Tuesday, January 24, 2012

புகைப்படக்காரனின் நொந்த குறிப்புகள்!


இரண்டு நண்பர்கள் புகைப்படக்காரர்கள். ஒருவர் சொந்த ஊர்காரர். மற்றொருவர் சென்னைவாசி. அவ்வப்பொழுது, தொழிலில் உள்ள சிரமங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். நானும் சில சமயங்களில் வாயைக் கிளறுவதுண்டு. ஏனெனில் நமது திருமணங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் சிக்கலானவை. நமது மனிதர்கள் சுவாரசியமானவர்கள். விசேஷ வீடுகளிலோ இன்னும் சுவாரசியமானவர்கள்.

****

உசிலம்பட்டி பகுதியில் ஒருமுறை மொய்விருந்து நடத்தினார்கள். கூட்டம் ஜே.ஜே. என களைகட்டியது. வசூல் மழைதான். வாழ்நாளில் நான் அதிகப்பணத்தை பார்த்தது அன்றுதான். வசூல் ஒரு கோடியைத் தாண்டியது!

****

ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு விசயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிலர் செய்முறைகளுக்கு; சிலர் உண்வுக்கு; சிலர் உபசரிப்பதற்கு; சிலர் பணத்திற்கு; பகட்டிற்கு! ஆனால், எல்லா வசதியான வீடுகளிலும் ஒன்றை மட்டும் வலியுறுத்துவார்கள். வரிசையாக வைத்திருக்கிற சீர் வரிசையை ஒன்றுவிடாமல் எடுத்துவிடுங்கள் என ஒன்றுக்கு நான்குமுறை வலியுறுத்துவார்கள்.

****

ஆந்திராவை ஒட்டி, தமிழ்நாட்டு எல்லை சிறுநகரம். அந்த குறிப்பிட்ட சாதியில், மணப்பெண்ணை தாய்மாமன் கூடையில் வைத்து சுமந்து வரவேண்டும் என்பது சம்பிரதாயம். அந்த மணப்பெண்ணோ சரியான குண்டு. தாய்மாமன் சம்பிராதயத்துக்கு தூக்கி இறக்குவதற்குள், வேர்த்து, விறுவிறுத்து போய்விட்டார்.

****

மூன்று நாள் திருமணம் நடத்துகிறவர்களும் உண்டு. வரிசையாக பல சடங்குகள் செய்து, நம்மை கிறுகிறுக்க வைத்துவிடுவார்கள். கொஞ்சம் சோர்ந்து, எதையாவது ஒரு சடங்கை எடுக்காமல் விட்டுவிட்டால் "இருப்பதிலேயே அதுதான் முக்கியமான சடங்கு! அதை எடுக்காமல் விட்டுவிட்டீர்களே!" என கோபித்துக்கொள்வார்கள். கடுப்பாயிரும் நமக்கு. இப்பொழுதெல்லாம் அழைத்தாலும் தவிர்த்துவிடுவதுண்டு.

****

சென்னையிலிருந்து அருகிலுள்ள பிற மாவட்டங்களிலுள்ள சிறு நகரங்களுக்கு போனால், நன்றாக மதிப்பார்கள். கவனிப்பார்கள். தலைநகரம் என்பது முக்கிய காரணம். இன்னுமொரு காரணம். அவர்களிடம் ஒரு லட்சம் வரை ஏஜென்ஸி பில் போட்டிருப்பார்கள். அதில் சோகம் என்னவென்றால் நிகழ்ச்சியை எடுக்கிற எங்களுக்கு கொடுப்பது சொற்பபணம் தான் தருவார்கள்.

****

பெரும்பாலும் திருமணம்; கிரகப்பிரவேசம் என விசேஷ வீடுகளுக்கு தான் போகிறோம். கறிவடை மூக்கை துளைக்கும். சாப்பாடு வாசம் பசியை தூண்டும். பல சமயங்களில் ஒப்புக்கு கூட சாப்பிட சொல்லமாட்டார்கள். வேலை நிலைமையில் நாமாக நகரவும் முடியாது எரிச்சல் பொங்கிவரும். பொண்ணு மாப்பிள்ளையோடு நாமும் சாப்பிட அமர்ந்தால், நமக்கும் சில நல்ல ஐயிட்டங்கள் கிடைக்கும். பல சமயங்களில் ரசம் மட்டுமே மிஞ்சும்.

****

7.30க்கு திருமணம் இருக்கும். நம்மிடம் 6 மணிக்கு கல்யாணம். சில சடங்குகள் செய்வோம். 4 மணிக்கே வந்துவிடுங்கள் என்பார்கள். போய்பார்த்தால், நாங்கள் தான் அவர்களை தூக்கதிலிருந்து எழுப்புவோம்.

கமுதி என்பார்கள். பார்த்தால், அங்கிருந்து லொட லொட பேருந்தில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேர பயணம் இருக்கும். இப்பொழுதெல்லாம் சரியாக எந்த ஊர் என கேட்டுவிட்டு தான் கிளம்புகிறோம்.

*****

ஒருமுறை திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்தில், சண்டை வந்து இருவீட்டாருக்கும் கைகலப்பாகிவிட்டது. இரண்டுநாள் கழித்து, எங்களை ஏற்பாடு செய்திருந்த மாப்பிள்ளை வீட்டார் அவசரமாய் அழைத்து, பணத்தை செட்டில் செய்து, எல்லா பிலிமையும் வாங்கி, பொட்ரோல் ஊத்தி கொளுத்தினர். விசாரித்தால், விவாகத்து வாங்க முடிவெடுத்திருக்கிறார்களாம்.

****

இருவருமே நல்ல திறமைக்காரர்கள். ஆல்பமோ, டிவிடியோ நல்ல தொழில் நுட்பத்துடன், நேர்த்தியாக மிளிர வைப்பவர்கள். பலவற்றை நானே பார்த்திருக்கிறேன். அவர்களுடைய திருமண ஆல்பத்தை, டிவிடியை வாங்கிப்பார்த்தால், கற்றுக்குட்டித்தனமாய் இருந்தது. நம்ம கல்யாணம் காதல் கல்யாணம். கலட்டா கல்யாணம். அந்த களேபரத்தில் போட்டோ மேலே எங்க கவனம் வைக்கமுடிந்தது? நம்ம கத்துக்குட்டி உதவியாளர் எடுத்தது என்கிறார்கள்.

****

பேசிய பணம் எப்பொழுதும் 75% எந்தவித பிரச்சனையில்லாமல் வசூலாகிவிடுதுண்டு. 25% கொஞ்சம் இழுத்து தருவார்கள். சினிமாக்காரர்கள் யாராவது ஏற்பாடு செய்தால் தான், பணத்தை வாங்குவது என்பது காளை மாட்டில் பால் கறப்பது போல! தாவு தீர்ந்துவிடும்.

****

திருமணம் முடிந்து சில நாட்கள் கண்டுகொள்ளவேமாட்டார்கள். திடீரென ஒருநாள் அடுத்தடுத்து போன் செய்து, உடனே வேண்டும் என அடம்பிடிப்பார்கள். கோபித்துக்கொள்வார்கள். வேலைக்கு லீவு போட்டு வந்து, உட்கார்ந்திருந்து வாங்கிவிட்டு தான் விடுவார்கள்.

****

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

நொந்த விசயமாக இருக்கின்றது

Anonymous said...

Nice.

- Satya