Friday, August 24, 2012

ஆதரவு இல்லம்! - திரைப்பார்வை

தமிழில் வந்த பேய்படங்கள் குறைவு.  விட்டாலாச்சார்யா தந்த படங்கள் எல்லாம் பயமுறுத்துவதற்கு பதிலாக கிச்சு கிச்சு மூட்டுபவை.  இன்னும் சில படங்கள் எரிச்சல் மூட்டுபவை.  சில படங்கள் மனதை தைக்காமலே கடந்து போய்விட்டன!

சின்னஞ்சிறு வயதில் 'மைடியர் லிசா' நிறைய பயமுறுத்திய படம்.  டீனேஜில் பார்த்த மறுவெளியிடுகளில் பார்த்த ஓமன், எக்ஸார்சிஸ்ட் போன்ற ஆங்கிலப்படங்கள் தான் நன்றாகவே பயமுறுத்தின.

நல்ல அமானுஷ்ய படத்திற்காக பல ஆண்டுகள் ஏங்கிகொண்டிருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு நல்ல படம் ஒன்றை பார்த்தேன்.  பதிவர் கருந்தேள் அறிமுகப்படுத்தியிருந்தார்.  அவருக்கு எனது நன்றிகள்.

****

கதை எனப் பார்த்தால்...

லாரா ஒரு ஆதரவு இல்லத்தில் வளர்கிறாள்.  பத்து வயதில் தத்தெடுக்கப்படுகிறாள். 

மீண்டும் 37 வயதில் அதே ஆதரவு இலலத்திற்கு தன் (மருத்துவர்) கணவன்,  ஏழு வயது பையனுடன் வருகிராள்.  இப்பொழுது ஆதரவு இல்லம் இயங்கவில்லை.  சில குழந்தைகளை (disabled children) தத்தெடுத்து முன்பு போலவே ஆதரவு இல்லமாக இயக்குவதாக திட்டம். 

இதற்கிடையில் அவளின் ஏழு வயது பையன் சிமோன் தனது நண்பர்கள் சிலரைப் பற்றி சொல்கிறான்.  அது நகரத்தை விட்டு விலகி, கடற்கரையோரமாக இருக்கும் தனிவீடு. அங்கு அப்படி யாரும் உண்மையில் இல்லை.  அவன் கற்பனையாக சொல்கிறான் என அசட்டையாக இருந்துவிடுகிறார்கள்.

ஒருநாள் அந்த பையன் லாராவிடம் "நீ எங்க அம்மா இல்லை!  நான் சீக்கிரமே சாகப்போகிறேன்! என் நண்பர்கள் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள்!' என்கிறான். சிமோன் ஹெ.எச்.ஐ. வியால் பாதிக்கப்பட்டவன்.  தத்தெடுக்கப்பட்டவன் தான்.  இந்த உண்மை அவனுக்கு எப்படி தெரிய வந்தது என லாரா அதிர்ச்சியடைகிறார்.

இதற்கிடையில், குழந்தைகளை தத்தெடுப்பதற்காக ஒரு 'கெட் & கெதர்' (A casual social gathering) சந்திப்பு நிகழ்கிறது.  அந்த சமயத்தில் அம்மாவுடன் சண்டையிட்ட சிமோன் காணாமல் போகிறான்.  கடத்திவிட்டார்களா?  அருகில் உள்ள கடலில் விழுந்துவிட்டானா என எல்லாவிதத்திலும் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருபக்கம் காவல்துறை, விளம்பரம் மூலமாக தேடுகிறார்கள்.  இன்னொரு பக்கம் ஆவிகளுடன் பேசுபவர்களின் மூலமும் கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.  9 மாதங்கள் கடந்துவிடுகின்றன.

இறுதியில் சிமோன் கிடைத்தானா? அந்த வீட்டில் சிமோன் சொன்ன நண்பர்கள் யார்?  என எல்லாவற்றிக்கும் பதில் கிடைக்கிறது.  அதற்கு பிறகு லாரா எடுக்கும் ஒரு முடிவு மிக அதிர்ச்சியானது.

****

படத்தில் கதாபாத்திரங்கள் குறைவு.  அதில் லாராவை தவிர மற்றவர்கள் வருகிற நேரம் மிக குறைவு.   வசனங்கள் கூட குறைவு தான்.  ஆனால் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துவது லாராவின் நடிப்பும், திரைக்கதையும் தான்!  ஒளிப்பதிவும், இசையும் படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கிறது.

