
கடந்த வாரம் இந்த படத்தைப் பார்க்கப்போய்த்தான், இரவு காட்சி மட்டும் என்று சொல்லி, மிஷன் இம்பாசிபிள்-4ல் மாட்டிக்கொண்டேன். பெரிய நட்சத்திர படங்கள், பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் திரையரங்குகளை இயக்கும் செல்வாக்கில், பல சிறிய தயாரிப்பு படங்கள் சிக்கி கொள்கின்றன. அதில் இந்த படமும் ஒன்று. நல்ல படம் என மக்களை சென்றடைவதற்குள்ளேயே பல திரையரங்குகளில் எடுக்கப்பட்டுவிட்டன. ஒரு பேட்டியில் இயக்குனர் சேரன் சொல்வது போல, இப்பொழுது பல படங்களுக்கும் வாழ்வு ஒரு வாரம் தான்.
****
கதை எனப் பார்த்தால்....
நெடுஞ்சாலையில் கார் பாறையில் மோதி ஒரு சாலைவிபத்து. உயர் அதிகாரிகளுடன் ஒரு காவல்துறை குழு வந்து பார்வையிடும் பொழுது, காரில் உள்ள சூட்கேஸில் நிறைய பணம் இருக்கிறது. காவல்துறையின் குறுக்குப்புத்திகள் கூட்டாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. பணத்தை கமுக்கமாய் அமுக்க முடிவு செய்கிறார்கள்.
ஒரு குற்றம் பல குற்றங்களுக்கு அவர்களை இழுத்து செல்கிறது. இந்த களேபரத்தில் (நாயகனான) மாணவன் மாட்டிக்கொள்கிறான். உண்மை தெரிந்த இவனை போட்டுத்தள்ள முடிவு செய்கிறார்கள். கடைசி நேரத்தில் தப்பி, பிறகு மீண்டும் மாட்டி, மனநலம் பிசகியுள்ளதாக மனநல மருத்துவனைக்குள் சிறை வைக்கிறார்கள். அதிலிருந்து அவன் மீண்டானா? என்பது சொச்சகதை!
****
கதையை நம்பி, திரைக்கதையை வலுவாக அமைத்தால், திரைப்படம் அருமையாக வரும் என்பது ஒரு நல்ல உதாரணம் இந்த படம். எல்லா கதாபாத்திரங்களும் சரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இயல்பாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசை நன்றாக இருக்கிறது. கதை மெல்ல மெல்ல விரிந்து, கதைக்குள் நம்மையும் இழுத்துக்கொண்டு போய்விடுகிறது. இயக்குநருக்கு முதல் படம் என்கிறார்கள். ஆச்சர்யமாய் இருக்கிறது.
***
புரியாத புதிர், முரண் - என சில வருடங்களுக்கு ஒருமுறை தான் இப்படி நல்ல திரில்லர் படங்கள் வெளிவருகின்றன. அந்த படங்களைவிட இந்த படத்திற்கு உள்ள சிறப்பு என்னவென்றால், சமூகத்தில் உள்ள பல கோளாறுகளை இயல்பாக தொட்டு செல்கிறது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும் தவறு எந்த அளவுக்கு அப்பாவிகளை பாதிக்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாக படம் நமக்கு சொல்கிறது. நமது முதலமைச்சர் ஜெ. சொல்வது போல, காவல்துறைக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தால், என்ன ஆகும் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம்.
படத்தினூடாக ஆங்காங்கே குட்டி குட்டி சம்பவங்கள், கதைகளும் உண்டு.
சாலையோரத்தில் சாப்பிட்டு கொண்டிருக்கும் ஒரு பேராசிரியரை காவல்துறை அதிகாரி அடித்துவிடுகிறார். புகார் கொடுக்கும் பொழுது, காவலர் "நீங்க பேராசிரியர்னு தெரியாது சார்!" என சொல்லும் பொழுது, "கருப்பா இருந்து, கைலி கட்டியிருந்தா அடிப்பீங்களோ!" என்பார் கோபமாய்!
ஒரு கல்லூரி முதல்வர் தன் மகனை நன்றாக படிக்கும் பசங்களோடு ஒப்பீட்டு, தினமும் திட்டும் பொழுது, அந்த பையனின் ஆளுமை சிதைவதை நன்றாக உணர்த்தியிருக்கிறார்கள். அதே போல், அந்த முதல்வர் தன் கெளவரத்தை காப்பாற்றுவதற்காக செய்யும் நடவடிக்கைகள் எவ்வளவு பின்விளைவுகளை உருவாக்குகிறது என்பதையும் நன்றாக பதிவு செய்திருக்கிறார்கள்.
மனநல மருத்துவ இன்சார்ஜை, "நல்லா இருக்குற என்னை, ஏன் மருத்துவமனையில் சேர்த்துக்கொண்டாய்? என நாயகன் கோபமாய் கேட்கும் பொழுது, "மருத்துவமனையில் தவறான சிகிச்சையால், ஒருவர் இறந்துவிட, காவல்துறை உதவி செய்தது. அதற்கு கைமாறாக இந்த உதவி!" என்பார்.
எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், நேர்மையான அந்த கர்ப்பிணியான பெண் ஆய்வாளர் ஒரு கொலை கேஸை ஆய்வு செய்வது மிக அழகு.
பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.
****
டெயில் பீஸ் : பேரனின் இந்த படப்பெயரை வைத்து, கருணாநிதியை கடந்த வாரம் கலாய்த்த மதியின் கார்ட்டூன் அருமை.
மேலே சொன்ன கருத்து, "காவல்துறைக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தால், என்ன ஆகும் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம்" யாருக்காவது அதிகப்படியானது என நினைத்தீர்கள் என்றால், கீழ்க்கண்ட உண்மை நிகழ்வான சுட்டியை படிப்பது நல்லது.
காவல்துறையால் நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும், பின் நிகழ்வுகளும்!