Thursday, March 20, 2014

செயின் அறுப்பு - சில குறிப்புகள்

தெருவில் அக்கம் பக்கத்து வீடுகளில் கிசுகிசுவென பெண்கள் கூடிப்பேசிக்கொண்டிருந்தார்கள்.  விசாரித்த பொழுது, ஏரியாவில் குடியிருக்கும் ஒரு அம்மா ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார்.  இன்று காலையில் ரத்தத்தை ஒருவன் கொடுத்துவிட்டு, பதிலாக கழுத்தில் கிடந்த 20 பவுன் செயினை மிரட்டி வாங்கி ஓடிவிட்டானாம்.  ஒரு செய்தித்தாளில் 30 பவுன் என திருடன் மீது பழி சுமத்தியிருந்தார்கள்.

20 பவுன் என்றால், இன்றைய விலையில் குறைந்த பட்சம் 4 லட்சம்.  வங்கியில் காத்திருந்து பல ரிஸ்க் எடுத்து கொள்ளையடிப்பதை விட, இது திருடர்களுக்கு எளிதான வழிதான்.   இத்தனை பவுனை கழுத்தில் பல பெண்களும் சில ஆண்களும் எதற்காக மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்?  3 பவுன் அல்லது 5 பவுன் வரை அழகுக்கு என சொல்லலாம். 20 பவுனுக்கு ஒரு கட்டை செயினை கழுத்தில் அணிந்திருப்பது அழகு என்று சொல்ல முடியுமா?  பந்தா தான்!

முன்பெல்லாம் பர்சை அடிப்பவர்கள் இப்பொழுது செல்போன் திருடர்களாய் மாறி இருப்பது போல, தங்கம் விலை ஏறிய பிறகு, செயின் அறுப்பது மிக இயல்பாகிவிட்டது.  முன்பு பவுன் பத்தாயிரத்துக்குள் இருந்த பொழுது, இத்தனை செயின் அறுப்புகள் நடந்ததில்லை.   தங்கம் விலை இருபதாயிரத்துக்கும் மேலாக எகிறிய பிறகு, அறுப்புகள் அதிகமாகிவிட்டன.

சில மாதங்களுக்கு முன்பு, திருவெற்றியூரில் பேன்சி கடை நடத்தி வரும் ஒரு அம்மாவிடம், கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை ஒரு திருடன் இழுக்க, அந்த அம்மா திருடனுடன் மல்லுக்கட்ட, கடைசியில் அந்த அம்மாவின் கழுத்தில் உணவுக்குழாயே அறுந்துவிட்டது.  அவனும் நகையுடன் ஓடிவிட்டான்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்,  பெண்கள் கழுத்தில் தங்க செயினை அணியாதீர்கள் என அறிவுரை சொன்னார்.  அவ்வப்பொழுது இப்படி பல இடங்களில், பல வகைகளில் செயின் அறுப்புகள் செய்திகளில் வந்தாலும், பலரும் தங்கத்தை தவிர்க்கிற மாதிரி தெரியவில்லை.

இன்று ஒரு பெண் எல்.ஐ.சி முகவரை சந்தித்து, பாலிசி பணம் தரும் பொழுது, கழுத்தில் இரண்டு செயின்களை கனமாக போட்டிருந்தார்.  அறிவு 6 + 6 - 12 பவுன் தேறும் என சொல்லியது.  அண்ணியிடம் இது பற்றி பேசிய பொழுது, அந்த பெண் காதல் திருமணம் முடித்தவர்.  சொந்தங்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக போட்டிருக்கலாம் என்றார்.  இந்த செண்டிமெண்டல்லாம்  அறுக்கப்போகிற திருடனுக்கு தெரியுமா என்ன?

பந்தாவிற்காக செயினை போட்டு வலம்வருகிறார்கள்.  யாராவது அறுத்தால் மட்டும் “திருடன். திருடன்” என கத்துகிறார்களே!  அந்த இடத்தில் இருந்தால் நீங்கள் திருடனைப் பிடிக்க உதவுவீர்களா?  நான் கண்டிப்பா மாட்டேன். :)

பின்குறிப்பு : ஒரு ஊரில் வங்கியில் பணிபுரியும் அம்மாவிடம் செயின் பறிக்கிறார்கள்.  பின்பு, பித்தளை என தெரியவருகிறது.   ஒரு ஸ்டேட்ஸ்க்கு தங்கம் போல பித்தளையை/போலியை போட்டு திரிபவர்கள், இப்படி பறிபோனால்,  தங்கம் இல்லை என உண்மையை சொல்வார்களா? அல்லது தங்கம் என கதைவிடுவார்களா? :)

1 comment:

Massy spl France. said...

//20 பவுன் என்றால், இன்றைய விலையில் குறைந்த பட்சம் 4 லட்சம்.//
யம்மோவ் 20 பவுனா? இதைத்தான் வம்பை விலை கொடுத்து வாங்குறது என்பதா?
திருட்டு போனால், திருடரை மட்டும் தண்டிக்க கூடாது. கவனக் குறைவால் மற்றும் திருட்டை தூண்டும் வகையில் அணிகலன் அணிந்த குற்றத்திற்காக பொறுப்பாளரையும் தண்டிக்க வேண்டும். பணம் படைத்தவர்களின். இது போன்ற திமிர்தனத்தால் பொதுமக்கள் வரிப்பணத்தில் உழைக்கும் காவல் துறைக்கு வீண் தொந்தரவு மற்றும் செலவுகள் ஏறாளம்.