Sunday, October 23, 2011

குழந்தைகள் - மறுபக்கம்!





அவளது கன்னத்தையும் எனது கன்னத்தையும் வருடிவிட்டு "ஸ்மூத்தா இருக்கீங்கம்மா' என்பாள்.
பின், என்னையும், 'ரஃபா ஸ்மூத்தா பாரு' என்று பார்க்கச் சொல்லுவாள். நானும் வருடி விட்டு
'ஸ்மூத்தா இருக்கே' என்பேன்.
'நான் உங்களுக்கு மட்டும் தான் ஸ்மூத்தா இருப்பேன்மா, வர்ஷினிக்கு ஸ்மூத்தாவே இருக்க மாட்டேன்'
நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் பப்பு! :-)

- பதிவர் சந்தனமுல்லை!
http://sandanamullai.blogspot.com/2010/01/blog-post_29.html

மீ: லயூம்மா ங்கா சொல்லுங்க ங்கா
நிலா: அப்பா, பாலுக்கு இந்தில ங்காவா?
மீ: இல்லடா, தூத்
நிலா: அப்போ இங்க்லீஷ்ல?
மீ: மில்க்
நிலா: தமிழ்ல?
மீ: பால்
நிலா: அப்போ ங்கா எந்த லாங்வேஜ்?
மீ: அது குட்டிப்பாப்பா லாங்வேஜ்டா
#தேவதைகள் வாழும் வீடு

- பஸ்ஸர் கேவி.ஆர்.
https://plus.google.com/102444079894946534019/posts

****
குழந்தைகளைப் பற்றிய சக பதிவர்களின் பகிர்வுகள் இவை.

எனக்கும் குழந்தைகளை நிறைய பிடிக்கும். புழுதி பறக்க விளையாடி தூக்கம்
வெறுக்கும் குழந்தையின் சுறுசுறுப்பு பிடிக்கும். அது என்ன? இது எப்படி
வேலை செய்யும்? என ஆயிரம் கேள்விகளோடு அலையும் அறிவுத்தேடல் பிடிக்கும்.

இறந்த காலத்திற்கு தொபுக்குடீரென்று குதிக்காமல், எதிர்கால கவலைகளை
கண்ணில் சுமக்காமல், நிகழ்காலத்தில் வாழும் குழந்தையின் மனநிலை
பிடிக்கும்.

நண்பர்களுக்குள்ளான சண்டைகளை சட்டென்று மறந்து, 'பழம்' விட்டு சகஜமாய் விளையாடும் பிள்ளையின் வெள்ளந்தித்தனம் பிடிக்கும்.

தள்ளிநின்று என்னைப்பார்த்தால், நான் இயல்பாக இருப்பது குழந்தைகளிடம் மட்டும்தான்.

குழந்தைகளுக்கு நாம் நிறைய கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறோம். நாம் தாம் குழந்தைகளிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நிற்க.

இப்படி என்னைப் போலவே குழந்தைகளின் இயல்பை, அழகை, மழலையை பலரும் பேசுகிறார்கள்.



இப்பொழுது நான் பேச விரும்புவது குழந்தைகளின் மறுபக்கத்தை! குழந்தைகளின் மறுபக்கத்தை பலரும் ஏனோ தவிர்க்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் உள்ள சிரமங்களை யாரேனும் தமிழில் எழுதியிருக்கிறார்களா என தேடிப்பார்த்தால், ஏதும் கிடைக்கவில்லை.

அக்காவை, அண்ணியை, தோழிகளை கொஞ்சம் கவனித்து வந்தவன் என்ற அளவிலும், எங்கள் வீட்டில் நாலு குழந்தைகள் வளர்ந்திருக்கிறார்கள் என்ற அனுபவத்தின் வாயிலாகவும், சில விஷயங்களை விவாதத்திற்கு அல்லது கவனத்திற்கு கொண்டுவரலாம் என எண்ணி இதைப் பகிர்கிறேன்.

****
குழந்தை கருவுறும் பொழுதே, சிரமங்கள் துவங்கிவிடுகின்றன. சிலருக்கு
மசக்கையினால் துவங்கும் வாந்தி, குழந்தை பெறும் காலம் வரைக்கும் வாந்தி
எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். பயங்கரமாய் பசிக்கும். சாப்பிட்டால்
வாந்திவந்துவிடும் என்ற பயத்தில், சாப்பிட பயம் வரும். வயிற்றில் வளரும்
குழந்தையோ கருணையே இல்லாமல் (!) அம்மாவின் சத்துக்களை எடுத்துக்கொண்டு, வளர்ந்து கொண்டே வரும்.

