Wednesday, November 30, 2011

மனிதர்கள் 13 - சமீதாம்மா!


சமையலறையில் திடீரென நுழைந்ததும் குட்டி, குட்டி பூச்சிகள் அங்குமிங்கும் சிதறி ஓடின. நாங்கள் சமைத்து பல மாதங்களானதற்கு அந்த பூச்சிகள் சாட்சிகள். ஒரு காலத்தில், சமையலில் எத்தனை விதமான பரிசோதனை முயற்சிகள்; சிலவற்றில் பெரிய வெற்றி; பலவற்றில் தோல்வி என்றாலும், சாப்பிடமுடியாத முடியாத அளவிற்கு, எதுவும் தோற்று போனதில்லை.

அறையில் உள்ள அனைவரும் அலுவலக, சொந்த வேலை பளுவில், பிஸியாகிவிட சமைப்பதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. குறைந்தபட்சம் சுடுதண்ணீர் கூட வைப்பதில்லை!

****
மூன்று நேரங்களிலும் ஹோட்டலிலேயே சாப்பிட்டதால், இரண்டுவிதமான சிக்கலில் சிக்கினோம். உடல் நலம் கெட்டது; பணம் நிறைய செலவானது. வேறுவழியில்லை. பெருநகரத்தில் பல்சக்கரத்தில் சிக்கி, ஓடிக்கொண்டே இருந்தோம்.

****

ஒருநாள் திடீரென சமைக்க ஆள் கிடைக்குமா என தேடிப்பார்க்கலாமே என மண்டையில் பல்பு எரிந்தது. . எங்கள் அறையில் டைபாய்டு-ல் உடல் நலமில்லாமல், பஞ்சத்தில் அடிபட்டவனை போல இருந்தவனை (அப்பத்தான் பரிதாபப்பட்டு உடனே உதவுவார்கள்) அனுப்பி, பக்கத்து வீடுகளில், கடைகளில் "சமைக்க ஆள் இருந்தால் சொல்லுங்கள்" என கல்லெறிந்து வைத்தோம். மூன்று மாதங்களாகியும் எந்த நல்ல செய்தியும் காதுக்கு வரவில்லை.

****

திடீரென ஒருநாள் விடிகாலையில், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா வந்தார். பக்கத்து கடைகாரர் சொல்லி அனுப்பியதாக கூறினார். காலை, மாலை இருவேளையும் வரமுடியுமா என கேட்டோம். குடும்ப சூழ்நிலையால், ஒரு நேரம் மட்டும் வருவதாக கூறினார். வேறுவழியேயில்லை. ஏற்றுக்கொண்டோம்.

****

மீண்டும் சமையலறைக்கு உயிர் வந்தது. ஒரு கொழம்பு. ஒரு பொரியல்; ஒரு கூட்டு என வைத்துவிடுவார். அதையே, இரவுவரை வைத்துக்கொண்டு சமாளித்தோம்.

சமீதாம்மா என்ன செய்தாலும் சுவையாக செய்தார். சைவம் அசத்தினார். அசைவம் அதைவிட அசத்தினார். ரசம் மட்டும் விதிவிலக்கு. வாரம் இருமுறை கறி, மீன் என எடுத்து தந்தோம். ஞாயிறு விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என சொன்னால் கூட, எனக்கு தேவையான பொழுது எடுத்துக்கொள்கிறேன் என ஏழுநாளும் வந்து சமைத்தார்.

****

இப்படியாக, பலவீனமாக இருந்தவர்கள் எல்லாம், நன்றாக தேறினார்கள். இருவருக்கு ஹிப் சைஸ் கூடி பேண்ட் டைட்டாக மாறியது.

கடந்த மூன்று மாதங்களில் சமீதாம்மாவிடம் இயல்பாக பேசும் வழக்கம் வந்திருந்தது.

"என்னம்மா உங்க பேரு ஸ்டைலா இருக்கே?! என்றால், "சமீதான்றது என்னுடைய பொண்ணு பேரு தம்பி. அம்மா என்பதால் சமீதாம்மா என கூப்பிடுகிறார்கள்" என்றார்.

****

"எங்களுக்கே இவ்வளவு அருமையா சமைக்கிறீர்களே! உங்க பிள்ளைகளுக்கு இன்னும் நல்லா சமைப்பீங்களே! என்றேன் சிரித்துக்கொண்டே!

"அதெல்லாம் இல்லை தம்பி!" என்றார் பொதுவாய்!

****

"உங்களுக்கு இரண்டு பசங்க! தள்ளு வண்டில பாத்திரம் விக்கிறதா சொல்லிறீங்க! ஒரு பொண்ணையும் பாதுகாப்பா தம்பிக்கே கட்டிக்கொடுத்திட்டிங்க! அப்புறம் என்ன பிரச்சனை? நீங்கள் வேலைக்கு வருகிறீர்கள்? " என்றேன்.

