Thursday, August 16, 2012

இன்சூரன்ஸும் தொல்லை தரும் போலீசும்!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

அன்றிரவு இரவு 12.30 மணி.  ஒரு சாவு வீட்டுக்கு நண்பர்களுடன் சுமோ காரில் வெளியூர் போய்விட்டு திரும்பும் பொழுது, கோயம்பேட்டில் இறக்கிவிட்டார்கள்.  எனது பைக்கை எடுத்து வீட்டுக்கு போகும் வழியில் போலீசு நிறுத்தியது.  குடித்திருக்கிறேனா என பக்கத்தில் வந்து மோந்து பார்த்தார்கள்.  இல்லை.  வண்டி ஆர்சி, ஓட்டுநர் உரிமம் சரியாக இருந்தது.  இன்சூரன்ஸ் தேதி முடிந்திருந்தது.  நான்கு நாட்களுக்கு முன்பு சரியான தேதியில் புதுப்பித்திருந்தேன். ஒரு பிரதி எடுத்து உள்ளே வைக்க மறந்துவிட்டேன்.

உடனே இன்சூரன்ஸ் வேண்டும் என அடம்பிடித்தனர்.  இரவிலோ, பகலிலோ சோதனை செய்யும் சட்ட ஒழுங்கு போலீசாருக்கு ஆர்.சியும், ஓட்டுநர் உரிமமும் போதுமே! இவர்கள் எதுக்கு இன்சூரன்ஸ் கேட்டு தொல்லை செய்கிறார்கள் என என் சிறுமூளைக்கு தோன்றியது.  லஞ்சம் எதிர்பார்த்தனர்.  உடனே என் ஹெல்மெட்டை பிடி என அவர்கள் கையில் திணித்து, வீட்டிற்கு போய் எடுத்து வருகிறேன் என சொல்லி, எடுத்து வந்து காட்டிவிட்டு ஹெல்மெட்டை வாங்கி சென்றேன்.

இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்த சந்தேகம் குறித்து நண்பர் ஒருவரிடம் பேசியபொழுது, அவர் ஒரு அனுபவத்தை சொன்னார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு காலை 11 மணியளவில், அம்பத்தூர் சிக்னல் அருகே, இதே போல சட்ட ஒழுங்கு போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர்.  ஒருவரிடம் என்னை போலவே இன்சூரன்ஸ் இல்லை.  'வண்டியை ஓரம்கட்டு' என ஒருமையில் சொன்னதும், அவருக்கு கோபம் வநதுவிட்டது.  "நீங்க ஏன் இன்சூரன்ஸ் எல்லாம் செக் பண்றீங்க! அது உங்க வேலை இல்லையே!  ஏன் மரியாதை இல்லாம பேசுறீங்க!  நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர்!" என சொல்லி, "மரியாதை இல்லாம பேசியதற்கு மன்னிப்பு கேள்!' என சொல்லி, தன் பைக்கை சாலையை மறித்து நிறுத்திவிட்டார். அதற்கு பிறகு அந்த திமிர் போலீசார் காட்டிய பவ்யமும், கெஞ்சலும் இருக்கிறதே! அட!அட!  "வண்டியை எடுங்க சார்! பேசிக்கலாம்!" என்றனர்.  அவர் உறுதியாக நின்றுவிட்டார். 15 நிமிடம் இப்படியே போனது. பிறகு ஸ்டேசன் போய் பேசிக்கலாம் என சமாதானத்திற்கு வந்தனர்.

இப்பவும் எனக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை! இப்பொழுது முன்பை போல இல்லை! நாலு தெருவுக்கு இரண்டு போலீசார் சோதனையில் தொடர்ச்சியாய் சோதனை செய்துகொண்டு தான் இருக்கின்றனர்.  யாராவது தீர்த்து வையுங்களேன்!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

பின்குறிப்பு : இந்த பதிவில் இன்சூரன்ஸ் தேவையா இல்லையா என்ற விவாதத்தை எழுப்பவில்லை நான்! அது மிக அவசியம்.  ஒருவர் இந்த புரிதலோடு பின்னூட்டமிட்டிருந்தார். அதனால், இந்த விளக்கம்.

அதை போக்குவரத்து போலீசார் சோதனை செய்யட்டும். சட்ட ஒழுங்கு போலீசார் சோதனை செய்வது ஏன்? என்பது தான் எனது கேள்வி.

5 comments:

வவ்வால் said...

