Friday, June 29, 2012

ஒரு கல்லில் இரண்டு மாங்கா! - காவல்துறை

எங்கள் அலுவலகம் அருகே ஒரு சாலையில் நெரிசல் அதிகம் என அந்த பாதையை ஒருவழிப்பாதையாக மாற்றியது போக்குவரத்து காவல்துறை!

"இது ஒரு வழிப்பாதை மாற்றுப்பாதையில் போ!" என சொல்வதற்கு இரண்டு போலீஸ்காரர்களையும் நியமித்திருந்தார்கள். மக்களும் மீண்டும் மீண்டும் அந்த பாதையை பயன்படுத்த முனைந்தார்கள்.

இரண்டு காவல்துறைக்கு தண்டமா சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கே! மக்களும் திரும்ப, திரும்ப இந்த சாலைப்பக்கம் வருகிறார்களே என ரூம் போட்டு யோசித்த போலீஸ், ஒரு ஏற்பாடு செய்தது.

கூடுதலாக ஒரு சார்ஜன்டை நியமித்து, அந்த இடத்தை சோதனை செய்யும் இடமாக மாற்றிவிட்டது.  ஹெல்மெட் போடாதது, லைசன்ஸ் இல்லாதது, காரில் கருப்பு கண்ணாடி ஓட்டாதது என இப்பொழுது (லஞ்ச) வசூல் மழையில் நனைகிறார்கள். மக்களும் இந்த பாதையில் தலை வைக்காமல் தெறித்து வேறுவழியில் போகிறார்கள்.

ஸ்காட்லாண்ட்க்கு அடுத்து நம்ம போலீஸ் சூப்பர் என்பது இப்படி சிந்திப்பதில் தான் நிரூபிக்கிறார்கள்.

Sunday, June 17, 2012

மனம் கொத்திப் பறவை!

சாரு ஆனந்த விகடனில் தொடர் எழுதிய பொழுது வைத்த பெயர்.  தமிழ் இயக்குநர்களுக்கு, கதை விசயத்தில் கற்பனை வறட்சி போலவே, படத்திற்கு பெயர் வைப்பதிலும் கற்பனை வறட்சி தான்.  இலக்கியவாதிகளை கேட்டால் நல்ல தமிழ் பெயர்களை தருவார்கள் இந்த பெயர் உதாரணம்.

படத்தைப் பற்றி பல பதிவர்களும் எழுதியிருக்கிறார்கள். படமும் மிக லேசான படம் தான். அதனால் சுருக்கமாய் என் கருத்தை பகிர்கிறேன்.

****

கதை எனப் பார்த்தால்...

நாயகனும், நாயகனும் கிராமத்தில் எதிரெதிர் வீடுகளில் வசிப்பவர்கள். ஒரே வயது. இணைந்தும் படித்தவர்கள். நாயகன் காதலிக்கிறார். . நாயகியின் வீடு சாதிப்பெருமை பேசி, அடிதடிகளில் ஈடுபடும் முரட்டு குடும்பம். அதனால் நாயகியோ எந்தவித ரியாக்சனும் காட்டாமல் இருக்கிறார்.

ஆனால், அந்த பெண் தன்னை காதலிப்பது போல தன் நண்பர்களிடம் அதிகமாய் பீலா விடுகிறார்.  இதற்கிடையில் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.  நாயகன் கெஞ்சுகிறார். தன் குடும்ப மானம் பெரிது.  வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள் என நாயகி மறுத்துவிடுகிறார்.

பெண்ணின் நிலை அறியாமல், திருமணத்திற்கு முதல் நாள், காதலர்களை இணைத்து வைக்கிறேன் பேர்வழி என சோகத்தில் குடியில் மயங்கி கிடக்கும் (ஒருதலை!) காதலனை அள்ளி காரில் போட்டு, பெண்ணையும் மயக்கத்தில் ஆழ்த்தி கடத்துகிறார்கள்.  இடைவேளை. திருமணம் தடைபடுகிறது. பெண்ணின் குடும்பத்து ஆட்கள் வெறியோடு துரத்துகிறார்கள். இறுதியில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை திரையிலோ, திருட்டு டிவிடியிலோ அல்லது இன்னும் மூன்று மாதங்களில் சின்னத்திரைக்கு வரும் பொழுதோ பார்த்துக்கொள்ளுங்கள்.

