Monday, April 25, 2011

மனிதர்கள் 3 - சுப்பிரமணி!


முதல் மாடி வீட்டிற்கு குடிபெயர்ந்த பொழுது, எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். தெருக்களில் புழுதிப்பறக்க விளையாடி, களைத்து வீடு வந்து சேர இரவு 8.30 மணிக்கு மேல் ஆகிவிடும். எங்களுடைய பெரிய குடும்பத்திற்கு சமைத்து, சாப்பிடும் பொழுது இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிடும்.

அந்த சமயத்தில், ஒரு இரஞ்சும் குரல்

"அம்மா! தாயே! சோறு போடுங்க தாயே!"
"அம்மா! தாயே! சோறு போடுங்க தாயே!"

என சரியாக இரண்டு முறை காற்றில் கலந்து, ஒரு வித இராகத்தோடு கேட்கும். ஒருமாதிரி மனதை பிசையும். பிறகு, குரல் சன்னமாய் குறைந்து கொண்டே பிறகு காணாமல் போகும்.

அவர் சுப்பிரமணி. இராப்பிச்சைக்காரர்.

அம்மாவிடம் 'யாரம்மா அது? அவருக்கு வீடெல்லாம் கிடையாதா? அம்மா, அப்பா எல்லாம் கிடையாதா? யாரும் சாப்பாடு கொடுக்கலைன்னா அவர் பட்டினியா கிடப்பாரா? என கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டு துளைத்துவிடுவேன்.

சுப்பிரமணி எப்படி இருப்பார்? பல நாள்களுக்கு தெரியவில்லை. அந்த வயதில், இரவில் தனியாக படியிறங்கி பார்க்கும் தைரியம் கிடையாது. பேய் பயம் தான். அதனால், கற்பனையில் நானாக ஒரு உருவத்தை உருவாக்கி கொண்டேன்.ஒரு நாள் பகலில் பார்த்துவிட்டேன். அழுக்கான, கந்தலான உடை. சுருட்டை முடி. வயது 35 ஐ தாண்டாது. என் வயதையொத்த பிள்ளைகள் 'சுப்பிரமணி, சுப்பிரமணி என கேலி செய்து கொண்டிருந்தார்கள். பார்க்க பரிதாபமாய் இருந்தார். இது அவருடைய பெயரா? அல்லது மக்களே வைத்தப்பெயரா? என சந்தேகம் வந்தது.

அதன்பின், ஒவ்வொரு நாளும் "அம்மா! தாயே!" என துவங்கும் பொழுது, சுப்பிரமணியின் பரிதாப தோற்றம் மனதில் வந்து போகும். இரண்டு ஆண்டுகள் கழித்து, வீடு காலி செய்த பிறகும், சில இரவுகளில் இரவு 10 மணி அளவில், சரியாக சாப்பிடும் பொழுது அந்த இரஞ்சும் குரல் மனதில் ஒலிக்கும். சுப்பிரமணிக்கு இன்றைக்கு சாப்பாடு கிடைக்க வேண்டும் என மனதில் வேண்டிக்கொள்வேன்.

இன்றைக்கும் சிக்னலில், தேநீர் கடைகளில், யாராவது குரலெடுத்து பிச்சைக் கேட்டால், கேட்பவரின் முகம் மறைந்து சுப்பிரமணியின் முகமாய் தெரியும். பழைய தெருபக்கம் போனால், அக்கம் பக்கம் வீடுகளில் பழகியவர்களின் முகம் தேடுவதை விட, சுப்பிரமணியைத் தான் கண்கள் தேடுகின்றன.

சக மனிதன் தன் வயிற்றுப் பசிக்கு கையேந்தி நிற்கும் பொழுது, மனித இனத்தின் சுயமரியாதைக்கே இழுக்கு என எப்படி தோன்றாமல் போனது? பசி, தூக்கம் போல பிச்சைகாரர்களும் இயற்கையின் அங்கமாக ஏற்றுக்கொண்டு விட்டோம். யாராவது பிச்சைக்கேட்டால், ஒரு மனிதன் என்ற அளவில், அவமானத்திலும், வெட்கத்திலும் குன்றி போய்விடுகிறேன்.

மனித சமூகம் நாகரிகமடைந்து பல படிகளை கடந்துவிட்டது. இந்தியா இன்னும் பத்தாண்டுகளில் வல்லராக போகிறது என யாராவது பேசினால்; செய்திகளைப் பார்த்தால், சுப்பிரமணி நக்கலாய் சிரிப்பது போல மனதில் தோன்றி மறையும்.

3 comments:

Anonymous said...

:(

வலிப்போக்கன் said...

அய்யா, இப்பத்தான் வந்திருக்கேன்.எந்த பாவமும் செய்யததில்ல. யாருக்கும் ஒன்சைடா இருநததில்லங்கய்யா!என்ன மட்டும் விட்டுருங்கய்யா!

வலிப்போக்கன் said...

அய்யா, இப்பத்தான் வந்திருக்கேன்.எந்த பாவமும் செய்யததில்ல. யாருக்கும் ஒன்சைடா இருநததில்லங்கய்யா!என்ன மட்டும் விட்டுருங்கய்யா!