குமரன்,

//இப்பவும் எனக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை! இப்பொழுது முன்பை போல இல்லை! நாலு தெருவுக்கு இரண்டு போலீசார் சோதனையில் தொடர்ச்சியாய் சோதனை செய்துகொண்டு தான் இருக்கின்றனர். யாராவது தீர்த்து வையுங்களேன்!//

அவங்க தீவிரவாதிய புடிக்கிறாங்களாம், நீங்க ஏன் தீவிரவாதி உலாத்துற நேரத்தில உலாவுறிக :-))

இன்சூரன்ஸ் காட்டினா தான் வாகனம் ஓடும்னு சொன்னால் ஒரு கெவர்ண்மெண்ட் வண்டிக்கூட ரோட்டில ஓடாது ஏன்னா எதுக்குமே இன்சூரன்ஸ் எடுப்பதில்லை.

பல அரசு பேருந்துகள் இன்சூரன்ஸ் இல்லாமல் விபத்தில் சிக்கி நஷ்ட ஈடுக்கொடுக்காமல் கோர்டால் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

நம்மை சட்டப்படி கேள்விக்கேட்டு மடக்குறாங்களாம், போலீஸ் செய்ற காமெடிக்கு அளவே இல்லை. சமீபத்தில் கார் ஹெட் லைட்டில் கருப்பு புள்ளி வைக்கணும் என நின்றார்கள், சார் இப்போ வரும் காருக்கு எல்லாம் வைக்க வேண்டாம் ஹெட் லைட்டில் டிண்ட்டெட் செய்து விடுகிறார்கள் என்றால் அதெல்லாம் முடியாது என பிடிவாதம் பிடிக்கிறார்கள்.

அம்புட்டு தான் போலீசின் பொது அறிவு :-))

SathyaPriyan said...

வண்டிக்கு இன்ஷ்யூரன்ஸ் அவசியம் தேவை. நான் வண்டி ஓட்டி உங்கள் வண்டியை இடித்து விட்டால் உங்களுக்கு தானே நஷ்டம். உங்கள் வண்டியை சரி செய்ய ஆகும் பணத்தை நான் தானே கொடுக்க வேண்டும். எனக்கு கொடுக்க வசதி இல்லாத பொழுது எனக்கு பதிலாக எனது இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் பணத்தை கொடுக்கும்.

எனக்கு இன்ஷ்யூரன்ஸ் தேவை இல்லை. என்னால் அடுத்தவர்களின் உடைமைக்கோ உயிருக்கோ பாதிப்பு வந்தால் அதற்கான நஷ்ட ஈட்டை கொடுக்கும் வசதி எனக்கு இருக்கிறது என்று நீங்கள் முறையாக ற்Tஓ அலுவலகத்தில் முறையிட்டு அவர்களின் அனுமதி பெற்றால் இன்ஷ்யூரன்ஸ் இல்லாமலே வண்டி ஓட்டலாம்.

இது அமெரிக்கா வில் கடை பிடிக்கப்படும் விதி. இந்தியாவில் அதிக மாறுதல் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

குமரன் said...

//சமீபத்தில் கார் ஹெட் லைட்டில் கருப்பு புள்ளி வைக்கணும் என நின்றார்கள், சார் இப்போ வரும் காருக்கு எல்லாம் வைக்க வேண்டாம் ஹெட் லைட்டில் டிண்ட்டெட் செய்து விடுகிறார்கள் என்றால் அதெல்லாம் முடியாது என பிடிவாதம் பிடிக்கிறார்கள்.//

அம்புட்டு தான் போலீசின் பொது அறிவு :-))

நன்றாக சொன்னீர்கள் வவ்வால்! நன்றி.

குமரன் said...

சத்யபிரியன்,

இந்த பதிவின் நோக்கம் இன்சூரன்ஸ் வேண்டுமா! வேண்டாமா! என்பது இல்லை. இன்சூரன்ஸ் அவசியம் என்பதே என் கருத்தும்!

போக்குவரத்து போலீசார் அதை சோதிப்பது சரி! சட்ட ஒழுங்கு போலீசார் அதை பரிசோதிப்பது சரியா! என்பது தான் நமது கேள்வி!

"ராஜா" said...

எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது , இவர்கள் ஏன் வண்டியின் இன்சூரன்ஸ் கேட்கிறார்கள்? ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா என்று பரிசோதிக்கும் உரிமை இவர்களுக்கு உண்மையிலேயே இருக்கிறதா? மேலும் யாரை வேண்டுமானாலும் ஒருமையில் பேசும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது