Friday, December 21, 2012

'மிஸ்ஸியம்மா'வின் நினைவலைகளில்!

எப்பொழுதும் பழைய படங்களை சில நிமிடங்கள் பார்த்து, அடுத்த சானலுக்கு நகர்ந்து விடுவது வழக்கம்.  அப்படி இந்த படத்தை எளிதாய் கடந்து செல்ல முடியவில்லை. 

****
கதை எனப் பார்த்தால்... ஒரு கிராமத்தில் ஜமீன்தார் திருவிழாவில் சிறுவயதில் காணாமல் போன தன் மகளின் நினைவில் ஒரு துவக்கப்பள்ளி நடத்துகிறார். அந்த பள்ளிக்கு தம்பதி சகிதமாக ஆசிரியர்கள் இருந்தால் முன்னுரிமை என விளம்பரம் தருகிறார்.

நாயகனும், நாயகியும் நகரத்தில் பொருளாதார சிக்கலில் இருக்கிறார்கள்.  ஒரு அதிகாரியின் பெண்ணுக்கு வீட்டு டியூசன் எடுக்க போன இடத்தில் இருவரும் பழக்கமாகிறார்கள். அவரும் வேறு ஊர் மாற்றலாகி போக, கடும் நெருக்கடியில் மாட்டிக்கொள்கிறார்கள். நாயகிக்கோ கடன்காரன் தொல்லை வேறு.  அதனால், நாயகன் மேற்கண்ட விளம்பரம் பார்த்து, இருவரும் தம்பதியாக சிறிது காலத்திற்கு நடிக்கலாம், பிறகு பிரிந்துவிடலாம் என ஏற்க வைக்கிறார்.  இதில் நாயகன் (ஜெமினி) இந்து.  நாயகி (சாவித்திரி) கிறிஸ்து.

இருவரும் ஜமீந்தார் பள்ளியில் பணியில் சேர்கிறார்கள்.  நாயகனுக்கும், நாயகிக்கும் ஏற்படுகிற காதலும், ஊடலும், நகைச்சுவையும் கலந்து கலகலப்பான கதை நகருகிறது. இறுதியில் ஜமீந்தாரின் காணாமல் போன பெண் தான் நாயகி என கண்டுப்பிடிக்கிறார்கள். இறுதியில் சுபம்.

****
1955ல் வந்த படம் என்றாலும் படத்தில் அந்த கால படங்களுக்கான மெதுவாய் நகரும் தன்மை இல்லை.  படம் முழுவதும் கிண்டலும், நகைச்சுவையும் நிரம்பி ததும்புகிற பாடம்.  ஜெமினி, சாவித்திரி இருவருக்கும் உள்ள காதலும், ஊடலும் சுவாரசியம். இந்த படத்தை சென்னையில் பார்த்த ஒரு கர்ப்பிணிப் பெண், சிரித்து, சிரித்தே திரையரங்கில் குழந்தையை பெற்று இருக்கிறார்.

படத்தில் ஜமீந்தாரின் இளைய மகளுக்கு நாயகன் பாட்டுச் சொல்லித்தர, நாயகி பொறாமையில் ஜமீந்தாரின் மருமகனான தங்கவேலுக்கு பாட்டுச் சொல்லித்தர, அவரும் கீச்சு குரலில் இழுத்து இழுத்துப் பாடுவது செம கலகலப்பு.  இன்றைக்கு உள்ள பெரும்பாலான படங்களில் உள்ள நகைச்சுவை சக மனிதர்களை இழிவுப்படுத்துபவை. படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

'பிருந்தாவனும் நந்தகுமாரனும்', 'வாராயோ வெண்ணிலாவே"  அனைத்து பாடல்களும் கேட்க இனிமையானவை.  மனோகரா, இருவர் உள்ளம் படத்தை இயக்கிய எல்.வி. பிரசாத் தான் இந்த படத்தையும் இயக்கினார். கதை - சக்ரபாணி.

படத்தில் நாயகியின் பாத்திரம் வலுவாக இருந்தற்கு ஒரு பின்னணி இருக்கிறது.  இந்த படத்தின் நாயகியாக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பானுமதி.   அவரை வைத்து ஒரு முதல் கட்ட படப்பிடிப்பையே முடித்துவிட்டார்களாம்.   இந்த சமயத்தில் நாயகன் இந்து, நாயகி கிறிஸ்து எப்படி தம்பதியாக நடிக்கலாம் என பானுமதி கேள்வி எழுப்ப, கதைஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் முடிவெடுத்து பானுமதியை தூக்கிவிட்டார்களாம். இரண்டாவது கதாநாயகியாய் நடித்து வந்த சாவித்திரியை நாயகியாக நடிக்க வைத்துவிட்டார்களாம். விவாதித்த விசயம் ஒரு பக்கம் இருந்தாலும், கதையில் தன் கதாபாத்திரத்திற்காக சண்டையிட அப்பொழுதே பானுமதியால் முடிந்திருக்கிறது என்பது சந்தோஷமான விசயம் தான்.

தமிழில் வெற்றி பெற்று, தெலுங்கில் என்.டி.ராமராவ், சாவித்திரி நடித்து வெற்றிப்பெற்று, இந்தியில் ஏவி.எம். தயாரித்து,  பிரசாத்தே இயக்கி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றியிருக்கிறது.

மிஸ்ஸியம்மாவின் நினைவலைகள் இந்திய சினிமாவில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.  இந்த படத்தைப் பார்த்த பிறகு என் தோழி ஒருத்தியை 'மிஸ்ஸியம்மா' என்று தான் அழைக்கிறேன்.  2003ல் மீண்டும் இதே பெயரில் தெலுங்கில் பூமிகா நடித்து ஒரு படம் வெளிவந்தது. தமிழிலும் இதே பெயரில் படம் எடுக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. தேடிப்பார்த்தால், அவ்வப்பொழுது மிஸ்ஸியம்மா நினைவில் யாராவது பதிவு எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் தொடர்வார்கள்.

***

3 comments:

Thava said...

அருமையான திரைப்பார்வை..படத்தை இதுவரை முழுமையாக பார்த்ததில்லை..உங்கள் விமர்சனம் சூப்பர்.மிக்க நன்றி.

Unknown said...

உங்கள் விமர்சனம் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டது கண்டிப்பாக வரும் ஞாயிறு படத்தைப் பார்த்துவிட வேண்டியதுதான்...

Dino LA said...

நல்லபகிர்வு...