****

இயக்குநர் எழிலை எனக்கு பிடிக்கும்.  அவருக்கு இது ஆறாவது படம்.  முதல் படம் துள்ளாத மனமும் துள்ளும். இதற்கு முந்தைய படம் 'தீபாவளி' . எழிலின் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்.  இந்த படமும் அதற்கு விதிவிலக்கில்லை.  ஆனால், படத்தை பார்க்கும் பொழுது, திரைக்கதை, இயக்கம் எல்லாம் ஒரு புதிய இயக்குநர் எடுத்தது போல இருக்கிறது. அமெச்சூர்தனம் தெரிகிறது.  பட்ஜெட் படம். எழிலும் தயாரிப்பாளர்களில் ஒருவராம். 

காதல், காமெடி என படம் நகருகிறது.  நாயகன், நாயகியை விட, சிங்கம்புலி போன்ற துணை நடிகர்கள் கலகலப்பாய் நகர்த்துகிறார்கள். பாடல்களும் தேறுகிறது. இடைவேளைக்கு முன் இருந்த ஒரு கலகலப்பு, இடைவேளைக்கு பின் இல்லை. ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பை விட இந்த படம் ஓகே. ஓகே. திரையரங்குகளில் இப்போதைக்கு பார்ப்பதற்கு படமே இல்லை. அதனால், இன்னும் சில நாள்கள் திரையரங்கில் தாங்கும். 

****

Friday, June 15, 2012

சாப்பாடு - சில குறிப்புகள்!

நான்கு ஆண்டுகள் இருக்கலாம்.  வேலை தொடர்பாக சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்து போகும் பொழுது, புரசைவாக்கம் சரவணபவனில் மதிய சாப்பாடு சாப்பிடுவேன். சாம்பார், துவையல், பொரியல், கூட்டு என எல்லாமும் சுவையாக இருக்கும்.  மதுரை 'டச்' இருக்கும்.  இரண்டுமுறையாவது பொரியலும், கூட்டும் வாங்கி சாப்பிடுவேன்.

நாவில் இருந்த சுவையின் ஆர்வத்தில் இன்று அண்ணாநகரில் உள்ள சரவணபவன் போயிருந்தேன்.  சாம்பார் துவங்கி எல்லாவற்றிலும் 50% சுவை குறைந்திருந்தது. எல்லாவற்றிலும் உப்பு 70% தான் இருந்தது.  பக்கத்தில் உப்பு புட்டியை வைத்திருந்தார்கள்.  பில்வரும் பொழுது தான் அர்த்தம் புரிந்தது.  அளவு சாப்பாடே ரூ. 75.  வசதியானவர்கள் வரக்கூடிய இடமாகி போனதால், உப்பின் அளவை குறைத்திருக்கிறார்கள் என அறிந்தேன்.  முன்பெல்லாம் எல்லா குழம்பு வகைகளையும், பொரியல், கூட்டு வகைகளை கையில் வைத்து, கூப்பிடாமலே பரிமாறுவார்கள்.  இன்றோ வாய்விட்டு கேட்டு, காக்க வைத்து தான் பரிமாறினார்கள்.

சென்னையில் மதுரை 'டச்'சில் சாப்பாடு கிடைப்பது அபூர்வம்.  கிடைத்த ஒரு கடையை இழந்ததில் வருத்தம் அதிகம். :(

***

நானும் பலமுறை கவனித்துவிட்டேன்.  ஒரு பகுதியில் குடியேறி, ஒவ்வொரு உணவகமாக சாப்பிட்டு, பகுதிக்கு ஒரு கடை தான் சாப்பிடும்படி தேறுகிறது.  நானாவது பரவாயில்லை.  வீட்டில் சமைப்பதற்கு ஒரு அம்மா வருகிறார்.  மூன்று வேளையும் சென்னையில் உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உண்மையிலே 'சாபம்' வாங்கியவர்கள்.  பர்சு காலியாகும். வயிறும் புண்ணாகும்.  நாக்கு செத்துப்போகும்!

