Monday, July 16, 2012

காதல் + கலாட்டா = ஊரடங்கு உத்தரவு! - ஒரு உண்மைக்கதை

எங்களது அலுவலகத்திற்கு அருகே ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளி அவர்.  கடையில் டீ சாப்பிடும் பொழுது, மதிய உணவு சாப்பிடும் பொழுதும் பழக்கமாகி, நெருங்கிவிட்டார்.

மாதத்தில் இரண்டு நாள் ஊருக்கு போகிறேன் என சென்றுவிடுவார்.  என்னங்க! என விசாரித்தால் ஒரு அடிதடி வழக்கு! வாய்தாவிற்கு போய்விட்டு வருகிறேன்! என்றார்.

இன்னொரு சமயத்தில், இதுப்பற்றி கேட்டதற்கு விளக்கினார். ஒரு சினிமாவிற்கான கதை இந்த உண்மைக்கதையில் இருந்தது.

****

எங்கள் ஊரில் ஒரு பெண்ணிடம் நான் பேசினேன்.  அதை அந்த பெண்ணின் சித்தப்பா பையன் பார்த்துட்டான்.  வேறொரு சமயத்தில் இதை மனசுல வைச்சுகிட்டு ஒரு அடி வேற என்னை அடிச்சுட்டான்! ஒரு பொடிப்பையன் உன்னை அடிச்சுட்டான்! அவனை வெளுக்கனும்!னு நண்பர்கள் எல்லோரும் கோபப்பட்டாங்க!

'விடுங்கடா! நான் பேசினது தப்பு! அவன் அடிச்சுட்டான்! இத்தோட விட்டுறலாம்!' என அனைவருக்கும் சமாதானம் சொன்னேன்.

சில நாட்கள் கழித்து, இதே காரணத்திற்காக மீண்டும் எங்க சித்தப்பாவை கைய உடைச்சிட்டாங்க! நம்மால சொந்தகாரங்க பாதிக்கப்படுகிறாங்க! இனிமேல் இதை வளரவிடக்கூடாதுன்னு..  நேர்ல போய், உட்கார்ந்து பேசி, சமாதானம் பேசலாம்னு முடிவு பண்ணினேன்.

சென்னையில் நண்பர்களை அழைச்சுகிட்டு, 5 பைக்குல 10 பேர் கிளம்பினோம்.  ஊர் போய் சேர்றதுக்கு இரவாயிடுச்சு!  சித்தப்பா, பெரியப்பா கிட்ட பேசினா, இரவுல பேசமுடியாது! விடிகாலையில பேசிக்கலாம்! படுங்கன்னு சொல்லிட்டாங்க!

நாங்க பேச்சுவார்த்தைக்கு கிளம்பினோம். எதிர்தரப்போ அடிக்க ஆள் திரட்டுறாங்கன்னு தப்பா புரிஞ்சுகிட்டு அவங்க ஆள்களை திரட்டா ஆரம்பிச்சிட்டாங்க!

காலையில் கிளம்பினோம். 'நாங்க (5 பைக்ல) 10 பேர் முன்னாடி போறோம்! மற்றவங்க பின்னாடி வாங்க! என சொல்லிவிட்டு கிளம்பினோம்.  போகிற வழியில் ஒரு தோப்புக்கு அருகே 30லிருந்து 40 பேர் கொண்ட ஒரு கூட்டம் எங்களை வழிமறித்து ஆயுதங்களால் தாக்க ஆரம்பித்தார்கள்.

பேச்சுவார்த்தைக்கு என நாங்கள் வந்து இருந்ததினால் எந்த ஆயுதமும் எங்களிடம் இல்லை.  பத்து பேரையும் வெளுத்துவிட்டார்கள்.  பைக்குகளை தீ வைத்து கொளுத்திவிட்டார்கள். கையில் கிடைச்சதை வைத்து இரண்டு பேரை மட்டும் நாங்க அடிச்சோம்!

தட்டுத்தடுமாறி தலை தெறிக்க தனித்தனியாய் ஓடிப்போய், எல்லோரையும் ஓரிடத்திற்கு வரச்சொன்னோம்.  எல்லோருக்கும் கடுமையான அடி. காயம். மருத்துவமனையில் சேர்த்தோம்.  25000க்கு மேல் செலவானது.  எங்களை அடிச்ச கையோடு நேரே எங்க வீட்டுக்கு போய், டிவி பெட்டி, கரண்ட் பெட்டி என நொறுக்கி தள்ளிவிட்டார்கள்.  எல்லாவற்றையும் சரி செய்ய ரூ. 30000 வரைக்கும் செலவாயிருச்சு!

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கலெக்டர் அந்த ஊரில் ஊரங்கு உத்தரவை அமுல்படுத்தினார்.  எதிர்தரப்புக்கு ஏற்கனவே பல அடிதடி, கேஸ் என பரிச்சயம் இருந்தது. அதனால் எங்க சொந்தகாரங்கள் எல்லோருடைய பெயரையும் போலீஸ் கம்பளைன்ட்ல் சேர்த்துவிட்டார்கள். எங்களுக்கு பரிச்சயம் இல்லாததால் பெயர் தெரிந்த 16 பேர் மீது மட்டும், வழக்கு தந்தோம்.  இந்த பிரச்சனையில் முக்கிய தலைகளை அவசரக்கதியில் நாங்கள் விட்டுவிட்டோம்.

இந்த மூன்று வருடமாக வாய்தா, வாய்தா என அலைந்து கொண்டிருக்கிறோம்.  ஏற்கனவே இரண்டு வழக்கறிஞர்களை வைத்து வழக்கு நடத்தினோம்.  இருவருமே எதிர்தரப்புக்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள்.  அவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக தெரிந்ததால், இப்பொழுது மூன்றாவது வழக்கறிஞரை சந்தித்து, கேஸ் கட்டை கொடுத்திருக்கிறோம்.  வழக்கு நடத்த ஒரு லட்சம் கேட்டிருக்கிறார்.  பழைய வழக்கறிஞர்களுக்கு ரூ. 30000 வரை கொடுத்திருந்தோம்.

*****

'சரி! அந்த பெண்ணை காதலிச்சீங்களா!' என்றேன்.

'நான் 10ம் வகுப்பு படித்த பொழுது, அவங்க 12ம் வகுப்பு படிச்சாங்க!  இருவரும் விரும்பினோம்' என்றார். :)

'இவ்வளவு களேபரம் ஆயிருச்சே!  இரண்டு பேரும் வேறு வேறு சாதியா!" என்றேன்!

'ஒரே சாதி' என்றார். :(

'அந்த பொண்ணு இப்ப எப்படி இருக்கிறார்?

'வேறு ஒருத்தருக்கு கட்டி கொடுத்திட்டாங்க!' என்றார்.

'இதுல கொடுமை என்னன்னா! இவ்வளவு கலாட்டா ஆயிருச்சேன்னு! இனி சரிவராது நான் ஒதுங்கிட்டேன்! காதலிச்சு கழட்டி விட்டுட்டான்னு  வேறு என்னை திட்டி திரிந்தார்கள்' என்றார்.

****

Friday, July 13, 2012

ஒரு அரியர்ஸ்-ம் தொடர் சோகமும்!

நண்பரின் அண்ணன் அவர்.  இரண்டு நாள்களுக்கு முன்பு பார்த்தேன். தன் கதையை நீண்ட நேரம் சொல்லிக்கொண்டிருந்தார். சுருக்கமாய் அவர் சோகத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

ஆசிரியர் பயிற்சிக்காக 2003ல் ஒரு தனியார் கல்லூரியில் படித்தார்.  தனிப்பட்ட சில பிரச்சனைகளால், இறுதி தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாமல் போனார். அங்கு தொடங்கியது அவருக்கான சோதனை.

அந்த ஆண்டு அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அனுமதியில்லாமலும், முறையில்லாமலும் நடத்தப்பட்ட பல தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்தது.  அதில் அந்த ஆண்டு தேர்ச்சியடைந்தவர்கள் தப்பித்தார்கள்.  தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரசு தனது பயிற்சி கல்லூரிகளில் பெருந்தன்மையாக இடம் கொடுத்து படிக்க அனுமதித்தது.  மீண்டும் ஒரு வருடம் முதலிருந்து படித்தார்.

இன்னும் சில ஆண்டுகளில் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கட்டிட சூப்பிரவைசராக பணிபுரிந்தார்.  அவருடன் 2003ல் படித்த நபர்களுக்கு 2010 வாக்கில் வேலை கிடைத்தது. இவர் ஒரு வருடம் தள்ளி தேர்வானதால், அடுத்த வரும் ஆண்டுகளில் வேலை கிடைத்துவிடும் நம்பிக்கையோடு இருந்தார். 

அடுத்து வேலை வாய்ப்பு மூப்பு என்பது இனி மாவட்ட அளவில் இல்லை. மாநில அளவில் என அரசு ஒரு அறிவிப்பு செய்தது.  நொந்தே போனார்.  வேறு வழியில்லை.  காத்திருக்கலாம் என ஆறுதல் செய்துகொண்டார். 

அரசே அடுத்த அதிர்ச்சியும் தந்தது  'தகுதி தேர்வு எழுத வேண்டும்'!  பார்க்கிற வேலையையும் விட்டுவிட்டு, ரூ. 10000 கட்டி ஒரு கோச்சிங் வகுப்பில் சேர்ந்து ஒரு மாணவனை போல, விழுந்து விழுந்து படித்தார். படிக்கும் பொழுது, வயது 40 ஐ நெருங்கிவிட்டதால், நினைவாற்றல் மங்கி கொண்டு வருகிறது! என புலம்பினார்.ஒரு அரியர் வைச்சது தப்பாயா?! என வடிவேல் பாணியில் புலம்பிகொண்டு இருக்கிறார்.

நேற்று தகுதி தேர்வு எழுதி முடித்து, பேட்டி தந்த பல ஆசிரியர்கள் 'கேள்விகள் கடினமாக இருந்தது.  நேரம் குறைவாக இருந்தது' என கண்ணீர்விட்டார்கள்.   நண்பரின் அண்ணனுக்கு ஆறுதல் சொல்ல போன் அடித்தால், ரிங் போய்க்கொண்டே இருக்கிறது!