Saturday, September 22, 2012

வாசகர்களுக்கு நன்றி!

'வலையுலகம் நொந்தகுமாரனும்' தளம் இன்றைக்கு 100 வாசகர்களை தொட்டிருக்கிறது. இன்றைக்கு மோகன்குமார் "நான் 100வது வாசகர்" என பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்கும், அனைத்து வாசகர்களுக்கும் நன்றி பகிர்வதற்கான பதிவு இது.

ஏற்கனவே இரண்டுமுறை நன்றி சொல்லியிருக்கிறேன். முதல்முறை கடந்த ஆண்டு தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்து, அந்த வாரத்தின் இறுதியில் தேர்ந்தெடுத்தற்காக தமிழ்மணத்திற்கும், உற்சாகப்படுத்திய நம் மக்களுக்கும் நன்றி சொன்னேன்.  இரண்டாவது முறை, சமீபத்தில் தளம் 50000 ஹிட்ஸ்களை தொட்டப்பொழுது நன்றி பகிர்ந்தேன்.

பொதுவாக பதிவுகளுக்கு வாசகர்களின் கருத்துக்கள் மிக குறைவாக‌ தான் வருகின்றன.  ஆகையால், வருகைகளும், பின் தொடர்பவர்களாகிய வாசகர்களும் தான் எழுதுவதற்கு உற்சாகப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லாமல் கடந்தால் நன்றாக இருக்காது.

எப்பொழுதெல்லாம் ஆரோக்கியமாய், அழுத்தமாய் பதிவுகள் எழுதுகிறேனோ அப்பொழுதெல்லாம் வாசகர்கள் அதிகரிப்பதை கவனித்திருக்கிறேன்.

தொடர்ச்சியாய் மாதத்திற்கு நான்கு பதிவுகள் எழுதுவது கூட அதிகம் தான். அதை அதிகப்படுத்தலாம் என பலமுறை நினைத்திருக்கிறேன்.  ஆனால் சாத்தியமில்லாமல் நாட்கள் நகருகின்றன. அதற்கு முதற்காரணம் பெருநகர  வாழ்க்கை தான்.  நாள்முழுவதும் அலைந்து திரிந்து அசதியாய் இரவு அறையை அடையும் பொழுது கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு, தூங்கத்தான் தோன்றுகிறது.

பல விசயங்களை எழுத நினைத்து, முடியாமல் போனதும் இருக்கிறது.  'மனிதர்கள்' வரிசையில் என் அம்மாவைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்து பலமுறை தோற்றுப்போயிருக்கிறேன்.

மனநிலையும் பிரதான பங்கு வகிக்கிறது. சில நாள்கள் நேரம் அமைந்தாலும், ஒரு வாக்கியம் கூட கோர்வையாய் எழுத முடியாமல் போன அனுபவமும் உண்டு.

இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.  நிறைய படித்தால் தான் எழுத்து இன்னும் கொஞ்சம் அடத்தியாய், ஆரோக்கியமாய் வரும். நிறைய படிக்கவேண்டும். வாசகர்களுடன் அதை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது. அதற்கு நிறைய உழைக்கவேண்டும். நினைப்புக்கு ஏற்ற உழைப்பு இல்லை. வருங்காலங்களில் இன்னும் உழைக்க முயல்கிறேன்.

மற்றபடி, எழுதுவதற்காக எதையாவது எழுதி தளத்தை நிரப்பி, என் நேரத்தையும், முக்கியமாக வாசகர்களின் நேரத்தை வீணடிக்ககூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

மீண்டும் நன்றிகளுடன்,

குமரன் ஜனா.

Friday, September 21, 2012

பயணமும் உணவும் - சில குறிப்புகள்!

சிறுபிராயத்து பயணங்களில்
அம்மாவின் புளியோதரையும்
மணக்கும் துவையலும் சுவையானவை!

பள்ளி பருவத்து நாட்களில்
பயணங்களில்
வாந்தி வந்த கொஞ்ச காலம்
பட்டினியும், தூக்கமும் தான்
காப்பாற்றியவை!

கொண்டை ஊசி வளைவுகளுக்கு பயந்து
இன்றைக்கும்
ஊட்டி, கொடைக்கானலுக்கு
பட்டினியாய் தான் பயணிக்கிறேன்.

பேருந்து பயணத்தில்
கோழிக்குழம்பு வயிற்றை ஒருமுறை
ஏகமாய் கலக்கிய பிறகு
எப்பொழுதும் சைவம் தான்!
ரயிலெனில்
அசைவம் தைரியமாய் சாப்பிடலாம்!

கானா பாடல்கள் ஒலிக்கும்
பேருந்து இளைப்பாறும்
நெடுஞ்சாலை மோட்டல்கள்
பணம் பறிப்பவை!
'கடனுக்காக' பரிமாறப்படுபவை!
இலவசமாய் கிடைக்குதென்றாலும்
ஓட்டுநரும், நடத்துனரும்
பாவப்பட்டவர்கள் தான்!

