Wednesday, June 26, 2013

Raanjhanaa - ஒரு பார்வை

வெகுநாட்களுக்கு பிறகு திரையரங்கில் பார்த்த இந்திப்படம்.  யாராவது பிற மொழியில் நல்ல படம் என தெரிவித்தால், சப் டைட்டிலுடன் டிவிடியில் பார்ப்பது தான் வழக்கம்.  நேற்று ஒரு நண்பருடன் எதைச்சையாக இந்த படத்தை பார்த்தேன். நமக்கு எவ்வளவு இந்தி தெரியும்னா!

'இன்றைக்கு நான் இந்தியில பேசினேன் ஜி!' என இந்தி கற்றுத்தருகிற ஆசிரியரிடம் சொன்னேன். அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். பிராத்மிக் படிக்கிற நம்ம மாணவன் இந்தி பேசிட்டானேன்னு!  என்ன பேசினீங்க! என்றார். இன்றைக்கு ஒருவர் என்னிடம் இந்தியில் வேகமாக பேசி, முகவரி கேட்டார்.  'முஜே இந்தி னஹி மாலும்' என்றேன். போய்விட்டார் என்றேன். அவர் காதில் புகை வந்தது. வேகமாய் நழுவிவிட்டேன்.

எனக்காவது 'ப்யார்', 'சோர்' என பல வார்த்தைகள் தெரியும். நண்பருக்கு சுத்தம். உணர்வுகள் தானே திரைமொழி! அதனால் துணிந்து பார்க்கப் போனோம்.

****

வாரணாசியில் துவங்குகிறது படம். சிறுவயதில் இருந்தே (இந்தியிலுமா!) நாயகன் நாயகியை காதலிக்கிறார். நாயகன் இந்து. நாயகி முஸ்லீம். தொடர் முயற்சியில் நாயகி நெருங்கி வர, இந்து என தெரிந்ததும் விலகுகிறார். பிறகு மீண்டும் நெருக்கம் வர, வீட்டிற்கு தெரிந்து, மேல்படிப்புக்கு தில்லிக்கு அனுப்புகிறார்கள். புதிய உலகம். புதிய சூழல். அங்கு கல்லூரியில் ஒருவரை காதலிக்கிறார். 8 வருடம் கழித்து மீண்டும் ஊருக்கு திரும்ப, நாயகனோ இன்னும் காதலுடன் காத்திருக்கிறார்.  பிறகு வேறொருவரை காதலிக்கும் விசயம் தெரிந்து, நொந்து, அவர்களின் காதலுக்கு உதவி செய்கிறார். (விக்ரமன் படம் நினைவுக்கு வருகிறது!). கல்லூரி காதலன் இந்து. முஸ்லீம் என பெண் வீட்டில் சொல்லியிருப்பது நாயகனுக்கு தெரியவர, கோபத்தில் போய் வீட்டில் உண்மையை சொல்லிவிட, ஏக களேபரமாகிவிடுகிறது. இடைவேளைக்கு பிறகு, அரசியல் அப்படி இப்படி என படம் நகருகிறது. (யப்பா! இத எழுதறதுக்கே எவ்வளவு நாக்கு தள்ளுது)

****

காதல் மட்டும் இல்லையென்றால் இந்தி சினிமாக்காரர்கள் செத்துவிடுவார்கள் போலிருக்கிறது.  இடைவேளை வரை காதல் படமாக நகருவது. இடைவேளைக்கு பிறகு அரசியல் கலந்த படமாக நகருகிறது.  அதிலும் இறுக்கமாக போகாமல், அங்கும் இங்கும் அலைபாய்கிறது.  அந்த அரசியலும் மணிரத்னம் பாணியிலான அரசியலாக இருப்பதால், ஒட்டவில்லை.

