Wednesday, August 22, 2012

நன்றி சொல்லும் தருணமிது!

இப்பொழுது தான் எழுத துவங்கியது போல இருக்கிறது.  அதற்குள் ஐந்து முழு ஆண்டுகள் ஓடிவிட்டன. நேற்றிரவு  50000 வருகைகளை (ஹிட்ஸ்)   'வலையுலகமும் நொந்தகுமாரனும்'  தொட்டிருக்கிறது. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, எதையோ ஒன்றை தேடும் பொழுது எதைச்சையாய் தமிழ் பிளாக் ஒன்றை வந்தடைந்தேன்.    பல பதிவர்கள் அந்த சமயத்தில் எழுதி குவித்துக்கொண்டு இருந்தார்கள். அதில் பல மொக்கை, ஜல்லி, கும்மிகள்.  நொந்து போய் தான் பின்னூட்டங்களில் கலாய்த்தேன். உலகளாவிய இணையத்தை கூட குட்டிச்சுவராய்  பயன்படுத்துகிறார்களே என வருத்தமாய் இருந்தது.

விமர்சனம் செய்வது மட்டும் சரியில்லை!  எது சரி என்பதை நாமும் எழுதவேண்டும் என நினைத்தேன். ஏற்கனவே டீனேஜ் நாட்களில் கவிதைகள் மாதிரி ஒரு வஸ்துவை எழுதி, பல நண்பர்களை கொடுமை செய்த அனுபவம் இருந்தது.

எதைச்சையாய் ஒரு கடிதம் எழுதியதை பார்த்துவிட்டு, கவிதையை விட, உரையாடல் உணர்வுபூர்வமாக இருக்கிறது.  அதனால், கவிதையை விட்டுவிடு! பாவம் பிழைத்துப்போகட்டும்! கதை, கட்டுரை எழுது என கெஞ்சினார்கள்.

அதனால், தைரியம் வந்து, தத்தி தத்தி நடப்பது போல, எழுத ஆரம்பித்தேன்.  இரண்டு நிபந்தனைகள் எனக்குள் நானே உருவாக்கிகொண்டேன். ஒன்று. உருப்படியாய் எழுத வேண்டும். எந்த சமயத்திலும் மொக்கையாய் எழுதக்கூடாது.

இரண்டாவது, மற்றவர்கள் எழுதிய பதிவுகள் எவ்வளவு அருமை என்றாலும் தளத்தில் பகிரக்கூடாது! காரணம் நான் கொஞ்சம் சேம்பேறியும் கூட! எழுதாமல், படிப்பதில் ஒன்றை பகிர்ந்து விட்டுவிடக்கூடாது அல்லவா!

துவக்கத்தில் ஒரு பதிவுக்கு 15 லிருந்து 20 வருகைகள் இருந்தாலே அதிகம்.  ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு நாளைக்கு 40லிருந்து 50 என வருகைகள் இருந்தது.  எங்கிருந்து நம் தளத்திற்கு வருகை தருகிறார்கள் என்பது இன்றைக்கு வரைக்கும் எனக்கு ஆச்சர்யம் தரும் விசயம் தான்!

****

கடந்த தீபாவளி வாரத்தில், தமிழ்மணம் 'நட்சத்திர பதிவராக' அழைப்பு விடுத்திருந்தது.  அழைத்த பொழுது, சந்தோசத்தைவிட பதட்டம் தான் அதிகம் வந்தது.  மாதம் இரண்டோ அல்லது மூன்றோ எழுதுபவனை ஒரு வாரம், ஏழு இடுகைகள் எழுத சொன்னால்! இருப்பினும் எழுதினேன்.

பழைய, புதிய வாசகர்கள், பதிவர்கள் என எலோரும் உற்சாகப்படுத்தினார்கள்.  அந்த வாரம் மட்டும் கிட்டத்தட்ட 3000 வருகைகள் கூடியிருந்தது.

****
வழக்கமாக வாசகர்கள் வருகை தந்தாலும் எழுதுவதை பற்றி, வாசகர்கள் கருத்தை அறிந்துகொள்ள முடியாததாக இருந்தது.  பின்னூட்டங்கள் அபூர்வம் தான்.  இருப்பினும் தொடர்ச்சியாக வருகை தருவதால் உருப்படியாக எழுதுகிறோம் என மன ஆறுதல் பட்டுக்கொண்டேன்.

****

கடந்த வாரம் முகநூலில் ஒரு ஸ்டேட்ஸ் ஒன்றை போட்டேன். "நம்முடைய பக்கத்திற்கு எத்தனை பேர் வருகிறார்கள் என தெரிந்து கொள்ளமுடியுமா? யாருமே வராத கடையில் ஏன் சின்சியராக டீ ஆற்றவேண்டும்? மூடிடலாம் என நினைக்கிறேன்!" முன்பு எழுதிக்கொண்டிருந்த பல பதிவர்களை காணவில்லை.  நிறைய புதிய பதிவர்கள் எழுத வந்திருக்கிறார்கள்.

அதனால் வருகை தந்த, வாசித்த, விமர்சனம் செய்த, என்னை தொடர்கிற (Followers) அனைவருக்கும் நன்றி இந்த நாளில் நன்றி தெரிவித்துகொள்கிறேன். வருங்காலத்திலும் இப்பொழுது எழுதுவதை விட உருப்படியாய் எழுத முயற்சிக்கிறேன் என உறுதிகூறுகிறேன்.

மீண்டும் நன்றிகளுடன்,

குமரன்.

****

7 comments:

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள்

வே.நடனசபாபதி said...

தொடர்ந்து சாதனை புரிய வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

குமரன் said...

வாழ்த்துக்களை தெரிவித்த கோவி. கண்ணன், நடன சபாபதி, திண்டுக்கல் பாலன் ‍ அனைவருக்கும் எனது நன்றிகள்.

ஹாலிவுட்ரசிகன் said...

வாழ்த்துக்கள் நண்பா ... இனி நொந்து போக வேண்டிய அவசியமில்லை. :-)

குமரன் said...

ஹாலிவுட் ரசிகன்,

10 லட்சம் ஹிட்ஸ் வந்தாலும், சில பதிவர்களின் எழுத்தை படித்தால், நொந்து போவது இயல்பாக நடக்கும்.

வாழ்த்துகளுக்கும், ஆறுதல்களுக்கும் நன்றி.

Anonymous said...

வாழ்த்துக்கள் சகோ. தொடர்க நும்பணி !!!