2007ல் வெளிவந்த ஸ்பானிஷ் படம்.  ஆங்கில சப்-டைட்டிலுடன் யூ டியூப்பில் கிடைக்கிறது.  இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த படம் பார்த்தேன்.   அந்த நிமிடம் முதல் எழுது! எழுது! என லாரா விரட்டிக்கொண்டே இருந்தார்.  இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொண்டதும் கொஞ்சம் ஆசுவாசுமாய் இருக்கிறது!  இனி, லாரா உங்களை துரத்துவார்! :-)

****

படத்தின் பெயர். El Orfanato ஸ்பானிஷில்!  The Orphanage  ஆங்கிலத்தில்  தமிழில் அநாதை இல்லம் என்று தான் மொழிபெயர்த்திருக்கவேண்டும்.  படத்தின் இறுதியில் தன் குழந்தை சிமோன் மீதான ஆழமான அன்பில் எடுக்கும் இறுதி முடிவு 'அநாதை இல்லம்' என எழுதவிடாமல் தடுத்து,  'ஆதரவு இல்லம்' என எழுதவைத்தது.

****

மலையாளத்தில் இயக்குநர் பாசிலால் எடுக்கப்பட்ட மணிசித்திரதாழ் படத்தில் அமானுஷ்யம் உண்டு. அதை ரசிக்கமுடியும்.  அதை தமிழில் பி.வாசு சந்திரமுகியாக எடுத்தபொழுது,  அமானுஷ்யத்தை கழுத்தை நெறித்து கொன்றிருப்பார்.

****

இந்த படத்தை பாராட்டி எழுதுவதால், எனக்கு சொர்க்கத்தின் மீதோ, நரகத்தின் மீதோ சுத்தமாக நம்பிக்கை இல்லை.  மண்ணிலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்குவது தான் எனது கனவு.

****

Wednesday, August 22, 2012

நன்றி சொல்லும் தருணமிது!

இப்பொழுது தான் எழுத துவங்கியது போல இருக்கிறது.  அதற்குள் ஐந்து முழு ஆண்டுகள் ஓடிவிட்டன. நேற்றிரவு  50000 வருகைகளை (ஹிட்ஸ்)   'வலையுலகமும் நொந்தகுமாரனும்'  தொட்டிருக்கிறது. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, எதையோ ஒன்றை தேடும் பொழுது எதைச்சையாய் தமிழ் பிளாக் ஒன்றை வந்தடைந்தேன்.    பல பதிவர்கள் அந்த சமயத்தில் எழுதி குவித்துக்கொண்டு இருந்தார்கள். அதில் பல மொக்கை, ஜல்லி, கும்மிகள்.  நொந்து போய் தான் பின்னூட்டங்களில் கலாய்த்தேன். உலகளாவிய இணையத்தை கூட குட்டிச்சுவராய்  பயன்படுத்துகிறார்களே என வருத்தமாய் இருந்தது.

விமர்சனம் செய்வது மட்டும் சரியில்லை!  எது சரி என்பதை நாமும் எழுதவேண்டும் என நினைத்தேன். ஏற்கனவே டீனேஜ் நாட்களில் கவிதைகள் மாதிரி ஒரு வஸ்துவை எழுதி, பல நண்பர்களை கொடுமை செய்த அனுபவம் இருந்தது.

எதைச்சையாய் ஒரு கடிதம் எழுதியதை பார்த்துவிட்டு, கவிதையை விட, உரையாடல் உணர்வுபூர்வமாக இருக்கிறது.  அதனால், கவிதையை விட்டுவிடு! பாவம் பிழைத்துப்போகட்டும்! கதை, கட்டுரை எழுது என கெஞ்சினார்கள்.

அதனால், தைரியம் வந்து, தத்தி தத்தி நடப்பது போல, எழுத ஆரம்பித்தேன்.  இரண்டு நிபந்தனைகள் எனக்குள் நானே உருவாக்கிகொண்டேன். ஒன்று. உருப்படியாய் எழுத வேண்டும். எந்த சமயத்திலும் மொக்கையாய் எழுதக்கூடாது.

