Saturday, December 29, 2012

கும்கி - 'அய்யா' ராமதாசுக்கு பிடித்த படம்!



நாவலை படமாக்குவது ஒரு வகை.  ஒரு நான்கு பக்க சிறுகதையை இரண்டரை மணி நேர முழு நீளப்படமாக்கப்பட்டது போல இருந்தது கும்கி.  இயக்குநர்கள் கதை எழுதுவதை தடை செய்யப்படவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இந்த படமும் அதை நீருபிக்கிறது.

****

நிறைய பேர் கதை சொல்லிவிட்டார்கள். இருப்பினும் பார்க்கதவர்களுக்காக சுருக்கமாய்.....

ஒரு காட்டுயானை மலை கிராமங்களில் புகுந்து பயிர்களையும், மனித உயிர்களையும் நாசப்படுத்துகிறது.  அரசாங்கம் இதை சாக்காக வைத்து, வேறிடத்திற்கு நகர்ந்து செல் என நைச்சியமாய் பேசுகிறது. காட்டு யானையை துரத்தி, தங்களை பாதுகாக்க , கும்கியை வரவழைக்கிறார்கள். ஒரு நெருக்கடியில் கும்கி வர தாமதமாக, கோயில் யானையை கொண்டு நாயகன் தற்காலிக ஏற்பாடாய் கிராமத்துக்கு வருகிறார். வருகிற இடத்தில் ஊர் தலைவரின் பெண்ணிடம் காதல் பற்றிக்கொள்கிறது.  காதல் ஜெயித்ததா?  காட்டுயானையை விரட்டினார்களா என்பது சொச்ச கதை!

*****
நாயகன், நாயகி, ஒளிப்பதிவு, பாடல் என எல்லாவற்றையும் பற்றி நிறைய செய்திகளை சொல்லி, விமர்சனம் என பல பதிவர்கள் எழுதுகிறார்கள்.  கதை எதைப்பற்றி விவாதிக்கிறது? என்பதை பலரும் விவாதிப்பதில்லை.  ஏனென்றால் சுவாரசியமாக இருக்கிறதா? இல்லையா? என்று தான் பிரபல வணிகப் பத்திரிக்கைகள் இப்படித்தான் எழுதுகிறார்கள்.

****

ஊருக்குள் நாயகன் வந்ததும், நாயகியை கண்ட நொடி முதலாய் காதலில் கசிந்துருகிறார். அந்த பெண்ணும் காதலிக்கிறாள் என தெரிந்த பிறகு, இறுதியில் ஊர்த்தலைவன் தங்களது 300 ஆண்டுகால பராம்பரியம் பேசியதும் நாயகனும், நாயகியும் காதலில் இருந்து விலக முடிவெடுக்கிறார்கள்.

படம் சொல்வது போல, பராம்பரியம், குலப்பெருமை, ஆதிக்க சாதிப் பெருமை என எல்லோருக்கும் தான் உண்டு. இவற்றுக்கு மதிப்பளித்தால் என்ன நடக்கும்?

‘’உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவினர்கள் - மைத்துனர்மார்கள்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை
நெஞ்சம் தாங்கலந் தனவே..” - கவிஞர் மீரா

- என புகழ்பெற்ற கவிதை போல ஆகும்!

இந்த படம் ராமதாசு போன்ற ஆதிக்க சாதி சங்கங்கள் வைத்திருப்பவர்களுக்கு பிடித்தமான படம்.

சாதிய சமுகம் உடைய வேண்டுமென்றால்  சாதி மறுப்பு திருமணம் செய்வது ஒரு வழி.  சமூகத்தில் இதை புரிந்துகொண்ட முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் தனது சொந்தங்களுடன் போராடி சாதிமறுப்பு திருமணம் செய்கிறார்கள்.  அந்த போராட்டத்தில் பலர் தோற்றுப் போவதும் உண்டு.   சமூகத்தில் முற்போக்கு எத்தனை சதவிகிதமோ அதைவிட குறைவாக தான் சாதிமறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன.  ஆக காதல் தான் பலரையும் சாதியை மறந்து திருமணத்தில் முடித்துவைக்கிறது. இப்பொழுதெல்லாம் சமூகத்தில் காரியவாதம் மிஞ்சி நிற்பதால், காதலிப்பது ஒரு நபரை! சுயசாதி, பெரும்வரதட்சணை பலன்களுக்காக திருமணம் செய்வது வேறு ஒருவரை என்பதாக இருக்கிறது.

