Saturday, October 27, 2012

வலிப்பும், விபத்தும்!

அந்த தெருமுனையை கடக்கும் பொழுது, அந்த நிகழ்வை பார்த்தேன். 45 வயதுக்காரர் ஒருவர் வண்டியில் இருந்து கீழே சரிந்து, வலிப்பால் கடுமையாக துடிதுடித்துக்கொண்டிருந்தார்.

உடனே அருகிலுள்ள இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.  சரிந்தததில் தலையில் முடி குறைவாக இருந்ததினால், கல்லில் அடிப்பட்டு பின்மண்டையில் காயமாகி, ரத்தம் வந்துகொண்டிருந்தது.

108க்கு போன் செய்ய சொன்னார்கள்.  அடித்தேன்.  இடம் கேட்டார்கள். சொன்னேன். வந்துகொண்டிருப்பதாக சொன்னார்கள். இதற்கிடையில் வலிப்பு முடிந்து, சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.  அவருக்கு தெரிந்த நபர்களை வரச்சொல்லலாம் என போன் நம்பர் சொல்ல சொன்னால், அவரால் நினைவுப்படுத்தி சொல்லமுடியவில்லை. அவருடைய செல்பேசியை எடுத்து தெரிந்தவர்களிடம் சொல்லலாம் என்றால், போனை பாஸ்வேர்ட் கொடுத்து லாக் செய்திருக்கிறார்.  :(

கொஞ்சம் நினைவு தெரிந்ததும், மலங்க மலங்க விழித்தார். இந்தாங்க உங்க வண்டி சாவி என்றால், இது என் வண்டியில்லை என்கிறார். 15நிமிடத்தில் 108 வந்துவிட்டது. இனி அவர்கள் பார்த்துகொள்வார்கள் என கிளம்பிவிட்டேன்.

வலிப்பு நோய் இருப்பவர்கள் வண்டி ஓட்டக்கூடாது. என் நண்பனின் நண்பன் வடிவேலன் என்பவருக்கு இதே மாதிரி வலிப்பு வரும். அவருடைய ஆலைக்கு பேருந்து வசதி இல்லாததால், வண்டியில் தான் மெதுவாக போய்வருகிறார். நண்பர்கள் எவ்வள்வு சொன்னாலும், கேட்க மறுக்கிறார். ரிஸ்க் தெரிந்தே ஓட்டுகிறார்கள்.  சிரமம் தான்

Saturday, October 20, 2012

திருமண வரவேற்பு - சில குறிப்புகள்!

கேமராமேன் நண்பர்.
எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு.
அழைத்தார். போயிருந்தேன்.

வேடிக்கைப் பார்த்ததில்...!

வசதியான குடும்பம்!
கோட்டு சூட்டுடனும்
பளபளப்பான நகைகளுடனும்
பட்டுச் சேலைகளுடனும்
பலர் வலம் வந்தார்கள்.

மாப்பிள்ளை சகோதரியோ
மணமகள் சகோதரியோ - யாரும்
மணமக்களோடு மேடையில் இல்லை.
நியூக்ளியர் குடும்பமாய் இருக்கலாம்!

பன்னீர் தெளித்து வரவேற்க
ஜூஸ் கொடுக்க, பரிமாற
எங்கும் பணியாட்கள்.
யார் முகத்திலும்
செயற்கையாக கூட புன்னகையில்லை!
எல்லா காரியங்களையும் - ஊரில்
சொந்தங்கள் செய்வது தான் வழக்கம்.
ஊர்க்காரனான எனக்கு - எல்லாம்
புதிதாய் இருந்தது!

வருகிறார்கள். அமர்கிறார்கள்.
கலகலப்பான பேச்சு இல்லை.
கிசுகிசுவோ, பொரணியோ இல்லை.
வரிசையில் நிற்கிறார்கள்.
கவரை, பரிசை கையில் திணிக்கிறார்கள்.
சாப்பிட்டு விட்டு போய்விடுகிறார்கள்.
மனிதர்கள் சிரிப்பை
மறந்துவிட்டார்களா?!
எல்லாம் இயந்திரத்தனமாய் இருந்தது!

இனிப்பு இரண்டுவகை.
பிரியாணி, சாம்பார் சாதம்,
குட்டித்தோசை என
வகைவகையாய் நிறைய வைத்தார்கள்.
ரசம் நன்றாக இருந்தது.

18 முதல் 25 வயது வரை
பெண்களின் எண்ணிக்கையை
விரல்விட்டு எண்ணிவிடலாம்!
எண்ணினேன். :))
அழைத்து வருவது இல்லையா! (அ)
வர மறுக்கிறார்களா?!

இன்னிசை கச்சேரி பாடல்களுக்கு
குடும்பம் சூழ
40 வயதுக்காரர் கூச்சப்படாமல்
பாவனைகளோடு - உற்சாகமாய்
ஆடிக்கொண்டிருந்தார்.
பிடித்திருந்தது.

கேமராமேன்
பாடும் பெண்ணை
அடிக்கடி க்ளோசப்-ல்
காட்டிக்கொண்டிருந்தே இருந்தார்!

வந்த 600 பேரில்
மாப்பிள்ளை தான் நல்ல உயரம்.
குனிந்து, குனிந்து
கை கொடுத்து கொண்டிருந்தார்.

அம்மா, அப்பாவே
அருகில் வந்து நின்றாலும்
பெண்ணை வலது கையில் அணைத்தபடி
சளைக்காமல் கடைசிவரை
போஸ் கொடுப்பதை விடவேயில்லை!
மணமக்கள் வாழ்க!

Sunday, October 14, 2012

கடற்கரையும் கவிதையும்!

மேகங்களால்
சூழ்ந்திருந்தது சென்னை!

ஆங்காங்கே
மழை தூறிக்கொண்டிருந்தது!
நனைந்துகொண்டே
மெரினா வந்தடைந்தேன்!

காதலர்கள் அதிகம்
கண்ணில்படுகிறார்கள்!
சனிக்கிழமை என்பதால்
இருக்கலாம்!

கடற்கரை காற்றில்
கவிதை வாசிக்க
புத்தகம் எடுத்து வந்திருந்தேன்!

நாலு இளம்பெண்கள்
அலைகளோடு
விளையாட துவங்கினார்கள்!

ஒரு கவிதை கூட
கடைசிவரை வாசிக்கவே இல்லை! :)