Saturday, August 23, 2014

கூபி இசையும், நாலு வரங்களும் – அருமையான படம்!



நேற்று மாலை சென்னையில் நடத்திய அனிமேஷன்  திரைப்பட விழாவிற்கு போயிருந்தேன். அதில் goopi gawaiya bagha bajaiya என்றொரு இந்திபடம். குழந்தைகள் உட்பட அனைவரும் பார்க்கவேண்டிய படமிது!

கதை. கூபி பாட்டு பாடும் ஒரு பாடகன். மிக மோசமாக பாடுகிறான். கேட்ட கிராமத்து மக்கள் தெறித்து ஓடுகிறார்கள்.  மன்னர் ஊருக்கு வெளியே இருக்கும் காட்டினுள் துரத்த உத்தரவிடுகிறார்.  இவனைப் போல மோசமாக மேளம் வாசிக்கும் இன்னொருவனும் பக்கத்து ஊர் மன்னனால் காட்டிற்குள் துரத்தப்படுகிறான்.  அன்றிரவு ஒருவர் வாசிக்க, இன்னொருவர் வாசிக்கிறார்கள். பேய்களின் ராஜாவிற்கு இவர்கள் பாடுவது மிகவும் பிடித்துவிடுகிறது! மனம் மகிழ்ந்து நான்கு வரங்களை தருகிறார்.

ஒன்று. அவர்கள் இருவரும் இன்னும் (!) அருமையாக பாடவேண்டும். சாப்பிட எது கேட்டாலும் கிடைக்கவேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கு வேண்டுமென்றாலும் போவதற்கு மாய செருப்புகள் வேண்டும். நாலாவது வரத்தை பிறகு கேட்பதாக சொல்கிறார்கள்.

அன்றிலிருந்து பட்டய கிளப்புகிறார்கள்.  உண்மையிலேயே அருமையாக பாடுகிறார்கள். அவர்களுடைய பாடல்களை கேட்பவர்கள் மனம் லயித்து கேட்கிறார்கள். வகைவகையாய் சாப்பிடுகிறார்கள். செருப்பு அவர்கள் விரும்பிய இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள்.

அந்த ஊர் மன்னனுக்கு ஒரு பிரச்சனை. பக்கத்து ஊர் ராஜாவாக இருக்கும் அவருடைய சகோதரன் நாடு பிடிக்கும் ஆசையில் சகோதர நாட்டின் மீதே படையெடுத்து வருகிறான்.  இவர் வைத்திருப்பதோ இம்சை அரசன் 23ம் புலிகேசியை விட பலவீனமான படை.  ஆகையால், பயந்து சாகிறார். தங்கள் இசையால் அந்த மன்னனின் படையெடுப்பை தடுப்பதாக சொல்லுகிறார்கள். இதை அவர்கள் செய்துவிட்டால், தன் மகளையே கல்யாணம் முடித்துதருவதாக வாக்கு தருகிறார்.

இருவரும் போய், சொன்னமாதிரியே தங்கள் மனதை மயக்கும் இசையால், அந்த மன்னனின் போர் வெறியை மாற்றுகிறார்கள். ஆனால், அங்குள்ள தீய நோக்கம் கொண்ட தளபதி மந்திரவாதியின் உதவியால், மீண்டும் போர்வெறி ஏற்றுகிறான். படைகள் தயாராகி, கிளம்புகின்றன.  மீண்டும் தங்கள் இசையால், அவன் மனதை மாற்றுகிறார்கள். 

இறுதியில், சமாதானமடையும் இரு மன்னர்களும். தங்களுடைய இரு பெண்களையும் இருவருக்கும் மணம் முடித்து வைக்கிறார்கள்.  இவர்கள் துவக்கத்தில் மோசமாக பாடியதால், வாய் பேசமுடியாத, காது கேட்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க பேய்களின் அரசனிடம் நாலாவது வரத்தை கேட்டு குணப்படுத்துகிறார்கள். இறுதியில் சுபம்.
*****
இந்திய திரைப்படங்களில் இத்தனை வண்ணமயமான அனிமேசன் படத்தை நான் முதன்முறையாக பார்க்கிறேன். பிரமாண்ட செலவில் எடுக்கப்பட்ட குங்பூ பாண்டாவின் இரண்டாவது பாகத்தின் நேர்த்தியை இந்த படத்தில் பார்த்தேன். அருமை.

இந்த கதையை எழுதியவர் சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திரா கிஷோர். 1968ல் ரே இதே கதையை கூபி கானே பாகே பாய்னே (Goopy Gyne Bagha Byne) என்ற பெயரில் எடுத்திருக்கிறார். ரேயின் தாத்தா குழந்தைகளுக்காக சந்தேஷ் என்ற இதழை நடத்தி வந்தார்அந்த இதழின் ஆசிரியராக பொறுப்பு ஏற்ற சத்யஜித்ரே குழந்தைகளுக்காக நிறைய கதைகள் எழுதியிருக்கிறார், அதில் பெலுடா சீரியஸ் எனப்படும் துப்பறியும் கதைகள் முக்கியமானவை.

சத்யஜித் ரே  எடுத்த கூபி கானே படம்  தேர்ந்த இசை மற்றும் துள்ளல் நடனம், வேடிக்கையான உரையாடல்கள், நாட்டுபுற கதையின் மரபில் அமைந்த இக்கதையை ரே அழகாக படமாக்கியிருக்கி இருப்பதாக சொல்கிறார்கள். அதையும் பார்க்கவேண்டும்.

மேலே சொன்ன கதையை தான் மீண்டும் 2013ல் மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். அருமையான  துள்ளல் இசை. பாடல்கள்.  நகைச்சுவை ததும்பும் வசனங்கள். 

போர் உண்டாக்கும் அழிவையும், இசையும் மகத்துவத்தையும் விளக்கும் படமிது!  அண்ணன் பையனை அழைத்து சென்றிந்தேன். 8 வயது.

இந்த படத்தில் என்ன புரிந்தது? என கேட்டதற்கு..

1. நண்பர்களுக்குள் சண்டை போடக்கூடாது.
2. அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை போடக்கூடாது.
3. சண்டை (போர்) தப்பு

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்!
****
படத்தின் டிரைலர்

https://www.youtube.com/watch?v=o_mhF1i61Mc

Friday, August 22, 2014

மெளனராகம் ரேவதியைப் போல!




பிழைப்புதான் என்னையும் சென்னைக்கு இழுத்து வந்தது.  வந்த நாளிலிருந்து என்னையையும் ஒருவனாய் ஏற்றுக்கொண்டது!

ஓடு! ஓடு! என ஓடுகிற‌ இயந்திரகதியான வாழ்க்கையும், அதனால் வரும் மனப்பதட்டமும்  எப்பொழுதும் என்னை பயமுறுத்துபவை!

பிழைக்க வந்த பிறகு, சொந்த ஊரை நினைத்துக்கொண்டிருப்பது தவறு. இத்தனை காலம் மெளனராகம் ரேவதியைப் போல தான் இந்த மண்ணில் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதை நினைக்கையில் வெட்கமாய் இருக்கிறது!

வந்த நாளில் துவங்கி, சென்னையின் அழகைப் பாதுகாக்கும், எளிய மக்களுடன் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கையில் சந்தோசமாக இருக்கிறது!

375 வயதாகும் சென்னைக்கு  எனது இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Tuesday, August 19, 2014

500 ரூ கள்ளப் பணம்! ஜாக்கிரதை!


காலையில் கரூர் வைஸ்யா வங்கி போயிருந்தேன். 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கேஷியர் கண்டுபிடித்தார். பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, பக்காவாக இருந்தது! திருடர்கள் தெளிவாகிவிட்டார்கள்.  வங்கிகாரர்களும் உஷாராக இருக்கிறார்கள். இடையில் சிக்குவது பொதுஜனம் தான். கள்ள நோட்டை வாங்கியவர் காலையிலேயே மொய்யா என நொந்துகொண்டார்.

முன்பெல்லாம் இப்படி கிடைக்கும் கள்ளப் பணத்தை நம் கண்முன்னே கிழித்துப்போட்டுவிடுவார்கள். அதற்கு முன்பெல்லாம், நம்மிடம் தரமாட்டார்கள். அவர்களே வைத்துக்கொள்வார்கள்.  இப்பொழுது, கொட்டெழுத்தில் ‘Forge Note’ என சீல் குத்தி நம் கையிலேயே தந்துவிடுகிறார்கள். எங்கேயும் இனி மாற்றமுடியாது! வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்படி கையில் தருகிறார்கள்.  சரியாக செயல்படவேண்டுமென்றால், ஒவ்வொருவராக செயின் போல துப்பறிந்தால் தான், யார் இதை புழக்கத்தில் விட்டது என கண்டுபிடிக்கமுடியும்!