என் நண்பரின் நண்பர், தலித் பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என பெற்றோர்களிடம் சொன்னதும், பெற்றொர்கள் (விவசாய குடும்பம்) அவர் காலில் விழுந்து கெஞ்சினார்கள். உடனே அவர் மனது இளகிவிட்டார்.

பெற்றோர்கள் மீதான அன்பையும், மரியாதையும், அவர்களின் சகல பிற்போக்குத்தனத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொள்கிறார்கள்.  நாம் பெற்றோர்களை மதிக்கவேண்டும். பிற்போக்குத்தனத்தை வெறுத்து, அதை மீறவேண்டும். அது தான் சரியானது.

****

கும்கிக்கு பதிலாக போகிறேன் என சொல்வது, இதுவரை 50, 60 பேரை காட்டுயானை கொம்பன் கொன்றிருக்கிறது என தெரிந்தும் அங்கேயே இருப்பது எல்லாம் அக்மார்க் ஹீரோத்தனம்.  மற்றபடி முடிவு இயல்பானது.  நாயகன் செய்கிற எல்லா முட்டாள்தனங்களுக்கும் முடிவு இப்படித்தான் அமையும்.

****


Friday, December 21, 2012

'மிஸ்ஸியம்மா'வின் நினைவலைகளில்!

எப்பொழுதும் பழைய படங்களை சில நிமிடங்கள் பார்த்து, அடுத்த சானலுக்கு நகர்ந்து விடுவது வழக்கம்.  அப்படி இந்த படத்தை எளிதாய் கடந்து செல்ல முடியவில்லை. 

****
கதை எனப் பார்த்தால்... ஒரு கிராமத்தில் ஜமீன்தார் திருவிழாவில் சிறுவயதில் காணாமல் போன தன் மகளின் நினைவில் ஒரு துவக்கப்பள்ளி நடத்துகிறார். அந்த பள்ளிக்கு தம்பதி சகிதமாக ஆசிரியர்கள் இருந்தால் முன்னுரிமை என விளம்பரம் தருகிறார்.

நாயகனும், நாயகியும் நகரத்தில் பொருளாதார சிக்கலில் இருக்கிறார்கள்.  ஒரு அதிகாரியின் பெண்ணுக்கு வீட்டு டியூசன் எடுக்க போன இடத்தில் இருவரும் பழக்கமாகிறார்கள். அவரும் வேறு ஊர் மாற்றலாகி போக, கடும் நெருக்கடியில் மாட்டிக்கொள்கிறார்கள். நாயகிக்கோ கடன்காரன் தொல்லை வேறு.  அதனால், நாயகன் மேற்கண்ட விளம்பரம் பார்த்து, இருவரும் தம்பதியாக சிறிது காலத்திற்கு நடிக்கலாம், பிறகு பிரிந்துவிடலாம் என ஏற்க வைக்கிறார்.  இதில் நாயகன் (ஜெமினி) இந்து.  நாயகி (சாவித்திரி) கிறிஸ்து.

இருவரும் ஜமீந்தார் பள்ளியில் பணியில் சேர்கிறார்கள்.  நாயகனுக்கும், நாயகிக்கும் ஏற்படுகிற காதலும், ஊடலும், நகைச்சுவையும் கலந்து கலகலப்பான கதை நகருகிறது. இறுதியில் ஜமீந்தாரின் காணாமல் போன பெண் தான் நாயகி என கண்டுப்பிடிக்கிறார்கள். இறுதியில் சுபம்.

