Wednesday, January 28, 2009

‘பித்தன்’ – கவிஞர் அப்துல்ரகுமான்


படித்ததில் பிடித்தது.

கவிஞர் அப்துல் ரகுமான் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘பித்தன்’.

ஏன் பிடித்தது என்றால்.... அப்துல் ரகுமானே பித்தனின் அறிமுகத்தில் சொல்வது மாதிரி

‘பித்தன்
‘எதிர்’களின் உபாஸகன்

….

உலகம் பார்க்காத
இருண்ட பக்கங்களின்
அழகை அறிந்தவன்.

....

முரண்கள்
கள்ளக்காதலர்கள்
என்பதைக்
கண்டுபிடித்தவன்.
….

உள் அத்தியாயங்களில் பல தலைப்புகளில் அசைபோட வைக்கிற, அதிர வைப்பவை பல.

உதாரணத்திற்கு...
மனிதன் ஆடையாய் இலை, தலை கட்ட தொடங்கி... இன்றைக்கு ஜீன்ஸ், டீசர்ட் என மாறி நிற்கிறோம்.

ஆடை தலைப்பில்
பித்தன் சொல்கிறான்.

“பூக்களும் பறவைகளும்
ஆடை அணிவதில்லையே?

நீங்கள்
ஆபாசமானீர்கள்;

அதனால் உங்களை
ஆடையால் மறைத்தீர்கள்”

- கேட்டதும் நாம் ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போகிறோம்.

பெண் தலைப்பில்
பித்தன்

பெண் நட்பில் பலருக்கு மகிழ்ச்சியான நினைவுகள் இருந்தாலும், சிலருக்கு நிறைய கசப்பும் இருக்கிறது.
இந்த வரிகள் எனக்கு பிடித்திருந்தன.

“பெண்களின் கூட்டத்தைக் கண்டு
பித்தன்
விலகி ஓடினான்.

‘நீ பெண்களை வெறுப்பவனா?’
என்று கேட்டேன்.

‘இல்லை; அவர்களை
வெறுக்காமல் இருக்கவே
விலகிச் செல்கிறேன்.
பெண் தூரத்தில்தான்
அழகாயிருக்கிறாள்”.
...

வினா தலைப்பில்
பித்தன்

“வினாக்களே
நம்மை எழுப்புகின்றன.
விடைகளோ
உறக்கமாய் இருக்கின்றன.
வினாக்கள்
நம்மைத் திறக்கின்றன.
விடைகளோ
நம்மை மூடுகின்றன”

- நம் பள்ளிகள் நம் பிள்ளைகளுக்கு செய்யும் அதிகபட்ச வன்முறை “வினாக்கள் எழுப்பாதே!” என மீண்டும் மீண்டும் சொல்கின்றன.

இப்படி புத்தகங்களில் நிறைய இருக்கின்றன. படியுங்கள்.

நவீன கவிதைகள் என நிறைய வருகின்றன. நம் சிறு மூளைக்கு அவைகள் புரிவதில்லை.
அப்துல் ரகுமானின் எழுத்து புரிந்து கொள்வதற்கு மூளையை குடைவதில்லை. எல்லா பாடுபொருளும், உருவகமும், உள்ளடக்கமும் நமக்கு புரிகிறது. அது அவருடைய எழுத்தின் பலம்.

அப்துல் ரகுமான் “பித்தன்”க்கான கருவை 1980 களில் சிந்தித்து, பிறகு எழுதி, 1998 ல் புத்தகமாய் முதல் பதிப்பாய் வந்திருக்கிறது.

இந்த புத்தகங்களில் எனக்கு உடன்படாத விசயங்களும் இருக்கின்றன. 1990களுக்கு பிறகு, அப்துல் ரகுமானிடம் இருந்த சில முற்போக்கு கருத்துக்களும் விலகி, முழுக்க முழுக்க ஆன்மீகம் என்பதாக அவருடைய எழுத்துக்கள் மாறிவிட்டன. சம காலங்களில் அவர் எழுதுவதை படிக்க பிடிக்கவில்லை.