100 ரூ. கள்ள நோட்டு இப்பொழுது புழக்கத்தில் இல்லை என நினைக்கிறேன். இந்திய திருநாட்டில் 100ரூ மதிப்பிழந்துவிட்டதை காட்டுகிறது! கள்ள நோட்டு கும்பலை பிடிக்கும் பொழுது கூட ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளோடு தான் மாட்டுகிறார்கள். சென்னை என்றில்லை திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம் என தமிழ்நாடு முழுவதுமே கள்ள நோட்டு கும்பலை கைது செய்திருகிறார்கள். பெரும்பாலும் கலர் ஜெராக்ஸ் மிஷினை வைத்து பிரிண்ட் செய்திருக்கிறார்கள். ஒருமுறை இப்படி கள்ள நோட்டு கும்பலை பிடிக்கும் பொழுது, நமது பத்திரிக்கைகள் இந்த நோட்டுக்களை புழக்கத்தில் விடுவது, பாகிஸ்தானில் இருக்கிற தீவிரவாதிகள் என்றார்கள். அதற்கு பிறகு அதை நிரூபிக்கவும் இல்லை. 

ஆகையால், மக்களே! 500ஐ நிறைய பயன்படுத்துகிறவர்கள் கவனமாக இருங்கள். என்னை போன்ற ஏழைகளுக்கு பிரச்சனையில்லை. எப்பொழுதாவது தான் 500ரூ இரக்கப்பட்டு நம்மை கடந்து போகிறது! J

Sunday, August 17, 2014

மனைவியுடன் பேசுங்கள் ‍- திருச்சி சிவா

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.

  அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய் விட்டது.

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான்.

ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.

பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள்.

எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள்.
மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பனி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றி கொண்டுஇருந்தபொது சிறிதும் முகம் சுளிகாதவள்.

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு,  செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலேயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்திலேயே  பிள்ளையை காட்டி விட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், என்னைக் காண‌ வருவோர் அதனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி;
பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.

பண்டிகைகளும், திருநாள்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள்எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.

இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்ததை ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது.

நேரம்இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்த்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே!

காலம் கடந்து பயன்படுத்தினால் பயற்றுப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுத்தாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது.விளையும் இருக்காது.

இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன். ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே!

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைந்ததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்துஇருந்ததை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தால் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிற‌வரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்...........

இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.

எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படாதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார்.

நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குறிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயணிப்பவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமேஇல்லையே என சொன்னேன்.

ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோ ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன்.

தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்.

என் மனைவிக்கு என்னை உணர்த்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைக்காமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன்

உங்களுக்காகவே
உங்கள் பிள்ளைகளை,
உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிற‌போதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கீகாரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!

நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.

என் வேதனை,
நான்படும் துயரம்
வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம்
அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின்
நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.............

இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

-   

   - திருச்சி சிவா, தி.மு.க‌

North 24 kaatham – மெல்ல மெல்ல மாறும் மனது!



அஞ்சான் பார்த்து நொந்து போனவர்களுக்காக ஏதாவது ஆறுதலாக செய்யலாம் என தோணியது! முன்பெல்லாம் இப்படி வெறுப்பாகி, அதை சரி செய்வதற்கு இன்னொரு படம் பார்த்து, பழைய படத்தின் நினைவுகளிலிருந்து தப்பிப்பது வழக்கம்! சமீபத்தில் பார்த்த நல்ல மலையாள படம் இது! பகத்பாசிலின் நல்ல படங்களில் இதுவும் ஒன்று!
***

கதை. நாயகன்(பகத் பாசில்) ஒரு மென்பொருள் பொறியாளன். எங்கும், எதிலும் சுத்தம் பார்ப்பவன்.  Obessive Personality Disorder பாதிப்பில் மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கிறான். அலுவலத்தில் அவன் நடந்துகொள்ளும் தன்மையில், அவன் வேலையை விட்டு போனால், சொந்த செலவில் அனைவருக்கும் டிரிட் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.  இந்த நிலைமையில், அவன் திருவனந்தபுரம் செல்ல வேண்டியிருக்கிறது.  இவனுக்கோ வெளியூர் போவதென்றால் அலர்ஜி. இருப்பினும் வேண்டாவெறுப்பாய் கிளம்புகிறான்.

