Friday, October 25, 2013

வீடு - பேய்களும் முனிகளும்!



ஊரில் அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.   ஊருக்கு போய், 4 நாட்கள் தங்கி, உடல் நலம் கொஞ்சம் தேறியதும் கிளம்பிவந்தேன்.

அதற்கு பிறகு, அண்ணன் தான் இருந்த வீட்டை காலி செய்துவிடலாம் என புதிய வீடு ஒன்றை தேடிக்கொண்டிருந்தார்.  இப்பொழுது தானே புதிய வீட்டிற்கு போனீர்கள்? இந்த வீட்டில் என்ன பிரச்சனை என்றேன்.  இந்த வீட்டில் பேய் இருக்கிறது என்றார்.

எப்படி கண்டுபிடித்தீர்கள்? என்றதற்கு ஏற்கனவே வீட்டை காலி செய்துவிட்டு போனவர்கள் பக்கத்தில் சொல்லி சென்றிருக்கிறார்கள்.  நானும் ஜாதகம் பார்த்தேன்  இந்த வீட்டில் இருக்கவேண்டாம் கிளம்பி விடுங்கள் என சொன்னார்கள் என்றார்.  அந்த பேய்தான் அம்மாவை தாக்கிவிட்டது என்றார்.

அம்மாவிற்கு 25 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது.  எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரைகள் அம்மாவின் உடல் பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்றுவிட்டன.  வயதும் 65ஐ தாண்டிவிட்டது.  உடல் தரும் தொல்லையிலிருந்து விடுபட அம்மா இனி வாழும் காலம் வரைக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என முடிவெடுத்துவிட்டார். அதனால் உணவு கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுகிறார். அதனால் தான் இவ்வளவு சிக்கல்! இப்படி விளக்கம் கொடுத்தாலும், பேய் கண்ணுக்கு முன்னாடி பயமுறுத்தியதே தவிர, அறிவுபூர்வமான விளக்கம் ஏதும் தேவைப்படவில்லை அண்ணனுக்கு!

இருக்கும் சொந்த வீட்டை விட்டு விட்டு, இப்படி வாடகை வீடுகள் தேடி அலைவதற்கும் பின்னாலும் ஒரு அமானுஷ்ய முன்கதை ஒன்று இருக்கிறது. 

எங்க அம்மாவின் பெரியம்மா ஒருவர் 98 வயது வரை உயிரோடு இருந்தார்.  அம்மாவின் அம்மா அம்மாவின் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், பெரியம்மா தான் அம்மாவிற்கு  திருமணமே செய்து வைத்திருக்கிறார். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எல்லோரும் ஆசி பெறும் பொழுது, எங்க அண்ணனும் போயிருக்கிறார். கிழவி ஆசி மட்டும் வழங்காமல், அம்மா குடியிருக்கும் அந்த வீட்டை இப்பொழுது எடுத்துக்கட்டாதே! உனக்கு தொல்லைகள் வரும். அம்மா இருக்கும் வரைக்கும் அந்த வீட்டில் இருக்கட்டும். அம்மாவின் காலத்திற்கு பிறகு, அந்த வீட்டை புதுப்பித்துக்கட்டி நீ குடிபோ! என சொல்லியிருக்கிறார்.

நான் வீட்டை பழுது பார்க்கலாம், எடுத்துக்கட்டலாம் இந்த 6 மாதத்தில் இரண்டொரு முறை பேசும் பொழுதெல்லாம் அண்ணன் தட்டிக்கழித்தார். துருவி துருவி கேட்ட பொழுது, இந்த அமானுஷ்ய கதையை சொன்னார். தலையில் அடித்துக்கொண்டேன்.

இருக்கிற வீட்டை காலி செய்துவிடுகிறேன் என சொல்லி, புதிய வீடும் கிடைக்காமல் அண்ணன் ஏகமாய் மாட்டிக்கொண்டார். கடைசி நேரத்தில், ஒருவீடு பார்த்து குடியேறினார்.