அப்துல் ரகுமான் இறந்துவிட்டார் என ஒரு மாதத்திற்கு முன்பு சன் செய்தியில் பிளாஷ் செய்தியாக வந்தது. அவருடைய கவிதைகள் ஒவ்வொன்றாக வ்ரிசையாக நினைவுக்கு வந்து, அவருடைய இறப்பில் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். பிறகு, கவிஞர் தானா! என உறுதிப்படுத்த தேடும் பொழுது, மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ உள்ள அப்துல் ரகுமான் என்ற பிரபலம் இறந்ததாய் அறிந்தேன். கவிஞர் பிழைத்தார்.

புத்தக வடிவமைப்பு பொறுத்தவரை, அத்தியாயங்களுக்கான இன்டெக்ஸ்-ல் இருக்கிற பக்க வரிசைப் படி இல்லை. மூன்று பக்கங்கள் வித்தியாசம் என புத்தகத்தின் இறுதிபக்கம் வரை தொடர்கிறது. கொஞ்சம் கவனித்திருந்தால் சரி செய்திருக்கலாம்.
***
விலை ரூ. 40

கிடைக்குமிடம் :

நேசனல் பப்ளிஷர்ஸ்,
2, வடக்கு உஸ்மான் சாலை,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்),
தியாகராக நகர், சென்னை – 600 017 பேசி : 2834 3385

Friday, January 23, 2009

சக பதிவர்களே!

வாக்களிக்க தகுதி இருந்தும் தமிழ்மணத்திலிருந்து எனக்கு மின்மடல் வரவில்லை.


“கடந்த இரண்டு வருடங்களில்

49 பதிவுகள்.

2008ல் மட்டும்

27 பதிவுகள்.


கட் அன்ட் பேஸ்ட்

பதிவர்கள் பலர்.


நான்

சுயமாய் சிந்தித்து

எழுதியவை அனைத்தும்.


நேரம் இல்லை.

அதனால் இடுகைகளை

பரிந்துரைக்கவில்லை.


பரிந்துரைத்திருந்தால்

பாதி அவார்டுகளை

அள்ளிட்டு போயிருப்பேன்.


இப்படிசுயபுராணம் பாடவைத்த

உங்களை கண்டிக்கிறேன்.

விருது தான் கிடைக்காது.

நல்ல பதிவர்களுக்கு,

பதிவுகளுக்கு

வாக்களிக்கவாவது

விடுங்கப்பா!

எனக்கு வாக்களிக்க எதுவும் மின்மடல் வரவில்லை.”


பின்குறிப்பு : வேலை அதிகம் காரணமாக பரிந்துரைக்க நேரமில்லை. வாக்காவது அளிக்கலாம் என தமிழ்மணத்திற்கு, மேற்கண்ட பின்னூட்டத்தை அனுப்பி வைத்தால், இன்னும் “awaiting for moderation” என்ற நிலையிலேயே இருக்கிறது. இன்னும் மின்மடலும் வரவில்லை. என்ன செய்வது பதிவர்களே? ஆலோசனை சொல்லுங்கள்!

Friday, January 16, 2009

பேச்சிலர் சமையல்

சொந்த ஊரைவிட்டு, சொந்தங்களை விட்டு, வேலை தேடி, கிடைத்தாலும் பெரும் போராட்டங்களுடன் பெருநகரங்களில் ஒரு பேச்சிலராய் வாழும் இளைஞனின் வாழ்க்கை நிறைய சிரமங்களுடையது.

இராம் சுரேஷ் எழுதிய இந்த பதிவு சிரமங்களை விளக்குகிறது. “பேச்சிலர் சமையல்” தொடர்ச்சிக்காக இங்கே பதிவிடுகிறேன்.

