Wednesday, June 5, 2013

மாசாணி ‍- தலித் வடித்த சிலை!

ஒரு தலித் பெண்ணும் நல்லவராய் இருக்கிற சின்ன பண்ணையும் காதலிக்கிறார்கள். விசயம் தெரிந்த வீட்டார் சின்ன பண்ணையை சோற்றில் விஷம் வைத்து கொல்கிறார்கள்.  தலித் பெண்ணை ஊரைவிட்டு தள்ளி வைக்கிறார்கள்.  வயிற்றில் பிள்ளையோடு வாழ தத்தளித்து, குழந்தையை பெற்றுவிட்டு இறக்கிறாள்.

அந்த ஊருக்கு சிலை செய்ய வந்த ஒரு இரக்கம் கொண்ட ஒரு சிற்பி இந்த பெண்ணின் நிலை அறிந்து, பாதி சிலை செய்த கையோடு, ஊர்க்காரர்களை சபித்துவிட்டு குழந்தையை கொண்டு வந்து, தன் பேரனாக வளர்க்கிறார்.

25 ஆண்டுகள் கழிகின்றன. இறந்து போன மாசாணி நிம்மதி இழந்த ஆத்மாவாக அந்த ஊரில் பலரை காவு கொள்கிறாள். பாதியோடு நிற்கும் மூலவரின் சிலையை முடிக்க பல சிற்பிகளை அழைத்து வருகிறார்கள். மாசாணி அவர்களை எல்லாம் அடித்து துவைத்து அனுப்புகிறாள்.

இறுதியில், பழைய சிற்பியிடமே போய், சிலையை முடித்து தர கெஞ்சுகிறார்கள்.  தன் பேரனை அனுப்பி சிலை வேலையை முடித்துதருகிறார்.

தலித்தை தள்ளி வைத்த குடும்பம், ஒரு தலித் பெற்றெடுத்த பையன் வடித்தெடுத்த சிலையை ஊரே வணங்குகிறது!  உண்மை தெரிந்த பண்ணையார் குடும்பம் சாதியை புறக்கணித்து, பையனை  ஏற்றுக்கொள்கிறது! தன் பெண்ணையும் கட்டித்தருகிறது. :)

*****

இந்த படம் பார்த்ததும், சிற்பி ராஜன் தான் நினைவுக்குவந்தார். அவருடைய ஆனந்தவிகடன் பேட்டி தான் சட்டென்று நினைவுக்கு வந்தது. பெரியாரிஸ்டான சிற்பி ராஜன், தனக்கு தெரிந்த சிற்பக்கலையை பல தலித் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்து பல அருமையான சிற்பிகளை உருவாக்கியிருக்கிறார். இன்றைக்கு அவர்கள் செய்த பல சிலைகளை தான் பல இடங்களிலும் வணங்கி வருகிறார்கள்.அவருடைய பணி சிறப்பான பணி. அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

***

கதையை பார்த்ததும் உணர்ச்சிவயப்பட்டு போய்விட்டு, என்னை திட்டவேண்டாம். நண்பர்கள் ஏதோ படம் வாங்க போக, கிடைக்காமல் இந்த படத்தை எதைச்சையாக வாங்கி வந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த வகை மாதிரியில் 25 வருடத்திற்கு முன்பு இப்படி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. தலித் வடித்த சிலை என்பது மட்டும் உருப்படியான விசயம். மற்றபடி, படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, பாடல்கள் எல்லாம் 25 வருடத்திற்கு முந்தைய தரம் தான். பல வருடங்களுக்கு பிறகு செந்தூர பூவே ராம்கி படத்தில் வருகிறார். பேய் படம் என்கிறார்கள். கடவுள் நம்பிக்கை போய்விட்டதாலும், வயதானதாலும் பயம் தான் வரமாட்டேன் என்கிறது. :)

சிற்பி ராஜன் செய்கிற பணி பலரும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கதையை பகிர்ந்துகொண்டேன்.

***

1 comment:

Anonymous said...

அறியாத செய்தியை அறிந்து கொள்ல முடிந்தது.வாழ்த்துக்கள்