Friday, July 12, 2013

'குடி'காரியின் கதை!

Smashed - 2012 - ஒரு காதல் படம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் டிவிடி விற்பவரிடம் கேட்டதற்கு இந்த படத்தை தந்தார்.  ஆனால், இது காதல் படமில்லை!

கணவன் மனைவி இருவரும் அமெரிக்க இளம்தம்பதியினர். இருவரும் மொடா குடிகாரர்கள்.  அவள் ஒரு ஆரம்ப பள்ளியில் ஆசிரியை. பாடம் சொல்லிக்கொடுக்கும் அழகே அழகு! அன்றைக்கு காலையிலேயே சரக்கை இறக்கிவிட்டு, பள்ளியில் பாடம் நடத்தும் பொழுது, வாந்தி எடுக்கிறாள். பிள்ளைகளும், தலைமை ஆசிரியை எல்லொரும் கர்ப்பமா என கேட்கும் பொழுது, தற்காலிகமாக தப்பிக்க ஆமாம் என்கிறாள்.  உண்மையை அறிந்து சக ஆண் ஆசிரியரோ 'நிறைய குடிக்காதே' என ஆலோசனை சொல்கிறார்.

அடுத்தடுத்து, இரண்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒன்று. பாரில் குடித்துவிட்டு வீட்டுக்கு தனியாக போகும் பொழுது, ஒருத்தி லிப்ட் கேட்க அவளையும் அழைத்து செல்கிறாள். அவள் ஹெராயின் தர, அதையும் முதல் முறை இழுக்கிறாள். காலையில் யாருமில்லாத ஒரு இடத்தில் தனியாக தூங்கி எழுகிறாள்.  சத்தமில்லாமல் காரை எடுத்து, வீடு வந்து சேர்கிறாள்.

இன்னொரு சம்பவம்.  இரவு 2.30 மணிக்கு தூக்கம் வராமல், வீட்டில் தேடினால் சரக்கும் இல்லாமல்,  அரை போதையோடு,  கடைக்கு போகிறாள். கடைக்காரனோ நேரம் கடந்துவிட்டது. தரமுடியாது. கொடுத்தால், என் வேலை போய்விடும் என்கிறான்.  அவளோ சரக்கு வேண்டும் என்பதில் அடம்பிடிக்கிறாள். திடீரென்று, ஒன் பாத்ரூம் வர, கடையின் ரெஸ்ட் ரூம் பூட்டிக்கிடக்க, கடையிலேயே போய்விடுகிறாள்.  கடைக்காரன் செம கடுப்பாகிவிடுகிறான்.  அதற்கு மேலும் ஒரு ஒயின் பாட்டிலை காசு தராமல் தூக்கிக்கொண்டும் ஓடிவிடுகிறாள்.

சக ஆசிரியர் அவளிடம் பேசி, போதையிலிருந்து மீட்கும் ஒரு குழுவிடம் அழைத்து செல்கிறார். அங்கு வாராவாரம் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அந்த கூட்டங்களில் கலந்துகொள்கிறாள். குடியிலிருந்து மெல்ல மெல்ல விடுபடுகிறாள். தான் கர்ப்பிணி இல்லை என்ற உண்மையை சொல்லிவிடுவோம் என தலைமை ஆசிரியையிடம் சொன்னால், அதிர்ச்சியில் வேலையை விட்டு நீக்கிவிடுகிறாள்.

மன உளைச்சலில் அன்று மீண்டும் தண்ணி அடிக்கிறாள். வீட்டிற்கு போய், புருஷனிடம் "நீ குடிக்கும் வரை நானும் திருந்தமாட்டேன்' என சண்டைபோடுகிறாள். ஒரு சின்ன பார்ட்டி நடக்கிறது. அவள் குடியை விட்டு, ஒரு வருடம் நிறைவு நாள்.  உற்சாகத்துடன் பேசுகிறாள். இந்த ஒரு வருடத்தில், கணவனை விட்டு பிரிகிறாள்.  இறுதியில்,  கணவன் தன்னுடன் வாழ அழைக்கிறான்.  இவளோ உறுதியாய் மறுத்துவிடுகிறாள்.

*****

மொத்தப் படமும் நாயகியை மையப்படுத்தியே நகர்கிறது.  இயல்பாக நடித்திருக்கிறார். Final Destionation - பாகம் 3ல் நாயகியாக நடித்தவர்.  கதையில் ஆழமோ, காட்சிகளில் அழுத்தமோ இல்லாமல் நகருவது பெரிய குறை.  படமும் அதனால் பெரிய வெற்றியும் பெறவில்லை. சுமாரான வசூல். படம் கொடுத்த அந்த கடைக்காரன் மட்டும் என் கையில் சிக்கினான் என்றால்.. ஒன்னும் செய்யமுடியாது. :(   இந்த மாதிரி விழிப்புணர்வு படங்களுக்கு கிடைக்கும் விருதுகள் இந்த படத்திற்கும் கிடைத்திருக்கின்றன.

மற்றபடி, இந்த படத்தைப் பற்றி எழுதுவதற்கு காரணம்.  நமக்கும், இந்த படத்திற்கும் நிறைய நெருக்கம் இருக்கிறது. தமிழ்நாட்டில் 7 கோடியில் 1 கோடி பேர் வரை நன்றாக சரக்கடிக்கிறார்கள். அரசு தெருவுக்கு நாலு கடைகளை திறந்து, வருடம் தோறும் 20 ஆயிரம் கோடிகளுக்கும் மேலாக கல்லா கட்டுகிறது.  குடிக்கிற மக்களில் பலர் குடி நோயாளிகளாக, குடி வெறியர்களாக இன்று மாறியிருக்கிறார்கள்.  கடைகள் திறக்கும் பொழுதே, போதை மீட்பு மையத்தையும் அரசு திறந்திருக்கவேண்டும்.  அப்படியெல்லாம் சிந்தித்தால், கடைகளையே அரசு திறந்திருக்காதே!

எனக்கு தெரிந்து ஒரு குடும்பத்தில், அப்பா நிறைய சரக்கடிக்கிறார் என‌ அதை நிறுத்த, தொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரத்தை பார்த்து, குடிகாரர் அறியாமலே, அவர் உணவில் கலந்து தருவது என்பதை வாங்கி தந்து கொடுத்துள்ளார்கள். விளைவு இப்பொழுது அரைப் பைத்திய நிலையில் அவர் இருக்கிறார். 

இப்பொழுதே போதையில் தள்ளாடுகிறது தமிழகம்.  வருங்காலம்?

1 comment:

Anonymous said...

குடிக்கிறோம் குடிக்கிறோம் சொல்றீங்க! அதெல்லாம் ஒரு வயசு பாஸ்! பிறகு, அதையும் கடந்துருவோம்!