Friday, January 22, 2010

பொன்னியின் செல்வனின் இறுதி பாக (நொந்த) கிளைக்கதை - அத்தியாயம் 7


அத்தியாயம் - 1 படிக்க
அத்தியாயம் - 2 படிக்க
அத்தியாயம் - 3 படிக்க
அத்தியாயம் - 4 படிக்க
அத்தியாயம் - 5 படிக்க
அத்தியாயம் - 6 படிக்க
****
நூலகங்கள் என்னை கைவிட்டுவிட்டன. புதிதாய் சேர்ந்த வெளியூர் வேலையில் இனி விடுப்பு எடுப்பதும் சிரமம். ஆகையால், அலைவதை விட்டுவிட்டு, சொந்தமாகவே இறுதி பாகத்தை வாங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். அண்ணணிடம் பணம் கேட்டேன். (அப்பா இல்லாத பிள்ளை நான்)

'எதுக்குடா?' என்றார்.

'நாவலுக்கு என்றால்!' வாய்ப்பே இல்லை. 1ரூ கூட வாங்கமுடியாது. நான் மற்றவர்களை போல இயல்பாக (!) இல்லாததற்கு, இந்த இலக்கிய சகவாசம் தான் காரணம் என முடிவு கட்டியிருந்தார். (ஆமா எப்ப பார்த்தாலும், எதாவது ஒரு புத்தகத்தை கையில வச்சிகிட்டு சுத்திகிட்டே இருந்தா!) ஏதோ சப்பையான காரணம் சொல்லி, இரண்டு நாள் கழித்து வாங்கிவிட்டேன்.

உள்ளங்கையில் உள்ள பணத்தை பார்த்தேன். ஒருநொடி பொன்னியின் செல்வனின் இறுதிபாகமாய் மாறி தெரிந்தது. இன்றைக்கு வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது.

எங்கள் ஊரில் புத்தக கடைகள் சொற்பம் தான். ஆனால், பொன்னியின் செல்வனுக்கு வாசகர்கள் பரந்துபட்டு இருப்பதால், எல்லா கடைகளிலும் எளிதாக கிடைக்கும். உற்சாகமாய் கிளம்பினேன்.

பரபரவென இருந்த காலை வேளையில்... அந்த புத்தக கடை மட்டும் மூடியிருந்தது. 'சீக்கிரமே வந்துவிட்டோமோ!' காலை 9.30 மணி. கடை திறக்கும் நேரம் என ஏதாவது போர்டு
மாட்டியிருக்கிறார்களா! என தேடிப்பார்த்தேன். காணவில்லை. சகுனமே(!) சரியில்லையே! இல்லாத மூட நம்பிக்கையெல்லாம், இந்த புத்தகத்தால் வந்துவிடும் போலிருக்கிறதே! என யோசித்தேன்.

நாலு தெருக்கள் தள்ளி... இரண்டாவது கடைக்கு போனேன். அப்பொழுது தான் கடையை கூட்டிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு முதல் வாடிக்கையாளர் நான் தான். இறுதி பாகத்தை விற்பனையாளனியிடம் கேட்டேன். 'கடந்த வாரம் தீர்ந்துவிட்டது. ஆர்டர் கொடுத்திருக்கிறோம். ஒரு வாரத்தில் வந்துவிடும்" என்றார். அடடா! இரண்டாவது வாய்ப்பும் போச்சே! உற்சாகம் 20% குறைந்தது. 'மனம் தளராதேடா!' என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

வேறு பகுதியில் இருந்த அடுத்த கடைக்கு போனேன். உள்ளே நுழைந்ததுமே பொன்னியின் செல்வன் புத்தகங்கள் வரவேற்றன. ஆகா! இதுவல்லவோ கடை. இறுதிபாகத்தை கையில் எடுத்து ஒருமுறை முகர்ந்து பார்த்தேன். நல்ல வாசனை. எனக்கு பிடித்த வாசனைகளில் முதன்மையானது புத்தகவாசனை. (சே! என்ன ஒரு அறிவு தாகம்; இலக்கிய தாகம்! என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது)

பணத்தையும் புத்தகத்தையும் பில் போட கேசியரிடம் நீட்டினேன். அவர் வாங்கி முகத்தைப் பார்த்தவர்...

'ஐந்தாம் பாகம் மட்டும் எடுத்திருக்கிறீர்கள்?! மற்ற பாகமெல்லாம்!" என்றார் கேள்விக்குறியுடன்.

'அதெல்லாம் இருக்கு சார்!' என்றேன்.

"நாங்க தனியாக ஒரு பாகம் மட்டும் தர மாட்டோமே!' என்றார். மண்டையில் இடி விழுந்தது போல இருந்தது.

'ஏன் சார் தனியா தர மாட்டீங்க!' என்றேன் சோகமாய்.

'நாங்க செட்டு செட்டா தான் வாங்கறோம்! உங்களுக்கு ஒரு பாகம் மட்டும் கொடுத்துட்டா... மற்ற பாகமெல்லாம் அப்படியே தனியா நின்னு போயிரும்! என்றார்.

அவர் சொன்ன காரணத்தை அறிவு ஏத்துகிடுச்சு. மனசு கேட்கலையே!
வேறு ஏதும் பேச தோணவில்லை. மெதுவாய் வாசலுக்கு நடையே கட்டினேன்.

இனி....

முயற்சிகள் தொடரும்!

இணைப்பு :

பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும்!

Monday, January 4, 2010

பொன்னியின் செல்வனின் இறுதி பாக (நொந்த) கிளைக்கதை - அத்தியாயம் 6



அத்தியாயம் - 1 படிக்க
அத்தியாயம் - 2 படிக்க
அத்தியாயம் - 3 படிக்க

அத்தியாயம் – 4 படிக்க
அத்தியாயம் - 5 படிக்க
****

முன்பெல்லாம் விடிகாலை கனவில் வானதியும், நந்தினியும் வந்தார்கள் என்றால்... இப்பொழுதெல்லாம் ஆழ்வார்கடியனையும், வந்தியத்தேவனையும் கொலைவெறியோடு துரத்திக்கொண்டிருந்த பாண்டிய மன்னனின் ஆபத்துதவிகள் "இன்னுமா இறுதிபாகத்தை படிக்கலை?!" என என்னை காட்டுக்குள் துரத்திகொண்டிருந்தார்கள்.

நிற்க. சற்றும் சளைக்காத விக்ரமாதித்தன் போல அடுத்த முயற்சியை துவங்கினேன்.

நூலகங்களை அரசு ஏ, பி, சி என தரம் பிரித்து வைத்திருக்கிறது. வருடாவருடம் நூலகங்களின் தரத்திற்கேற்ப புத்தகங்களின் கொள்முதல் எண்ணிக்கையும் வேறுபடும் என பழைய நூலகர் சொல்லியிருந்தார். அதனால், முன்பு வேலை செய்த இடத்திற்கு அருகே உள்ள 'பி' தர நூலகத்தில் உறுப்பினராய் சேர்ந்திருந்தேன்.

முன்பொருமுறை வேறு புத்தகம் தேடும் பொழுது, பொன்னியின் செல்வனின் ஐந்தாம் பாகம் கையில் தட்டுப்பட்டதாய் ஆழ்மன நினைவு மேலெழும்பி சொன்னது. அந்த புத்தகத்தை கைப்பற்ற முயற்சிக்காலாமே என தோன்றியது.

நூலக டோக்கனை தேடினேன். நல்ல வேளை! வைத்த இடத்தில் பத்திரமாய் இருந்தது. நேரம் பார்த்தேன். நூலகம் திறந்திருக்கும். சைக்கிளை உற்சாகமாய் மிதித்து போய் சேர்ந்தேன்.

நூலகர் மாறியிருந்தார். உதவி நூலகர் எனக்கு பரிச்சயம். பார்த்ததும் புன்முறுவல் செய்தார். அவருடைய அறிமுகமும் வித்தியாசமானது தான். நான் புத்தகம் தேட ஆரம்பித்தால்... அரை மணி நேரமாவது ஆகும். அப்படியே நான் எடுத்து வருகிற புத்தகம் இதுவரை யாருமே கையில் தொட்டிராத புத்தகமாக இருக்கும். இதனாலேயே ஆச்சரியப்பட்டு என்னிடம் பேசினார்.

நேரே புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரி பகுதிக்குள் சென்றேன். மங்கிய வெளிச்சம். முன்பு புத்தகம் தேடுகிற பொழுது, படிக்க கூடிய புத்தகங்கள் என சிலவற்றை... ஒரு இடத்தில் சேர்த்து வைப்பேன். அந்த இடத்திற்கு போய் முதலில் தேடினேன். சில புத்தகங்கள் இருந்தன். சில புத்தகங்களை காணவில்லை. அதில் ஒன்று பொன்னியின் செல்வனின் பாகமும் ஒன்று. என்னை மாதிரியே இலக்கிய தாகம் (!) கொண்ட ஒருவன் இடம் மாற்றி வைத்திருக்கிறான்.

வேறு வழியில்லை. பொன்னியின் செல்வனின் அளவு (தடிமன்) கொண்ட எல்லா புத்தகங்களையும் வரிசையாக தேட வேண்டியது தான். நூலக நேரம் வேறு குறைவாக இருந்தது. விரைவாக தேட ஆரம்பித்தேன்.

அலமாரி முழுக்க ஒரே தூசி. நூலம்படை. தமிழகம் ஏன் இலக்கிய அறிவில் பின் தங்கி இருக்கிறது என புரிந்தது. இது பற்றி, பழைய நூலகரிடம் கோபமாய் முறையிட்டிருக்கிறென்.

"பக்கத்தில் நூலகத்திற்கென்று பெரிய இடம் ஒன்று வாங்கி கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. நானும் இப்ப முடியும். பிறகு முடியும் என நினைக்கிறேன். முடிந்த பாடு இல்லை. இந்த தூசியில் உட்கார்ந்தால் எனக்கு தான் உடல்நல பிரச்சனையாகிறது. அநேகமா திறப்பு விழா அன்றைக்கு நான் ரிடையர்டு ஆகியிருப்பேன்" என புலம்பினார்.

நேரம் நெருங்கி கொண்டிருந்தது. உடலில் பதட்டம் ஏறியது. இன்னும் ஒரு அலமாரி தான் பாக்கி. முன்னிலும் வேகப்படுத்தி தேடினேன். கைக்கு சிக்கியது. வேகமாய் பாகம் என்ன? என கண்கள் தேடியது. பாகம் 4. சோர்ந்து போனேன். ஆழ்மனது தப்பாக சொல்லியிருக்கிறது. தூ!

நூலகரிடம் வந்தேன். அழுக்கும் தூசியுமாய் வந்த என்னை விநோத ஜந்து போல பார்த்தார்.

போங்கய்யா! நீங்களும் உங்க நூலகமும்! இனிமேல் நூலகத்தை நம்பி பிரயோஜனமில்லை என முடிவுக்கு வந்தேன்.

பணத்தை திரட்டி... புத்தகத்தை புதிதாய் வாங்கி விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

இனி....

.... முயற்சிகள் தொடரும்.

இணைப்பு :

பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும்!