பீகாருக்கும், தில்லிக்கும்
சென்ற நீண்ட பயணத்தில்
சோத்துக்கு திண்டாடிய அனுபவம்
மறக்கமுடியாதவை!

ரயிலில் தரும்
ஐஆர்சிடிசி உணவுகள்
போன ஜன்மத்து பாவங்களை (!)
நினைவுப்படுத்துபவை!

அதெப்படி சொல்லிவைத்தாற்போல
எல்லா பேருந்து நிலையங்களிலும்
தேநீர் கேவலமாகவே இருக்கிறது!
திண்டுக்கல் கொஞ்சம் தேவலாம்!

நல்ல உணவு
பயணத்தை சுகமாக்கும்!
நல்ல உணவு
எப்பொழுதாவது தான் வாய்க்கிறது!

முகமறியா சகபயணியிடம்
சாப்பிடுங்கள் என்றேல்லாம் - இப்பொழுது
யாரும் கேட்பதில்லை.
கேட்கவும் முடிவதில்லை!

குற்றாலம்! அருவியின் நடனம்!

தமிழ்நாட்டில் பார்த்திராத பல இடங்கள் பல இருக்கின்றன. திரும்ப திரும்ப சென்ற இடங்கள் நிறைய இருக்கின்றன.  ஆனால், ஆண்டு தோறும் போய்வரும் ஒரு இடம் குற்றாலம். மதுரையை சுற்றிக்கொண்டிருந்த காலம் வரைக்கும் எப்பொழுது சீசன் களை கட்டுகிறதோ அப்பொழுது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பஸ் ஏறிவிடுவதுண்டு!

குற்றாலத்திற்கு முன்பே 5 கிமீ தொலைவில் இருக்கும் தென்காசியை அடையும் பொழுதே, குற்றாலத்தின் மணம் காற்றில் மிதக்கும்.  இதமான காற்று உடலை வருடும்.

குற்றாலத்தை நெருங்க நெருங்க உள்ளுக்குள் மனம் பாட ஆரம்பித்துவிடும். மேக கூட்டம் அலைந்து கொண்டே இருக்கும். எப்பொழுது கருமேகமாய் அடத்தியாய் வருகிறதோ,  அப்பொழுது விழும் சாரல். லேசாக அடிக்கும் வெயில். சாரல், இதமான வெயில் என மாறி மாறி செல்லும். இந்த விசேஷ குற்றாலத்திற்கென்றே சிறப்பான துண்டுகள் விற்கப்படுகின்றன.

எங்கு திரும்பினாலும் மக்கள். ஒன்று குளிக்க போய்கொண்டு இருப்பார்கள்.  அல்லது குளித்துவிட்டு வந்துகொண்டிருப்பார்கள்.  மக்களின் சந்தடி எல்லாம் விலக்கிவிட்டு, கொஞ்சம் காதுகொடுத்து கேட்டால், அருவியின் சத்தம் மெல்ல கேட்கும்.  நம்மை செல்லமாய் அழைக்கும்.

போய் சேர்ந்ததும் ஒரு விடுதியில் அறையை பிடித்து, சுமைகளை போட்டுவிட்டு, உடனே குளிக்க கிளம்பிவிடுவோம். அருகில் இருப்பது மெயின் அருவி. குளிப்பது சுகம். அருவியில் குளிப்பது சுகமோ சுகம். குளிப்பது என்பது சாதாரண வார்த்தை.  குதூகலிப்பது. விளையாடுவது தான் சரி.

எவ்வளவு நேரம் குளித்தாலும், எத்தனைமுறை குளித்தாலும் அருவியின் குளியல் அலுக்காது. காடுகளின் வழியே, பல மூலிகைகளின் வழியே பயணப்படுவதால், குற்றால அருவியின் நீர் உடலை தொந்தரவு செய்வதில்லை.

பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி என ஒவ்வொரு அருவியும் ஒவ்வொரு வகை. மக்கள் அடுத்தடுத்த அருவிகளில் குளிக்க பயணப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

அருவியைப் பற்றி ஒரு பதிவு எழுதினால், மனசு ஆறாது.  இன்னும் நிறைய எழுதுவேன்..

Sunday, September 9, 2012

மழை!

நனைந்து வரும் பொழுது

சகோதரன் கேட்டான்

"ஏன் குடையை எடுத்து போகல்ல!"

சகோதரி ஆலோசனை சொன்னாள்.

"மழை நின்ற பிறகு வந்திருக்காலாமில்ல?"

அப்பா கோபமாக

"உனக்கு முடியாம போன தான், புரியும்!"
அம்மா, என் தலையை துவட்டிக்கொண்டே

"முட்டாள் மழை! என் குழந்தை வீடு வந்து சேரும் வரைக்கும் பொறுக்கமுடியலையா!"


(ஆங்கிலத்தில் படித்தது!)