இரண்டாவது, மற்றவர்கள் எழுதிய பதிவுகள் எவ்வளவு அருமை என்றாலும் தளத்தில் பகிரக்கூடாது! காரணம் நான் கொஞ்சம் சேம்பேறியும் கூட! எழுதாமல், படிப்பதில் ஒன்றை பகிர்ந்து விட்டுவிடக்கூடாது அல்லவா!

துவக்கத்தில் ஒரு பதிவுக்கு 15 லிருந்து 20 வருகைகள் இருந்தாலே அதிகம்.  ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு நாளைக்கு 40லிருந்து 50 என வருகைகள் இருந்தது.  எங்கிருந்து நம் தளத்திற்கு வருகை தருகிறார்கள் என்பது இன்றைக்கு வரைக்கும் எனக்கு ஆச்சர்யம் தரும் விசயம் தான்!

****

கடந்த தீபாவளி வாரத்தில், தமிழ்மணம் 'நட்சத்திர பதிவராக' அழைப்பு விடுத்திருந்தது.  அழைத்த பொழுது, சந்தோசத்தைவிட பதட்டம் தான் அதிகம் வந்தது.  மாதம் இரண்டோ அல்லது மூன்றோ எழுதுபவனை ஒரு வாரம், ஏழு இடுகைகள் எழுத சொன்னால்! இருப்பினும் எழுதினேன்.

பழைய, புதிய வாசகர்கள், பதிவர்கள் என எலோரும் உற்சாகப்படுத்தினார்கள்.  அந்த வாரம் மட்டும் கிட்டத்தட்ட 3000 வருகைகள் கூடியிருந்தது.

****
வழக்கமாக வாசகர்கள் வருகை தந்தாலும் எழுதுவதை பற்றி, வாசகர்கள் கருத்தை அறிந்துகொள்ள முடியாததாக இருந்தது.  பின்னூட்டங்கள் அபூர்வம் தான்.  இருப்பினும் தொடர்ச்சியாக வருகை தருவதால் உருப்படியாக எழுதுகிறோம் என மன ஆறுதல் பட்டுக்கொண்டேன்.

****

கடந்த வாரம் முகநூலில் ஒரு ஸ்டேட்ஸ் ஒன்றை போட்டேன். "நம்முடைய பக்கத்திற்கு எத்தனை பேர் வருகிறார்கள் என தெரிந்து கொள்ளமுடியுமா? யாருமே வராத கடையில் ஏன் சின்சியராக டீ ஆற்றவேண்டும்? மூடிடலாம் என நினைக்கிறேன்!" முன்பு எழுதிக்கொண்டிருந்த பல பதிவர்களை காணவில்லை.  நிறைய புதிய பதிவர்கள் எழுத வந்திருக்கிறார்கள்.

அதனால் வருகை தந்த, வாசித்த, விமர்சனம் செய்த, என்னை தொடர்கிற (Followers) அனைவருக்கும் நன்றி இந்த நாளில் நன்றி தெரிவித்துகொள்கிறேன். வருங்காலத்திலும் இப்பொழுது எழுதுவதை விட உருப்படியாய் எழுத முயற்சிக்கிறேன் என உறுதிகூறுகிறேன்.

மீண்டும் நன்றிகளுடன்,

குமரன்.

****

Tuesday, August 21, 2012

மனிதர்கள் 16 - சித்ரா

பெண் தேடும் படலத்தில் பாரதி, இராஜீ அவர்களுக்கு பிறகு, நண்பர் சுறுசுறுப்பானார்.  இன்னும் சில நாள்கள் போகட்டுமே என்றேன். வழக்கம் போல என் பேச்சை காதில் வாங்கிகொள்ளவே இல்லை.

மதுரையில் அச்சகம் வைத்து இயக்கும் ஒரு நண்பர் சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஒரு தகவல் மையம் நடத்தி வந்தார். அவரை அணுகியதில், சித்ரா என்ற திருச்சி பெண் விவரங்கள் இருக்கிறது. பார்க்கிறீர்களா எனக் கேட்டார்.  புகைப்படத்தையும், பயோ டேட்டாவையும் வாங்கிகொண்டோம்.

டிகிரி படித்திருந்தார். அப்பா இறந்துவிட்டார். போட்டோவில் முகம் தெளிவாய் இருந்தது. அந்த பாஸ்போர்ட் புகைப்படத்தில் சித்ரா மெலிதாய் என்னைப் பார்த்து சிரித்தார். முதல் அளவில் தேறியதும், தொடர்பு கொண்டு பேசினோம்.

அந்த பெண்ணுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை சமீபத்தில் செய்திருப்பதாகவும், பேச்சு இப்போதைக்கு இல்லை. சில நாள்கள் கழித்து பேச்சு வந்துவிடும் என மருத்துவர் சொல்லியிருக்கிறார்.  வந்து பாருங்கள் என பெண்ணின் அம்மா பேசினார். என்ன பிரச்சனை? என்றதற்கு 'தைராய்டு' என்றார்கள். 

அண்ணி ஒருவர் ஹோமியோபதி மருத்துவர். அவரிடம் கருத்து கேட்டதற்கு கொஞ்சம் யோசித்து செய்யுங்கள் என்றார்.

'எனக்கு தெரிந்து மூவருக்கு திருமண்த்திற்கு முன்பு வந்த தைராய்டு பிரச்சனையால், குழந்தை இல்லை' என்று ஒரு மருத்துவ குண்டை தூக்கிப்போட்டார் அண்ணன்.

அறுவை சிகிச்சை செய்த விவரத்தை கொஞ்சம் அனுப்பிவையுங்கள். மருத்துவரிடம் கருத்துக்கேட்டுவிட்டு பெண் பார்க்க வருகிறோம் என்றோம். பெண்ணின் அம்மாவோ நீங்கள் பார்க்க வரும்பொழுது, நான் கையோடு தருகிறேன் என்றார். நேரே வர வைப்பதில் அவருடைய முனைப்பு தெரிந்தது.

நண்பரிடம் சொல்லி வேண்டாமே என்றேன்.  அவர் கோபித்துக்கொண்டார்.  சரி! குழந்தை இல்லையென்றால் என்ன! பெண் பார்க்க திருச்சி கிளம்பினோம். நண்பர், நான், இன்னொரு நண்பரின் துணைவியார் அந்த சமயத்தில் திருச்சியில் ஒரு தேர்வு எழுத வந்திருந்தார். அவரை அங்கு போய் பிக்கப் பண்ணிகொண்டோம்.

இந்த மெயின் கதையில், சில கிளைக்கதைகளும் இருந்தன. 

பெண்ணின் அப்பா ஒரு அரசு அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநர்.  அவர் பணியில் இருந்த பொழுது, இதய வலியால் இறந்து போனார். பணியில் இருக்கும் பொழுது, இறந்து போனதால், அவருடைய துணைவியாருக்கு அந்த அலுவலகத்திலேயே வேலை தந்திருந்தார்கள்.

அதற்கு பிறகு, அங்கு வேலை செய்த இன்னொரு ஓட்டுநரோடு பழக்கம் ஏற்பட்டு அவரோடு வாழ்ந்துகொண்டிருந்தார்.  அவர் ஏற்கனவே திருமணமானவர். அதனால் சட்ட ரீதியாக இரண்டாவது திருமணம் செய்யமுடியாது.  அப்படியே திருமணம் ஆகாமல் அவர் இருந்திருந்து, திருமணம் முடித்தால், கணவனை இழந்தவர் என்ற அடிப்படையில் தான் இவருக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது. அதனால் அந்த தகுதியை இழந்துவிடுவார்.  நான் தெளிவாக சொல்கிறேனா?!

அங்கு நாங்கள் போயிருந்த பொழுது, பெண்ணின் அம்மாவின் இரண்டாவது கணவர் அங்கு இருந்தார்.  உடன் அவருடைய முதல் மனைவியும் அங்கு இருந்தார்.

அந்த அம்மாவின் வாழ்க்கையின் சிக்கலை யதார்த்தமாய் புரிந்துகொள்ளமுடிந்தது. 

எந்தவித சிக்கலும் இல்லாத குடும்பங்கள் சாதி, மறுப்பு திருமணத்திற்கு முன்வருவது என்பது எண்ணிக்கையில் குறைவு தான். நம்முடைய சமூக நிலைமை அப்படி!

வாழ்க்கையில் முதன் முதலாக பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்டோம். பெண் தான் எடுத்து வந்தார். நான் முகத்தையே பார்க்கவில்லை. கூச்சமாய் இருந்தது. :)

நண்பரும், நண்பரின் மனைவியும் உள்ளே போய் பேச்சுக்கொடுத்தார்கள். அந்த பெண்ணால் சுத்தமாக பேசவே முடியவில்லை.  மருத்துவ அறிக்கையை வாங்கிகொண்டு கிளம்பினோம்.

"அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மதுரையில் தான் செய்தோம். அதனால் அந்த மருத்துவரையே போய் பாருங்கள்" என அழுத்தி அழுத்தி சொன்னார். அடுத்த நாள் நண்பரும், நானும் போனோம்.  அந்த பெண்ணுக்கு இன்னும் சில நாள்களில் பேச்சு வந்துவிடும்.  எல்லாமே பாசிட்டாவாக பேசினார். எங்களுக்கு என்ன்மோ, பெண்ணின் அம்மா சொல்லி வைத்து பேசியது போல தெரிந்தது. நன்றி கூறி விடைபெற்றோம்.

அந்த சமயத்தில், என்னிடம் யாராவது ஐஸ் வைத்து பேசினாலே ஜலதோசம் பிடித்தது அதனால், ஒரு பிரபல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன்.  அவரிடம் விவரம் சொல்லி, அறிக்கையை தந்தேன். அமைதியாக படித்துவிட்டு, வேறு வரன் பாருங்கள் என முடித்துக்கொண்டார்.  விவரம் ஏதும் சொல்லவில்லை.

நண்பர் ஒருவர் ஸ்கேன் சென்டரில் வேலை செய்கிறார். அவரிடம் கொடுத்து அங்கு இருக்கும் மருத்துவரிடம் விவரம் கேட்டதற்கு, "அந்த பெண்ணிற்கு புற்றுநோய். முதல் இடத்தை ( ) கண்டுபிடிக்க முடியாது. இரண்டாவது இடமான தொண்டையில் கண்டறியப்பட்டு அறுவைசிகிச்சை செய்திருக்கிறார்கள்.  இன்னும் எத்தனை மாதங்களுக்கு தாங்கும் என சொல்லமுடியாது" என்றார். கடைசில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் படத்தின் இறுதிக்காட்சி போல படு மோசமாக அமைந்துவிட்டதே என நொந்தே போனேன்.

அந்த பெண்ணின் நிலை புரிந்து நிறைய வருத்தமாகிவிட்டது. அந்த அம்மாவிற்கு தன் மகளுக்கு எப்படியாவது ஒரு திருமணத்தை முடித்து பார்த்துவிடவேண்டும் என்ற துடிப்பை புரிந்துகொள்ளமுடிந்தது.

அந்த மருத்துவ அறிக்கையோடு 'மன்னியுங்கள்' என சுருக்கமாய் கடிதம் எழுதி அனுப்பினோம். சித்ரா இப்பொழுது எப்படி இருக்கிறார் என தெரியவில்லை. :(

Monday, August 20, 2012

சாப்பாடு ‍ - சில குறிப்புகள்

உணவகத்தில் பணம் கொடுத்து டோக்கன் வாங்கி தான் சாப்பிட வேண்டும் என் ஏன் கொண்டுவந்தார்கள்.  சாப்பிட்டு விட்டு பணம் இல்லை என்று கைவிரித்துவிடக்கூடாது என்பதற்காகவா? :)

'பசியோடு அமர்ந்து பசியோடு எழு' என்கிறார்கள்.  சுவையான உணவு என்றால், இதை மறந்து போகிறோமே! ஏன்? :)

குழம்பு வகைகள் நன்றாக செய்ய செய்ய தெரிந்தவர்களுக்கு சுவையான‌ ரசம் வைக்க தெரியாது.  சுவையாக‌ ரசம் வைக்க தெரிந்தவர்களுக்கு குழம்பு வகைகள் செய்ய தெரியாது என்கிறார்கள்.  இரண்டுமே சரியாக வைக்க தெரியாதவர்கள் பற்றி பேச்சே இல்லை.  என் அனுபவத்தில் இதை சரியென்றே உணர்கிறேன்.  உங்கள் அனுபவம் என்ன?

வயிற்றுக்கு பற்கள் கிடையாது.  அதனால், எதை தின்றாலும் மென்று தான் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.  ஆனால், எங்க அண்ணன் அரிசி சோற்றை மென்று சாப்பிடக்கூடாது என்கிறார். எது சரி?

சாப்பிட உடனே தண்ணீர் அருந்த கூடாது.   அது செரிக்க தயாராய் இருக்கும் அமிலத்தை நீர்த்து போகவைத்துவிடும் என்கிறார்கள்.  அதனால், அரைமணிநேரம் கழித்து உடலே நீர் கேட்கும்.  அப்பொழுது குடியுங்கள் என்கிறார்கள். சரியா?

நாகர்கோவில், கன்னியாகுமரிகாரர்களுக்கு காரக்குழம்பு வைக்க தெரியாது. அதற்கு அங்கு அதிகம் விளையும் தேங்காயும் ஒரு காரணம் என்கிறார்கள். உண்மையா?  என் அனுபவத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி சாப்பாடு சவ சவ என்று தான் இருக்கும்!

சாப்பிடும் பொழுது வாய் திறந்து சாப்பிடக்கூடாது.  அப்படி சாப்பிட்டால் ஆக்சிஜனும் சேர்ந்து உள்ளே போகும். அதனால், சரியான செரிமானம் நடைபெறாது என்கிறார்கள். உண்மையா?

அப்புறம் முக்கியமான் குறிப்பு.  இதில் எது ஒன்றையும் சிக்கலாக்கி, எஸ்.எம்.எஸ். அனுப்பி சமூகத்தை கலவரப்படுத்திக்கொள்ளக்கூடாது.  நான் உள்ளே போவதற்கு விருப்பம் இல்லை. :)

Thursday, August 16, 2012

இன்சூரன்ஸும் தொல்லை தரும் போலீசும்!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

அன்றிரவு இரவு 12.30 மணி.  ஒரு சாவு வீட்டுக்கு நண்பர்களுடன் சுமோ காரில் வெளியூர் போய்விட்டு திரும்பும் பொழுது, கோயம்பேட்டில் இறக்கிவிட்டார்கள்.  எனது பைக்கை எடுத்து வீட்டுக்கு போகும் வழியில் போலீசு நிறுத்தியது.  குடித்திருக்கிறேனா என பக்கத்தில் வந்து மோந்து பார்த்தார்கள்.  இல்லை.  வண்டி ஆர்சி, ஓட்டுநர் உரிமம் சரியாக இருந்தது.  இன்சூரன்ஸ் தேதி முடிந்திருந்தது.  நான்கு நாட்களுக்கு முன்பு சரியான தேதியில் புதுப்பித்திருந்தேன். ஒரு பிரதி எடுத்து உள்ளே வைக்க மறந்துவிட்டேன்.

உடனே இன்சூரன்ஸ் வேண்டும் என அடம்பிடித்தனர்.  இரவிலோ, பகலிலோ சோதனை செய்யும் சட்ட ஒழுங்கு போலீசாருக்கு ஆர்.சியும், ஓட்டுநர் உரிமமும் போதுமே! இவர்கள் எதுக்கு இன்சூரன்ஸ் கேட்டு தொல்லை செய்கிறார்கள் என என் சிறுமூளைக்கு தோன்றியது.  லஞ்சம் எதிர்பார்த்தனர்.  உடனே என் ஹெல்மெட்டை பிடி என அவர்கள் கையில் திணித்து, வீட்டிற்கு போய் எடுத்து வருகிறேன் என சொல்லி, எடுத்து வந்து காட்டிவிட்டு ஹெல்மெட்டை வாங்கி சென்றேன்.

இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்த சந்தேகம் குறித்து நண்பர் ஒருவரிடம் பேசியபொழுது, அவர் ஒரு அனுபவத்தை சொன்னார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு காலை 11 மணியளவில், அம்பத்தூர் சிக்னல் அருகே, இதே போல சட்ட ஒழுங்கு போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர்.  ஒருவரிடம் என்னை போலவே இன்சூரன்ஸ் இல்லை.  'வண்டியை ஓரம்கட்டு' என ஒருமையில் சொன்னதும், அவருக்கு கோபம் வநதுவிட்டது.  "நீங்க ஏன் இன்சூரன்ஸ் எல்லாம் செக் பண்றீங்க! அது உங்க வேலை இல்லையே!  ஏன் மரியாதை இல்லாம பேசுறீங்க!  நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர்!" என சொல்லி, "மரியாதை இல்லாம பேசியதற்கு மன்னிப்பு கேள்!' என சொல்லி, தன் பைக்கை சாலையை மறித்து நிறுத்திவிட்டார். அதற்கு பிறகு அந்த திமிர் போலீசார் காட்டிய பவ்யமும், கெஞ்சலும் இருக்கிறதே! அட!அட!  "வண்டியை எடுங்க சார்! பேசிக்கலாம்!" என்றனர்.  அவர் உறுதியாக நின்றுவிட்டார். 15 நிமிடம் இப்படியே போனது. பிறகு ஸ்டேசன் போய் பேசிக்கலாம் என சமாதானத்திற்கு வந்தனர்.

இப்பவும் எனக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை! இப்பொழுது முன்பை போல இல்லை! நாலு தெருவுக்கு இரண்டு போலீசார் சோதனையில் தொடர்ச்சியாய் சோதனை செய்துகொண்டு தான் இருக்கின்றனர்.  யாராவது தீர்த்து வையுங்களேன்!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

பின்குறிப்பு : இந்த பதிவில் இன்சூரன்ஸ் தேவையா இல்லையா என்ற விவாதத்தை எழுப்பவில்லை நான்! அது மிக அவசியம்.  ஒருவர் இந்த புரிதலோடு பின்னூட்டமிட்டிருந்தார். அதனால், இந்த விளக்கம்.

அதை போக்குவரத்து போலீசார் சோதனை செய்யட்டும். சட்ட ஒழுங்கு போலீசார் சோதனை செய்வது ஏன்? என்பது தான் எனது கேள்வி.

Saturday, August 11, 2012

ராட்டினம் - ஒரு திரைப்பார்வை!

20 ஆண்டுகளுக்கு முன்பு மோகன், பூர்ணிமா நடித்த 'கிளிஞ்சல்கள்' என ஒரு படம்.  நம் பக்கத்து வீட்டில் நடந்தது போல ஒரு காதல் கதையாக இருக்கும். சினிமாத்தனம் இல்லாத படம் அது! அப்படி ஒரு படம் ராட்டினம்! என்னடா படம் வந்து சில மாதங்கள் கழித்து எழுகிறானே என நீங்கள் நினைக்கலாம்.  படங்களை உடனுக்குடன் பார்க்கிற ஆள் இல்லை நான்.  அப்படி உடனுக்குடன் பார்த்த உத்தமபுத்திரன், ராஜப்பாட்டை, எப்படி சித்ரவதை செய்தன என்பது புலம்பித்தீர்த்த எனக்கு தான் தெரியும்! அப்படி எவ்வளவு மோசமான படங்களை கூட படம் முடியும் வரை பார்த்து, நொந்து, வெந்து எழுதும் பதிவர்களுக்கு பதிவர்களும், சினிமா வாசகரும் நிறைய நன்றிகடன் பட்டவர்கள்.

****

கதை எனப் பார்த்தால்...

நண்பனின் காதலுக்கு நாயகன் உதவ போய், ஒரு +2 படிக்கும் பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்.  பெண்ணின் அப்பா தூத்துக்குடி துறைமுகத்தில் அரசு உயரதிகாரி.  மாமா வழக்கறிஞர்.  பையனின் அண்ணன் ஒரு கட்சியில் வளர்ந்து வரும் ஒரு நபர். அண்ணி கவுன்சிலர். 

காதல் இரண்டு குடும்பத்திலும் மோதலை உருவாக்குகிறது.  காதலில் உருகுகிறார்கள் காதலர்கள். களேபரங்களுக்கிடையில் நாயகன் நண்பர்களின் உதவியுடன் கல்யாணம் முடிக்கிறார். கட்சியின் மாவட்ட செயலருக்கு தன் தொழிலுக்கு பெண்ணுடைய அப்பாவின் தயவு தேவைப்படுகிறது.  ஆகையால் தன் கட்சிகாரனான நாயகனின் அண்ணனையே போட்டுத்தள்ளுகிறார். இந்த சாவுக்கு பிறகு காதலர்கள் இருவரும் வேறு வேறு திருமணங்கள் முடிந்து செட்டிலாகிறார்கள்.  இவர்களின் காதலால், தனது மூத்தப்பையனை இழந்த (நாயகனின்) அப்பா மாவட்ட செயலாளரை ஆள் வைத்து கொல்கிறார்.  படத்தின் இறுதியில் இறந்த பையனை நினைத்து கண் கலங்குவதோடு படம் முடிவடைகிறது.

****
'நாடோடிகள்' படத்தில் இறுதியின் மேட்டுக்குடி காதலைப் பற்றி நாயகன் நீண்ட லெக்சர் போல அடிக்காவிட்டாலும், அழுத்தமாக சில செய்திகளை, உணர்வுகளை படம் சொல்லி செல்கிறது. அது என்னவென்றால், விடலைப் பருவத்து காதல்கள் தங்கள் காதலால் தங்கள் சொந்த, பந்தங்களுக்கு ஏற்படும் துன்ப, துயரங்களை, இழப்புகளை காண மறுக்கிறது என்பது படம் சொல்லும் செய்தி.

படம் சொல்வது போல, அப்படி கணக்கிட்டு காதலிக்க முடியுமா?  என்றால் என்ன நடக்கும்?

"நீயும் நானும் ஒரு சாதி!
எந்தன் தந்தையும்,
உந்தன் தந்தையும்
மாமன் மச்சான்கள்!
செம்புல பெயல் நீர்ப்போல
ஒன்று கலந்தனவே!'

என புகழ்பெற்ற கவிதை போல ஆகும்!

இந்த படம் காதலுக்கு மரியாதையில் காதலால் கட்டுண்டாலும் கொஞ்சம் சுதாரித்து (!) குடும்பத்தின் பாசம், மானம், மரியாதை, கெளரவம் மற்றும் இன்னபிற இத்யாதி வஸ்துகளுக்கு மதிப்பளித்து பிரிவது என முடிவெடுப்பது தான் சரி என்ற முடிவுக்கு தான் வரமுடியும்.  இது காதலுக்கு செய்யும் மரியாதை அல்ல! அவமரியாதை!

அப்படி 'காதலுக்கு மரியாதை' காதலர்கள் போல, பிரிந்து, பெற்றொர்களிடம் பிள்ளைகள் போனால், பிள்ளைகளின் பெருந்தன்மை பார்த்து சேர்த்து வைப்பார்களா?  அதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும். இயல்பில், உடனே சட்டென்று தங்களுடைய சுயசாதியில், உட்பிரிவில் ஒரு பையனை/பெண்ணைப் பார்த்து திருமணம் முடித்துவிடுவார்கள்.

சாதிய சமுகம் உடைய வேண்டுமென்றால்  சாதி மறுப்பு திருமணம் செய்வது ஒரு வழி.  சமூகத்தில் இதை புரிந்துகொண்ட முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் தனது சொந்தங்களுடன் போராடி சாதிமறுப்பு திருமணம் செய்கிறார்கள்.  அந்த போராட்டத்தில் பலர் தோற்றுப் போவதும் உண்டு.   சமூகத்தில் முற்போக்கு எத்தனை சதவிகிதமோ அதைவிட குறைவாக தான் சாதிமறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன.  ஆக காதல் தான் பலரையும் சாதியை மறந்து திருமணத்தில் முடித்துவைக்கிறது.
இப்பொழுதெல்லாம் சமூகத்தில் காரியவாதம் மிஞ்சி நிற்பதால், காதலிப்பது ஒரு நபரை! சுயசாதி, பெரும்வரதட்சணை பலன்களுக்காக திருமணம் செய்வது வேறு ஒருவரை என்பதாக இருக்கிறது.

ஆக படம் சொல்லும் சேதிக்கு பின்னால், இப்படி பல அபாயங்கள் இருக்கிறது. படம் பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்!

மற்றபடி படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் புதுமுகங்களாக இருந்தாலும், இயல்பாக வலம்வருகிறார்கள்.  புதிய இயக்குநர் என தெரியாத அளவிற்கு படத்தின் தரம் இருக்கிறது. நாயகனின் அண்ணனாக வருகிறவர் தான் படத்தி இயக்குநர்.

இப்பொழுது தேடினாலும், திரையில் பார்க்க உங்களுக்கு வாய்ப்பில்லை. 30ரூக்கு நல்ல தெளிவான பிரிண்டில் டிவிடி கிடைக்கிறது. வாங்கிப்பாருங்கள்.  இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை.  இன்னும் சில நாள்களில் ஏதோ ஒரு சின்னத்திரையில் "உலக வரலாற்றில் முதன்முறையாக" என பில்டப் செய்து, வெளியிடுவார்கள்.  பார்த்து கொள்ளுங்கள்.

****