கடந்த மாதம் அண்ணிக்கு திடீரென உடல்நலம் சரியில்லை.  நடு மண்டையிலிருந்து நடு முதுகு வரை அப்படி ஒரு வலி.  நான்கு நாட்களாக தூக்கமே இல்லாமல், ஒரே அழுகை.   நகரின் முக்கிய சிறப்பு மருத்துவரை பார்த்து, பீஸ் எல்லாம் நிறைய கொடுத்து, ஸ்கேனெல்லாம் எடுத்து பார்த்ததில் ஒன்றுமேயில்லை என சொல்லிவிட்டார்கள்.

அதற்கு பிறகு அண்ணி அவருடைய அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து அங்கேயே இருந்தார். சந்தேகம் வந்து,  போனமுறை ஊருக்கு சென்ற பொழுது, இந்த வீட்டில் ஏதும் பிரச்சனை இல்லையே! என்றேன்.  இந்த வீட்டில் ‘முனிஇருக்கிறது என்றார். எப்படி? என்றதற்கு,  உங்க அண்ணிக்கு உடல் நலம் சரியில்லை என்றதும், மூன்று ஜாதக்காரர்களை பார்த்துவிட்டேன். மூவருமே முனி இருக்கிறது என்கிறார்கள்.  நான் ஜாதகம் பார்த்த மறுநாள் இந்த வீட்டின் உரிமையாளர் ‘இந்த வீட்டில் ஒரு தெய்வம் இருக்கிறது! செவ்வாய், வெள்ளியில் விளக்கு போடுங்கள்!என சொல்லிவிட்டு சென்றார்.

இந்த வீட்டையும் காலி செய்ய போகிறீர்களா? என்றேன்.  மூன்று அறைகளில் பின்னாடி உள்ள அறையில் சமைக்கிறோம். அங்கு சமைக்கவேண்டாம். முன் அறையில் சமையுங்கள் என சொல்லியிருக்கிறார்கள். அதை செய்ய போகிறேன் என்றேன்.

இதையெல்லாம் அசை போட்டுக்கொண்டே தூங்கிப்போனேன்.  கனவில் முனியும், பேயும் கடுமையான சண்டை போட்டார்கள். யார் ஜெயிப்பார்கள் என வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த பொழுது, அலாரம் அடித்து பகீரென்று எழுந்தேன். கும்மிருட்டு.  விடிகாலை 6.30க்கு வைகை என்பதால், 4.30 மணிக்கு எழ நான் தான் அலாரம் வைத்திருந்தேன். 

சமையல் கட்டு அறையில் தான் குளியலறையும் இருந்தது.  குளிக்கும் பொழுது, முனி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக ஒரு பிரமை வந்தது. வெட்கம் வந்தது.

பேய்களுடனும் முனிகளின் நினைவுகளுடனும் மக்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

சாப்பாட்டு நேர சிந்தனைகள்!

ஒரு புதிய பகுதிக்கு சென்றால் ஒன்றுக்கு மூவரை கேட்டுவிட்டுத்தான் உணவகத்துக்கு செல்கிறேன்.  ஆனால், பல சமயங்களில் சுமாராக தான் இருக்கிறது.  இதுவே சுமார் என்றால், மற்ற உணவகங்களின் நிலை? நினைத்தாலே பயமாக இருக்கிறது.

சாப்பிடும் பொழுது சுவைத்து, நன்றாக மென்று சாப்பிட சொல்கிறார்கள். கிடைக்கிற சாப்பாடெல்லாம் ரெம்ப சுமாராக இருக்கும் பொழுது இது எப்படி சாத்தியமாகும்? நீங்களெல்லாம எப்படி சமாளிக்கிறீர்கள்?

பொரியலோ/ கூட்டோ மறுமுறை கேட்கும் பொழுது முதல்முறை வைத்ததை விட அதிகமாகவே தருகிறார்கள்.  இவனுக்கு பிடிச்சுப் போச்சு. இனி அடிக்கடி தொந்தரவு செய்வான் என்ற எண்ணமா?   அல்லது நம்ம பொரியலையும்/கூட்டையும் விரும்பி சாப்பிடறானே! இவன் ரெம்ப நல்லவன்டா! என நினைக்கிறார்களா!  :)

உணவகங்களில் அடிக்கடி விலை பட்டியலை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.  கேட்டால் விலைவாசி கூடுகிறது என பதில் சொல்கிறார்கள்.  ஆனால், சம்பளம் மட்டும் கூடவே மாட்டேன் என்கிறதே! :(

சாப்பிடும் பொழுது சாப்பாட்டை மட்டும் பார்த்து சாப்பிடவேண்டும் என ஜென் தத்துவம் சொல்கிறது!  ஆனால், சாப்பாட்டில் கைவைத்தால், ஏகப்பட்ட சிந்தனைகள் வந்து தொந்தரவு செய்கின்றன. " மருந்து குடிக்கும் பொழுது, குரங்கை நினைக்காதே!" பழமொழி நினைவுக்கு வருகிறது!

நல்ல உணவகங்கள் அரிதாக இருப்பதால், சில பதிவர்களை போல வருங்காலங்களில் நான் அறிந்த உணவகங்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என நினைத்து இருக்கிறேன்.

Thursday, October 24, 2013

ஊட்டி - பழக்கண்காட்சி புகைப்படங்கள்!

குற்றால புகைப்படங்களை நிறைய பேர் உற்சாகமாக பார்த்ததால், சமீபத்தில் ஊட்டி போயிருந்த பொழுது, குன்னூரில் பழக் கண்காட்சி நடத்திக்கொண்டு இருந்தார்கள். அங்கு சுட்டவை! திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்காக கூடுதல் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்! :)








Tuesday, October 22, 2013

குற்றாலம் - சில புகைப்படங்கள்!



நேற்று மாலை மழை பெய்யாமலேயே இதமாக இருந்தது காற்று. இரவிலிருந்து மழை. இந்த இதமான காலநிலை எனக்கு குற்றாலத்தை நினைவுப்படுத்துகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு குற்றாலத்திற்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படங்கள்.


Saturday, October 12, 2013

ஒ நாயும் ஆட்டுக்குட்டியும்!

படம் பார்த்து சில நாட்களாகிவிட்டது. இன்னமும் அதன் தாக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.

தமிழ் திரையில் நாம் பழக்கப்படுத்தப்பட்டதால், ஒரு ‘பிளாஷ்பேக்’ நாம் எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுது, காட்சி வழி இயக்குநர் ஒரு எழுத்தாளரை போல குட்டிக்கதை மூலமாக உணர்வுகளை கடத்தியிருக்கிறார்.

இயக்குநரே கதை திரைக்கதை வசனம் எழுதுவதை பல படங்களை பார்த்து நொந்து போயிருக்கிறோம்.  மிஷ்கினைப் போன்ற ஆட்கள் ஆறுதல் தருகிறார்கள்.

அந்த குட்டிக்கதை!
 
"ஒரு ஊர்ல ஒரு ஓநாய் இருந்துச்சாம். அந்த ஓநாய் ஒரு பெரிய கரடிகிட்ட வேலை செஞ்சிச்சாம். கரடிக்கு பிடிக்காத நரியை எல்லாம் ஓநாய் காட்ல போயி வேட்டையாடுமாம். அப்போ ஒரு நாள்...., ஒரு நரியை  வேட்டையாடும் போது  ஒரு ஆட்டுக்குட்டி குறுக்க வந்திச்சி. ஓநாய் தெரியாம அந்த ஆட்டுக்குட்டியை கொன்னுடிச்சி. அந்த ஆட்டுக்குட்டிய  கொன்னதால என்ன பண்றதுனு தெரியாம அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு அந்த ஓநாய் போச்சாம். அந்த ஆட்டுக்குட்டி வீட்ல ஒரு அப்பா ஆடும், ஒரு அம்மா ஆடும், ஒரு குட்டி தங்கச்சி ஆடும் இருந்திச்சாம். அந்த மூணு பேருக்கும் கண்ணு தெரியாதாம். அவுங்கள பாத்து ரொம்ப கஷ்டப்பட்டு தன் பழைய வேலையெல்லாம் விட்டுட்டு அந்த குடும்பத்தோடயே அந்த ஓநாய் தங்கி அவுங்கள ரொம்ப பத்திரமா பாத்துகிச்சாம் .

