு ஒரு நீதியா?




தமிழ்நாட்டில் பைக் ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் 'கட்டாயம் ஹெல்மெட்' அணிய வேண்டும் என சட்டம் போட்டார்கள்.

இப்பொழுதெல்லாம், வேறு ஏதும் சோதனை செய்வதில்லை. ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க எளிதாக இருப்பதால், தெருவுக்கு தெரு நின்று காவல்துறையினர் சிக்கியவரை ரூ. 50, ரூ. 100 என கல்லா கட்டுகிறார்கள்.

லஞ்சம் பெருகியுள்ள நாட்டில் மக்கள் நலன் காக்க போடுகிற சட்டங்கள், அந்த மக்களுக்கு எதிராகத்தான் வேலை செய்யும் என்பது நிதர்சனம்.

தென்மாவட்டங்களில் ஹெல்மெட்டெல்லாம் ஒருவரும் அணிவதில்லை. காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லையாம். நண்பர்கள் சொன்னார்கள்.
டிராபிக் இராமசாமி சென்னையில் மட்டும் இருப்பது தான் காரணமாக இருக்கலாம்.

இந்த செய்தியை எல்லோரும் தெரிந்திருப்பார்கள். நான் சொல்ல வந்த செய்தி வேறு.

கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு பிறகு, கார்களில் கிரிமினல் குற்றங்கள் நிறைய நடப்பதால், 'சன் கண்ட்ரோல் பிலிம்' ஒட்டக்கூடாது என்றொரு சட்டம் போட்டார்கள்.

அதற்கு பிறகு தொடர்ச்சியாய் கவனிக்கிறேன். பல கார்களில் பிலிம் ஒட்டப்பட்டு சுதந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.

நான் கவனித்த வரையில், பைக்கை தெருவுக்கு தெரு நிறுத்தி, கல்லா கட்டுபவர்கள் ஏன் காரை நிறுத்தி கல்லா கட்டுவதில்லை.

இதனால், எனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன

1. இந்த சட்டம் வாபஸ் ஆகிவிட்டதா? அல்லது

2. திருட்டு சி.டி விற்பவர்கள், டாஸ்மார்க் பார் நடத்துபவர்கள், கஞ்சாவிற்பவர்கள் மாதந்தோறும் அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு மாதம் மாதம் மாமூல் கொடுப்பது மாதிரி, கார்களை வைத்து கிரிமினல் தொழில் செய்பவர்கள் மாமூல் கொடுக்கிறார்களா? அல்லது

3. கார் வைத்திருப்பவர்கள் சமூகத்தில் பெரிய மனிதர்கள். அவர்கள் என்னதான் தவறு செய்தாலும், மதிப்புடன் நடத்தவேண்டும் என நினைக்கிறதா?

உங்களுக்கும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்

Sunday, April 13, 2008

அன்பான வலையுலக பெருமக்களே!


'பெருமக்கள்' என்ற வார்த்தையெல்லாம் கொஞ்சம் அதிகம். 'ஓபனிங்' நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த பில்டப்.

கடந்த நான்கு மாதங்களாக சில சொந்த கவலைகள், புதிதாக வேலைக்கு சேர்ந்ததினால் சில புதிய வாழ்க்கை மாறுதல்கள் என வாழ்க்கை சுழற்றியடித்து, பின்பு சுதாரித்து திரும்பிப் பார்த்தால் நான்கு மாதங்கள் ஓடிவிட்டன.

கடந்த நான்கு மாதங்களாக பதிவர்களையும், அவர்கள் இடும் பதிவுகளையும் உன்னிப்பாய்(!) கவனித்ததில், மொக்கைப் போடுவர்கள் இன்னும் மோசமான மொக்கைப்போடுகிறவர்களாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

அனானிகள் புதிய மாற்றம் பெற்றிருக்கிறார்கள். தன் பெயரைச் சொல்ல முடியாத பயந்தாங்கொள்ளி அனானி, என் பெயரைப் பயன்படுத்தி, உண்மைத்தமிழன் அவர்களை நக்கல் செய்திருக்கிறான்.

பதிவுலகை விட்டு, நான்கு மாதம் வனவாசம் போனது, எனக்கு பயனாகத்தான் இருந்திருக்கிறது.

இனி, தொடர்ச்சியாய் எழுதலாம் என நினைத்திருக்கிறேன். காரணம் - பலரும் உருப்படியாய் ஒன்றும் எழுதாத பொழுது, நாம் ஏன் எழுதக்கூடாது என என் மனசாட்சி கேட்கிறது.

இனி அடிக்கடி வருவேன்.