தனுஷ்க்கு ஒரு நல்ல அறிமுகத்தை இந்த படம் தந்திருக்கிறது. தனுஷின் நண்பன், தோழியாக வருபவர்கள் இயல்பாக வலம்வருகிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியில் இசை அமைத்திருக்கிறார் என்கிறார்கள்.  ஓரிரு பாடல்கள் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு 'மிளகா' நட்ராஜ். பளிச்சென ஒளிப்பதிவு. இந்தியில் வேலை செய்து சம்பாதித்து, தமிழில் கதாநாயகனாக நடித்து காசை செலவு செய்கிற ஒரு மனுசன். :)

ஆஜானுபானுவான ஆட்கள் இந்தியில் வலம் வரும் பொழுது, அங்கு தனுஷின் நுழைவு பெரிய ஆச்சரியம் தான். தனுஷின் இந்தி உச்சரிப்பு நன்றாக இருந்தது ஆச்சரியம் எனக்கு. வேலை நாளான நேற்று எஸ்கேப்பில் அரங்கு நிறைந்த கூட்டமாக இருந்தது. படத்தில் வசனம் இயல்பாக நன்றாக இருந்ததாக சொல்கிறார்கள்.  பின்னாளில், அம்பிகாபதி டிவிடி பார்த்து புரிந்துகொள்ளவேண்டும். :)  இந்தி சினிமாகாரர்கள் மூன்று மணி நேரம் படம் எடுத்து கொல்வார்கள். அதனாலேயே பெரிய அலுப்பு ஏற்பட்டுவிடுவதுண்டு. பரவாயில்லை. இப்பொழுதெல்லாம் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார்கள். இந்த படம் இரண்டே கால்மணி நேரம் தான் படம்.

****

Monday, June 17, 2013

உள்ளதை உள்ளபடி எழுத தெரியாதோ?!

//மணிவண்ணன் இளமையில், கோவையில் இருந்த காலத்தில்... ‘தீவிரமான கம்யூனிஸ்ட் இயக்க போராளியாக’ இருந்தார். போராளிகளை, போலிஸ் ‘நக்ஸலைட்’ என அழைக்கும்.
முக்கிய நக்சல்களை ‘என்கவுண்டரில்’ போட்டுத்தள்ள திட்டமிட்டது. லிஸ்டில், முதல் பெயர் மணிவண்ணன். தகவலறிந்த நண்பர்கள் மணிவண்ணனை சென்னைக்கு கடத்தினார்கள்.//


- உலக சினிமா ரசிகன் - தன்னுடைய வலைப்பதிவில்...

//பொதுவுடமை கட்சியில் தீவிரமாக வேலை செய்தவர்.கட்சிக்காக சுவரெழுத்து எழுதி உழைத்தவர்.அவரின் தீவிர பொதுவுடமை கருத்துக்களை ஏற்க முடியாமல் கட்சியில் இருந்து தீவிரகம்யுனிஸ்ட் என்று முத்திரை குத்தி தூக்கி வீசப்பட்டவர்.//

- இயக்குநர் களஞ்சியம் - முகநூலில்!

ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவருக்கு ஒளிவட்டம் போடுவதற்காக ஜு.வி., நக்கீரன் ரேஞ்சை விட அதிகமாக எழுதி தள்ளுகிறார்கள். ஏகமாய் அள்ளிவிட்டு,  இருக்கிற நற்பெயரையும் கெடுக்கிறார்கள்.

கோவையில் இருந்த பொழுது பொதுவுடைமை அமைப்பில் வேலை செய்தவர். திரைப்பட ஆர்வத்தில் அமைப்பை விட்டு விலகி, சென்னைக்கு நகர்ந்தவர் என்று தான் ஒரு தோழர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.

உள்ளதை உள்ளபடி எழுத தெரியாதோ?!

மற்றபடி, மணிவண்ணன் எனக்கும் பிடித்த நடிகர் தான்!

Wednesday, June 5, 2013

மாசாணி ‍- தலித் வடித்த சிலை!