***
நன்றி : இராம் சுரேஷ்

காலையில் எழுந்து பெட்காஃபியும் தூங்குவதற்கு முன் இளஞ்சூடான பாலும் சாப்பிட எல்லாருக்கும் ஆசை இருக்கும். இதெல்லாம் சொந்த/வாடகை வீட்டில் அம்மா அப்பாவுடனோ இல்லை மனைவியுடன் இருக்கும்போதோ மட்டும் தான் அமையும். ஆனால் சமீபத்தில் படித்து முடித்து விட்டு வேலை பார்க்கும், கல்யாணத்திற்கு இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் வரை இருக்கும் பேச்சிலர்ஸ்க்கு எல்லாம் அந்த வாழ்க்கை வாய்க்காது.காலையில் எழுந்து டீ சாப்பிடுவதற்கே மூன்றாவது ஃப்ளோரில் இருந்து இறங்கி பிஸியான ரோட்டை க்ராஸ் பண்ணி சாப்பிட்டு திரும்ப ரூம்க்கு வந்து ஆஃபிஸ் கிளம்புவதற்குள் அந்த ஆசையே விட்டுவிடும்.

வீக் எண்டில் முற்பகல் 11 மணி வரை தூங்கி எழுந்திருக்கும் நாட்களில், ஏதாவது சாப்பிடலாம் என்று ஹோட்டலுக்கு போனால், கடைக்காரர்கள் கார்கில் போரில் பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போல் பார்ப்பான். காலை டிபனும் இருக்காது, மதியம் லஞ்ச் அப்போது தான் தயாராகிக் கொண்டிருக்கும். அடிவயிறு பசியால் பற்றி எரியும்போது மட்டும் வெளியே போய் டீயும் வடையும் சாப்பிட ஆசை வரும். அது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தாங்கும். சரியாக மணி 12.45 ஆகும்போது வெளியே கெளம்பி தலப்பாக்கட்டு பிரியாணியில் லெக் பீஸுடன் பிரியாணி வாங்கிட்டு வந்து வீட்டில் சாப்பிடுவேன். சென்னையில் ஒவ்வொரு ஏரியாவிலும் அட்லீஸ்ட் ஒரு தலப்பாக்கட்டு பிரியாணி கடையாவது இருக்கும்.
.....
இரண்டு வாரம் முன்பு 11.45 ஷோ சில‌ம்பாட்டம் சத்யம் தியேட்டரில் பார்த்தேன். முடித்து விட்டு பக்கத்திலேயே இருக்கும் சரவண பவனில் ஒரு ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிடலாம் என்று போனோம். அது சரவண பவனின் ஸ்பெஷல் கேட்டகிரி ஹோட்டல் என்று தெரியாது. அங்கு பரிமாறப்படும் ப்ளேட், டம்ளர் என்று சகலமும் வெள்ளியில் மின்னியது. இதெல்லாம் உங்ககிட்ட யார்றா கேட்டா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ரெண்டு ஸ்பெஷல் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன்.