****
1955ல் வந்த படம் என்றாலும் படத்தில் அந்த கால படங்களுக்கான மெதுவாய் நகரும் தன்மை இல்லை.  படம் முழுவதும் கிண்டலும், நகைச்சுவையும் நிரம்பி ததும்புகிற பாடம்.  ஜெமினி, சாவித்திரி இருவருக்கும் உள்ள காதலும், ஊடலும் சுவாரசியம். இந்த படத்தை சென்னையில் பார்த்த ஒரு கர்ப்பிணிப் பெண், சிரித்து, சிரித்தே திரையரங்கில் குழந்தையை பெற்று இருக்கிறார்.

படத்தில் ஜமீந்தாரின் இளைய மகளுக்கு நாயகன் பாட்டுச் சொல்லித்தர, நாயகி பொறாமையில் ஜமீந்தாரின் மருமகனான தங்கவேலுக்கு பாட்டுச் சொல்லித்தர, அவரும் கீச்சு குரலில் இழுத்து இழுத்துப் பாடுவது செம கலகலப்பு.  இன்றைக்கு உள்ள பெரும்பாலான படங்களில் உள்ள நகைச்சுவை சக மனிதர்களை இழிவுப்படுத்துபவை. படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

'பிருந்தாவனும் நந்தகுமாரனும்', 'வாராயோ வெண்ணிலாவே"  அனைத்து பாடல்களும் கேட்க இனிமையானவை.  மனோகரா, இருவர் உள்ளம் படத்தை இயக்கிய எல்.வி. பிரசாத் தான் இந்த படத்தையும் இயக்கினார். கதை - சக்ரபாணி.

படத்தில் நாயகியின் பாத்திரம் வலுவாக இருந்தற்கு ஒரு பின்னணி இருக்கிறது.  இந்த படத்தின் நாயகியாக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பானுமதி.   அவரை வைத்து ஒரு முதல் கட்ட படப்பிடிப்பையே முடித்துவிட்டார்களாம்.   இந்த சமயத்தில் நாயகன் இந்து, நாயகி கிறிஸ்து எப்படி தம்பதியாக நடிக்கலாம் என பானுமதி கேள்வி எழுப்ப, கதைஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் முடிவெடுத்து பானுமதியை தூக்கிவிட்டார்களாம். இரண்டாவது கதாநாயகியாய் நடித்து வந்த சாவித்திரியை நாயகியாக நடிக்க வைத்துவிட்டார்களாம். விவாதித்த விசயம் ஒரு பக்கம் இருந்தாலும், கதையில் தன் கதாபாத்திரத்திற்காக சண்டையிட அப்பொழுதே பானுமதியால் முடிந்திருக்கிறது என்பது சந்தோஷமான விசயம் தான்.

தமிழில் வெற்றி பெற்று, தெலுங்கில் என்.டி.ராமராவ், சாவித்திரி நடித்து வெற்றிப்பெற்று, இந்தியில் ஏவி.எம். தயாரித்து,  பிரசாத்தே இயக்கி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றியிருக்கிறது.

மிஸ்ஸியம்மாவின் நினைவலைகள் இந்திய சினிமாவில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.  இந்த படத்தைப் பார்த்த பிறகு என் தோழி ஒருத்தியை 'மிஸ்ஸியம்மா' என்று தான் அழைக்கிறேன்.  2003ல் மீண்டும் இதே பெயரில் தெலுங்கில் பூமிகா நடித்து ஒரு படம் வெளிவந்தது. தமிழிலும் இதே பெயரில் படம் எடுக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. தேடிப்பார்த்தால், அவ்வப்பொழுது மிஸ்ஸியம்மா நினைவில் யாராவது பதிவு எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் தொடர்வார்கள்.

***

Monday, December 17, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்!

நெடுநாட்களுக்கு பிறகு சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். பாருங்கள்.

