Friday, March 26, 2010

சாம்பார் - சில குறிப்புகள்!


சகஜமாய் பழகுகிற யாரிடமும்
இயல்பாய் கேட்கும் கேள்வி
'சாம்பார்' எப்படி வைப்பீங்க?'

வெடி சாம்பார்,
திடீர் சாம்பார்,
மிளகு சாம்பார் - என
சாம்பாரில் பலவகை உண்டு.

பால்ய வயதில்
சாம்பார் என்றால் அவ்வளவு இஷ்டம்
கூடுதலாய் நாலுவாய் சோறு
உள்ளே இறங்கும் - அதனாலேயே
வாரத்திற்கு இரண்டு முறை சாம்பார்.

அக்கா, அத்தை, அம்மா
சமைக்கிற சாம்பார்களில்
அம்மா வைக்கும் 'சாம்பார்'
அலாதியானது.
கொஞ்சூண்டு காய்கறி போட்டாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில்
மணக்க மணக்க சாம்பார் தயார்.

மூன்று ஷிப்டுகளிலும்
மாறி, மாறி
கேண்டினில் சாம்பார்.
அப்பாவுக்கு அதனாலேயே
'சாம்பார்' என்றாலே அலார்ஜி.

ஜெமினிகணேசனை
'சாம்பார்' என்பார்களே!
பிடித்ததினாலா!
பிடிக்காமல் போனதினாலா!

எத்தனை முறை நான்
சாம்பார் வைத்தாலும் - ஒவ்வொரு முறை
ஒவ்வொரு சுவை வருகிறது.

'சாம்பாரில் நீ எக்ஸ்பர்ட் ஆயிட்டடா?'
புகழ்கிறார்கள் நண்பர்கள்.

இப்பொழுதெல்லாம்
எங்கள் ஏரியாவில் கையேந்திபவன்களில்
'சாம்பார்' என்ற பெயரில்
ரசம் போல தரும் சாம்பார் கூட
தருவதில்லை.
இரண்டு வகை சட்னி மட்டும்தான்!
அல்லது சேர்வை மட்டும் தான்!
'சாம்பார்' பணக்காரர்களின்
உண்வாகிவிட்டது.

'பாழாய் போன
கருணாநிதியால் தான் இப்படி?
எம்ஜிஆர் இருந்தால்
இப்படி நடக்க விட்டிருப்பாரா?'
புலம்புகிறார் பக்கத்துவீட்டு
வயதான தாய்க்குலம்.

சாம்பாருக்காவது
விலைவாசியை எதிர்த்து...
தெருவில் இறங்கி போராடலாம்
என தயாராய் இருக்கிறேன்.

உங்களுக்கும் சாம்பார்
பிடிக்கும் தானே!