Thursday, August 14, 2008

'ஜ‌ன‌ க‌ன‌ ம‌ன' - கவிதை


நூல் நூற்கிறாள்
என்னுடன் போட்டி போட்டு
படித்த தனம்

டீ க‌டையில்
கிளாஸ் க‌ழுவுகிறான்
முத்து முத்தாய் எழுதும்
முத்துராசு

கணக்கு பாடத்தில்
100க்கு 100 வாங்கும்
க‌ருப்பு ச‌ந்தான‌ம்
வெல்டிங் பட்டறையில்
கொஞ்சம் கண் அயர்ந்ததில்
செத்துப் போனான்

இருப்பினும்...
நெஞ்சு நிமிர்த்தி பாட‌லாம்
'ஜ‌ன‌ க‌ன‌ ம‌ன'

பின்குறிப்பு : அக்கா பெண் 9ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளியில் ஆண்டுவிழாவிற்காக கவிதை கேட்கிறார்கள். எழுதி தாருங்கள் என்றாள்.

'நீயே எழுதுவது தான் சரி.எழுதி கொண்டு வா! திருத்துகிறேன்' என்றேன்
ஒன்றும் எடுபடவில்லை. அடம்பிடித்து எழுதி வாங்கிப் போனாள். கவிதை நன்றாக இருந்ததாக பாராட்டி, பள்ளி இதழில் வெளியானது.

கவிதையில் வரும் பாத்திரங்கள் நிஜமானவர்கள். இரவில் என்னுடன் பேசி போன ஒரு மணி நேரத்தில் செத்துப்போனான். அடுத்த நாள் அதிகாலையில் மார்ச்சுவரியில் பார்த்த சந்தானத்தின் உடலை நினைத்தால், இன்றைக்கும் என்உடல் புல்லரிக்கும். நெஞ்சு கணத்துவிடும். இறக்கும் பொழுது அவனுக்கு வயது 15.

Saturday, August 9, 2008

இனி அடிக்கடி எழுதுவேன் - நொந்தகுமாரன்






முன்குறிப்பு : அதிக வேலை காரணமாக சில காலம் வலையுலகில் இருந்து விலகியிருந்தேன். வலையுலகில் இன்னமும் கும்மியும், ஜல்லியும் குறைந்தபாடில்லை. இனி அடிக்கடி வலம் வருவேன்.
"எழுத சொல்லி பல பதிவர்கள் நிறைய பின்னூட்டமிடுகிறார்கள். பதிவுலக நண்பர்கள் அன்பு தொல்லை செய்கிறார்கள்" இப்படியெல்லாம் புருடா விடமாட்டேன்.
இடைக்காலத்தில் நிறைய நொந்த அனுபவங்கள். எனக்கே ஆறுதலாய் இருக்கட்டுமே என்று தான் எழுதுகிறேன்.

இன்று சாலை கடக்கையில் ஒரு வாசகம் பார்த்தேன்.

சாலையில் செல்கையில்
செல்போன் பேசாதீர்.
அழைப்பது
எமனாக கூட இருக்கலாம்.

எப்பொழுதும் கட்டளைகளாக, அறிவுரைகளாக எழுதிருப்பார்கள். படித்ததும் பிடித்திருந்தது.