****

குழந்தை பிறந்த பிறகு, அதுவும் முதல் குழந்தை என ஆகிவிட்டால்,
அறியாமையால் அந்த இளம் அம்மாவின் நிலை எப்பொழுதும் பதட்டம் தான்.
அரைமணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தை பசியில் அழும். பால்
தரவேண்டியிருக்கும். திரவ உணவு மட்டுமே என்பதால், அடிக்கடி மூச்சா
போகும். குழந்தையை விட்டு நகரவே முடியாது.

முதல் மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்கள் பகலில் தூங்கும். இரவில் விழித்து இருக்கும். அம்மாவிற்கு தூக்கம் குறைந்து போகும். தூக்கத்தை கண்ணில் வைத்துக்கொண்டே பகல் முழுவதும் அலைமோதுவார்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் அம்மாவின் விருப்பம் போல் எதையும்
சாப்பிட்டுவிடமுடியாது. அம்மாவின் வினை, குழந்தையிடம் பிரதிபலிக்கும்.

எத்தனை கவனமாய் இருந்தாலும், குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படும்.
சுகமில்லையென்றால், அம்மாவின் பதட்டம் இரண்டுமடங்காகிவிடும்.

****
கொஞ்சம் வளர்ந்ததும், தவக்கும். தத்தி தத்தி நடக்கும். கையில் படுகிற
எதையும் வாயில் வைத்து சுவை பார்க்கும். வளரும் குட்டி பல்லினால்,
கடித்துப்பார்க்கும். கொஞ்சம் கவனம் பிசகினால், எதையாவது
சாப்பிட்டுவிடும். நிலைமை விபரீதமாகிவிடும்.

*****
இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு, இங்கும் மங்கும் ஓரிடத்தில் நில்லாமல்
சேட்டைகள் பல செய்யும். பல கேள்விகள் கேட்கும். நமக்கு அவசியப்பட்ட
வேலைகள் செய்யவோ, பிடித்தமான வேலைகள் செய்யவோ நேரமும் இருக்காது.

அம்மாவின் கவனம் வேறு பக்கம் திரும்பினால், தன் பக்கம் கவனம் இழுக்க
எதையாவது தப்பு, தப்பாய் செய்யும்.

இந்த சிரமங்கள் எல்லாம் பெரும்பான்மையான இயல்பான குழந்தைகளுக்கானவை. கொஞ்சம் ஹைபர் ஆக்டிவான குழந்தை என்றால், அம்மாக்கள் தொலைந்தார்கள்.

இத்தனை சிரமங்கள் கடந்து, கொஞ்சம் முன்னேறினால், அடுத்த குழந்தைக்கான இடைவெளி வந்துவிடும். அடுத்த குழந்தை வந்துவிட்டால், சிரமங்கள் இரட்டிப்பாகிவிடும். எங்கள் வீட்டு எதிரில் இரட்டை குழந்தைகளை பெற்று, சிரமப்படும் இளம் தாயாரை தினமும் பார்க்கிறேன்.

****
உணவு விஷயத்தில், குழந்தைகள் இன்னும் கொஞ்சம் கவனம் கொடுக்க வேண்டும். குடும்பத்தினருக்கு ஓர் உணவு என்றால், பிள்ளைக்கு பிடித்ததை தனியாக செய்து தரவேண்டும். இல்லையெனில், சாப்பிடாமல் அல்லது கொஞ்சூண்டு சாப்பிட்டு, சவலை பிள்ளையாகிவிடும் அபாயம் இருக்கிறது. சுவையாக சமைக்க தெரியாத, சமைக்க நேரமில்லாத அம்மாவின் பிள்ளைகள் எல்லாம் பலவீனமாக இருப்பதை பார்த்திருக்கிறேன்.

இந்த இளம் அம்மாக்களுக்கு மிக ஆறுதலான விசயம். அவர்களுடைய அம்மாக்கள் தான். அதுவும் நியூக்ளியர் குடும்பம் எனில், அக்கம் பக்கத்து வீட்டில் இருக்கும் வயதான, வேலைக்கு செல்லாத பெண்கள் தான உதவுகிறார்கள்.

குழந்தை கருவுறும் காலம் தொட்டு, குழந்தை பள்ளி செல்லும் காலம் வரை,
பெரும்பாலும் அம்மா வீட்டுச்சிறையில் தான் வதைப்பட வேண்டும். இந்த
குழந்தை வளர்ப்பு காலம் முழுவதும் ஒருவித மன அழுத்தத்துடனே அம்மாக்கள் வாழ்கிறார்கள்.

