Saturday, May 19, 2012

முள்ளிவாய்க்காலுக்குப் பின்! - பெண்களின் நிலை!

நேற்று மாலையில் தி.நகரில் "முள்ளிவாய்க்கலுக்குப் பின்"என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  நண்பருடன் போயிருந்தேன். பாண்டிமாதேவி என்பவர் தற்பொழுது ஈழத்துப்பெண்களின் அவலநிலையை சொன்னார்.  அதை உங்களுடன் பகிர்கிறேன்.

****

ஈழத்தில் இப்பொழுது 19 வயதிலிருந்து  35 வரை ஆண்களே இல்லை.  பலர் போரில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்டுவிட்டார்கள்.   பலர் காணாமல் (!) போய்விட்டார்கள்.  பலர் சிறையில் இருக்கிறார்கள். அதனால், அங்கு விதவை பெண்களும், கணவன், மகன் இல்லாத பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கென்று பாதுகாப்பான வீடு இலை. தார்ப்பாலின் அமைத்து தங்கியிருக்கிறார்கள். அது திறந்தவெளி வீடு போலத்தான்.  ஆண்கள் துணையில்லாமல் இருப்பதால், இரவில் இலங்கை இராணுவத்தினர் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்.

ஆங்காங்கே இராணுவத்தினர் சோதனை செய்வதாக தடுப்பரண்களை உருவாக்கியிருக்கிறார்கள்.  பெண்குழந்தைகள் இதைத்தாண்டி தான் பள்ளிகளுக்கு செல்லவேண்டும்.  பள்ளிக்கு போகலாம். அது ஒருவழிப்பாதை தான். வீடு திரும்பமுடியாது.  அவர்களுக்கு கடந்தகால கசப்பான அனுபவம் நிறைய உண்டு.

முன்பு  ஒரு பெண்குழந்தை பள்ளிக்கு போனவள் திரும்பவே இல்லை.  தேடிப்போன அம்மாவும் திரும்பவில்லை.  பக்கத்துவீட்டுக்காரர் தேடிப்போனார். அவரும் திரும்பவே இல்லை.  மொத்தமாக பகுதி மக்கள் தேடிப்போய் கேட்டால் யாரும் இங்கு வரவில்லை என்றார்கள்.  பக்கத்தில் ஈரமண்ணைப் பார்த்து தோண்டிப்பார்த்தால், பல பெண் குழந்தைகளும், பெண்களும் அதில் இருந்தார்கள். இதனால் பள்ளிக்கு யாரும் தங்கள் பெண் குழந்தைகளை அனுப்புவதில்லை.

இப்படி இராணுவத்தினரால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாவாதிலேயே இளம்வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை நடத்திவிடுகிறார்கள்.  முதல் பிரசவத்திலேயே பலரும் இறப்பார்கள் என்பது எதார்த்தம்.

அங்கு இப்பொழுது யாருக்கும் வாழ்வதாரமே இல்லை.  ஆனால் சாராயம் மட்டும் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இருக்கின்ற சில ஆண்களும் குடிகளில் மூழ்கிகிடக்கிறார்கள். பெண்கள் தங்கள் உடலை விற்றுத்தான், பிள்ளைகளை காப்பாற்றவேண்டிய அவலநிலை.  சிங்களவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் மாதத்தின் முதல் வாரத்தில் அங்கு போய் வாசலில் நிற்கிறார்கள்.

****

Friday, May 11, 2012

மனிதர்கள் 15 - ரேவதி

அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் குறித்து சமூக அக்கறை கொண்ட அரசு பள்ளி ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.   அவர் சில செய்திகளை பகிர்ந்துகொண்டார்.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் குறைவு என்ற குறைகள் உண்டு.    தனியார் பள்ளிகளில் நிறைய குறைகள் உண்டு.

வசதி இல்லாததினாலேயே பள்ளிகளில் இடைநிற்றல்கள் அதிகமாக இருக்கிறது.  என் வாழ்வில் நிறைய நல்ல மாணவ/மாணவிகள் பள்ளி படிப்பை பாதியிலேயே நிற்கும் பொழுது வருத்தமாக இருக்கும். 

அப்படி ஒரு மாணவி தான் ரேவதி.  1ம் வகுப்பிலிருந்து கவனித்து வருகிறேன்.  நல்ல சுறுசுறுப்பான, அறிவான பெண்.  தமிழில் கூட 100க்கு 100 வாங்குகிற பெண் அவள்.  ஒரு எழுத்துப்பிழை, சந்திப்பிழை கூட இருக்காது.  இரண்டு முறைக்கு, மூன்றுமுறை கூட சோதித்துவிடுவேன். பிழையே இருக்காது.

அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலை. அப்பா போஸ்டர் ஒட்டுகிற தொழிலாளி.  அம்மா மனநிலை சரியில்லாதவர்.  யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார்.  அந்த பெண்ணின் படிப்பு செலவுகளை அப்பா தவறாமல் நிறைவேற்றிவிடுவார்.  அவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நோயில் இறந்தார்.  அம்மாவிற்கும் நோய் முற்றியது.  பத்தாம் வகுப்பு முடிந்ததும், படிப்பை தொடரமுடியவில்லை.

என்னைப் போல ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து உதவி செய்து, 12ம் வகுப்பு வரை படிக்க வைத்தோம். நல்ல மதிப்பெண்கள் வாங்கினாள்.  ஆனால், அதற்கு மேல் படிப்பைத் தொடரமுடியவில்லை.  எங்களாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியவில்லை.

படிப்பில் ஆர்வம் இருந்தும், வாழ்க்கை நெருக்கடி திசை திருப்பிவிட்டது.  ஒரு பையன் அந்த பையனை காதலித்தான்.  வேறு வழி தெரியாமல், அந்த பையனை திருமணம் செய்துகொண்டாள்.

இப்பொழுதும் ரேவதி போல பல மாணவ/மாணவிகளை பார்த்துத்தான் வருகிறோம்.  நன்றாக படிக்க கூடிய மாணவர்கள் இடையில் நிற்பதும், வசதி, வாய்ப்பு இருப்பதினால், சுமாராக படிக்ககூடிய மாணவ, மாணவிகள் மாஸ்டர் டிகிரி வரைக்கும் படிப்பதையும் பார்த்து வருகிறோம். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் மக்கள் அரசு வரவேண்டும்.  கல்வியில் தனியார்மயம் ஒழிக்கப்பட்டு, இலவச கல்வி வழங்கப்பட்டால், இங்கு அனைத்து மாணவர்களும் நன்றாக மேலே வருவார்கள்.

*****

Friday, May 4, 2012

வழக்கு எண் : 18/9

படம் வந்த அன்றைக்கே படத்திற்கு போய், பல மாதங்களாகிவிட்டது.  கடைசியாய் இராஜபாட்டையில் சிக்கி சின்னபின்னாமாகி வெளியே வந்தேன்.  இப்பொழுதெல்லாம், விமர்சனம் படிக்காமல் எந்த படமும் பார்ப்பதில்லை.  பதிவர்கள் தான் உடனுக்குடன் படம் பார்த்து, விமர்சனம் எழுதி,  பல மோசமான படங்களிலிருந்து காப்பாற்றுகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.  நேற்று இந்த படத்திற்கு நண்பனுடன் போனேன்.

****

இயக்குநர் பாலாஜி சக்திவேலை எனக்கு பிடிக்கும்.  அதிமுக கருங்காலிகள், தர்மபுரி அருகே பஸ் எரித்து மூன்று மாணவிகளை உயிரோடு கொளுத்திய கொடுமையான நிகழ்வை 'கல்லூரி' என படம் எடுத்தார்.  சரியாக போகவில்லை.  தமிழகத்தின் மிக முக்கியமான நிகழ்வை தான் சரியாக கையாளவில்லை.  வேறு யாராவது எடுத்திருந்தால் சரியாக கையாண்டிருப்பார்கள் என உண்மையிலேயே நேர்காணலில் வருந்தினார்.  தமிழ்ப்பட நச்சு சூழலில் அந்த கதையை யாரும் தொட்டிருக்கவே மாட்டார்கள் என்பது தனிக்கதை.  இருப்பினும் ஒரு படைப்பாளிக்குரிய நேர்மை அவருடைய பேச்சில் இருந்தது.

இடைக்காலங்களில் வேறு படங்கள் எடுக்காமல், ஷங்கர் எடுத்த படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக வேலை பார்த்துகொண்டிருந்தார்.  இங்கு பல புகழ்பெற்ற இயக்குநர்கள் எல்லாம் தயாரிப்பு நிர்வாகியாக இருக்கவேண்டியவர்கள் தான்.  இந்த மனுஷன் கை சுத்தமாக நேர்மையாக இருந்த காரணத்தினாலேயே, தயாரிப்பு நிர்வாகியாக முடங்கிபோயிருந்தார்.

****

இந்த படம் பல சமூக அவலங்களை, நிகழ்வுகளை தொட்டுச் செல்கிறது.

வட்டிக்கு வாங்கி விவசாயத்தில் போட்டு, விளையாமல் நொடித்துப்போய் தனது கிட்னியை விற்று தற்காலிகமாக நெருக்கடியை தீர்ப்பதா? அல்லது தற்கொலை செய்து செத்துப்போவதா? என்கிற இந்திய விவசாயின் அவலநிலை.

தொழில்கள் எல்லாம் நொடித்து கிடக்க, பெற்றோர்கள் வேலையின்றி அலைந்து திரியும் பொழுது, படிக்கிற வயதில் வேலைக்கு செல்லும் சிறுவர்களின் அவலநிலை.

சுதந்திரம் அடைந்து (!) 60 ஆண்டுகளுக்கும் மேலாகி இந்த நாட்டில் கொத்தடிமை முறை ஒழிக்கப்படாத அவலநிலை!

கூத்துக்கலைகள்  அழிந்து,  கலைஞர்கள் எல்லாம் கூலிகளாக மாறிக்கொண்டிருக்கும் நிலை!

அதிகாரவர்க்கமும், பணம் படைத்த வர்க்கமும் எப்படி எளியவர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்துகொள்கிறார்கள்? என்பதை படம் அழுத்தமாக சொல்லியிருக்கிறது.  நமது முதலமைச்சர் நித்தமும் புகழ்கிற கண் துஞ்சாமல் மக்களுக்கு 'சேவை' செய்யும் காவல்துறையை பற்றி நன்றாகவே பேசியிருக்கிறது.

படத்தில் இன்னும் பிடித்த விசயங்கள்.  தனியாக பாடல்கள் இல்லை.  சண்டைகள் இல்லை. இரண்டு மணி நேரம்தான் படமே!

நம் பகுதியில் நடக்கும் யதார்த்த கதையாய் விரிகிறது.  படத்தில் வருகின்ற யாரும் பார்த்த முகங்களே இல்லை; எல்லோருமே புதியவர்கள்.  இயல்பாக வலம் வருகிறார்கள்.

எளியவர்கள் வாழ்க்கையில் சிறு வயதிலிருந்தே பல்வேறு துன்ப துயரங்களை பார்த்து பக்குவப்பட்டு வளர்ந்தவர்கள். அநீதிகளுக்கு எதிராக சகித்துக்கொண்டு வாழமாட்டார்கள்.  எதிர்த்துப் போராடுவார்கள் என்பதை சொல்லும் இறுதிக்காட்சி  அருமை!

படத்தின் இறுதி பிரேமாக சிதைந்த ஓவியமாக அந்த பெண்ணை காட்டும் பொழுது, குரூரமான சமூகத்தை நினைத்தால் மனதில் பகீரென்று இருக்கிறது. நாம் தொடர்ந்து போராட வேண்டியது நிறைய உள்ளது என்பதை உணரமுடிகிறது.

***

படத்தில் நான் உணர்ந்த குறைகள் :

அந்த மத்திய தரவர்க்கத்துப் மாணவி காவல் நிலையத்தில் தானாக முன்வந்து நிகழ்வை சொல்வது! காவல் நிலையங்கள் எல்லாம் கேவலமாக இருக்கும் பொழுது, இப்படி நிகழ்வது சாத்தியமில்லாதது!  நிகழ்வு நடந்த பொழுது, அந்த பெண்ணும் உடனிருப்பதால்,  அந்த பெண்ணை விசாரணை செய்யும் பொழுது, சொல்வதாக வைத்திருக்கலாம்.

இறுதியில் அப்பாவி இளைஞன் வெளியே வந்து, உண்மைக் குற்றவாளி தண்டிக்கப்படுவது போல போகிற போக்கில் சொல்லப்படுகிறது.  காசுக்கு விலைபோகும் காவல்துறை, நீதித்துறை உள்ள பொழுது, உண்மை குற்றவாளி தண்டிக்கப்படுவது அவ்வளவு எளிதா என்ன!  பல்வேறு அமைப்புகள், மக்கள் போராட்டகளுக்கு பிறகு கொஞ்சம் சாத்தியம்.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

Wednesday, May 2, 2012

மருந்தும் வாழ்வும்!

உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், சொந்தபந்தங்கள் என பலரையும் நெருங்கி பார்த்தால், ஏதேனும் ஒரு நோய்க்காக தினசரி மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.  சிலர் சர்க்கரை நோய்க்காக; ஒருவர் ஒவ்வாமை பிரச்சனைக்கு; இன்னொருவர் தைராய்டு பிரச்சனைக்கு! இன்னொருவர் மனபதட்டத்தை தணிப்பதற்கு!  நோய் வதைக்கிறது என்றால், மருந்து எடுத்துக்கொள்வது கூடுதலாக வாட்டுகிறது.

இவர்களில் பெரும்பாலும் அலோபதி மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.  நானும் சில காலம் வயிறு தொந்தரவுக்காக மருத்துவம் பார்த்தேன்.  பெருநகரங்களில் இருக்கும் பெரும்பான்மையான அலோபதி மருத்துவர்கள் நோயாளிகளிடம் பேசுவதேயில்லை. நோயை கண்டறிகிறார்கள்.  உடனே மருந்து சீட்டு எழுதி தந்துவிடுகிறார்கள். என்ன உணவு சாப்பிடுகிறாய்? இதை தவிர்! இதை எடுத்துக்கொள் என நோயாளியின் மீதான் அக்கறை கொண்டு எதையும் சொல்வதில்லை.  எதை வேண்டுமென்றாலும் உன் விருப்பம் போல தின்றுகொள்! இந்த மருந்து, மாத்திரைகளையும் அத்துடன் உள்ளே தள்ளிவிடு! என்பதாக தான் இருக்கிறது.  "யாரிடம் வேண்டுமென்றாலும் போ! காண்டம் பயன்படுத்து" என்கிற விளம்பரம் தான் நினைவுக்கு வருகிறது!

அலோபதி மருத்துவத்தில், மாத்திரை, மருந்துகளின் விற்பனையில், புதிய கண்டுபிடிப்புகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தான் செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஏதாவது ஒரு நோய் ஒரு மனிதனை தாக்கிவிட்டால், அவன் வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதாகவே, மருந்து கண்டுபிடிக்கிறார்களோ என சந்தேகமே வருகிறது. ஒவ்வாமையை கட்டுப்படுத்தும் சிட்ஜின் என்ற மாத்திரை சரியாக 24 மணி நேரம் வேலை செய்யும் என நண்பர் சொன்னார்.

இந்த சூழ்நிலையில் சமீப காலங்களில் சில நம்பிக்கைகள் தென்பட்டன.  பல ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் அவதிப்பட்ட நண்பரின் சித்தப்பா மாற்று மருத்துவத்தில் மருத்துவம் பார்த்திருக்கிறார்.  சில நாள்களுக்கு ஒரு மருந்து. மற்றபடி முழுவதும் உணவு கட்டுப்பாடு தான்!  இப்பொழுது அலோபதி மருந்தோ, மற்ற மருந்துகளோ இல்லாமலே உணவுக்கட்டுப்பாட்டிலேயே 6 மாதம் சர்க்கரையின் சரியான அளவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இன்னொரு நண்பருக்கு ஆஸ்துமா தொந்தரவு இருந்தது.  இன்ஹேலர் தினசரி பயன்படுத்தி கொண்டிருந்தார்.  தினசரி மாத்திரையும் எடுத்தார்.  ஹோமியோபதி மருத்துவத்திற்கு மாறினார்.  மூச்சுப்பயிற்சிக்காக யோகா போனார். ஒவ்வாமை தரும் பொருட்களை கண்டறிந்து தவித்துக்கொண்டார்.  இப்பொழுது ஆஸ்துமாவிலிருந்து மீண்டுவிட்டார்.

மருத்துவர் காமராஜ் சொல்வது போல, மனிதர்கள் வெகுகாலம் உடல் உழைப்பில் தான் வாழ்ந்துவந்தோம்.  கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தான், நவீன வசதிகள் மனிதனின் வாழ்வை உடல் உழைப்பிலிருந்து விடுதலை செய்திருக்கின்றன.

பெருநகர வாழ்க்கை பதட்டங்களும், தாறுமாறான உணவு பழக்கமும், உடற்பயிற்சியின்மையும் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடுகின்றன.  கவனமாய் இருந்து, ஆரோக்கியத்தையும், பர்சையும் பாதுகாத்துகொள்ள வேண்டும்!