****

நாயகனுக்கு அடுத்த நாள் வரவேற்பு. அதற்கு அடுத்த நாள் திருமணம்.  நாயகனும், நாயகியும் காதலித்து, போராடி, இரு குடும்பத்தாரின் சம்மதம் வாங்கியிருக்கிறார்கள்.  முதல் நாள் நண்பர்கள் மூவருடன் நாயகன் கிரிக்கெட் விளையாட போகிறார். பந்தை பிடிக்க முயலும் பொழுது, கீழே தவறி விழுகிறார். இதனால் ஒராண்டு நினைவுகள் மறந்துவிடுகின்றன.  இதில் முக்கியமான விசயம் காதலித்த விசயத்தையே மறந்துவிடுகிறார். சமீபத்தில் நடந்ததை மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

தங்களால் தான் இப்படி நடந்துவிட்டது என குற்ற உணர்ச்சியுடன்,   குடும்பத்தினர் யாரிடமும் சொல்லாமல், 48 மணி நேரத்தில் திருமண வரவேற்பையும், திருமணத்தையும் பல போராட்டங்களுக்கு பிறகு நடத்தி முடிக்கிறார்கள். இறுதியில் தொலைந்து போன நினைவுகள் திரும்பி வந்தனவா என்பது இறுதிக்காட்சி.

****

படத்தின் துவக்கத்தில் நாயகனின் புலம்பல் மனநிலையை பல நண்பர்கள் வாயிலாக உணர்ந்திருக்கிறேன்.  ஏற்பாடு திருமணம் என்றால், சடங்குகள், சீர்வரிசை என எல்லாவற்றையும் இரண்டு குடும்பங்களோ, தரகரோ பேசிக்கொள்வார்கள்.  மணமக்களுக்கு இருக்கும் ஒரே வேலை இருவரும் பல மணிநேரம் போனில் பேசிக்கொள்வது தான்! 

படத்தின் ஒளிப்பதிவாளருக்கு நேர்ந்த உண்மை கதையை எடுத்திருப்பதால் சினிமாத்தனங்கள் எதுவும் இல்லை. அனைத்துக் காட்சிகளும் இயல்பாக இருக்கிறது.  உண்மைக்கதைகளை படமாக்கினால் கிடைக்கும் பலன் இது!

****

பச்சி (பச்சியப்பன்) எம்.ஆர். ஐ ஸ்கேனில் என்ன தெரியும் என்ற கேள்விக்கு பக்ஸ் (பகவதி) விளக்கி சொல்லும் இடம், காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ், பாலைய்யாவிற்கு திகில் கதை சொல்லும் இடத்திற்கு இணையானது.

****

'காதல், காதலியின் முகம் அடி ஆழத்தில் பதியக்கூடியது. மறக்கவே மறக்காது' என லெக்சர் கொடுக்கிற பக்ஸ், நாயகன் (மேக்கப் அள்ளிப்போட்டு மணப்பெண்ணாய்) நிற்கும் நாயகியை பார்த்ததும் "யப்பா! யாராட இந்த பொண்ணு?  பேய் மாதிரி இருக்கு!" என சொல்வது நகைச்சுவை.  'லைலாவின் அழகை ரசிக்க வேண்டுமென்றால், மஜ்னுவின் கண்கள் வழியே பார்க்கவேண்டும்' என்றா வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

****
நாயகனை "நான் சொன்னா கேட்பியா மாட்டியா!" என சரஸ் கேட்பதும், அதற்கு நாயகன் "நீ சொன்னா மாடியிலிருந்து கூட குதிப்பேன்டா" என பதில் சொல்வதும், இந்த ஒரு வார்த்தையை பலமுறை சொல்லி சமாளிப்பதும், பச்சி "அதென்ன நான் சொன்னா கேட்க மாட்டேங்குறான்! நீ சொன்னா கேட்குறான். நீ அவன் உயிரை காப்பாத்திற மாதிரி ஏதோ செய்திருக்கே!  அது என்னான்னு சொல்! என சொன்னதும் "நான் 10 வகுப்பு படிக்கும் பொழுது அவனுக்கு படம் வரைஞ்சு கொடுத்தேன்!" என சொன்னதும், "என்னைய பார்த்தா கேன மாதிரி இருக்கா! அல்லது இவரைப் (பக்ஸ்) பார்த்தா கிறுக்கு மாதிரி இருக்கா" என சொல்வது செம கலகலப்பு.  இறுதியில் நினைவுகள் திரும்பிய பிறகு, சரஸ் ஒரு புன்சிரிப்புடன் "நான் சொன்னா கேட்பியா! மாட்டியா?" என கேட்கும் பொழுது, முன்பு போலவே "நீ சொன்னா மாடியிலிருந்து கூட குதிப்பேன்டா" என சொல்லும் பொழுது, கண் கலங்குவார்கள்.நாமும் கண்கலங்குகிறோம்.