ஒரு தலித் பெண்ணும் நல்லவராய் இருக்கிற சின்ன பண்ணையும் காதலிக்கிறார்கள். விசயம் தெரிந்த வீட்டார் சின்ன பண்ணையை சோற்றில் விஷம் வைத்து கொல்கிறார்கள்.  தலித் பெண்ணை ஊரைவிட்டு தள்ளி வைக்கிறார்கள்.  வயிற்றில் பிள்ளையோடு வாழ தத்தளித்து, குழந்தையை பெற்றுவிட்டு இறக்கிறாள்.

அந்த ஊருக்கு சிலை செய்ய வந்த ஒரு இரக்கம் கொண்ட ஒரு சிற்பி இந்த பெண்ணின் நிலை அறிந்து, பாதி சிலை செய்த கையோடு, ஊர்க்காரர்களை சபித்துவிட்டு குழந்தையை கொண்டு வந்து, தன் பேரனாக வளர்க்கிறார்.

25 ஆண்டுகள் கழிகின்றன. இறந்து போன மாசாணி நிம்மதி இழந்த ஆத்மாவாக அந்த ஊரில் பலரை காவு கொள்கிறாள். பாதியோடு நிற்கும் மூலவரின் சிலையை முடிக்க பல சிற்பிகளை அழைத்து வருகிறார்கள். மாசாணி அவர்களை எல்லாம் அடித்து துவைத்து அனுப்புகிறாள்.

இறுதியில், பழைய சிற்பியிடமே போய், சிலையை முடித்து தர கெஞ்சுகிறார்கள்.  தன் பேரனை அனுப்பி சிலை வேலையை முடித்துதருகிறார்.

தலித்தை தள்ளி வைத்த குடும்பம், ஒரு தலித் பெற்றெடுத்த பையன் வடித்தெடுத்த சிலையை ஊரே வணங்குகிறது!  உண்மை தெரிந்த பண்ணையார் குடும்பம் சாதியை புறக்கணித்து, பையனை  ஏற்றுக்கொள்கிறது! தன் பெண்ணையும் கட்டித்தருகிறது. :)

*****

இந்த படம் பார்த்ததும், சிற்பி ராஜன் தான் நினைவுக்குவந்தார். அவருடைய ஆனந்தவிகடன் பேட்டி தான் சட்டென்று நினைவுக்கு வந்தது. பெரியாரிஸ்டான சிற்பி ராஜன், தனக்கு தெரிந்த சிற்பக்கலையை பல தலித் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்து பல அருமையான சிற்பிகளை உருவாக்கியிருக்கிறார். இன்றைக்கு அவர்கள் செய்த பல சிலைகளை தான் பல இடங்களிலும் வணங்கி வருகிறார்கள்.அவருடைய பணி சிறப்பான பணி. அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

***

கதையை பார்த்ததும் உணர்ச்சிவயப்பட்டு போய்விட்டு, என்னை திட்டவேண்டாம். நண்பர்கள் ஏதோ படம் வாங்க போக, கிடைக்காமல் இந்த படத்தை எதைச்சையாக வாங்கி வந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த வகை மாதிரியில் 25 வருடத்திற்கு முன்பு இப்படி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. தலித் வடித்த சிலை என்பது மட்டும் உருப்படியான விசயம். மற்றபடி, படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, பாடல்கள் எல்லாம் 25 வருடத்திற்கு முந்தைய தரம் தான். பல வருடங்களுக்கு பிறகு செந்தூர பூவே ராம்கி படத்தில் வருகிறார். பேய் படம் என்கிறார்கள். கடவுள் நம்பிக்கை போய்விட்டதாலும், வயதானதாலும் பயம் தான் வரமாட்டேன் என்கிறது. :)

சிற்பி ராஜன் செய்கிற பணி பலரும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கதையை பகிர்ந்துகொண்டேன்.

***