அந்த கேள்வி அவரை அசைத்தது.

"என் புருசன் பொறுப்பில்லாதவர் தம்பி. அவர் சம்பாதிப்பதை அவரே குடின்னு தொலைச்சுடுறார். சம்பாதிச்சதுல பேரப்பிள்ளைக்கு ஒரு ரூபாய்க்கு மிட்டாய் கொடுத்தா பெரிய விசயம் தம்பி. ஒரு சொந்த வீடு வேணும்ற கனவுல, வட்டிக்கு பணத்தை வாங்கி, ஒரு இடத்தை வாங்கினோம். வட்டியோட, அந்த கடனை இந்த மூணு வருசத்துல, வாயைக்கட்டி, வயித்தக்கட்டி முக்கால்வாசியை அடைச்சிருக்கோம்.

இப்ப அந்த இடத்துல ஒரு வீட்டைக் கட்டி, குடி போகலாம்ற எண்ணத்திலே பிள்ளைக கஷ்டபடுதுக தம்பி. மூணு வருசமா ரேசன் கடை அரிசியை வாங்கித்தான் சமைக்கிறோம். தினம் புளிக் (காரக்) குழம்பு தான். வேற குழம்பு வைச்சா, வாய்க்கு விளங்காது! நல்ல சோறு சாப்பிட்டு, மூணு வருசம் ஆச்சு! வைராக்கியத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும், நானும் சித்தாள் வேலைக்கு போயிட்டிருந்தேன். இப்ப உடம்பு தாங்கல! இப்படி சமைக்கிற வேலைக்கு போக வேண்டாம்னு என் பசங்க சொல்றாங்க! நாள் முழுவதும், வெயில், மழையில பிள்ளைக சுற்றி திரியும் பொழுது, வீட்டுல சும்மா உட்கார மனசு கேக்கல! என்றார் கண்ணீருடன்!

அவ்வபொழுது இன்னைக்கு உங்க வீட்டுல என்ன கொழம்பு என கேட்கிற பொழுது, எப்பொழுதுமே மாறாமல் 'காரக்குழம்பு' என சொன்னது நினைவுக்கு வந்தது.

இங்கு கறி, மீனு சமைச்சிட்டு, பிள்ளைகளுக்கு காரக்குழம்பு தினமும் வைக்கிற பொழுது, மனம் எவ்வளவு வருந்தியிருப்பார் என எண்ணமும் வந்தது.

****

அதற்கு பிறகு, இரண்டு மாதம் ஓடிவிட்டது. நேற்று சமைத்து முடித்துவிட்டு, "திரும்பவும் கடனை வாங்கி, இப்ப வீட்டை கட்டலாம்னு முடிவு செய்ஞ்சு, கடனுக்கு இவ்வளவு நாள் அலைஞ்சோம். இப்ப கடன் கிடைச்சிருச்சு. ஆளோட ஆளா நானும் ஒரு சித்தாளா வீட்டில் வேலை செய்யலாம்னு இருக்கேன். யார் யாருக்கே இளவயசுலே கல், மண் சுமந்தேன்.. இப்ப நம்ம வீட்டுக்கு சந்தோசமா சுமக்கப்போறேன் தம்பி! நீங்க தான் என்ன செய்யப்போறீங்கன்னு ஒரே கவலையா இருக்கு!" என்றார்.

"பரவாயில்லைங்கம்மா! நாங்க சிரமப்படுவோம் தான். சமாளிச்சுக்குவோம். நீங்க வீட்டை நல்லாபடியா கட்டுங்க! எங்க அம்மா போல உங்களை நினைக்கிறோம். வீட்டைக் கட்டினதும் எங்களுக்கு சொல்லுங்க! பொதுவா, புதுவீடு விசேசத்துக்கு நாங்க போறதில்ல! ஆனால், உங்க வீட்டு விசேஷத்துக்கு கண்டிப்பா வர்றோம்!" என்றேன்.

கண்களில் எங்களைப் பற்றிய கவலையிலேயே, விடைபெற்று போனார்.

****
இனி, எப்பொழுது காரக்குழம்பு சாப்பிட்டாலும், சமீதாம்மா நினைவுக்கு வருவார்.

நேற்று மீண்டும் சமையலறையில் நுழைந்தேன். சின்ன சின்ன பூச்சிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. எங்களுக்கு சமைத்து, நோயிலிருந்து காத்த‌ சமீதாம்மா போல இன்னொரு தேவதைக்காக காத்திருக்கிறோம்.

****

6 comments:

Anonymous said...

Nice

பால்வெளி said...

நன்று. இன்னும் தொடரட்டும்.

Thoduvanam said...

ரொம்ப நெருடுதுங்க மனசை ..

Parthiban said...

Life is so unfair...

Parthiban said...

Life!!!!!!!!!!!!!! most complicated puzzle ever..

Parthiban said...

Life is so unfair...