Wednesday, September 21, 2011

நொந்தகுமாரனின் பக்கங்கள் - பயணம்!


'எங்கேயும் எப்பொழுதும்' படம் குறித்த சில பதிவுகள் படித்த பொழுது, என்வாழ்விலும் நடந்த பேருந்து சம்பவங்கள் வரிசையாக மேலெழுந்து வந்தன. அதில் கலங்கடிக்கிற சில கோர விபத்துகளும் உண்டு. அதைப்பற்றியெல்லாம் சொல்லி, உங்களை பதற வைக்கிற எண்ணம் இல்லை. நம்மவர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. கல்யாணத்தைப் பற்றி பேசினால், வரிசையாக எல்லோரும் தங்கள் அனுபவங்களையும் சொல்வார்கள். நன்றாகத்தான் இருக்கும். ஆனால், விபத்து மாதிரி விசயங்களையும் வரிசையாக சொல்லும் பொழுது, ஏண்டா ஆரம்பித்தோம் என ஆகிவிடும். அப்படியெல்லாம் இல்லாமல், என் வாழ்வில் நடந்த ஒரு எளிய (!) நொந்த சம்பவம் இது.

****

ஒரு மூன்று நட்சத்திர விடுதியில் கொஞ்ச காலம் காசாளராக வேலை பார்த்த காலம் அது! முதல்நாள் இரவு 9 மணிக்கு துவங்கிய வேலை, காலை 7 மணிக்கு முடிந்து வெளியே வரவேண்டும். படுபாவி! எனக்கு பிறகு வரவேண்டிய சக ஊழியர் வரவில்லை. அப்படியே தொடர சொன்னார்கள். வேறுவழியில்லை. தொடர்ந்தேன்.

மதியம் 3 மணிக்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. கரூரில் வசித்த மாமா திடீரென இதய நோயினால் இறந்துவிட்டதாகவும், மற்றவர்கள் எல்லோரும் உடனே கிளம்புவதாகவும், எப்படியோ வந்து சேர் எனவும் அண்ணன் தெரிவித்தார்.

அப்பாவின் அக்காவின் கணவர் என்பதால், சென்றே ஆகவேண்டும். வேலை முடிந்து, மாலை 6 மணிக்கு வெளியே வந்தேன். இரவு முழுவதும் தூங்காதது கண் எரிந்தது. தூங்க சொல்லி உடல் கெஞ்சியது. பஸ் தானே! தூங்கிகொண்டே போய்விடலாம் என உடலுக்கு சமாதானம் சொன்னேன். பஸ்ஸ்டாண்டிற்கு கிளம்பினேன்.

****

கரூர் வழியாக ஈரோடு செல்லும் பேருந்து தயாராக நின்றிருந்தது. பேருந்தில் சரிபாதி நிரம்பியிருந்தார்கள். எப்பொழுதும் பஸ்ஸின் இடப்பக்கத்தில் நடுவில் அமர்வேன். பயம் தான் காரணம். முன்னாடி மோதினாலோ, பின்னாடி மோதினாலோ தப்பித்து கொள்ளலாம். உயிர் பிழைக்க கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. அப்படியே பஸ்ஸே ஒரு பாழடைந்த கிணற்றில் குதித்தால் என்ன செய்வாய் என நீங்கள் குறுக்கி கேள்வி கேட்ககூடாது.

10 நிமிடம். எல்லோருக்கும் நடத்துநர் டிக்கெட் தந்தார். நடத்துநர் சரியான சிடுமூஞ்சி. சில்லறைக்காகவும், மற்றும் எது கேட்டாலும் எரிந்து, எரிந்து விழுந்தார். சுத்தமாக பிடிக்கவில்லை. எப்படியும் தூங்கிவிடுவோம், பக்கத்தில் இருப்பவரை அலாராமாக பயன்படுத்தலாம் என நினைத்து, 'எங்கு போகிறீர்கள்?" என்றேன். சந்தேகமாய் பார்த்து, "திண்டுக்கல்" என்றார். இவரிடம் சொல்வது உதவாது என தூங்க ஆரம்பித்துவிட்டேன்.

ஒன்றரை மணி நேரம். சல சலவென எழுந்த சத்தத்தால் தூக்கம் கலைந்தேன். திண்டுக்கல். பக்கதில் இருந்த ஆள் மாறியிருந்தார். புதியவரிடம் "எங்கு போகிறீர்கள்?" என்றேன். கரூர் தாண்டி உள்ள ஊர் ஒன்றை சொன்னார். 'என்னை கரூரில் எழுப்பி விடுங்கள்' என்றேன். பொறுப்பாய் தலையாட்டினார். மீண்டும் தூங்கி போனேன்.

திடீரேன விழிப்பு வந்தது. கடிகாரத்தில் நேரம் பார்த்தேன். இரவு 10.15 மணி. அதிகபட்சம் 9.30 க்குள்ளாகவே கரூரை அடைந்திருக்க வேண்டும். என்ன ஆச்சு? ஒரே குழப்பமாயிருந்தது. அருகில் இருந்தவர் ஆள் மாறியிருந்தார். வரபோகும் ஊர் என்ன? என்றேன். கொடுமுடி என்றார். கரூருக்கும், ஈரோட்டிற்கும் நடுவில் இருக்கிறேன்.

