Thursday, December 12, 2013

நேரம் - ‍ சில குறிப்புகள்

பொறுப்புகள் அதிகமாக வேலைகள் அதிகரிக்கின்றன. வேலைகள் அதிகமாக, அதிகமாக பதட்டம் தான் அதிகரிக்கிறது. வேலைகள் நகர மறுக்கிறது. என்ன செய்ய செய்யலாம் என மோட்டு வளையம் பார்த்து யோசித்த பொழுது, ஒன்றும் தோன்றவில்லை. நேற்று வழக்கம்போல புத்தககடை பக்கம் போன பொழுது, ஒரு புத்தகம் கண்ணில்பட்டது. அதில் ஆலோசனைகள் பிடித்திருந்தன.  உங்களுக்கும் பயன்பட்டால் சந்தோசம்!

"நேரத்தை நம்மால் நிர்வகிக்க முடியாது.  நேரத்திற்கேற்ப நம்மைத்தான் நிர்வாகம் செய்யவேண்டும்" :)

"திட்டமிடுதல் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்"  ‍ இது திட்டமிட விரும்பாதவர்களுக்கு இது ஒரு சாக்குப்போக்கு!"

பருண்மையாக திட்டமிடுவது பாதி வேலை முடிந்ததற்கு சமம் என மாவோ சொன்னதாக படித்தது நினைவுக்கு வருகிறது.

"நீங்கள் எதில் திறமைசாலியோ அதில் ஆதாயம் காணுங்கள்.  மீதி வேலையை பிறரிடம் பகிர்ந்தளித்துவிடுங்கள்"

பல சமயங்களில் எல்லா வேலைகளையும் மற்றவர்களிடம் விட்டுவிட்டு எங்கேயாவது ஓடிவிடலாம் என்று தான் தோன்றுகிறது! :)

"வாழ்வில் முக்கியமானவற்றிக்கு முன்னுரிமை தராமல், அவற்றை பின்னுக்கு தள்ளும் பொழுது, பெரும்பாலும் நல்லவையே சிறந்தவற்றிக்கு எதிரியாக அமையும்"

பேசும்பொழுது பெண்டாட்டி, பிள்ளை ரெம்ப முக்கியம் என்பார்கள்.  அவர்களிடம் நேரம் செலவழிக்காமல், அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய அலுவலகமே கதியென்று கிடப்பர்கள். இது என்ன முரண்? என பல சமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

"கடிகாரம் திசைகாட்டும் கருவிக்கு ஒருபடி கீழே இருக்கட்டும்!"

செயல்களில் கவனம் கொடுத்து, செல்ல வேண்டிய சரியான திசையை மறந்துவிடுவது! பலருக்கும் ஏற்படும் குழப்பம் தான்!

பல சமயங்களில், வேலை ஒரு பெரிய மலையைப் போல மலைப்பை ஏற்படுத்துகின்றன!‍

"வேலைகளை சிறுசிறு வேலைகளாக பிரித்துக்கொள்ளுங்கள்!

நாம் செய்கின்ற வேலைகளை குறித்து வைத்து பரிசீலித்தால், எவ்வளவு பயனுள்ள வேலைகளில் ஈடுபடுகிறோம்? நாம் எவ்வளவு நேரம் வீணக்கிறோம் என நன்றாக தெரியும்! பிறகு முக்கியமான வேலைகளில் நமது கவனம் குவியும்" என்கிறார்கள்.

இன்னொரு நாளில் இன்னும் எழுதுவேன்!

Monday, December 2, 2013

ஜன்னல் ஓரம் ‍ - சுவாரசியமில்லாத காட்சிகள்!

மலையாளத்தில் வந்த 'ஆர்டினரி' என்ற படத்தின் தழுவலாம்.  அங்கு பெரும் வெற்றி பெற்ற படம் என்கிறார்கள்.  ஆனால், தமிழில் ம்ஹூம்!

கதை எனப் பார்த்தால்...

பழனி முதல் மலையில் உள்ள பண்ணைக்காடு வரை ஒரு அரசு பேருந்து போய்வருகிறது.  கிராமத்து பேருந்து என்பதால் நடத்துநரும், ஓட்டுநரும் அந்த மக்களோடு இயல்பாக பழகி வருகிறார்கள். நடத்துநர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். பஞ்சாயத்து தலைவரின் பையனை ஒரு டீச்சர் காதலிக்கிறார். இதில் பஞ்சாயத்து தலைவரின் மகன் திடீரென கொலை செய்யப்படுகிறார்.  அந்த பழி நடத்துநர் மீது விழுகிறது. உண்மையான கொலையாளியையும், அதற்குரிய காரணத்தையும் இறுதியில் சொல்கிறார்கள்.

****

பேருந்தில் பயணம் செய்யும் பொழுது பல சுவாரசியமான நபர்களையும், காட்சிகளையும் பார்த்திருக்கிறேன். படத்தில் பேருந்து பயணத்தை களமாக எடுத்தும், பிரயோஜனமில்லை.  பேருந்தில் மட்டுமல்ல, படம் முழுவதுமே எங்குமே சுவாரசியமான காட்சிகள் இல்லை. மலைப்பாங்கான படம் என்பதால் காட்சிகளிலாவது குளுமை இருக்கிறதென்றால் அதுவும் இல்லை.  

ஓட்டுநராக வரும் நடுத்தர வயது பார்த்திபன் ப்ளேபாய் போல பல பெண்களை ரூட் விடுகிறார்.  அவருக்கு ஒரு மாற்றுத்திறனாளி தங்கையாம். அந்த பெண்ணுக்கு திருமணம்  செய்ய தடுமாறுகிறாராம்.  சோகத்தில் படம் முழுவதும் குடித்துக்கொண்டு திரிவது போலவும் காட்டுகிறார்கள். இதில் பார்த்திபனின் இரட்டை அர்த்த வசனங்கள் வேறு! மகா எரிச்சல் தான் வருகிறது.

பார்த்திபன், ராஜேஷ் என நிறைய நடிகர்கள் இருந்தும், வீணடித்திருக்கிறார்கள்.  படத்தில் தேறுவது பாடல்கள் மட்டுமே! வித்யாசாகர் படத்தைக் காப்பாற்றியிருக்கிறார்.  80களில் எடுத்தப்படம் போல ஒரு கதை.  அந்த காலகட்டத்தில் கூட இந்த வகைப்பட்ட நிறைய சுவாரசியமான படங்கள் வந்திருக்கின்றன.

திரைக்கதையில் கவனம் செலுத்தவில்லை. காட்சிகளிலும் சுவாரசியம் இல்லை. கரு. பழனியப்பனின் ஆக மோசமான படமாக வெளிவந்திருக்கிறது.

'கிராவிட்டி', 'விடியும்முன்' என இரண்டு படங்களில் ஒன்றை பார்க்கப் போய், ஒரு நெருக்கடியில் இந்த படம் பார்க்க நேர்ந்தது.

படம் பார்ப்பதற்கு முன்பு ஒரு பதிவர் படம் தேறாது என எழுதியிருந்தார்.  படித்து விட்டு போயிருந்ததால், படம் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் போயும், படம் கொஞ்சம் கூட தேறவில்லை. உடன் வந்த நண்பர் சொன்னார். ஆல் இன் ஆல் அழகு ராஜாவை விட இந்த படம் தங்கம் என்றார். அப்ப ஆல் இன் ஆல் மரண மொக்கையா?