Sunday, April 29, 2012

பயணம்

தம்பி ஊரிலிருந்து ஒரு தேர்விற்காக வந்திருந்தான்.   எழுதினான்.  போலியாவினால் சிறு வயதில் பாதிக்கப்பட்டதினால், கால் சாய்த்து நடப்பான்.  மாற்றுத்திறனாளி என்பதால், ரயில்வே கட்டணத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்து சலுகை அளித்திருந்தது.  உதவிக்காக ஒரு ஆளை உடன் அழைத்து செல்லலாம்."நீ வர்றியா!" என்றான்.  எனக்கும் கூட ஊரில் செய்யவேண்டிய வேலை ஒன்றிருந்தது.  இருவரும் கிளம்பினோம்.

ரிசர்வ் டிக்கெட் என்பதால், சரியான நேரத்திற்கு போய்க்கொண்டிருந்தோம். அங்கு எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  நிலையத்தை அடைந்தோம்.  5 நிமிடம் தான் இருந்தது.  மாற்றுத்திறனாளிக்கான அந்த கோச்சை அடைந்தால், அருகில் உள்ள "பொது காம்பார்ட்மென்டை விட அதிகம் நிரம்பி வழிந்தது.   ஏறமுடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது.

இந்த பாண்டியன் விரைவு வண்டி தான், அன்றைக்கு கடைசி வண்டி.  இனி பேருந்தை பிடித்து, போவது என்பது சிரமம். முதலில் தம்பியையும், நானும் உள்ளே சிரமப்பட்டு உள்ளே ஏறினோம்.  நிலைமையை புரிந்துகொண்டு, கொஞ்சம் நிதானப்படுத்திக்கொண்டு, தம்பியை அங்கே நிறுத்தி, கூட்டத்திற்குள் உள்ளே புகுந்தேன்.

இரண்டு மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கு இரண்டு உதவியாளர்கள் என நான்கு பேருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த சிறிய கோச் அது. அதற்குள் நெருக்கமாய் 60 பேருக்கும் மேல் இருந்தனர்.  கூட்டத்திற்குள் புகுந்து பெர்த் அருகே போய், நாங்கள் ரிசர்வ் செய்திருக்கிறோம்.  ஆகையால் இடத்தை விட்டு கீழே இறங்குங்கள் என சொன்னேன்.  அவர்களை பொறுத்தவரையில் அது இன்னொரு "பொது" காம்பார்ட்மென்ட்.  இதில் இவன் என்ன சம்பந்தமில்லாமல் உரிமை கோருகிறான் என்பது போல, ஒரு ஜந்துவை பார்ப்பது போல பார்த்தார்கள்.

15 நிமிடம் காரசாரமாய் பேசி, ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட்டை எல்லாம் 'ஆதாரமாய்' காட்டி, என்னுடைய 'வாய்த் திறமையால்' உட்கார மட்டும் தான் இடம் பிடிக்கமுடிந்தது.  வாயிலுக்கு அருகே நின்றிருந்த தம்பியை அழைத்து வந்து உட்கார வைத்தேன்.  தம்பியை முறைத்தேன்.  "ஏண்டா! இப்படி ஒரு நிலைமை இருக்கும்!' என சொல்லவே இல்லை" என்றேன். "இல்லைண்ணே! மதுரையில் ரயில்வே போலீஸ் வேறு யாரையும் ஏறவிடாமல் பார்த்துகொள்ளுவார்கள். சென்னையிலும் அப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்" என்றான்.

ஒரு மாற்றுத்திறனாளிக்கான ஒரு கோச்சை "பொது" காம்பார்ட்மென்ட்க்கு அருகே வைத்த, ரயில்வேயின் அறிவை நினைத்து, கெட்ட வார்த்தைகளால் திட்டினேன்.  சுற்றிபார்த்தேன்.  கண் தெரியாத ஒருவர் குடும்பத்துடன் உட்கார்ந்திருந்தார். அவர் அருகே கால் ஊனமான இன்னொருவர் தன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தார்.  இவ்வளவு கூட்டத்திற்கு காரணம் கடைசி வண்டி என்பது ஒரு காரணம். நாளை முகூர்த்தநாள் என்பது மற்றுமொரு காரணம். முக்கிய காரணம் பேருந்துகட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு.

இந்த நாட்டில் முதலாளிகளும், மேல்தட்டு வர்க்கமும் வசதியாய் விமானத்தையும் ரயிலில் முதல் வகுப்பையும் பயன்படுத்துகிறார்கள். நடுத்தரவர்க்கம் தனது பயணத்தை மூன்று மாதத்திற்கு முன்போ, இரண்டு மாதத்திற்கு முன்போ திட்டமிட்டு டிக்கெட் புக் செய்துகொள்கிறார்கள்.  இவர்களுக்கெல்லாம் கிட்டத்தட்ட ஒரு வண்டியில் 15 கோச்சுகளுக்கும் மேலாக விடுகிறவர்கள்,  பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு ஏன் இரண்டே இரண்டு ரிசர்வ் செய்யப்படாத கோச்சுகள் விடுகிறார்கள். ஏழைகளை பற்றியெல்லாம் இங்கே யார் கவலைப்பட போகிறார்கள்.

விடிய விடிய உட்கார்ந்து மோட்டுவளையத்தை பார்த்தபடியே, சிந்தித்துகொண்டே ஊர் போய் சேர்ந்தேன்.