Friday, April 11, 2014

பிரியாணி - சில குறிப்புகள்

அன்று, சாப்பிட டிபன் பாக்ஸை திறக்கும் பொழுது, அருகே இருவர் “நேற்று ஹோட்டல்ல சாப்பிடலாம் முடிவு பண்ணி போனோம்.  ஆளாளுக்கு பிடித்த ஐட்டத்தை ஆர்டர் பண்ண, பிரியாணி, மட்டன் வருவல், மீன், நண்டு என ஹெவியாயிருச்சு! நைட்டு கூட வீட்டுல போயி சாப்பிடலன்னா பார்த்துக்கேயன்!” என நான் சைவ சாப்பாட்டை முடிக்கும் வரைக்கும் அவர்களின் அசைவ சுவையை அசைபோட்டபடி ரசித்து ரசித்து பேசினார்கள்.
*****

இன்னொரு நாள், லஞ்ச் பாக்ஸை திறந்ததும், அருகில் இருவர் “இந்த கீரை, காய்கறிகளை எல்லாம் ஆடு, மாடு, கோழி தான் சாப்பிடனும் சார்! ஆடு, மாடு, கோழியையெல்லாம் நாம சாப்பிடனும்!  எனக்கெல்லாம் குறைந்சபட்சம் ஒரு முட்டை பொரியலோ அல்லது கருவாடோ இருந்தா தான் சார் சோறே இறங்கும்” என நிறைய பேசிக்கொண்டே இருந்தார். சோகமாய் சாம்பாரையும் தண்டு கீரையையும் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.
*****

தொடர்ச்சியாய் இப்படி தொல்லை செய்ய, இரண்டு நாளைக்கு முன்பு,  எல்லோரும் சாப்பிட்டு முடிந்து கிளம்பிய பிறகு, சாப்பிடலாம் என நினைத்து லஞ்ச் ஹாலில் நுழைந்தேன். கதவை திறந்ததும், பிரியாணி வாசனை மூக்கை துளைத்தது.  ஏ.சி ஹால் என்பதால், சாப்பிட்ட பிறகு, மணத்தை மட்டும் சேமித்து வைத்திருக்கிறது. மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, நான் கொண்டு போன பூண்டு குழம்பையும், கோஸ் பொரியலையும் சாப்பிட்டுட்டு வந்து வந்தேன்.
*****
இன்றைக்கு கொஞ்சம் சுதாரித்து, முதல் ஆளாய் போய் அமர்ந்து, நிம்மதியாய் சாப்பிட்டு முடித்தேன்.  சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் ஒரு பயலையும் காணோம்.  ஆச்சர்யமாய் இருந்தது.  கையை கழுவும் பொழுது, அலுவலக உதவியாளர் வந்து கேட்டார்

”என்ன சார்! இன்னைக்கு பசி அதிகமோ! சீக்கிரம் சாப்பிட்டுட்டிங்க!” என்றார்.  புன்னகைத்தேன்.

“இன்னைக்கு எம்.டியின் மகனுக்கு பிறந்தநாள். எல்லோருக்கும் சூடான பிரியாணி ஆர்டர் பண்ணி வந்துக்கிட்டிருக்கு சார்!” என்றார். 

”யாரும் சொல்லலையே!” என்றேன். ( சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் யாரும் வராததற்கான காரணம் புரிந்தது.)

“நேத்தே சொல்லிட்டாங்க!  நீங்க தான் நேத்து லீவாச்சே!” என்றார்.


”பிரியாணி” போச்சே! :(