Thursday, April 4, 2013

கல்யாண பரிசு - சில சுவாரசிய குறிப்புகள்!

கல்யாணப் பத்திரிக்கையை கையில் வாங்கிவிட்டால், பரிசு பொருள் என்ன கொடுப்பது என்பது பலருடைய மனமும் யோசிக்கும்.  நம்முடைய திருமணங்கள் சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைந்தவை. பகட்டானவை.   பரிசு பொருள்கள் பெரும்பாலும் நம் திருமணங்களில் பணம் தான் பிரதானம்.  இரண்டாவது பொருள்கள். வீட்டிற்கு பயன்படக்கூடிய பொருட்கள்; அலங்கார பொருட்கள்.

பணத்தைப் பொறுத்தவரை வட்டியில்லா கடன் தான்.  நீ 100 செய்தால் நான் 125 செய்வேன். அவ்வளவு தான்.  என்னைக் கேட்டால் நம் சமூகத்திற்கு புத்தகங்களை பரிசாக தருவது ஆக சிறந்த வழிமுறை. பணமாக கொடுக்க கூடாது.  புத்தகம் தான் கொடுக்க வேண்டும் என முடிவு எடுத்து, அமுல்படுத்திய பொழுது, அதில் சில அனுபவங்கள் கிடைத்தன. பகிர்ந்துகொள்ளலாமே என நினைத்து இந்த பதிவு!

****

நண்பனின் அலுவலக நண்பனுக்கு திருமணம். ஒருமுறை ஊரெல்லாம் சுற்றி விட்டு, மதியம் 2 மணியளவில் போய், கையை மட்டும் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து கிளம்பினோம்.  மொய் அல்லது பரிசு பொருளோ கொடுக்காததால், தன்னை அவமானப்படுத்திவிட்டதாக சிலநாட்கள் பேசவே இல்லை.  பிறகு, கொள்கையை சொல்லி, புத்தகம் தந்து சமாதானபடுத்தினோம்.

****

உடன் பணிபுரியும் நண்பருக்கு திருமணம். புத்தகம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அன்றிரவு, நான் கொடுத்த புத்தகத்தை சீரியசாக தேடியிருக்கிறார்.  வீட்டில் உள்ள சொந்தங்கள் என்ன தேடுகிறாய்? எனக் கேட்டதற்கு, புத்தகம் என்றிருக்கிறார்.  நமுட்டு சிரிப்பு சிரித்திருக்கிறார்கள்.  அந்த புத்தகம் ஆனந்த விகடன் வெளியீடான "ரொமான்ஸ் ரகசியங்கள்"

****

நண்பர்கள் சிலர் "புத்தகங்கள் மட்டுமே பரிசாக வாங்கப்படும்" என பத்திரிக்கையிலேயே போட்டார்கள்.  சோதிட புத்தகம், ஆன்மீக புத்தகம் என வந்துவிடுமே என்ற கவலையில், முற்போக்கான நூல்கள், இலக்கியங்கள் என  புத்தக கடை விற்பவரை ஒன்றை மண்டப வாசலிலேயே ஏற்பாடு செய்து செய்தோம்.

*****

நண்பனுக்கு மணமகனின் தோழனாக மேடையில் நின்றுக்கொண்டிருந்தேன். வாசலில் இருந்து புத்தகம் வாங்கி வந்த பல பெருசுகள் தன் வாழ்க்கையிலேயே முதல்முறையாக புத்தகத்தை மொய்யாக தருகிறேன் என சந்தோசமாய் சொன்னார்கள்.

*****

கொஞ்சம் ஆர்வக்கோளாறில் சிலரிடம் உங்களுக்கு பிடித்த புத்தகம் சொல்லுங்கள். வாங்கித்தருகிறேன் என கேட்டு, அந்த புத்தகத்திற்கு நாயாய், பேயாய் அலைந்த கதையும் உண்டு. அதற்கு பிறகு யாரிடமும் அப்படி கேட்பதில்லை! :)

*****

புத்தகம் வாங்க நேரமில்லாமல் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, ஒரு வாரம் கழித்து உங்களுக்கு ஒரு சிறப்பு புத்தகம் தரலாம் என தேடினேன். கிடைக்கவில்லை.  அலைந்து திரிந்து வாங்க இவ்வளவு நாளாயிருச்சு என 'பில்டப்' பண்ணி தந்ததும் உண்டு. :)

*****

நண்பரில் திருமணத்தில் "புத்தகங்கள் மட்டுமே வாங்கப்படும். மற்ற பொருட்கள் வாங்கப்படாது" என சீரியசாக விளக்கி, புத்தகங்களை பெற்று வீட்டுக்கு மாலை வீடு வந்து சேர்ந்தோம்.  மூன்று 'நைட் லேம்ப்கள்' எங்களுக்காக காத்திருந்தன. வீட்டில் வந்து நண்பனின் அம்மாவிடம் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். :)

*****

புத்தகம் தருகிறோம். படிக்கிறார்களா என சந்தேகம் வருவதுண்டு.  கல்யாணம் முடிந்து இரண்டு மாதம் கழித்து கேட்கும் பொழுது புத்தகத்திலிருந்து சில பகுதிகளை குறிப்பிட்டு நல்ல புத்தகம் என சொல்வார்கள்.  அப்பாடா! படிக்கிறார்கள் என நிம்மதி வந்தது.

*****

சமீப காலங்களில் சிறிது மாற்றம். படிப்பது என்பது குறைந்து போய் கேட்பது; பார்ப்பது அதிகமாகி வருவதால், நல்ல படங்களை; நல்ல உரைகளை புத்தகத்தோடு பரிசாக தருகிறேன். 

****

நண்பர் தன் அனுபவம் ஒன்றை பகிர்ந்தார்.  அவரின் நண்பர் ஒரு புகைப்படக்காரர்.  நல்லவர்.  அப்பாவியும் கூட!  கல்யாணப் பத்திரிக்கையில் "புத்தகங்கள் மட்டும் பரிசாக பெறப்படும்" என்பதை ஆ.விகடன், குமுதம், குங்குமம் என வாங்கி தந்தார்.

அப்பொழுதே அவரிடம் புரியவைத்திருக்கவேண்டும். புரிய வைக்காததின் விளைவு. இன்னொரு நண்பரின் திருமணத்திற்கு, "நூல்கள் மட்டுமே பரிசாக பெறப்படும்" என்பதை பார்த்துவிட்டு, சீரியசாக நூல்கண்டுகளை நிறைய வாங்கி பரிசாக தந்தார்.

விழுந்து விழுந்து சிரித்தேன்.

****
அடுத்த வாரம் இன்னும் இரண்டு திருமணங்கள். இன்னும் எழுதுவேன். :)

****

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனுபவங்கள் ரசிக்க வைத்தது...

தொடர வாழ்த்துக்கள்....

மனோ said...

hi i am looking for book called " navarathina malai" நவரத்தின மலை, soviet nation story remake in tamil.... can u find and inform me. manotheb@gmail.com

மனோ said...

hi i am looking for book called " navarathina malai" நவரத்தின மலை, soviet nation story remake in tamil.... can u find and inform me. manotheb@gmail.com

Jayadev Das said...

You are writing well. keep it up.