Sunday, April 29, 2012

பயணம்

தம்பி ஊரிலிருந்து ஒரு தேர்விற்காக வந்திருந்தான்.   எழுதினான்.  போலியாவினால் சிறு வயதில் பாதிக்கப்பட்டதினால், கால் சாய்த்து நடப்பான்.  மாற்றுத்திறனாளி என்பதால், ரயில்வே கட்டணத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்து சலுகை அளித்திருந்தது.  உதவிக்காக ஒரு ஆளை உடன் அழைத்து செல்லலாம்."நீ வர்றியா!" என்றான்.  எனக்கும் கூட ஊரில் செய்யவேண்டிய வேலை ஒன்றிருந்தது.  இருவரும் கிளம்பினோம்.

ரிசர்வ் டிக்கெட் என்பதால், சரியான நேரத்திற்கு போய்க்கொண்டிருந்தோம். அங்கு எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  நிலையத்தை அடைந்தோம்.  5 நிமிடம் தான் இருந்தது.  மாற்றுத்திறனாளிக்கான அந்த கோச்சை அடைந்தால், அருகில் உள்ள "பொது காம்பார்ட்மென்டை விட அதிகம் நிரம்பி வழிந்தது.   ஏறமுடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது.

இந்த பாண்டியன் விரைவு வண்டி தான், அன்றைக்கு கடைசி வண்டி.  இனி பேருந்தை பிடித்து, போவது என்பது சிரமம். முதலில் தம்பியையும், நானும் உள்ளே சிரமப்பட்டு உள்ளே ஏறினோம்.  நிலைமையை புரிந்துகொண்டு, கொஞ்சம் நிதானப்படுத்திக்கொண்டு, தம்பியை அங்கே நிறுத்தி, கூட்டத்திற்குள் உள்ளே புகுந்தேன்.

இரண்டு மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கு இரண்டு உதவியாளர்கள் என நான்கு பேருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த சிறிய கோச் அது. அதற்குள் நெருக்கமாய் 60 பேருக்கும் மேல் இருந்தனர்.  கூட்டத்திற்குள் புகுந்து பெர்த் அருகே போய், நாங்கள் ரிசர்வ் செய்திருக்கிறோம்.  ஆகையால் இடத்தை விட்டு கீழே இறங்குங்கள் என சொன்னேன்.  அவர்களை பொறுத்தவரையில் அது இன்னொரு "பொது" காம்பார்ட்மென்ட்.  இதில் இவன் என்ன சம்பந்தமில்லாமல் உரிமை கோருகிறான் என்பது போல, ஒரு ஜந்துவை பார்ப்பது போல பார்த்தார்கள்.

15 நிமிடம் காரசாரமாய் பேசி, ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட்டை எல்லாம் 'ஆதாரமாய்' காட்டி, என்னுடைய 'வாய்த் திறமையால்' உட்கார மட்டும் தான் இடம் பிடிக்கமுடிந்தது.  வாயிலுக்கு அருகே நின்றிருந்த தம்பியை அழைத்து வந்து உட்கார வைத்தேன்.  தம்பியை முறைத்தேன்.  "ஏண்டா! இப்படி ஒரு நிலைமை இருக்கும்!' என சொல்லவே இல்லை" என்றேன். "இல்லைண்ணே! மதுரையில் ரயில்வே போலீஸ் வேறு யாரையும் ஏறவிடாமல் பார்த்துகொள்ளுவார்கள். சென்னையிலும் அப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்" என்றான்.

ஒரு மாற்றுத்திறனாளிக்கான ஒரு கோச்சை "பொது" காம்பார்ட்மென்ட்க்கு அருகே வைத்த, ரயில்வேயின் அறிவை நினைத்து, கெட்ட வார்த்தைகளால் திட்டினேன்.  சுற்றிபார்த்தேன்.  கண் தெரியாத ஒருவர் குடும்பத்துடன் உட்கார்ந்திருந்தார். அவர் அருகே கால் ஊனமான இன்னொருவர் தன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தார்.  இவ்வளவு கூட்டத்திற்கு காரணம் கடைசி வண்டி என்பது ஒரு காரணம். நாளை முகூர்த்தநாள் என்பது மற்றுமொரு காரணம். முக்கிய காரணம் பேருந்துகட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு.