அதற்கு சர்வர், "அதெல்லாம் இங்கே கிடைக்காது சார். பிசினஸ் எக்ஸிகியூட்டிவ் மீல்ஸ், ஸ்பெஷல் பஞ்சாபி தாலி மட்டும் தான் கிடைக்கும்" என்றார். "அடப்பாவிங்களா?!!, நானே படம் பாத்துட்டு தலைவலியோடு வந்துருக்கேன். இதுல இவிங்க வேற‌" என்று நானே என்னை நொந்து கொண்டு ரெண்டு எக்ஸிகியூட்டிவ் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன். ஒரு மீல்ஸ் 140 ரூபாய். பாத்திரங்களை வெள்ளியில் போட்டு, பில்லில் கொள்ளை அடிக்கிறார்கள். ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று மட்டும் தான் சரவண பவனில் சாப்பிடுவேன். அவர்கள் போடும் பில்லைப் பார்த்தால் அவ்வளவு நேரம் இருந்த பசியும் பறந்து விடும்.
இருந்தாலும் இரவில் சரவணபவனில் கிடைக்கும் மசாலா பாலுக்கு என் நாக்கு அடிமை.இது தவிர நான் ரெகுலராக செல்லும் இடம் திருவான்மியூர் R.T.O அருகில் இருக்கும் காரைக்குடி செட்டிநாடு ரெஸ்டாரெண்ட். நான் வெஜ் உணவுகள் சாப்பிடுவதற்கு சிறந்த இடம். இரண்டு பேர் சாப்பிட போனால் 500 ரூபாய்க்கு குறையாமல் செலவாகும். லோக்கல் காரைக்குடி கிராமத்து எஃபெக்ட் கொடுக்கிறேன் பேர்வழிகள் என்று சொல்லிக் கொண்டு மேலிருந்து தொங்கும் விளக்குகள், அங்கங்கே சுவற்றில் தொங்கும் முறம், கும்பலாக உட்கார்ந்து காய்க்றி நறுக்கும் கிராமத்து ஆட்களின் ஃபுல் ஸ்க்ரீன் போட்டோ, டிபிக்கல் காரைக்குடி ஸ்டைல் வேட்டிக் கட்டு என்று கெட்ட காமெடி பண்ணுவார்கள். அந்த ஹோட்டலில் எப்போதும் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை மட்டும் ப்ளேயரில் ஓடவிடுவார்கள். வாரத்துக்கு ஒரு முறை போனால் மட்டுமே பட்ஜெட்டைக் காப்பாற்ற முடியும்.நான் வேலை செய்யும் ஆஃபிஸில் இதுவரை மதியம் லஞ்ச் ஒரு பெரிய மெஸ்ஸில் அரேஞ்ச் பண்ணினார்கள். கடந்த மூன்று மாதமாக எல்லாருக்கும் SudexHo கூப்பன் கொடுத்து வெளியே சாப்பிட சொல்லிவிட்டார்கள். Height of Cost cutting!!! சொந்தங்களுடன் இருப்பவன் லஞ்ச் பாக்ஸ் கட்டிக் கொண்டு வந்து எங்கள் வயிற்றெரிச்சலையும் சேர்த்து மதிய உணவைக் கொட்டிக் கொள்வான். பாவப்பட்ட பேச்சிலர்ஸ்க்கெல்லாம் வாழ்வு கொடுக்க‌ சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டல் தான் "ஆந்திரா மெஸ்". அள்ள அள்ள சாதத்தை இலையில் கொட்டுவார்கள். தினமும் நான் வருவதற்கு முன் ஆரம்பிக்கும் ஒரு கொல்ட்டி ஆள், நான் சாப்பிட்டு முடித்து எழுந்திருக்கும் போது தான் சாம்பார் முடித்து ரசம் வருவான். வாழ்க கொல்ட்டிஸ்.

பப்பு (பருப்பாம்), சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, பெருகு (தயிர் என்று தெலுங்கில் அர்த்தம்) எல்லாம் ஒரு ரவுண்ட் முடித்து வரும்போது வயிறு நான்கு மாத கர்ப்பிணி பெண் போல இருக்கும். எல்லாம் சேர்த்து 30 ரூபாய் தான். So cheap. ஆனால் அவர்கள் போடும் காரம் அவ்வளவு சீக்கிரம் தமிழர்களுக்கு ஒத்துக்காது. என்னுடன் சாப்பிட்ட ஒருவனுக்கு காரத்தால் அப்பெண்டிஸ் வந்து ஆபரேஷனுக்காக ஊருக்கு போய் இருக்கிறான். இது தவிர நம்மூரில் சாதிக்கட்சிகள் மாதிரி நான் தங்கியிருக்கும் ஏரியா முழுவதும் எக்கச்சக்கமான‌ ஹோட்டல்கள். நாலு சேர், டேபிள், முன்னாலே புரோட்டோ போடும் கல் இருந்தால் அதுவும் ஒரு ஹோட்டல் என்று கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். சொல்லி வைத்தது போல எல்லா கடைகளும் ஒரே விலை, ஒரே பரிமாறும் ஸ்டைல். குட்டி ப்ளேட் அதன் மேல் பாலிதீன் கவர் போட்டு நம் முன்னே ஒரு 7 வயது பையன் வைத்து விடுவான்.

அந்த ப்ளேட்டை ஒருவர் சாப்பிட்டு முடித்தவுடன் கழுவி முடித்தவுடன் அதன் மேல் அந்த பேப்பரை போடுவார்களா என்றெல்லாம் நீங்கள் யோசிக்க கூடாது. அதுவே உங்கள் மனசை உறுத்தி கடைக்காரரை பார்த்து கேள்வி கேட்டால், உடனே நீங்கள் சென்னை பாஷையில் திட்டப்பட்டு, "அப்படி நீ ஆசைப்பட்டால் சரவணபவன் போய் சாப்பிடு" என்று விரட்டிப்படுவீர்கள். அப்புறம் நீங்கள் நம்ம கோவத்தால ஒரு வடை போச்சே என்று வடிவேலு மாதிரி ஃபீல் பண்ண வேண்டி இருக்கும்.நானும் கொஞ்ச நாளா என்னோட ரூம் மேட்ஸ்கிட்ட குக் வச்சிக்கலாம்டா இல்லை ஒரு கேஸ் ஸ்டவ், குக்கர் வாங்கிக்கலாம்டா என்று எவனைக் கேட்டாலும் "அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்டா... அவன் அவனுக்கு எப்போ வேலை போகும்னே தெரியாது. இதுல நீ வேற அத வாங்கலாம் இத வாங்கலாம்னுட்டு??" என்று திட்டுகிறான்.

இப்போதைக்கு எங்க ரூம்ல சுடு தண்ணீர் வைக்க ஒரு எலக்ட்ரிக் ஸ்டவ் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு பால் காய்ச்சி அதில் கெல்லாக்ஸ்(Kellogs)மிக்ஸ் பண்ணி காலையில் ப்ரேக் ஃபாஸ்டாகவும், மதியம் ஆந்திரா மெஸ்ஸிலும், நைட் ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும் சாப்பிட்டு பேச்சிலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்.

from
http://urfriendchennai.blogspot.com/2009/01/blog-post_05.html

Tuesday, January 6, 2009

“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை!"




“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை; கடனால் தற்கொலை செய்து கொள்கிறோம்”

கடிதம் எழுதி வைத்துவிட்டு நெல்லையில் நகைத் தொழிலாளி குடும்பம் தங்கள் தொழிலில் பயன்படுத்தும் சயனைடு குடித்து 6 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். – 04.01.2009 - நாளிதழ்களிலிருந்து

****

“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்பதற்கு தற்கொலை செய்து கொண்ட அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம். இறந்து போனவர்களைப் பற்றி உச்சு மட்டும் கொட்டாமல், இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து பார்க்கலாமே!

***
இந்த நிகழ்வு பற்றி எழுத ஆரம்பித்து, 4 பக்கம், 5 பக்கம் என கட்டுரை நீள்கிறது. அதனால், சேர்ந்து யோசிக்கலாம்.

* இங்கு கடன் வாங்காதவர்கள் யார்? இவர்கள் மட்டும் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?

* மிரட்டி விட்டு போன அல்லது தகாத வார்த்தைகளை சொல்லி திட்டிய நபர்களை தங்கள் கடிதத்தில் எழுதி வைத்திருக்கலாம். ஏன் அவ்வாறு எழுதவில்லை?

* தற்கொலை செய்து கொண்ட குடும்பம் நகை தொழிலாளர் குடும்பம்.
“செய்கூலி இல்லை: சேதாரம் இல்லை” என விளம்பரம் பார்க்கும் பொழுது நமக்கு என்ன உணர்வு வருகிறது?

* இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இயந்திரங்களால் செய்யப்பட்ட நவநாகரிக நகைகளை இறக்குமதி செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. இது சரியா?


* கந்துவட்டி – தனிநபர் பிரச்சனையா? அல்லது சமூக பிரச்சனையா?