****
படத்தில் நடித்த அனைவருமே இயல்பாக அருமையாக படத்தோடு பொருந்தியிருக்கிறார்கள்.இந்த ஆண்டில் பல பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம், அதல பாதாளத்திற்கு விழ, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஓடுவது ஆரோக்கியமான விசயம். இப்பொழுதே பல திரையரங்களில் தூக்கிவிட்டார்கள்.   பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

****

Saturday, December 15, 2012

22 பெண் கோட்டயம் - மலையாளம்

சில நாட்களுக்கு முன்பு இந்த (22 Female Kottayam) படத்தைப் பற்றி பதிவர் இருவர் எழுதி இருந்தார்கள்.  அப்பொழுதே பார்க்கவேண்டும் என நினைத்தேன்.  சில வருடங்களாக வர்த்தக ரீதியான தமிழ் படங்களின் தாக்குதலால் மலையாளத்தில் தரமான படங்கள் வருவது குறைந்திருந்தது.  இந்த படம் பார்க்ககூடிய படம்.

****

கதை எனப் பார்த்தால்... (வெளிவந்து பல மாதங்கள் ஆனதால், கதையை சொல்லலாம் தப்பில்லை!)

பழிவாங்கும் கதை தான்.  26 வயது கொண்ட கேரளாவை சேர்ந்த நாயகி பெங்களூருவில் ஒரு பிரபல மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறாள்.  அம்மா, அப்பா இல்லை.  தங்கை கொச்சியில் படிக்கிறாள்.

நாயகிக்கு கனடாவில் பணி செய்ய விருப்பம்.  விசாவிற்காக ஒரு ஏஜென்ஸிடம் தொடர்பு கொள்கிறாள். அங்கு வேலை செய்யும் நாயகன் பழக்கமாகிறான்.  பிறகு காதலாக மாறுகிறது.  சேர்ந்து வாழலாம் என வாழ்கிறார்கள்.

இதற்கிடையில் பப்பில் ஒரு பெரிய மனிதனின் மகனிடம் தகராறு ஏற்படுகிறது.  பிரச்சனை எழ, முதலாளி வீட்டில் தலைமறைவாய் இருக்கிறான்.  நாயகிக்கு ஆறுதல் சொல்ல வந்த முதலாளி பாலியல் பலாத்காரம் செய்கிறார்ன்

மீண்டும் உடல் நலம் தேறி வரும் வேளையில், மீண்டும் நாயகன் இல்லாத பொழுது, மீண்டும் முதலாளி பலாத்காரன் செய்கிறான்.  'இனி கனடாவில் வேலை செய்ய போவதில்லை.  அவனை விடப்போவதில்லை!' என்கிறாள்.

மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் நாயகனும் முதலாளியும் திட்டமிட்டே செய்கிறார்கள்.  அவளை போதைப் பொருள் கடத்தியதாய், போலீசில் மாட்டிவிட்டு சிறையில் தள்ளுகிறார்கள். குமுறி குமுறி அழுகிறாள்.

சிறை புதிய சூழல். வித்தியாசமான மனிதர்கள். அவர்களின் பழக்கம், அவளை தைரியம் பெற்ற புதிய ஆளாக, ஜாமீனில் வெளிவருகிறாள்.

சிறையில் பழக்கமான உதவ முதலாளியை பாம்பை கடிக்க வைத்து கொல்கிறாள்.  நாயகனை சந்தித்து மயக்கத்தில் ஆழ்த்தி ஆணுறுப்பை நீக்கிவிடுகிறாள். அவன் செய்த தவறு வாழ்நாளுக்கும் மறக்ககூடாது என்பதற்காக, அருகில் இருந்து கவனித்து உயிரை காப்பாற்றிவிடுகிறாள்.

நாயகி வெளிநாடு செல்ல முடிவெடுப்பதோடு படம் முடிவடைகிறது.

****

அழுது, அழுது நெக்குறுகி சிறைக்கு செல்லும் நாயகி சிறை மனுசிகளின் கதையும், பழக்கமும், வாழ்க்கையும் மனதை திடப்படுத்துகிறது. முதலில் அழுகை நின்றுவிடுகிறது. நாயகனும், முதலாளியும் தன்னை மட்டுமல்ல, இன்னும் பலரையும் சீரழிக்கிறார்கள் என அறிகிறாள்.  பழிவாங்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறுகிறது.   ஒரு மனிதனின் சிந்தனையில் புறநிலை எவ்வளவு தாக்கம் செலுத்தும் என்பதை இயல்பாக சொல்கிறார்கள்.  தமிழ்படங்களில் பலகாலம் படுகோழையாய் இருக்கும் ஒருவன் தன் உறவில் ஒன்று கொல்லப்படும் பொழுது உடனே வீறுகொண்டு எழும் பொழுது, அபத்தமாக இருக்கும்.

படத்தில் இறுதியில் நாயகனை பார்த்து, "உண்மையான காதலை விரும்பினால், என்னை வந்து சேர். ஏற்றுக்கொள்கிறேன்!" என்பதாக பேசுகிறாள்.அவன் பெண்களை ஏமாற்றுவதையே தொழிலாக கொண்டவன். அவனிடம்  இப்படி பேசுவது அபத்தமாக இருக்க்கிறது. 

மற்றபடி 'ஏக் ஹசீனா தி'  மற்றும் இரண்டு படங்களை எழுத்து போடும் பொழுது, நினைவுகூறுகிறார்கள். தமிழ்ப்பட இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பண்பு இது! பெருநகர கலாச்சார பின்னணியில் சொல்லப்பட்ட படம். அனைத்து நடிகர்களின் அளவான நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என படத்திற்கு அழகு சேர்க்கிறது.  நல்ல தரமான ப்ரிண்டில் ரூ. 30க்கு சந்தையில் கிடைக்கிறது. பாருங்கள்.

நாயகி ரிமா நம்மூர் பிரியாமணியை நினைவுப்படுத்துகிறார்..  நாயகன் 'காதலுக்கு மரியாதை' இயக்குநர் பாசிலின் மகனாம். எங்கும் திரையுலகை வாரிசுகள் ஆக்ரமிக்கிறார்கள். ஏப்ரல் 2012ல் வெளிவந்தபடம்.

****

Tuesday, December 11, 2012

மாபெரும் தப்பித்தல்! அத்தியாயம் 2 ( Great Escape )

 மாபெரும் தப்பித்தல்! அத்தியாயம் 1

முன்குறிப்பு:  முதல் அத்தியாயத்தை படித்துவிட்டு, மேற்கொண்டு படிக்கவும்.  பதிவு கொஞ்சம் நீளமாக இருந்ததால், இரண்டாக தந்துள்ளேன். நன்றி.