ரயிலில் பயணம் செய்யும் பொழுது, நடுநிசியில் சக பயணியான வயதான பெரியவருக்கு (நெடுமுடிவேணு) அவருடடைய துணைவியாருக்கு உடல்நிலை சரியில்லை என தொலைபேசியில் தகவல் வருகிறது.  அந்த செய்தியால் அவர் நிலைகுலைந்து போகிறார்.  மீண்டும் ஊருக்கு போய்சேர, உடன் பயணிக்கும் இளம் பயணியான இளம்பெண் (சுவாதி)  முன்வருகிறாள்.   இருவரும் ரயிலை விட்டு இறங்கும் பொழுது, பெரியவரின் செல்போன் கீழே விழுந்துவிடுகிறது! அதை எடுக்கும் நாயகன் ஒரு செய்தியை கேட்க, வேறுவழியில்லாமல் அவனும் அவர்களுடன் பயணிக்க வேண்டியதாகிறது! 

விடிந்தால் கேரளா முழுவதும் பந்த்.  கிடைக்கிற பேருந்து, ஆட்டோ, படகு என அவர்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.  இயற்கையை ரசிப்பது, மனிதர்கள் அன்புடனும், சிநேகத்துடனும் நடந்து கொள்வது பார்க்கும்பொழுது, நாயகனுக்குள் மனமாற்றம் நிகழ்கிறது!

ஒருவழியாக, மாலை பெரியவரின் ஊரை அடைகிறார்கள்.  அங்கு அவருடைய துணைவியார் இறந்து, கூடத்தில் கிடத்தப்பட்டு இருக்கிறார். அவரும் அவருடைய துணைவியாரும் பொதுவுடைமை கட்சியில் உறுப்பினர்கள். கட்சிக்காக தனது சொத்துக்களையும் தந்திருக்கிறவர்கள்.  பெட்டியிலிருந்து கம்யு. கட்சி கொடியை எடுத்துவந்து போர்த்துகிறார்.

நாயகனும், நாயகியும் அவரவர் ஊருக்கு திரும்புகிறார்கள்.  இந்த பயணத்தில் இருவருக்குள்ளும் காதல் அரும்புகிறது. அடுத்த சில நாட்களில் மீண்டும் சந்திக்கிறார்கள். சுபம்.
****

‘பயணம் ஒரு நல்ல ஆசிரியர். அது பல பாடங்களை கற்றுத்தருகிறது!’ என்ற வாசகங்கள் தான் படம் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

பயணத்திற்கு முந்தைய நாயகன், பிந்தைய நாயகன் – என இருவருக்குள் தான் எத்தனை மாற்றம். இயல்பான காட்சிகளின் மூலம்  அந்த மாற்றத்தை இயல்பாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார்கள்.


அந்த கதாபாத்திரமாகவே பகத்பாசில் மாறியிருக்கிறார்.  நெடுமுடி வேணுவும் கலக்கல். சுவாதி இயல்பாக வலம்வருகிறார்.  ஒரு சிறிய பாத்திரத்தில் நம்மூர் பிரேம்ஜியும் வருகிறார்.


பயணம் சார்ந்த கதை என்பதால், கேரளத்தின் பல பகுதிகளை அவ்வளவு குளுமையாக காட்டியிருக்கிறார்கள்.  மலையாளப்படத்திற்கே உரிய மெதுவாக செல்லும் தன்மை இருக்கிறது!


பந்த் என்றால் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். அரசியலற்று இயக்குநர் இருந்தால், பந்த் என்றாலே தப்பு என்கிற அளவிற்கு காட்சிகளை நகர்த்தியிருப்பார். இந்த இயக்குநருக்கு அரசியல் அறிவு இருப்பதால், அதையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக காட்டியிருக்கிறார்.


2013ம் ஆண்டுக்குரிய சிறந்த மலையாள படம் என்ற தேசியவிருதை வென்றிருக்கிறது! பார்க்கவேண்டிய படம்! பாருங்கள்!