கருவுற்ற ஆறாவது மாதத்தில் அம்மா வீட்டிற்கு போகிறவர்கள், ஒரு
வருடத்திற்கும் மேலாக கழித்து வரும் அம்மாக்களை பார்த்திருக்கிறேன்.
குழந்தை வளர்ப்பில் அப்பாக்களின் பங்கு, நமது சமூக அமைப்பில் மிகவும்
குறைவு. பெருநகரம் போன்ற குறிப்பான சூழலில், சில பொறுப்பான தந்தைகள்,
கவனித்து கொள்ள வேறு வழியே இல்லாத பொழுது, தந்தைகள் குழந்தைகள்
வளர்ப்பில் கொஞ்சம் ஈடுபடுகிறார்கள்.

மற்றபடி, குழந்தைகள் வளர்ப்பில் மிகவும் அழுத்தப்படுவது பெண்கள் தான்.
எங்கள் சித்தப்பா ஒருவர், அவருடைய வீட்டுக்கு அருகில் மகனும், மகளும்
வேலைக்கு செல்கிறவர்களாம். மகனின் குழந்தையை பெரியவர் தான் பகலில்
பார்த்துகொள்கிறாராம். எங்கள் சித்தப்பாவிடம் ஒரு நாள், அந்த குழந்தையை
கவனித்து கொள்ளும் சிரமங்களை சொல்லி, கண்ணீர்விட்டு அழுதாராம்.

இந்த சிரமங்களை ஏன் பதிகிறேன் என்றால், நமது குடும்ப சூழலில் குழந்தை
வளர்ப்பில் பெண்கள் தான் எல்லா சிரமங்களையும் எதிர்கொள்கிறார்கள். இதை மற்றவர்கள் குறிப்பாக ஆண்கள் புரிந்து வைத்திருக்கிறார்களா என்பது சந்தேகம் தான்.

நான் சொல்வது அதீதம் என்பவர்கள் உங்கள் சகோதர்களிடம், தோழிகளிடம் அவருடைய குழந்தை வளர்ப்பு சிரமங்களை கேட்டுவிட்டு கருத்து சொல்லுங்கள்.

குழந்தை வளர்ப்பு என்பது இது ஒட்டு மொத்த சமூகப்பிரச்சனை. அதை ஏன்
பெண்கள் தலையில் மொத்தமாய் சுமத்த வேண்டும்? இவ்வளவு சிரமங்கள்
இருப்பதால், தான் வளர்ந்த நாடுகளில், பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை
தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறார்கள் அல்லது பெறாமலே வாழ்கிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு, பல்வேறு தளங்களில், துறைகளில் நன்றாக
இயங்கியவர்கள் எல்லாம், திருமணத்திற்கு பிறகு, மொத்தமாய் வீட்டில்
முடங்கியிருக்கிறார்கள். அது அவர்களுக்கு மட்டும் சொந்த இழப்பா?
சமூகத்திற்கு மாபெரும் இழப்பு இல்லையா?

நான் சொல்ல வந்ததை குறைந்தபட்சம் விவாத புள்ளிகளாக சில விஷயங்களை விட்டு வைத்திருக்கிறேன் என நினைக்கிறேன். இனி, நீங்கள் தான் தொடர்ந்து எடுத்து செல்லவேண்டும்.
****

14 comments:

Bibiliobibuli said...

நட்சத்திரவாழ்த்துக்கள் நொந்தகுமாரன்!!

குழ்ந்தை வளர்ப்பு பற்றி நம் சமூகங்களில் அதிகம் நடைமுறை சார்ந்த்தோ, உளவியல் குறித்தோ அதிகம் எழுதப்படுவதில்லை என்பது உண்மைதான்.

குமரன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ரதி.

பலரும் இதற்காக மன அழுத்தத்தில் வாழ்கிறார்கள். ஏன் பதியவில்லை என்றால்,அம்மா என்பவர் புனிதமானவர். எல்லா சிரமங்களையும் தாங்கி கொள்ள வேண்டும். அதை பேசினால், இதைப் போய் பேசுகிறாரே என நினைப்பார்கள் என்ற தயக்கம் காரணம் என்றே நினைக்கிறேன்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நட்சத்திர பதிவரான நொந்தகுமாரனுக்கு முதலில் வாழ்த்துக்கள். குழந்தைகள் உலகமென்பது.... இன்னும் மனித காலடிப் படாத இடம் போன்றது. நல்ல விரிவான பதிவு.

அது சரி.... எதற்கு இந்த நெகட்டிவான நொந்தகுமாரன் டைட்டில்...? 'நொந்த' குமாரன் 'வசந்த' குமாரனாக மாறினால் மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் எழுதிய அத்தனை அனுபவங்களும் எனக்கு உண்டானதுதான். அநேகத் தாய்மார்களும் ஒத்துக் கொள்வர்கள்.
அதுவும் முதல் குழந்தை வளர்ப்பு மிகவும் சிரமமானது.
கூட்டுக் குடும்பத்தில் அவ்வளவு தெரிய வாய்ப்பில்லை.
எங்களை மாதிரி வேறு ஊர்களுக்குச் சென்றவர்களுக்கு அயலாரும் நண்பர்களும் தான் துணை. அழகாக எழுதி இருக்கிறீர்கள் குமரன்.

