Friday, May 2, 2008

சாத்தான் வேதம் ஓதுகிறது!


மெல்ல மெல்ல கொல்லுகின்ற
மெத்தனால்
கடைசி வரை கொல்லுகின்ற
கள்ளச்சாராயம்
கொடிய விஷத்தன்மை கொண்ட
போலி மதுபானம்

இவற்றைக் குடிப்பதால் வரும் கேடுகள்:

1. கண்பார்வை, உயிர் பறிபோகும்
2. நல்ல குடும்பம் நடுத்தெருவிற்கு வரும்
3. மானம் மரியாதை அடியோடு போகும்
4. உறவும், நட்பும் ஒதுங்கிச் செல்லும்
5. குடும்பத்தை அழித்து குப்பை மேடாக்கும்

உணருங்கள்! திருந்துங்கள்!!
கள்ளச்சாராயம், போலி மதுபானம் காய்ச்சாமல்,
குடிக்காமல் உயந்தவராக வாழுங்கள்

சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை
- இப்படி சென்னை முழுவதும் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த நாட்டு குடிமக்களுக்கு..

* தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான தனியார் கல்லூரிகள்.
மேலும், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருக்கின்றனவாம். விரைவில் அரசு அனுமதி தர தயாராய் இருக்கிறது.

மக்களுக்கு கல்வி கொடுக்கும் பொறுப்பில்லை. தனியார் கல்லூரிகள் தரமான கல்வி தரும். அரசு நம்புகிறது.

* நல்ல குடிநீருக்காக 20 லிட்டர் தண்ணீர், ரூ. 20 க்கு மக்கள் வாங்கி குடிக்கின்றனர்.

குறைந்தபட்சம், மக்களுக்கு தரமான குடிநீர் கொடுக்க பொறுப்பில்லை. தனியார் தரமான குடிநீர் தருவார்கள். அரசு நம்புகிறது.

* ஆனால், இந்த அரசுகள் தனது குடிமக்களின் நலன் கருதி, தனியாரிடமிருந்து புடுங்கி, கண்ணும் கருத்துமாய் தரமான சாராயம் தயாரித்து, அலைச்சலின்றி வாங்க தெருவுக்கு ஒரு டாஸ்மார்க் கடை திறந்து, இரவு 11 மணி வரைக்கும் பொறுப்பாக சப்ளை செய்கிறது.

எனக்கு ஒண்ணு மட்டும் புரியலைங்க!

அரசு விற்கிற சாராயத்தை குடிச்சா

உசிரு போகாதா!
குடும்பம் தெருவுக்கு வராதா!
மான, மரியாதை போகாதா!

மக்களே!
நீங்க தான் எனக்கு இதை விளக்கனும்!