Friday, August 23, 2013

பறக்க தெரியாத கிளியும், கலாட்டாக்களும்!

RIO 2011 பறப்பதற்கு முன்பே காட்டிலிருந்து நீலவண்ணக்கிளி பிடிக்கப்பட்டு,  சிறுமி லிண்டாவின் கண்ணில் பட்டு, லிண்டோவோடு அமெரிக்காவில் வளர்கிறது.  இது அரிய வகை இனம். என்னிடம் ஒரு பெண்கிளி இருக்கிறது. இரண்டையும் இணைத்தால் இதன் இனத்தை காப்பாற்றலாம் என ஒரு விலங்கியல் மருத்துவர் பிரேசில் ரியோ டி ஜெனிரோவிலிருந்து வந்து சொல்கிறார்.

'சரி' என கிளம்புகிறார்கள். போன நாளே இரவில், பறவைகளை கடத்தும் கடத்தல்காரர்கள் எல்லா பறவைகளோடு கிளிகளையும் கடத்துகிறார்கள்.  அதற்கு பிறகு, லிண்டாவும், மருத்துவரும் தேடு தேடு என தேடுகிறார்கள். கடத்தல்காரர்களிடமிருந்து கிளிகள் தப்பிப்பது, அவைகளுக்குள் காதல், ஊடல், நண்பர்களின் உதவி, சேஸிங், மீண்டும் வில்லன், இறுதியில் சுபம் என  முடிகிறது.

நீண்ட நாள்களுக்கு பிறகு, துவக்கம் முதல் இறுதிவரை தொய்வில்லாமல் விறுவிறுப்பாகவும், ஜாலியாகவும் பார்த்த படம்.  படம் வாங்கிய  நாளிலிருந்து அண்ணன் மகன் இந்த படத்தை இருபதாவது முறையாக சிரித்து சிரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.  நானும் காமிக்ஸ் படித்து வளர்ந்தவன் என்பதால் இந்த மாதிரி அனிமேஷன் படங்கள் நிறைய பிடிக்கும்.

படத்தில் நாயகியை அறிமுகப்படுத்தும் பொழுது எப்படி ஒரு 'பில்டப்போடு' அறிமுகம் செய்வார்களோ, அதே போல் பெண்கிளியையும் அறிமுகப்படுத்துகிறார்கள். நாயகன், நாயகி காதல், வில்லனின் தலையீடு என வழக்கமான வணிக ரீதியான போக்கில் கதை பயணிப்பது மைனஸ். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியில் இரண்டாவது பாகத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பறக்க தெரியாத ஆண்கிளியிடம், "பறத்தல் என்பது சுதந்திரம்" என பெண்கிளி உணர்ந்து சொல்லும். உண்மை தான்.

மதுரையில் ( மீனாட்சி பவன் உணவகத்தில் சுதந்திர போராட்ட நிகழ்வுகளை புகைப்படங்களாக மாட்டி வைத்திருந்தார்கள். இப்பொழுதும் இருக்கும். சாப்பிடும் பொழுது, அங்கே காதல் பறவைகளை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்ததை பார்த்தேன்.   குறிப்பு எழுதும் பதிவேட்டில், "மனிதர்களின் சுதந்திரத்தை மதிக்கும் நாம், பறவைகளின் சுதந்திரத்தையும் நாம் மதிக்கலாம்" என எழுதிவந்தேன்.  அடுத்தமுறை போயிருந்த பொழுது, அங்கு அந்த கூண்டு இல்லை.  ஆனால், அங்கே, மீன் தொட்டி இருந்தது. அதில் மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. :)

Monday, August 5, 2013

மூடிய கதவும், சில படிப்பினைகளும்!

Shutter - 2012 மலையாளம்

ஒரு நடுத்தர வயதை தாண்டிய மனிதன், முதன்முதலாக பெண் சபலம் ஏற்பட்டு, ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு, ஹோட்டலில் அறை கிடைக்காமல், தான் தொழில் செய்ய வாங்கி போட்டிருக்கும் ஒரு காலி கடையினுள் செல்கிறார்.

கடையை வெளியில் பூட்டிவிட்டு, சாப்பாடு வாங்க செல்கிறார் தெரிந்தவரான ஆட்டோகாரர்.  போகிற வழியில் வேறு ஒரு வாடிக்கையாளரை சந்திக்கும் நபர் குடிக்க சொன்னதில் பேரில் குடிக்கிறார்.  மீண்டும் வண்டியோட்டி வரும்பொழுது, போலீஸ் பிடிக்கிறது. காலையில் அனுப்புகிறது. பகலில் அடைக்கப்பட்ட கடையை சுற்றி பல கடைகள். திறக்கமுடியாத நிலை.பூட்டிய கடையினுள் மாட்டிக்கொண்ட 24 மணி நேரத்தில் அவருக்கு ஏற்படும் அனுபவங்களும், சில படிப்பினைகளூம் கிடைக்கின்றன.  கொஞ்சம் திருந்திய மனிதராய் வெளியே வருகிறார். இது தான் கதை!

****

சண்டைக்கோழியில் விஷாலிடம் உதை வாங்கி, படம் முழுவதும் கொலைவெறியோடு அலைவரே அந்த லால் தான் கதையின் நாயகன்.  ஒரு சபலத்தில் பெண்ணை அழைத்து வந்த பிறகு, வேண்டாம் போய் விட்டுவந்துவிடு! என சொல்லும் பொழுது தடுமாற்றம், பகலில் கடையை திறந்து, அசிங்கமாகி போகுமே என ஒவ்வொரு நிமிடமும் வரும் பதட்டம்! நண்பர்கள் என பழகியவர்களே கேவலமாக பேசுவது! கேவலமாக நடந்து கொள்வது கண்டு அழுவது என அருமையாக நடித்திருக்கிறார்.

சிடுசிடுப்பது, பணம் கொடுத்ததும் கெஞ்சலாய் பேசுவது, எகிறும் பொழுது எகிறுவது என பின்பு நாயகனின் சங்கடமான நிலை கண்டு புரிந்து நடந்துகொள்வது என விலைமாதுவாக வரும் பெண் அசத்துகிறார்.

கதையம்சம் கொண்ட படங்கள் எடுத்து, இடையில் பத்து ஆண்டுகளாக படம் எடுக்காமல் இப்பொழுது படம் எடுக்க அலையும் சீனிவாசன், கதவை பூட்டிவந்து இப்படி போலீசிடம் மாட்டிக்கொண்டு விட்டோமே என நிம்மதி இல்லாமல் அலையும் ஆட்டோகார பாத்திரமும் என அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.

படம் துவங்கும் பொழுது, நூறு பேருக்காவது நன்றி என போடுகிறார்கள். நாம யாருக்காவது நன்றி சொல்லவேண்டும் போலிருக்கிறது. இந்த படத்தை அறிமுகப்படுத்திய கேபிள் சங்கருக்கு நன்றிகள்.