Saturday, December 29, 2012

கும்கி - 'அய்யா' ராமதாசுக்கு பிடித்த படம்!



நாவலை படமாக்குவது ஒரு வகை.  ஒரு நான்கு பக்க சிறுகதையை இரண்டரை மணி நேர முழு நீளப்படமாக்கப்பட்டது போல இருந்தது கும்கி.  இயக்குநர்கள் கதை எழுதுவதை தடை செய்யப்படவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இந்த படமும் அதை நீருபிக்கிறது.

****

நிறைய பேர் கதை சொல்லிவிட்டார்கள். இருப்பினும் பார்க்கதவர்களுக்காக சுருக்கமாய்.....

ஒரு காட்டுயானை மலை கிராமங்களில் புகுந்து பயிர்களையும், மனித உயிர்களையும் நாசப்படுத்துகிறது.  அரசாங்கம் இதை சாக்காக வைத்து, வேறிடத்திற்கு நகர்ந்து செல் என நைச்சியமாய் பேசுகிறது. காட்டு யானையை துரத்தி, தங்களை பாதுகாக்க , கும்கியை வரவழைக்கிறார்கள். ஒரு நெருக்கடியில் கும்கி வர தாமதமாக, கோயில் யானையை கொண்டு நாயகன் தற்காலிக ஏற்பாடாய் கிராமத்துக்கு வருகிறார். வருகிற இடத்தில் ஊர் தலைவரின் பெண்ணிடம் காதல் பற்றிக்கொள்கிறது.  காதல் ஜெயித்ததா?  காட்டுயானையை விரட்டினார்களா என்பது சொச்ச கதை!

*****
நாயகன், நாயகி, ஒளிப்பதிவு, பாடல் என எல்லாவற்றையும் பற்றி நிறைய செய்திகளை சொல்லி, விமர்சனம் என பல பதிவர்கள் எழுதுகிறார்கள்.  கதை எதைப்பற்றி விவாதிக்கிறது? என்பதை பலரும் விவாதிப்பதில்லை.  ஏனென்றால் சுவாரசியமாக இருக்கிறதா? இல்லையா? என்று தான் பிரபல வணிகப் பத்திரிக்கைகள் இப்படித்தான் எழுதுகிறார்கள்.

****

ஊருக்குள் நாயகன் வந்ததும், நாயகியை கண்ட நொடி முதலாய் காதலில் கசிந்துருகிறார். அந்த பெண்ணும் காதலிக்கிறாள் என தெரிந்த பிறகு, இறுதியில் ஊர்த்தலைவன் தங்களது 300 ஆண்டுகால பராம்பரியம் பேசியதும் நாயகனும், நாயகியும் காதலில் இருந்து விலக முடிவெடுக்கிறார்கள்.

படம் சொல்வது போல, பராம்பரியம், குலப்பெருமை, ஆதிக்க சாதிப் பெருமை என எல்லோருக்கும் தான் உண்டு. இவற்றுக்கு மதிப்பளித்தால் என்ன நடக்கும்?

‘’உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவினர்கள் - மைத்துனர்மார்கள்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை
நெஞ்சம் தாங்கலந் தனவே..” - கவிஞர் மீரா

- என புகழ்பெற்ற கவிதை போல ஆகும்!

இந்த படம் ராமதாசு போன்ற ஆதிக்க சாதி சங்கங்கள் வைத்திருப்பவர்களுக்கு பிடித்தமான படம்.

சாதிய சமுகம் உடைய வேண்டுமென்றால்  சாதி மறுப்பு திருமணம் செய்வது ஒரு வழி.  சமூகத்தில் இதை புரிந்துகொண்ட முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் தனது சொந்தங்களுடன் போராடி சாதிமறுப்பு திருமணம் செய்கிறார்கள்.  அந்த போராட்டத்தில் பலர் தோற்றுப் போவதும் உண்டு.   சமூகத்தில் முற்போக்கு எத்தனை சதவிகிதமோ அதைவிட குறைவாக தான் சாதிமறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன.  ஆக காதல் தான் பலரையும் சாதியை மறந்து திருமணத்தில் முடித்துவைக்கிறது. இப்பொழுதெல்லாம் சமூகத்தில் காரியவாதம் மிஞ்சி நிற்பதால், காதலிப்பது ஒரு நபரை! சுயசாதி, பெரும்வரதட்சணை பலன்களுக்காக திருமணம் செய்வது வேறு ஒருவரை என்பதாக இருக்கிறது.

என் நண்பரின் நண்பர், தலித் பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என பெற்றோர்களிடம் சொன்னதும், பெற்றொர்கள் (விவசாய குடும்பம்) அவர் காலில் விழுந்து கெஞ்சினார்கள். உடனே அவர் மனது இளகிவிட்டார்.

பெற்றோர்கள் மீதான அன்பையும், மரியாதையும், அவர்களின் சகல பிற்போக்குத்தனத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொள்கிறார்கள்.  நாம் பெற்றோர்களை மதிக்கவேண்டும். பிற்போக்குத்தனத்தை வெறுத்து, அதை மீறவேண்டும். அது தான் சரியானது.

****

கும்கிக்கு பதிலாக போகிறேன் என சொல்வது, இதுவரை 50, 60 பேரை காட்டுயானை கொம்பன் கொன்றிருக்கிறது என தெரிந்தும் அங்கேயே இருப்பது எல்லாம் அக்மார்க் ஹீரோத்தனம்.  மற்றபடி முடிவு இயல்பானது.  நாயகன் செய்கிற எல்லா முட்டாள்தனங்களுக்கும் முடிவு இப்படித்தான் அமையும்.

****


1 comment:

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்