வேட்டைக்கு வராத ஓநாயை தேடி ஒரு நாள் கரடி அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு வந்திச்சாம். 'வேட்டைக்கு வா.. வேட்டைக்குவா...' னு கூப்பிட, நான் வரமாட்டேன்னு அந்த ஓநாய் சொல்ல, கோபமான அந்த கரடி அந்த அப்பா, அம்மா ஆட்டுக்குட்டிங்ககிட்ட உங்க ஆட்டுக்குட்டிய இந்த  ஓநாய்தான் கொன்னிச்சுனு சொன்னுச்சாம்.அதை கேட்டு அந்த ஓநாய், ஒரு மூலையில் உட்கார்ந்து ஒடஞ்சி அழுதுச்சாம். அப்போ அந்த அம்மா ஆடும், அப்பா ஆடும் அந்த ஓநாய் பக்கத்தில வந்து ' நீ அந்த ஆட்டுக்குட்டிய வேணும்னு கொன்னுருக்க மாட்டேடா கண்ணா. அழாதடா..'னு சொல்லி கட்டிப்புடுச்சி நீதான்டா அந்த ஆட்டுக்குட்டினு சொல்லிச்சாம்.

அந்த ஓநாய் மூணு போரையும் கூட்டிட்டு வேற இடத்துக்கு போச்சாம். போற இடத்துக்கெல்லாம் அந்த கரடி ஓநாயை தேடிவந்து 'வேட்டைக்கு வா... வேட்டைக்கு வா...' னு சொல்லிச்சாம். வராட்டினா, அந்த அம்மா,அந்த அப்பா,அந்த குட்டி ஆடுகளை கொன்னுடுவேன்னு பயமுடிச்சிதாம். என்ன பண்றதுன்னு தெரியாம அந்த ஓநாய் அந்த கரடியை கடிச்சிபோட்டுடுச்சாம். அப்பறம் அந்த மூணு பேரையும் கூட்டிட்டு அந்த ஓநாய் எங்கெங்கோ போச்சாம்..

காட்டை காவல் காக்கிற புலிகள் எல்லாம் அந்த ஓநாயை தேடித்தேடி அலைஞ்சிச்சாம். எப்படியோ ஓநாய் இருக்கிற இடத்தைத் தேடிக் கண்டுபுடிச்சி அத கொல்ல வர, திரும்பவும் ஓநாய் ஓட, அதுகூட ஓட முடியாம அந்த அப்பா ஆடும்,அம்மா ஆடும், குட்டி ஆடும் ஒரு பத்திரமான இடத்தில ஒளிச்சி வச்சிட்டு அந்த ஓநாய் ஓடிச்சாம். ஆனா ஒரு புலி அந்த ஓநாயை கடிச்சி போட, அந்த ஓநாய் தப்பிச்சி நொண்டி நடத்து போயி ஒரு  மூலையில கீழ விழுந்திடுச்சாம்...

அப்போ இன்னொரு குட்டி ஆடு வந்து அந்த ஓநாயை வீட்டுக்கு கூட்டிட்டு போயி காயத்துக்கு மருந்து போட்டுச்சாம். ஆனா மறுநாள் காலையில அந்த ஓநாய், அப்பா,அம்மா,குட்டியைத் தேடி போச்சாம். அவங்கள கூட்டிட்டு ஓடறதுக்குள்ள, அந்தக் கரடி... அந்தக் காயம்பட்ட வெறிப்புடிச்ச கரடி அவுங்க எல்லோரையும் கொல்றதுக்கு தொரத்தி தொரத்தி வர, இன்னொரு பக்கம் புலிகளெல்லாம் தொரத்த, இப்போ ஒவ்வொரு இடமா ஓடிகிட்டு இருக்காம்.

எங்க ஓடுமோ....எப்படி ஓடுமோ....???? "

(குட்டிக்கதையை தந்த மணிமாறனுக்கு நன்றி)