***

சமையல் என்பது ஒரு வேதியியல் தொழிற்சாலை தான். நம் தமிழக சமையல்முறை என்பதோ பல பொருட்கள் சேர்க்கப்படும் சுவையான சமையல்.  நான் ஒவ்வொருமுறை சமைக்கும் பொழுதும் சாம்பார் ஒவ்வொரு சுவையுடன் வருகிறது.  அம்மாக்களின் கைப்பக்குவத்தில் எப்படி ஒரே மாதிரி அருமையான சுவையுடன் வருகிறது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்.  தண்ணீரை சுடவைத்தால், ஒரு நிலையில் ஆவியாகும் அல்லவா!  அது போல நம் அக்காக்கள் பல காலம் சமைத்து ஒரு "சிறப்பு தேர்ச்சி" பெற்றிருக்கிறார்கள் என்பதாக அறிகிறேன்.

நமது சமையல் முறை கொஞ்சம் அதிக பொருட்கள் அடங்கியிருப்பதாலே நிறைய நேரத்தை சாப்பிட்டுவிடுகிறது.  அதைவிட சலிப்பூட்டும் வேலை.  பாத்திரங்களை கழுவும் வேலை.  இதற்காகவே பலமுறை சமைக்காமல் விட்டதுண்டு!

சமையலறை இன்னொரு துயரம்.  சமைப்பதில் ஏற்படும் சோர்வு இருமடங்காகிறது.  காரணம் சமையலறை சிறியதாக, காற்று உள்ளே வராத அளவிற்கு, இருட்டாக இருக்கிறது.  ஆண்கள் சமையல் கட்டு பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது.  பெண்களும் ஏன் இவ்வளவு சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்.

சமையலில் புழங்கும்பொழுது ஒரு விஷயம் மண்டையில் உறைக்கிறது.  நம் அம்மாக்களையும், அக்காக்களையும் பல காலம் அடுப்படியில் தள்ளி அவர்களை காலி செய்திருக்கிறோம்.  இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு தற்காலிகமாக ஆண்களும் சமையலில் ஈடுபடவேண்டும். கொஞ்சம் தூரப்பார்வையில் சமையல் அறை இல்லாத வீடுகள் உருவாக்கப்படவேண்டும்.  தெருவுக்கு ஒரு சமையல் கட்டு.  கூட்டு சமையல். கூட்டு சாப்பாடு என்பதாக வாழ்க்கை விரியவேண்டும்.

***

Wednesday, June 6, 2012

சிறகடித்து பறந்தன!

"குட்மார்னிங்"
"குட் நைட்"
"கடி ஜோக்ஸ்"
மொக்கை ஜோக்ஸ்"
- என எல்லா எஸ்.எம்.எஸ்-மும்
கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து
இப்பொழுது
சுத்தமாய் நின்றுபோய்விட்டன!
சீரியசாகிவிட்டேனே?!
வயசாயிருச்சா?!

****

பலருடைய படைப்புகளை வாசிக்கும் பொழுது படிமங்கள்; வரலாற்று அறிவு; வார்த்தை செறிவு என பல விசயங்கள் அசத்துகின்றன. நாம் எழுதுகிற வடிவம் ஒன்றுமே இல்லையென தோன்றுகிறது.

ஆனால், எளியவர்களை பற்றி நாம் பதிவு செய்கிறவை மிக முக்கியமானவை என்றும் தோன்றுகிறது.

****

நாவல் படிக்கும் பொழுது தான், கொஞ்சம் தள்ளி நின்று தன்னையும், சுற்றி வாழ்கிற மனிதர்களையும் கவனிக்கும் பார்வை கூடுதலாக கிடைப்பதாக உணர்கிறேன்.

****

எழுதுகிற விசயங்கள் மெல்ல மெல்ல ஒன்றோடு ஒன்றாக மனதில் சேர்ந்துகொண்டே வருகிறது. இதை எழுதி முடித்தால் தான், இன்று நிம்மதியாய் தூக்கம் வரும் எனும் பொழுது அது பதிவாகிவிடுகிறது.

****

- கடந்த வாரம் முகநூலில் பகிர்ந்தவை!