Saturday, November 13, 2010

நொந்தகுமாரனின் பக்கங்கள்! - மெல்ல...மென்று...!


மருத்துவர் சன்னமான குரலில் கேட்டார். "நீங்க மென்று, மெதுவா சாப்பிடுவீங்களா! வேகமாகவா?" "வேகமாக" என்றேன். "நீங்க மென்று..மெல்ல சாப்பிட்டாலே உங்க ஜீரணப் பிரச்சனை 75% சரியாகிவிடும். அதனாலே... சாப்பிடும் பொழுது...உங்க புத்திக்கு சொல்லுங்க! எனக்கு வயிறு பிரச்சனை இருக்கு. அதனால் வேகமா சாப்பிட்டால் பிரச்சனை வரும் என்று..." ஏதோ போதிப்பது போல மெல்ல பேசினார்.

மாத்திரைகள் இல்லாமலே சுகமாகிறது என்றால் சந்தோசம் தானே! "மென்று தின்றால் நூறு வயது! " என சொல்லி இருக்கிறார்களே! சரியென மருத்துவரிடம் சொல்லி வந்துவிட்டேன் அதன் விபரீதம் புரியாமல்.

மறுநாள் வழக்கமாய் சாப்பிடுகிற ஹோட்டலில் என் அளவு இரண்டு இட்லி, ஒரு தோசையை..மென்று..மெல்ல சாப்பிட்டால் தோசையில் பாதியை சாப்பிடமுடியவில்லை. சரி என கைகழுவி வந்துவிட்டேன். 11.30க்கே பசித்தது. 12.30க்கு தீயாய் பசித்தது. மதிய சாப்பாட்டில் பார்த்துக்கொள்ளலாம் என பொறுத்துக்கொண்டேன். மதியம் வழக்கமாய் சாப்பிடுகிற அளவைச் சாப்பாட்டை மென்று..மெல்ல சாப்பிட பாதிக்கு மேல் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. சுவை அப்படி!

ஏற்கனவே எங்கள் பகுதியிலும், அலுவலக பகுதியிலும் பலரிடம் நன்றாக விசாரித்து...5 கடையில் சாப்பிட்டு பரிசோதித்து... ஆறாவது கடையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது அதன் சுவையே பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை என்றால்...என் செய்வேன்!

வீட்டில் சமைத்து சாப்பிடலாம் என நினைத்தால்...உடனிருக்கும் 3 குண்டன்கள் மகா சோம்பேறிபயல்கள். சமைக்கலாம் என்றால் ஓடுகிறார்கள். சமைத்து போட்டால்...நன்றாக சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டுவிட்டு... நக்கல் பேச்சு வேறு. சமைக்கிற அம்மாக்கள் யாராவது கிடைப்பார்களா என விசாரித்தால்...யாரும் கிடைப்பாரில்லை.

கொஞ்சம் ஆற அமர யோசித்தால்...ஊரில் இருந்த பொழுது..கொஞ்சம் வேகமாக சாப்பிடுவன் தான். சென்னை வந்த பிறகு, பெருநகர வேகத்தில் சிக்கி...சுவை போன்ற பல காரணங்களினால் தான் நிறைய வேகமாய் சாப்பிடத்துவங்கியுள்ளேன் என புரிந்தது.

நாள் ஆக ஆக... பசியின் சாபம் வாங்கியது போல... எப்பொழுதும் பசி, பசி என சுற்ற ஆரம்பித்தேன். ஐந்தாம் நாளில் நடுநிசியில் விழிப்பு வந்து, பசியால் தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்து தூங்கினேன். ஏழாம் நாளில் பசியால் விழிப்பு வந்து பிறகு தூக்கம் வராமல், தொலைக்காட்சியில் மிட்நைட் மசலா பாடல்கள் மனசை தாக்கி, மனசை கொஞ்சம் கெடுத்தார்கள். பதினைந்தாம் நாளில்... கனவில் விதம் விதமான சாப்பாடு வகைகள் வரிசையாய், வந்தன. ஆவலுடன் மென்று, மெல்ல அல்ல! அரக்க பரக்க சாப்பிடுகிறேன்.

பதினெட்டாம் நாளில் நாலு கிலோ குறைந்துவிட்டேன். கண்களுக்கு கீழே கொஞ்சமாய் கருவளையம் தெரிய ஆரம்பித்தது. பார்க்கிறவர்கள் உடம்பு சரியில்லையா என அன்பாய், அக்கறையாய் விசாரிக்க...இன்னும் கொஞ்சம் சோர்ந்தேன். இனியும் தாங்க முடியாது. நாளை மருத்துவரை சந்தித்து..."மாத்திரை கூட சாப்பிடுகிறேன். என்னை மென்று..மெல்ல மட்டும் சாப்பிட சொல்லாதீர்கள்" என கெஞ்சப் போகிறேன்.

No comments: