Wednesday, February 15, 2012

மெரினா ‍- திரைப்பார்வை


"பணக்கார குடும்பங்களின் வாழ்க்கை ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன. ஏழைக்குடும்பம் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது"

‍ தஸ்தோவெஸ்க்கி

படத்தைப் பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். இருப்பினும் கதைக்களம் பிடித்துப்போய் பார்த்தேன்.

****

கதை எனப்பார்த்தால்... ஏதும் இல்லை. குட்டிக்குட்டி கதைகள் எனலாம்.

அம்பிகாபதி எனும் சிறுவன் அம்மா, அப்பா இல்லாமல் சித்தப்பாவின் நிழலில் வாழ்கிறான். அவனுக்கு படிப்பில் ஆர்வம். சித்தப்பாவோ டாஸ்மார்க் பாரில் வேலை செய்ய வைக்கிறார். வெறுத்துப்போய் சென்னைக்கு கிளம்புகிறான். அலைந்து திரிந்து மெரினாவில் தஞ்சமடைகிறான். இறுதியில் பள்ளிக்கு செல்கிறான். இது போல இன்னும் சில குட்டிக்கதைகளும் உண்டு.

****

தஸ்தாவெஸ்க்கி சொல்வது போல, ஒவ்வொரு சிறுவனின் கதையும் தனித்துவம் வாய்ந்தவை. கதைகளை நிறைய கேட்டு, அதில் சில அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து 'வானம்' போல திரைக்கதை அமைத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு, 'பீல்குட்' மூவி போல பையன்களின் விளையாட்டு, காதலர்களின் கோபம், ஊடல், அற்பத்தனம் என மேலோட்டமாக நகர்ந்துவிட்டார். எதுவும் மனதில் ஆழ பதியவில்லை.

கதை இறுதியில் பையன்களின் கல்வி குறித்து கவலைப்படுகிறது. அரசு அதிகாரி பையன்களை பிடித்து, ஒரு நீண்ட உரை நிகழ்த்தி, பள்ளிக்கு அனுப்புவதாக படம் முடிவுடைகிறது. நாமும் நிம்மதியாய் வீடு திரும்புகிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு தன்னால் தன்னுடைய இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கல்விகூட கொடுக்கமுடியவில்லை என பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டது. அடிப்படை கல்வி என்பது 10ம் வகுப்பு என நினைத்துவிடாதீர்கள். 8ம் வகுப்பு தான். இந்த லட்சணத்தில் வல்லரசு என பேசுவதெல்லாம் அபத்தம். இது தான் யதார்த்தம்.

****

இந்த படம் திரையரங்கில் வேலை செய்யும் சிறுவர்களை பற்றிய பெருமாள் முருகன் எழுதிய "நிழல் முற்றம்" என்ற‌ நாவலை நினைவூட்டியது. வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்கள். நல்ல நாவல். இந்த பதிவு எழுதியதற்கு கூட இந்த நாவலை அறிமுகப்படுத்தத்தான்.

****