****

ஒவ்வொருவரும் ஒரு பணியை மேற்கொண்டனர்.  தையற்காரர்கள் கொல்லர்கள், திருடர்கள், போலி ஆவணங்களைத் தயாரிப்பவர்கள் என்று பலரும் கமுக்கமாக மாதக்கணக்கில் பாடுபட்டனர்.  காவற்பணியில் ஈடுபட்டிருந்த ஜெர்மானிய வீரர்களின் கண்ணில் மண்ணைத்தூவும் விதமாக அவர்களின் கவனத்தை திருப்பவதிலும் ஏமாற்று கலையிலும் தனித்திறமை படைத்த வீரர்களின் குழுக்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் பணியில் இருந்த ஜெர்மானியரைச் சமாளிப்பதுதான் பெரிய சவாலாக இருந்தது.  தப்பியோடுபவரைக் கண்டுபிடிப்பதில் தனித்திறமை பெற்ற காவலர்கள் பலரை ஜெர்மானியர்கள் அமர்த்தியிருந்தனர்.  அவர்களைச் கைதிகள் மோப்ப நாய்கள் என்றழைத்தனர்.  சுற்றுச் சுவற்றினை அணுகக்கூடிய ஒவ்வொரு காவலாளியின் ஒவ்வொரு அசைவினையும் உன்னிப்பாக கண்காணிக்கக்கூடிய பாதுகாப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுவினர் சமிக்கைகள் மூலம் தங்கள் குழுவிலுள்ள மற்ற கைதிகளுக்கும் எச்சரிக்கை விடுப்பர்.

1944ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று, ஓராண்டுக் க்டும் உழைப்பிற்குப் பின்னர், சுரங்கப்பாதை வழியாக ஊர்ந்து சென்று சிறை முகாமுக்கு வெளியே காட்டுப்பகுதிக்குள் தப்பியோட 220 கைதிகள் ஆயுத்தமாயினர்.  அனைவரும் தப்பிச் செல்லும் வரை நிமிடத்திற்கு ஒருவராக அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். ஜெர்மன் மொழி பேசத் திரிந்த கைதிகளெல்லாம் புகைவண்டியில் ஏறி அயல்நாட்டு வேலையாட்கள் போல நடித்துக்கொள்ள வேண்டும்.  ஏனையோரெல்லாம் ஜெர்மானிய ரோந்துப்படையினரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகப் பகலில் தலைமறைவாக இருந்து இரவில் பயணம் மேற்கொள்ளவேண்டும்.

சுரங்கப்பாதை வழியாக ஊர்ந்து சென்ற முதல் கைதி, தான் வெளியேறிய இடம் காட்டுப்பகுதிக்குச் சற்று முன்பாகவே இருப்பதைக் கண்டான்.  ஒரு நிமிடத்திற்கு ஒருவரை வெளியேற்றுவதற்குப் பதிலாக ஒரு மணி நேரத்தில் பன்னிரெண்டு பேரை மட்டுமே வெளியேற்ற முடிந்தது.  சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்படுவதற்குள் மொத்தத்தில் 86 பேர் தப்பித்துச் சென்றுவிட்டனர்.  நாஜிகள் கலவரமடைந்தனர்.  நாடு முழுவதும் கண்காணிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டது.  83 பேர் பிடிப்பட்டனர்.  அவர்களில் 41 பேர் ஹிட்லரின் ஆணைப்படி கொல்லப்பட்டனர்.  மூவர் மட்டுமே பிடிபடாமல் தப்பினர்.

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 1963ல் வெளியான 'தி கிரேட் எஸ்கேப்' என்ற திரைப்படத்தினை இயக்கிய ஜான் ஸடர்ஜெஸ்,  கைதிகளுடைய பெரும் முயற்சியைப் பற்றி இப்படி குறிப்பிட்டுள்ளார்.  "இதற்கு 600க்கும் மேற்பட்ட கைதிகளுடைய ஒன்றுகுவிக்கப்பட்ட ஈடுபாட்டுணர்வும் விழிப்புணர்வும் தேவைப்பட்டது.  அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடம் உம், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும், ஓராண்டுக்கும் மேற்பட்ட காலம் அயராது உழைத்தனர்.  ஒருபோதும் மனித உழைப்புத்திறன் நம்பவியலாத வகையில் இந்த அளவிற்கு நீடிக்கப்பட்டதும் இல்லை.  இத்தகைய உறுதிப்பாட்டுணர்வும் நெஞ்சுரமும் வெளிப்படுத்தப்பட்டதும் இல்லை".

*****

ஜான். சி. மேக்ஸ்வெல் எழுதிய "குழுவில் சிறப்பாக செயல்பட 17 முக்கிய பண்புகள் - புத்தகத்திலிருந்து...."

படத்திற்கான சுட்டி :

The Great Escape Film