Saturday, September 14, 2013

கனவு

படுத்ததும் எத்தனை பேருக்கு கனவு வரும்?  இந்த கேள்வி என் மனதில் பல நாட்கள் எழுந்திருக்கின்றன.  கால் மணி நேர தூக்கமோ, எட்டு மணி நேர தூக்கமோ எப்பொழுது, எங்கு படுத்தாலும்,  படுத்த பத்தாவது நிமிடத்திலிருந்து கனவு வந்துவிடுகிறது. பலரைப் போல எதையாவதை யோசித்துக்கொண்டோ, அசைப்போட்டுக் கோண்டோ இருக்கும் ஆளும் கிடையாது! ஆனால், கனவு என்னை தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது.

கனவுகள் பலவிதம்.  ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் கதம்பமாக பல விசயங்கள் கனவாய் வரும்.  ஒரு முழு நீளத் திரைப்படம் போல கோர்வையாகவும் வரும்.  அதில் ஒரு தமிழ்ப்படத்துக்குரிய காதல், பாடல், சண்டை, நகைச்சுவை என எல்லாமும் இருக்கும். 

சிறுவயதில் ஸ்பைடர் மேன் போல பறந்து செல்வேன்.  ஆனால், இயல்பான உடையில் தான்.  இப்படி சந்தோசமாய் பறந்து, பறந்து போய்க்கொண்டிருந்தேன்.  மின்சார வயரில் அடிபட்டு இறந்தவர்களின் செய்திகளைப் பார்த்தப் பிறகு, பறக்கும் பொழுது மின்சார வயரில் தொட்டுவிடக்கூடாதே என்ற கவலையில் பறப்பேன். :)

அப்பொழுதெல்லாம் பணத்தட்டுப்பாடு அதிகம்.  கனவிலும் அது வெளிப்படும்.  போகிற வழிகளிலெல்லாம் நிறைய காசு, பணம் கீழே கிடக்கும்.  ஆவலாய் சேகரித்துக்கொண்டே வீடு வந்து தலைக்கடியில் வைத்துவிட்டு தூங்குவேன். காலையில் தூக்க கலக்கத்தில் பணத்தைப் பார்ப்பேன். பணம் இல்லையென்றதும், சே என்றாகிவிடும்! :)

சிறுவயதில் படித்த, கேட்ட பல பேய் கனவுகள் மனதில் இருந்தன. அதனால் பேய்க்கனவு அடிக்கடி வரும். ஒருமுறை இரண்டு தெருக்கள் தள்ளி ஒரு வீட்டில் ஒரு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டாள். நானும் போய் தெரியாத்தனமாக பார்த்துவந்துவிட்டேன். அதற்கு பிறகு, கனவில் அந்த வீட்டிலிருந்து ஒரு ஆவி மேலிருந்து கிளம்பும். என்னை துரத்த ஆரம்பிக்கும். நன்றாக ஓடும் நான், பேய் துரத்தும் பொழுது மட்டும் ஓடவே முடியாது. கால்கள் பின்னும். நெருங்கி, மிக நெருங்கும் பொழுது, கன்னா பின்னாவென்று வேர்த்து  விறுவிறுத்து முழிப்பு தட்டிவிடும்! அப்பாடா! நமக்கு ஒன்னும் ஆகலைன்னு நினைத்து ஆசுவாசுமாகி தூங்கிவிடுவேன். :)

சண்டைப் படங்கள் பார்த்துவிட்டு வந்தாலோ பல சமயங்களில் ஒரு தெலுங்கு ஆவேச நாயகனை போல லாஜிக்கே இல்லாமல் சண்டை போட்டிருக்கிறேன். முன்பெல்லாம், யாராவது தாக்க வந்தாலோ, மான் கராத்தே கொண்டு தப்பித்துவிடுவேன். ஆச்சர்யம் என்னவென்றால், சில மாதங்கள், முறையாக கராத்தே கற்றுக்கொண்ட பொழுது, அந்த காலங்களில் எல்லாம் லாஜிக் மீறாமல் சண்டை போட்டு அசத்தியிருக்கிறேன். :)

இப்பொழுது பொதுக்கோரிக்கைகளுக்காக போராட்டங்களில் கலந்துகொள்வதால், நேற்று ஒரு கனவு வந்தது.  எங்கோ போய்க்கொண்டு இருக்கிறேன். ஆறு போலீசார் வழிமறித்து என்னை கைது செய்கிறார்கள். இதில் காமெடி என்னவென்றால், அந்த போலீஸ் நம்மூர் போலீஸ் டிரெஸ் இல்லாமல், நீல நிறத்தில் உடை அணிந்திருந்தார்கள்.  சர்வதேச போலீசாக இருக்கும். வருங்காலத்தில் சர்வதேச போராளியாக ஆகப்போகிறேன் என்பதற்கு இந்த கனா ஒரு அசரீரீ போல சொல்கிறது என நினைக்கிறேன். :)

அன்றைக்கு சார்லி சாப்ளினின் 'The Kid"  பார்த்துவிட்டு தூங்கியதும், அந்த படத்தில் வரும் கனவு போலவே எனக்கும் ஒரு கனவு வந்தது. எல்லா சமூக கோளாறுகளும் சரியாகி, எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பது போல!  பிறகு, நான் சென்னையை விட்டுவிட்டு, என் சொந்த ஊருக்கே என் பைக்கில், நண்பனுடன் எல்லோருக்கும் பை! பை! சொல்லி கிளம்புகிறேன். :)

கனவுகள் என் வாழ்நாளில் நான் வளர வளர கனவுகளும் என் கைப்பிடித்தே வளர்ந்து வந்திருக்கின்றன. விழித்திருக்கும் வேளையில் நல்ல கனவுகளுக்கு ஆக்கம் கொடுப்பதே என் வேலையாகிறது.

சிலர் எனக்கு கனவுகளே வருவதில்லை என்கிறார்கள்.  அவர்களை அதிசயப்பிறவியாய் தான் பார்க்கிறேன். உங்களுக்கு எப்படி?

மற்றப்படி, அத்வானியின் பிரதமர் கனவை மோடி கலைக்கிறார். தூக்கத்தை கெடுக்கிறார் என்பது தனி! :)