Saturday, October 30, 2010

நொந்தகுமாரனின் பக்கங்கள்! - சுகப்பிரசவம்!

குழந்தை பிறந்த செய்தி சொல்லி நேற்று நண்பர் இனிப்புடன் பகிர்ந்து கொண்டார். அதோடு அவர் சொன்ன தகவல்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியவை.

வலி லேசாக துவங்கியதும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். மதியம் வலி கடுமையாக வந்து.. பிரசவ வார்டுக்குள் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவருக்கு பிறகு வலி வந்து.. 15 பேர் பிரசவ வார்டுக்குள் போய்... ஒவ்வொருவராக 15 பேரும் இரவுக்குள் குழந்தை பிறந்து வெளியே வந்திருக்கிறார்கள். நண்பருடைய மனைவியை மட்டும் காணவில்லையாம். ஒரு வழியாக விடிகாலை 5 மணிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் சொன்னார்களாம்.

கிட்டத்தட்ட 15 மணி நேரம் வலியில் துடித்தும்...அறுவை சிகிச்சைக்கு நகர்ந்து விடாமல்..அதிகப்பட்சம் முயற்சி செய்து சுகப்பிரசவத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இது சமகாலத்தில் அருமையான ஒன்று.

இப்பொழுதெல்லாம் தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் அறுவை சிகிச்சையில் தான் குழந்தைகள் பிறக்கின்றன. அறுவை சிகிச்சையில் தான் நன்றாக கல்லா கட்ட முடியும் என்பதும் இதற்கு முக்கிய காரணமாகிறது. ஏதாவது அபாயகரமான காரணம் சொல்லி, அறுவை சிகிச்சைக்கு எளிதாக நகர்ந்துவிடுகிறார்கள்.

இதில் மூட நம்பிக்கையும் நன்றாகவே வேலை செய்கிறது. சுபயோக சுப தினத்தில் பெற்றெடுக்க அறுவை சிகிச்சை செய்கிறார்கள். முதல் குழந்தை அறுவை சிகிச்சை என்றால்... இரண்டாவது குழந்தையும் 80% அறுவை சிகிச்சை தான் என்கிறார்கள். இது இன்னுமொரு அவஸ்தை.

முதுகு தண்டில் மயக்க மருந்து கொடுப்பதால், வயிற்றை கிழிப்பதாலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு, பெரும்பாலும் பெண்கள் தங்களது பழைய உடல் வலுவை இழந்துவிடுகிறார்கள். முதுகுவலி போன்ற தொடர் பிரச்சனைகளிலும் சிக்கிவிடுகிறார்கள். ஆகையால், சுகப்பிரசவத்திற்கு அதிகப்பட்சம் முயற்சி செய்கின்ற அரசு மருத்துவமனைகள் வாழ்க!

இன்னொரு தகவலும் உண்டு - பிரசவ வார்டு மருத்துவ உதவியாளர்கள் ஆண் குழந்தை பிறந்ததும்...ரூ. 500 கேட்டார்களாம். பெண் குழந்தை என்றால் ரூ. 300 ஆம். நண்பர் லஞ்ச எதிர்ப்பாளர் என்பதால்.. நீங்க லஞ்சமா தான் கேட்கிறீங்க! என சத்தம் போட்டு, நானா விரும்பி தருவதை வாங்கிங்க என்று சொல்லி...ரூ. 100/- தந்திருக்கிறார். இதில் குறிப்பாக நான் சொல்ல வருவது...தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஆண், பெண் பாகுபாடு இருந்தால் பரவாயில்லை. சென்னையின் பெருநகரத்தில் இப்படி பெண் என்றால் குறைவு என்கிற மனநிலை இழிவானது.