Wednesday, December 2, 2009

பொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை - அத்தியாயம் 2


அத்தியாயம் - 1 - படிக்க...

அத்தியாயம் - 2

இரண்டு நாட்களை கடத்துவதற்கு, நிறைய சிரமப்பட்டேன். பல நாட்கள் ஆனது போல இருந்தது. இதனால் சாப்பாடு கூட சரியாக உள்ளே இறங்க வில்லை. (இலக்கியத்தின் மீது இப்படி ஒரு காதலா! என என நீங்கள் என்னை பாராட்டுவது எனக்கு கேட்கிறது!) இன்றைக்கு எப்பாடு பட்டாவது பொன்னியின் செல்வன் -ன் இறுதி பாகத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

இடம் : பொது நூலகம் நேரம் : காலை 10 மணி

நூலகர் சீட்டில் இருந்தார். அப்பாடா! இன்றைக்கு கிடைத்துவிடும் நம்பிக்கை வந்தது.

நூலகரிடம் 30 வயது மதிப்பு கொண்ட ஒருவர் ராஜேஷ்குமார் நாவலைப் பற்றி சிலாகித்து " என்னா ட்விஸ்ட்! என்னா சஸ்பென்ஸ்! சான்ஸே இல்லை சார்! ராஜேஷ்குமார்னா ராஜேஷ்குமார் தான் சார்"

டே! நாலு கழுதை வயசாச்சு! இன்னும் ராஜேஷ்குமார் நாவலிலேயே நங்கூரம் போட்டு உட்கார்ந்திருக்கான் என மனதில் திட்டினேன். நாம பரவாயில்லை. நாலாம் வகுப்பில் சிந்துபாத்தில் தொடங்கி, 7ம் வகுப்பில் அம்புலிமாமா படித்து, 16 வயதில் ராஜேஷ்குமார்-ன் விவேக் துப்பறியும் அறிவை கண்டு வியந்து, பிறகு பட்டுகோட்டை பிரபாகர்-ன் நொந்தகுமாரனில் விழுந்து விழுந்து சிரித்து, பிறகு பாலகுமாரனிடத்தில் தொபுக்கடீர்னு விழுந்து எழ முடியாமல் எழுந்து, சுஜாதாவிடம் 22 வயதில் சிக்கிகொண்டேன். இப்ப கல்கி. எனக்கு நானே முதுகில் தட்டிக்கொடுத்து கொண்டேன்.

ராஜேஷ்குமார் ரசிகரிடம் பேசி அனுப்பி விட்டு, என்னிடம் "என்ன தம்பி?" என்றார்.

பவ்யமாய் "சார்! என் நண்பன் காமராஜர் பல்கலைகழகத்தில் பி.எச்.டி பண்றார். தமிழ் இலக்கியங்களை பற்றி ஆய்வு செய்வதால், சில தமிழ் நாவல்களிலிருந்து சில குறிப்புகள் தேவைப்படுது. அதனால்...!"

"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க!" என நக்கலாய் இடைமறித்தார்.

"அந்த ஆய்வுக்காக(!) பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் தேவைப்படுது. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து கேட்டேன். (பாழாய் போன அரசு விதியை எல்லாம் ஞாபகப்படுத்தாமல்... கவனமாய் தவிர்த்து) உங்க கிட்டே கேட்டு வாங்கிட்டு போகலாம்-னு உதவி நூலகர் சொன்னார்" என்றேன்.

'சரி தம்பி! எடுத்துங்க! லேட் பண்ணாம கொண்டு வந்திருங்க!" என்றார்.

அவருக்கு நன்றி சொல்லி, ஆர்வமாய்.. கனமான புத்தகங்கள் இருக்கும் வரிசையில்... வேகமாக போய் தேடினேன். அருகில் ஒரு பெண் புத்தகம் தேடிக்கொண்டிருந்தார். எதைச்சையாய் என்னை பார்த்தார். எனக்கு தூக்கிவாரி போட்டது. அப்படியே! பொன்னியின் செல்வனில் வருகிற நந்தினி! கொஞ்சம் தலையை சிலிப்பி கொண்டு பார்த்தால்.. நந்தினின் சாயலோடு இருந்தார். நான் அதிர்ச்சியாய் பார்த்ததில் அந்த பெண் ஒரு மாதிரியாய் பார்த்து, அவசரமாய் அடுத்த செல்புக்கு புத்தகம் தேட நகர்ந்தாள்.

கனமான புத்தகங்கள் உள்ள எல்லா இடங்களிலும் தேடினேன். புத்தகத்தை காணவில்லை. முகம் வாடிபோனது. நூலகர் புத்தகம் வெளியே போன விசயம் தெரிந்து தான், அனுமதிச்சுட்டாரோ! என சந்தேகம் வந்தது.

மீண்டும் நூலகரிடம் இல்லாததை வந்து சோகமாய் சொன்னேன். லெட்ஜரில் தேடி..

"ஆமா! வெளியே போயிருக்கு. ஒரு வாரம் கழிச்சு வாங்களேன்! என்றார் கூலாய். (என் அவஸ்தை புரியாமல்)

இதற்கிடையில் வெளியூரில் வேலை கிடைத்தது. இனி அடிக்கடி புத்தகம் வந்துவிட்டதா என பார்க்க முடியாதே என வருந்தினேன். இலக்கியத்தில் ஆர்வமாய் இருக்கும் நண்பன் ஒருவனிடம் என் அவஸ்தையை விளக்கி... எடுத்து வைக்க சொல்லி... டாட்டா காட்டி ஊருக்கு புறப்பட்டேன்.

அடுத்த வந்த இரவுகளில்... ஆழ்வார்க்கடியான் தன்னந்தனியனாக காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தான். வானதி, குந்தவை பிராட்டியார் கனவில் வந்து போனார்கள்.

தொடரும்...

இணைப்பு :

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும்!

3 comments:

Anonymous said...

:)

sathya said...

பொன்னியின் செல்வன் ஏற்கன‌வே படித்துயிருக்கிறேன் உங்கள் பதிவை படித்தவுடன் மிண்டும் படிக்க வேண்டும் என தோன்றுகிறது.

Anonymous said...

sir,
go to (www.chennainetwork.com) the E books