Friday, November 30, 2012

மாபெரும் தப்பித்தல்! (The great Escape)

அதனை "மாபெரும் தப்பித்தல்' என அழைத்தார்கள்.  அதற்கு முன்னர் எப்பொழுதும் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததில்லை என்பதால் அது ஒரு மாபெரும் செயல் ஆகிவிடவில்லை.  அதற்கு முன்னரும் போர்க்கைதிகள் தப்பியோடியிருக்கிறார்கள்.  ஏற்பட்ட விளைவுகள் காரணமாகவும் அதை மாபெரும் நிகழ்வு என்று அது அழைக்கப்பட்டதற்கு காரணம், அதன் பிரமாண்ட கூட்டுழைப்பு தான்.

பெர்லினுக்குத் தென்கிழக்கே நூறு மைல் தொலைவில் ஸ்டாலக் லுப்ட் என்ற நாஜி போர்க்கைதிகள் முகாம் இருந்தது.  மிகவும் பெரியதாக இருந்த அந்த முகாமில் ஒரு சமயம் நேச நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டப் பத்தாயிரம் போர்க்கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர்.  1944ம் ஆண்டு தப்பியோடிவிடுவதென்று உறுதிபூண்ட, திட மனது கொண்ட கைதிகளின் குழு ஒன்று அம்முகாமில் இருந்தது.  உண்மையாகவே ஒரே இரவில் 250க்கும் குறையாத கைதிகள் தப்பிச் செல்ல வழி வகுப்பதென்பதே அவர்களுடைய நோக்கம்.  அப்படிப்பட்டதொரு முயற்சிக்கு, கைதிகளிடையே உச்சபட்ச கூட்டுறவு தேவை. மெய்சிலிர்க்க செய்யும் அத்தகைய தப்பியோட்டம் அதற்கு முன்னர் ஒருபோதும் முயற்சிக்கப்பட்டதில்லை.

ஜெர்மானியச் சிறை முகாமிலிருந்து கைதிகளைத் தப்பியோட செய்வதென்பது பெரிதும் சிக்கலான முயற்சி.  தப்பியோட வழி வகுப்பதற்கான சுரங்கப் பாதையைத் தோண்டி மறைத்து வைக்க வேண்டிய மாபெரும் சவால் எதிர்நின்றது.  கைதிகள் ஒன்றிணைந்து சுரங்கப் பாதையின் போக்கினை வகுத்தனர்.  அதனைத் தோண்ட துவங்கினர்.  கைதிகளுடைய படுக்கைகளிலிருந்த மரப்பலகைகளைக் கரைகள் அமைக்க பயன்படுத்தினர்.  வியக்கத்தக்க விதத்தில், தோண்டப்பட்ட மண்ணை அவர்கள் வெளியேற்றினர். தாமே தயாரித்த ஊது உலைகளைக் கொண்டு குறுகலான பாதைகளில் மின் கம்பிகளைக் கொண்டு மின்விளக்குகள் அமைத்தனர். 

பணியினைச் செய்து முடிக்க அவர்களுக்கு தேவைப்பட்ட பொருட்களின் பட்டியல் நம்ப முடியாததாக இருந்தது.  4000 படுக்கைப் பலகைகள், 1370 மரக்கட்டைகள், 1699 போர்வைகள், 52 நீண்ட மேஜைகள், 1219 கத்திகள், 30 மண்வெட்டிகள், 600 அடி நீள இரும்பு கயிறு, 1000 அடி நீள மின்கம்பி என இன்னும் பலப்பல சுரங்கப் பாதையை உருவாக்குவதற்கான பொருட்களைத் தேடித் திருடிக்கொண்டு வருவதற்கென்றே ஒரு கைதிகள் படை வேண்டியிருந்தது.

சுரங்கப் பாதையை உருவாக்குவதென்பது எவ்வளவு கடினமானதாக இருந்தபோதிலும் தப்பியோட வழிவகுப்பது ஒட்டு மொத்த திட்டத்தில் ஒரு பகுதி மட்டுமே.  தப்பியோடும் ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பொருட்களும் உபகரணங்களும் தேவைப்பட்டன.   சாதாரண குடிமக்கள் அணியும் ஆடைகள், ஜெர்மானிய குடிமக்களுக்கான ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகள், புவி வரைபடங்கள், திசைகாட்டும் கருவிகள், அவசரத் தேவைக்கான பண்டங்கள் மற்றும் இதரப் பொருட்கள், குழுவிற்குத் தேவையான எந்தவொரு பொருளையும் தேடித் திருடி கொண்டு வரும் பணியில் பல கைதிகள் இடையறாது ஈடுப்பட்டனர்.  வேறு சிலர் காவலர்களுக்குக் கையூட்டுக் கொடுத்தும் அச்சுறுத்தியும் காரியங்களை சாதிக்க மிக நேர்த்தியாகவும் அயர்வின்றியும் பாடுபட்டனர்.

... தொடரும்!

படத்திற்கான சுட்டி :

The Great Escape Film
 

Sunday, November 4, 2012

உப்புமா!

சமையல் குறிப்புகள் எழுதி வெகுநாட்களாயிற்று.  21ம் நூற்றாண்டிலும் பெண்கள் சமையல் குறிப்புகள் எழுதினால், அது ரெம்ப பழைய விசயம். சுவாரசியமில்லாத ஒன்று.( : (  ஆண்கள் சமையல் குறிப்புகள் எழுதுவது தான் இதில் புதுசு! :) இந்த வரலாற்று பின்புலத்தில் இந்த பதிவு மிக முக்கியமானது.

எழுதும் பொழுது பக்தர்கள் பிள்ளையார் சுழி போடுவார்களே! அது போல நாம் உப்புமாலிருந்து ஆரம்பிக்கலாம்.  சமையலில் எளிதாகவும், விரைவாகவும் செய்ய முடிவது உப்புமா என்கிறார்கள் சமையல் வல்லுநர்கள்.  ஆனால், புதிதாக செய்பவர்களுக்கு உப்புமா கூட கொஞ்சம் சிரமம் தான். :)

****

தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, ரவை மற்றும் கொஞ்சம் ரசனை, கொஞ்சம் பொறுமை.


ஒரு ஆளுக்கான அளவை குறிப்பிடுகிறேன். அதை நபர்களுக்கு தகுந்தவாறு நீங்கள் அதிகப்படுத்தி கொள்ளலாம்.

ஒரு பெரிய வெங்காயத்தில் பாதியை வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாய் அல்லது ஒரு காய்ஞ்ச மிளகாய்.  ப.மி. என்றால் இரண்டாக கீறி வைத்துக்கொள்ளுங்கள்.

3/4 டம்ளர் ரவையை எடுத்து ஒரு சட்டியில் அதன் நிறம் கொஞ்சம் பொன்னிறமாகி மாறும் வரை வறுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது ஆக்சன்.  ஒரு வடை சட்டியை ஈரம் இல்லாமல் துடைத்துகொண்டு, அடுப்பில் வையுங்கள். சட்டி சூடானதும், தேவையான எண்ணெயை ஊற்றி, சூடானதும், கடுகை போடவேண்டும்.  கோபமாய் இருப்பவர்கள் வெடிப்பார்கள் அல்லவா! அது போல கடுகு வெடிக்கும். அதனோடு கருவேப்பிலையை போடுங்கள்.

பிறகு தயாராய் வெட்டி வைத்திருக்கிற வெங்காயம், மிளகாயை போட்டு வெங்காயத்தின் நிறம் கொஞ்சம் மாறும் வரை (பச்சை வாடை போகும் வரை) வதக்குங்கள்.

1 1/2 டம்ளர் தண்ணீரை ஊற்றவேண்டும்.  தேவையான அளவு உப்பு போட்டுகொள்ளுங்கள்.  தண்ணீர் கொதிக்கும் பொழுது, வறுத்து வைத்திருக்கிற ரவையை அதில் போட்டு, கிண்டுங்கள்.

தண்ணீர் வற்றியதும், அடுப்பை அணையுங்கள்.  சூடான, சுவையான ரவை உப்புமா தயார்.

தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சர்க்கரை நன்றாக இருக்கும்.

****
உப்புமா செய்முறையில் ஒரு சந்தேகம்.  இறுதியில் ரவையை போட்டு கிண்டும் பொழுது, கொஞ்சம் ரவை வேகும் அளவுக்கு அதில் கொஞ்சம் தண்ணீர் இருக்கவேண்டுமா? அப்பொழுது சுவையாக இருக்குமா?  அறிந்தவர்கள் பகிருங்கள்.


****
எனக்கு சுடுதண்ணீர் வைக்ககூட தெரியாது. சமைக்க தெரியாது. ஆனால், ருசியாக தான் சாப்பிடுவேன், பல குறைகளை பட்டியலிடுவேன் என்பது ஒரு நகை முரண்.  சமையல் அறையில் யாரையோ வதக்கி தான், ஒவ்வொரு வேளையும் ருசியாக சாப்பிடுகிறோம் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

****