குமரன் said...

தோழர் மபா அவர்களுக்கு,

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் எனது நன்றிகள்.

'நெகட்டிவான' என பெயர் என்பதை பொறுத்தவரை, அந்நியன் படத்தில் வருவது போல தான், சமூகம் நன்றாக இருக்கும் பொழுது, அந்நியனுக்கு அவசியம் இராது என்பார்கள். அது போல, நம் வலையுலகம் ஆரோக்கியமான முறையில் மாறிவிட்டால், சந்தோசகுமரனாக மாறிவிடலாம் தான்! :)

மற்றபடி என் பகிர்வுகள் பாஸிட்டினாவை என்றே கருதுகிறேன்!

குமரன் said...

வல்லிசிம்ஹன் அம்மாவிற்கு,

தங்கள் கருத்திற்கு நன்றி. அனுபவம் பெற்றவர் என்ற வரையில், குழந்தை வளர்ப்பில் உள்ள சிரமங்களை, எப்படி எதிர்கொள்ளமுடியும் என்ற ஆலோசனைகளை, நடைமுறை விஷயங்களை எப்படி மாற்றலாம் என்பது குறித்தும் உங்கள் ஆலோசனை எதிர்பார்க்கிறேன். நன்றி.

ராஜ நடராஜன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

truth said...

அருமை. இதெல்லாம் புலம்பாமல் இன்றைய தாய்மார்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் எழுத நேரமில்லாமல் போயிருக்கலாம் அல்லது எழுத்திலும் இதைப் பற்றியேவா எழுதுவது என்று யோசித்திருக்கலாம். பெண்கள் மனதைப் படம் பிடித்து எழுதியிருக்கிறீர்கள். இயற்கையின் அடிமையாய் பெண்கள்.ஆனால் சுற்றுப்புறத்தால் (உறவுகளையும் சேர்த்து) ஏற்படும் தொல்லைகளை விட இனிய தொல்லை தான்.இது குழந்தைகளின் மறுபக்கம் அல்ல. குழந்தை வளர்ப்பின் மறு(முழுப்)பக்கம்.நன்றி.

baskar said...

குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம் நீங்கள் முதல் பகுதியில் சொன்ன அதே உணர்வுகள் அவர்களோடு என்னை இறுதி வைப்பது. கூட்டு குடும்பத்தில் வளர்ந்ததால் ஒரே சமயத்தில் இரண்டு உறவினர்கள் குழந்தை பெற்று கொண்ட சமயம் உண்டு அல்லது தொடர்ச்சியாக. குழந்தை பிறந்த சில நாட்கள் வீட்டுக்கு செல்லவோ, அங்கு சாப்பிடவோ தோன்றாது குமட்டலாக வரும். கோபமாக வரும். பின்னாளில் அந்த வேதனையை உணர்ந்த பின்னர் பலரிடமும் உங்களை போன்று விவாதித்ததுண்டு. இருப்பினும் அதிகம் நினைவில் நிற்பவை வாண்டுகளின் சேட்டைகள் தான். அதோடு அம்மா வேலைக்கு சென்ற நாட்களில் தம்பியை சமாளிக்க திணறிய அனுபவமும் தவறாமல் நினைவில் வரும்.

குமரன் said...

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நடராஜன்.

குமரன் said...

உண்மை அவர்களுக்கு,

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. பதிவுலகில் நிறைய இளம் தாய்மார்கள் மற்றும் பெண்களும் வேறு வேறு தலைப்புகளில் எழுதுகிறார்கள். குழந்தை வளர்ப்பில் உள்ள தங்கள் சிரமங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். அது அவசியம் என கருதுகிறேன்.

மற்றபடி, குழந்தைகள் என்றால் இனிமை மட்டும் இல்லை. சிரமங்களும் நிறைய தருகின்றன என்பதை இந்த பதிவின் ஊடாக சொல்லியிருக்கிறேன் என்பதால், அந்த தலைப்பு வைத்தேன். நீங்கள் சொல்கிற தலைப்பும், பொருத்தம்தான். நன்றி.

குமரன் said...

பாஸ்கர் அவர்களுக்கு,

தங்கள் வருகைக்கும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிகள்.

Mahi_Granny said...

நொந்த குமரனுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள். பிள்ளை வளர்ப்பு பகிர்வு அனுபவமா இல்லையா எனத் தெரியவில்லை . ஆனாலும் பகிர்ந்த விதம் அழகு.

குமரன் said...

மகி அவர்களுக்கு,

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.