இந்த நாட்டில் முதலாளிகளும், மேல்தட்டு வர்க்கமும் வசதியாய் விமானத்தையும் ரயிலில் முதல் வகுப்பையும் பயன்படுத்துகிறார்கள். நடுத்தரவர்க்கம் தனது பயணத்தை மூன்று மாதத்திற்கு முன்போ, இரண்டு மாதத்திற்கு முன்போ திட்டமிட்டு டிக்கெட் புக் செய்துகொள்கிறார்கள்.  இவர்களுக்கெல்லாம் கிட்டத்தட்ட ஒரு வண்டியில் 15 கோச்சுகளுக்கும் மேலாக விடுகிறவர்கள்,  பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு ஏன் இரண்டே இரண்டு ரிசர்வ் செய்யப்படாத கோச்சுகள் விடுகிறார்கள். ஏழைகளை பற்றியெல்லாம் இங்கே யார் கவலைப்பட போகிறார்கள்.

விடிய விடிய உட்கார்ந்து மோட்டுவளையத்தை பார்த்தபடியே, சிந்தித்துகொண்டே ஊர் போய் சேர்ந்தேன்.

Friday, April 27, 2012

மிதிவண்டி


பெட்ரோல் விற்கும் விலைக்கு காய்கறி வாங்க, ஜிம்முக்கு போக என எல்லாவற்றிக்கும் பைக் எடுத்து போவது கட்டுப்படியாகாமல் போய்கொண்டிருந்தது. 

ஒரு மிதிவண்டி வாங்கிவிட்டால் உடலும், பர்சும் ஆரோக்கியமாக இருக்கும் என தோன்றியது.  வண்டி வாங்கலாம் என யோசித்து, விலை கேட்டால், மூவாயிரம் என்றார்கள்.  பெட்ரோல் விலை கூட்டிக்கொண்டே போனால், இன்னும் அதிகமாக்கிவிடுவார்கள் போல!  நம் பட்ஜெட்டில் மூவாயிரம் என்பது பெரிய தொகை. வாங்கலாம் என யோசித்தே சில மாதங்கள் ஓடிப்போயின!

இதற்கிடையில் நண்பன் ஒருவன் வேலை நிமித்தமாக ஒரு வருடத்திற்கு வெளிநாடு போக, வண்டியை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி என்னிடம் தந்துவிட்டு போனான். 6 மாதங்கள் ஓடிவிட்டன.  நான் நினைத்தப்படி வண்டியை தினமும் ஓட்டமுடியவில்லை.  காரணம் எல்லா தேவைக்கான இடங்களும் தூரம் தூரமாய் இருப்பதால், வண்டியில் போய்வருவதற்கான நேரம் பிரச்சனையாயிருந்தது.

****

சிலநாட்கள் ஓட்டாமல் விட்டதால், வண்டியில் கொஞ்சம் தூசி சேர்ந்திருந்தது.  துடைக்க, துடைக்க வண்டி குறித்தான நினைவுகள் மெலெழும்பி வந்தன.

****
சிடி, டிவிடி வருவதற்கு முன்பு, வீடியோ கேசட்தான் பிரபலம்.  ஊரின் கடைசியில் இருக்கும் திரையரங்கில் வாரம் ஒருமுறை 'அஜல் குஜல்' படம் பார்த்து பரபரப்பாய் திரிந்த காலம். இரண்டு மணி நேரம் படம் பார்த்தால், 3 நிமிடம், 4 நிமிடம் பிட்டு ஓட்டுவார்கள். நாம் நிறைய பாவம் (!) செய்திருந்தால், ஒரு சின்ன பிட்டு கூட கிடைக்காது.  நொந்து போய் வரவேண்டியது தான்.

இதிலெல்லாம் மனம் திருப்தி அடையவில்லை.  நண்பர்களிடையே வசூலைப் போட்டு,  பிளேயரை வாடகைக்கு எடுத்து படம் போட்டு பார்க்கலாம் என முடிவுசெய்தோம்.  எடுத்தோமா பார்த்தோமோ என்றெல்லாம் உடனே பார்க்கமுடியாது.  இரண்டு சாத்வீகமான படங்களை குட்டிப்பசங்களுக்கு, பக்கத்துவீட்டு அம்மாக்களுக்கு படம் காண்பித்துவிட்டு, அவர்கள் அனைவரும் 2 மணிக்கு மேலே அசந்து தூங்க போன சமயத்தில், நாம் விசேஷமான படம் பார்க்கமுடியும்.  அப்படி பார்த்துவிட்டு, நண்பர்கள் எல்லாம் தூங்கி போக, 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தால், என் குதிரையை காணோம். அதுதாங்க என் மிதிவண்டி!  தொலைந்து போனதில் எனக்கு கூட பெரிய வருத்தம் இல்லை.எங்கம்மா தான் 1000 ரூ. வண்டி போச்சே!ன்னு 3 நாள் சோகமா இருந்தார்.

