Monday, December 24, 2007

நீ....மழை....நான்

உன் கன்னத்தில்
கழுத்தில்
இடுப்பில்
முத்து கோர்த்து
விளையாடிய
அந்த மழைக்கு
என் காதலை
யார் சொன்னார்கள்
என்று தெரியாது

உன்னை எங்கெல்லாம்
நனைக்க நினைத்தானோ
அப்படியெல்லாம்
நனைத்தது

உன்னை
எப்படியெல்லாம்
அணைக்க நினைத்தேனோ
அப்படியெல்லாம்
அணைத்தது

எந்த பெண்ணையும்
சட்டென்று
தொட்டு பேசிவிட
மழையின் மனசு
வேண்டும் போலிருக்கிறது

குடைபிடிப்பது
இயற்கைக்கு
எதிரானதென்று
நீ நனைந்து சிலிர்த்த
அழகுதான்
எனக்குச்
சொல்லிக் கொடுத்தது

உன்மீது வழிந்து
இளநீரான
அந்த மழை நீரை
மனசு தளும்பத் தளும்ப
நான் நிரப்பி
வைத்திருக்கிறேன்

அந்த மழையில்
நீ ஒரு தேவதையைப்
போலிருந்தாய்...

மழை -
உன்னைத் தேடித்தான்
பூமிக்கு வந்ததோ என்று
எனக்கு சந்தேகம் வந்தது

********

இப்போதும் வருகிறது
மழை...
என் கன்னத்தில்
கண்ணீரைப் போல் வழியும்
இந்த மழைக்கு
நம் காதல் தோல்வியை
யார் சொன்னார்கள் என்று
எனக்குத் தெரியாது

உன் வாசனைகளையும்
கொலுசு சப்தத்தையும் தேடி
பருவம் தப்பி வந்திருக்கிறது
இந்த மழை

நீ நனைய வேண்டாம்
எங்கிருந்தாலும்
கண்ணாடி ஜ்ன்னலுக்குப்
பின்னாலிருந்த படியாவது
இந்த மழையைப்
பார்த்து கொண்டிரு போதும்

இந்த மழைக்கு நானும்
எனக்கு மழையும்
ஆறுதல் சொல்லிக் கொள்வோம்

- பழனி பாரதி

பின்குறிப்பு : இந்த கவிதையின் முதல் பாகம், படிக்கும் காலத்தில், அத்தனை சந்தோசமாயிருந்தது. இப்பொழுது, இரண்டாம் பாகம் படிக்கும் பொழுது, அத்தனை சோகமாயிருக்கிறது.




3 comments:

Anonymous said...

நல்ல கவிதை. ஆனால் சோகமாக இருக்கிறது.

கலங்காதீர்கள் நொந்தகுமாரா!

- வனிதா

Aruna said...

என்னப்பா நொந்த குமாரா ,
இனிமையான கவிதை சுகமாக வாசித்து கொண்டு இருக்கும்போதே அடடா உடன் தோல்வியா? என்னப்பா நோந்தகுமாரனுக்கு வந்த சோதனை ! சுகத்தை விட சோகம் நன்றாக வருகிறது !
அருணா

butterfly Surya said...

நல்ல கவிதை