எழுப்பி விடுகிறேன் என சொல்லிவிட்டு எழுப்பாமல் போய்விட்டாரே! என மனதுக்குள் திட்டினேன். இந்த நடத்துநருக்கு டிக்கெட் குறைந்திருக்குமே! அந்த ஆள் எப்படி கேட்காமல் விட்டார் என நடத்துநரை தேடினேன். நிம்மதியில்லாமல் முன்னும், பின்னும் நடமாடிக்கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்தவரிடம் நான் கரூரிலேயே இறங்கியிருக்க வேண்டும். அருகில் இருப்பவரிடம் சொல்லிவைத்திருந்தேன். எழுப்பாமல் விட்டுவிட்டார் என்றேன். அதற்கு அவர் "கண்டக்டர் ஒரு டிக்கெட் குறைகிறதே என எல்லோரையும் கேட்டு வந்தவர், என்னையையும் எழுப்ப வந்தாராம்! அவர் ஈரோடு வரைக்கும் போகிறார். என்னிடம் சொல்லிவிட்டு தான் தூங்கினார் என அடித்து சொன்னதும், எழுப்பாமல் போய்விட்டாராம். அடப்பாவி! கவித்துட்டானே! தூங்கி, தூங்கி அந்த ஆள் மேல் விழுந்து எழுந்ததால் அந்த கடுப்பில் பழிவாங்கிவிட்டானோ?! தூக்க கலக்கத்தில் கரூர் என்று சொல்வதற்கு பதிலாக, ஈரோடு என சொல்லிவிட்டோமோ என்றெல்லாம் யோசித்தேன்.

சரி! இனி என்ன செய்வது? நடத்துநரிடம் போய் என் நியாயத்தை சொன்னால், அந்த ஆள் காது கொடுத்து கேட்க வாய்ப்பேயில்லை. நிச்சயம் கடித்து துப்பிவிடுவார். என்ன செய்யலாம் என யோசித்த பொழுது, ஒரு இரயில்வே கேட்டில் வண்டி நின்றது. அருகில் ஊர் இருப்பது தெரிந்தது. இங்கேயே நைசாக இறங்கிவிடலாம் என இறங்கினேன். ரயில் போனதும், பஸ்சும் போய்விட்டது.

கேட் கீப்பரிடம் ஒரு வணக்கத்தை போட்டு, சகல விசயத்தையும் சொன்னேன். எந்த பக்கம்? எவ்வளவு தூரம் போனால், கரூருக்கு பஸ் கிடைக்கும்? என்றேன். இங்கிருந்து 2 கிலோமீட்டர் நட்ந்தால், பஸ் நிலையம் வந்துவிடும். ஆனால், இந்நேரத்திற்கு நடந்து போனால், இரண்டு இடங்களில் போலீஸ் நிற்கும். சந்தேக கேஸில் பிடித்து உள்ளே வைத்துவிடுவார்கள். இப்பொழுது போனாலும் பஸ்சும் கிடைக்காது. ஆகையால், இங்கேயே படு. காலையில் போய்கொள்ளலாம் என்றார். வேறு வழியில்லை. அங்கேயே தூங்கினேன்.

5.30 மணிக்கு எழுப்பி, கேட் கீப்பர் அவர் செலவிலே ஒரு நல்ல தேநீரும் வாங்கி தந்தார். நன்றி சொல்லி, பஸ் பிடித்து, 7 மணி போல அத்தை வீட்டை அடைந்தேன். எல்லோரும் என்னடா இரவே வந்துவிடுவதாக சொன்னாங்க!. ஆளையே காணோம்! என்றார்கள்.

என் சின்ன அக்காவிடம் நடந்ததை மெல்ல கூறினேன். ஒருமணி நேரத்தில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஆளாளுக்கு கலாய்த்தார்கள்.

*****

நீதி : பொது மக்கள் சேவை தொடர்பான வேலைகள் செய்பவர்கள் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும். நடந்துநர் மட்டும் நல்லவராய் இருந்திருந்தால், அவரிடமே என்னை கரூரில் எழுப்பி விடுங்கள் என உதவி கேட்டிருப்பேன்! அவருக்கும் தொல்லை இருந்திருக்காது!
****

டெயில் பீஸ் : பஸ் என கூகுளில் தேடினால், பல வெளிநாட்டு பஸ்சுகள் விதவிதமாக வரிசையில் அழகாக வந்து நின்றன. தமிழ்நாடு பஸ் என தேடினால், பஸ் எரிந்தோ, கவிழ்ந்தோ தான் வருகின்றன! நல்லா கிளப்புறங்கப்பா பீதியை!

1 comment:

மகேந்திரன் said...

ம்ம்ம்.. வேற.. வேற..இன்னும் கொஞ்சம் நல்லா...உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் - மகேந்திரன்.