****

அன்று ஞாயிறு காலை.  டீனேஜ் வயது. எங்கள் தெருவில் குடியிருந்த ஈஸ்வரி, பக்கத்து தெருவில் வண்டி பழகி கொண்டிருந்தாள்.  நானும் நண்பனும் கட்டிமுடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்தோம்.  திடீரென எங்கள் இருவர் பக்கம் திரும்பி இங்கே வாருங்கள்! என அழைத்தாள்.  வேறு யாரையும் அழைக்கிறதா! என இருவரும் வேகமாய் திரும்பி பார்த்தோம்.  யாரும் இல்லை.  நண்பன் வீட்டிற்கு பயந்து கொண்டு போகவில்லை.  நான் தைரியமாய் போனேன்.  தம்பியாலும், தங்கையாலும் வண்டி ஓட்டும்பொழுது, வண்டியை பிடிக்கமுடியவில்லை.  அதற்குத்தான் அழைத்திருக்கிறாள்.  ஈஸ்வரி வண்டியை ஓட்ட, நான் பிடித்துக்கொண்டேன். ஒரு மணி நேரம்.  கூச்சமாகவும், பதட்டமாகவும் இருந்தது.

அடுத்த நாள், என் அக்காவிடம் ஈஸ்வரிக்கு வண்டி ஓட்டக்கற்றுக்கொடுத்ததைப் பார்த்து வயித்தெரிச்சல் பட்டு, போட்டுக்கொடுத்துவிட்டார்கள். "அந்த பொண்ணு யாருடா! நம்ம அத்தைப் பொண்ணா!  மாமன் பொண்ணா! நீ சைக்கிள் சொல்லித்தர!" என ஒருமணி நேரம் திட்டு வாங்கியது தனிக்கதை!

****

சென்னையில் வாடகைக்கு வண்டி தருவதை பார்க்கமுடியவில்லை.  எங்கள் ஊரில் வண்டியை வாடகைக்கு தருவார்கள். 1 மணி நேரத்திற்கு 2 ரூ.  15 வயதில் காசு தட்டுப்பாடு அதிகம்.  அதனால் ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, எல்லோரும் ஒல்லி. அதனால், ஒரே வண்டியில் 5 பேர் 4 கிமீ தள்ளி இருக்கிற ஒரு பச்சைக் கிணற்றில் குளிக்க போவோம்.  20 அடி உயரத்தில்  இருந்து தொபக்கடீர் என குளிர்ந்த நீருக்குள் குதித்து,  15 அடி ஆழம் வரை போய், வெளியே வருவது ஆனந்தம்.  இப்படி 3 மணி நேரமாவது ஊறிக்கிடப்போம்! இப்படி அந்த ஆண்டு தண்ணீர் வற்றிய காலம்வரை, கிணற்றை பாடாய்படுத்தினோம்.

****

மிதிவண்டி வாழ்க்கையின் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்தது! இப்படி மிதிவண்டி பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்!  பிறிதொரு சமயம், இன்னும் சொல்கிறேன்!

***

Thursday, April 12, 2012

பெயர் தெரியாத படம்!


அது ஒரு சுவாரசியமான படம். மெல்லிய உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குறும்படம் / படம் குறித்த ஒரு சிறு குறிப்பை வாசித்தேன். அந்த கதை என் நெஞ்சில் பல ஆண்டுகளாக இருக்கிறது. உங்களுடன் பகிர்கிறேன். படத்திற்கான சுட்டி கிடைத்தால், எனக்கு தாருங்கள். சந்தோஷப்படுவேன்.

****

ஒரு இளைஞன். விரைவில் பிரபலமாகவேண்டும் என்பது அவன் கனவு. அதற்காக ஒரு 'பிரேக்' தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

ஒரு இளம்பெண். வேலைக்கு போய்கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு விசேஷ பிரச்சனை. அவளின் மார்பு மிகப்பெரியது. அதனால் பழகுகிறவர்கள் கண்பார்த்து பேசுவதை விட, நெஞ்சு பார்த்து தான் பெரும்பான்மையான ஆண்கள் பேசுகிறார்கள். நொந்து போகிறாள். மனசு பார்த்து பழக ஒரு நல்ல துணை தேடிக்கொண்டிருக்கிறாள்.

இந்த இளைஞனும், இளம்பெண்ணும் ஒரு லிப்டில் வெளியேறும் பொழுது, இருவரும் எதிரெதிரே மோதிக்கொள்கிறார்கள். ( இருவருக்கும் காதல் வந்துவிடும் என நினைத்தீர்கள் என்றால், நீங்கள் நிறைய தமிழ் படம் பார்த்து கெட்டு போயிருக்கிறீர்கள் என முடிவு செய்துகொள்ளலாம்.) இதில் இந்த பெண்ணின் மார்பு அவனுக்கு இடம் பெயர்ந்துவிடுகிறது.

இருவரும் வீடு திரும்புகிறார்கள். இவளுக்கோ அப்பாடா! ரெம்பவும் தொல்லைப்படுத்திய மார்பு தொலைந்தது! என நிம்மதி கொள்கிறாள். அதற்கு பிறகு அவளிடம் பேசுகிறவர்கள் கண் பார்த்தே பேசுகிறார்கள்.

வீடு சென்ற அவனோ, மார்பு பார்த்து அதிர்ச்சியடையாமல், இதை வைத்தே பிரபலமாகிவிடலாம் என திட்டமிட்டு, ஒரு 'அழகிய' மாடலாகிறான். அவன் ஆசைப்படி, விரைவில் பிரபலமடைந்துவிடுகிறான்.

இறுதியில் எப்படி கதை முடியும் என்பது எனக்கு மறந்துவிட்டது. நீங்கள் கண்டுபிடித்து சொன்னால், எல்லோருமே முடிவை தெரிந்துகொள்ளலாம்.

****

தமிழ்நாட்டில் இது ஒரு பிரச்சனை தான். பெண்களை உற்றுப்பார்க்கும் கெட்ட பழக்கம் பலரிடமும் இருக்கிறது. பெரிய மார்பு கொண்டவர்களின் பாடு திண்டாட்டம் தான். சமீபத்தில் வேலை நிமித்தமாய் மும்பை சென்றிருந்தேன். கடைசி நாளில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 1 மணி நேரம் நண்பனுக்காக காத்திருந்த பொழுது தான், கவனித்தேன். ஆச்சர்யமாயிருந்தது. அங்கு யாரும் துப்பட்டா அணியவில்லை. அங்கு மட்டும் ஆண்களின் பார்வை மேம்பட்டுவிட்டதா என்றால், அப்படியும் சொல்லமுடியாது. பார்க்கிறவன் சாக்கு போட்டு பொத்தினாலும் பார்க்கத்தான் செய்வான். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்துபோய்விடவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பார்களோ!

பெண்களை உற்றுப்பார்ப்பது என்பது ஒரு சமூக பிரச்சனை. இங்கு கல்லூரி வரைக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக கல்வி நிலையங்கள் இருப்பதே ஒரு பிரச்சனை தான். இயல்பாக பழக விட்டால் தானே, ஆண், பெண் கூச்சம் போகும். சாதி, மதம் மேலோங்கியுள்ள நமது சமூகத்தில், பெண்களை கண்கொத்தி பாம்பாக கவனித்து, சொந்த சாதியில்/மதத்தில் கல்யாணம் பண்ணி கொடுப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். மேலும், நமது ஊடகங்கள், திரைப்படங்கள் எல்லாம் பெண்களை ஒரு சரக்கை விற்கும் பொருளாக தான் பார்க்கின்றன.

மருத்துவர் காமராஜ் என்ன சொல்கிறார் என்றால், மார்பு என்பது குழந்தைக்கு பால் கொடுக்கும் உறுப்பு. அதனுடைய தேவை அவ்வளவு தான். அதை செக்ஸ் உறுப்பாக தவறாக பார்க்கிறார்கள் என்கிறார்.

எனக்கும் கூட டீனேஜை கடக்கும் பொழுது இந்த பிரச்சனையை எதிர்கொண்டேன். பின்னாளில் நல்ல புத்தகங்களின் வாசிப்பு, தோழிகளுடான பழக்கம், முற்போக்கு இயக்கங்களின் அறிமுகம் கிடைத்த பொழுது தான் பார்வை மாறியது.

****

Sunday, April 1, 2012

Unfaithful - திரைப்பார்வை


கணவன் மனைவி அவர்களுக்கிடையிலான ஊடல், உரசல், மோதல், கூடல் என பேசிய படங்கள் மெளனராகம், அலைபாயுதே என மிக குறைவு. காதலை காப்பாற்ற நாக்கை அறுத்து, காதலை வெறுத்து, பிறப்புறுப்பை அறுத்து, திருநங்கையாக (!) போய்விடுவது என திரும்பிய பக்கமெல்லாம் காதல் பேசி, காதலையும் வதைக்கிறார்கள். நம்மையும் வதைக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் காதலை பற்றி படம் எடுக்ககூடாது என இவர்களுக்கு யாராவது தடை விதித்தால் நல்லது.

***

இந்தப் படத்தின் கதை எனப் பார்த்தால்...

கணவன், மனைவி, ஒரு பத்து வயது பையன் என வசதியான குடும்பம். அமெரிக்காவில் பெருநகரத்தை ஒட்டியுள்ள சிறுநகரத்தில் வாழ்கிறது. அவர்களது வாழ்வு, அமைதியாக போய்கொண்டிருக்கிறது.

அந்த மனைவிக்கு ஒருநாள் ஒரு பொழுது அரிதான புத்தகம் விற்கும் ஒரு புத்தக வியாபாரியான ஒரு இளைஞன் எதைச்சையாக அறிமுகமாகிறான். இரண்டு, மூன்று சந்திப்புகளில் அந்த உறவு நெருக்கமாகிறது. அந்த குடும்பத்தின் இயல்பு போக்கில் குழப்பம் வருகிறது.

இவர்களின் உறவு தொடர, கணவனின் நண்பர் இருவரையும் ஓரிடத்தில் பார்த்துவிடுகிறார். மறக்காமல், நண்பரிடமும் சொல்லிவிடுகிறார். அவர் அதை உறுதி செய்து கொள்ள ஒரு தனியார் துப்புறியும் ஆசாமியை நியமிக்கிறார். அவரும் பின்தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து தள்ளி, உறவை உறுதிப்படுத்துகிறார்.

தன் காதல் மனைவி இப்படி திசைமாறுகிறாளே என கணவன் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். நேரே அந்த காதலனின் அபார்மெண்ட்டுக்கு போகிறார். பேசிக்கொண்டிருக்கும் பொழுது, உணர்ச்சிவயப்பட்டு அடித்து கொன்றுவிடுகிறார். பிறகு அந்த உடலை யாருக்கும் தெரியாமல் ஓரிடத்தில் போட்டுவிட்டு, வீட்டுக்கு நல்லபிள்ளை போல போய்விடுகிறார்.

இதற்கிடையில் அந்த புதிய உறவு வேண்டாம் என மனைவி முடிவுக்கு வருகிறார். காணாமல் போனவரை காவல்துறை விசாரிக்கிறது. மனைவியினுடைய அலைபேசி எண் அவனின் அறையில் இருந்ததால், காவல்துறை விசாரிக்கிறது.

கணவனின் உடைகளை துவைக்க போடும் பொழுது அந்த புகைப்படங்கள் கைக்கு கிடைக்கிறது. கணவன் தான் அவனை ஏதோ செய்துவிட்டார் என அறிகிறார். மீதி கிளைமேக்ஸ்.

****

படத்தில் ஒரு இடத்தில், தன் மனைவியிடம் " வந்த கோபத்தில், உன்னைத்தான் கொல்லனும்னு நினைச்சேன்" என்பார். கணவன் வேறு யாருடனுவாவது பழக்கம் வைத்திருந்தால், மனைவி அழுவதும், தவிப்பதும், மன உளைச்சலில் தற்கொலை செய்வதும், அதே வேளையில் மனைவி யாருடனுவாவது பழக்கம் வைத்திருந்தால், மனைவியை, அல்லது இருவரையும் கொலை செய்வது என்பதாக தான் ஆணாதிக்க சமூகத்தில் உள்ளது என மருத்துவர் ஷாலினி சொன்னது தான் இந்த படம் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.

அந்த புத்தக செல்லர் ஆசாமிக்கும் அந்த மனைவியின் உறவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு "ஏ" பட ரேஞ்சுக்கு எடுத்திருக்கிறார்கள். சரி அவனை கொன்ற பிறகாவது கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி, புரிந்து கொள்கிற மாதிரி காட்சிகள் இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. கொலை செய்யப்பட்டவன் குறித்த விசாரணை, கொலை செய்ததால், காவல்துறையிடம் சரணடைவதா! இல்லையா! என்று தான் படம் நகருகிறது.

திருமணம் செய்தபிறகு காதல் ஏன் செத்துப்போயிவிடுகிறது? திருமண வாழ்வில் காதலை காப்பாற்ற என்னென்ன செய்யவேண்டும் என கடந்த வாரம் முழுவதும் மருத்துவர் காமராஜ் ஐம்பது காரணங்கள் மற்றும் டிப்ஸ்களை வழங்கிகொண்டிருந்தார். மனைவியை சக உரிமை உள்ள மனுசியாய் பழகவேண்டும் என்ற செய்தி தான் அதில் அடிநாதமாக இருந்தது.

மற்றபடி, நடித்தவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நாயகன் நம்மூர் சரத்பாபு போல இருக்கிறார். 2002ல் வெளிவந்தபடம். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

****