Monday, March 25, 2013

மனிதர்கள்17 ‍ - சித்ரா

ஒரு பெண் ஸ்கூட்டியில் வேகமாக என்னை கடந்து போகிறார். அவருடைய துப்பட்டா கழுத்தோடு ஒட்டி கிடக்கிறது.  அதன் இருமுனைகளும் காற்றில் படபடக்கிறது. வண்டியின் பின் சக்கரத்தை தொட்டுவிடும் முயற்சியை செய்துகொண்டே இருக்கிறது.

கொஞ்சம் வேகமெடுத்து, "துப்பட்டாவை கொஞ்சம் பாருங்க!" என சொல்லிவிட்டு மீண்டும் மெதுவாய் பயணிக்கிறேன்.  காலையிலிருந்து இப்படி சொல்வது இரண்டாவது முறை!

இப்படி யார் சென்றாலும் சித்ரா உடனே நினைவுக்கு வருகிறாள்.

****

சித்ரா இரண்டாமாண்டு கல்லூரி மாணவி.   துறுதுறுவென இருப்பவள்.  ஒரு கலாட்டா திருமணத்தில் இருவரும் அறிமுகமானோம்.

சித்ராவின் அக்கா உடன் வேலை பார்க்கும் என் (பெரியம்மா பையன்) தம்பியை காதலித்து, இருவரும் அலைபாயுதே ஸ்டைலில் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துகொண்டார்கள். காதலை ஆதரிப்பவன் என்பதால் என்னிடம் உதவி கேட்டான்.

ஒரு நெருக்கடியில் இருவரும்  வீட்டில் தெரிவித்த பொழுது, வேறு வேறு சாதி என்பதால் ஏக களேபரமாகிவிட்டது.  இரு வீட்டாரும் ஏற்கமறுத்தார்கள்.

பிறகு, பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு குடும்பமும் கொஞ்சம் மனம் இறங்கி வந்தார்கள்.  இதில் தம்பியின் பக்கம் இருந்து எல்லா வேலைகளையும் செய்தது நான்.  பெண்ணின் தரப்பில் சித்ரா. அதனால் இருவரும் அடிக்கடி சந்திக்கவேண்டிய தேவை இருந்தது.


சித்ராவிற்கு மூத்த அக்காவை சொந்தக்காரனுக்கு கட்டிக்கொடுத்து, அவன் செய்த கொடுமையால் பிரிந்து வந்து தன் பையனுடன் வீட்டில் இருக்கிறார்.  இரண்டாவது அக்காவின் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்பு சித்ராவிடமும், குடும்பத்திடமும் இருந்தது.

பேச்சுவார்த்தை எல்லாம் சுமூகமாக நடந்து, நானே தலைமை ஏற்று ஒரு முருகன் கோவிலில் கல்யாணத்தை முடித்து வைத்தேன்.(அது தனியாக எழுதுகிற அளவுக்கு ஒரு கதை).

பின்பு ஒரு நாள் சாவகாசமாய் வீட்டிற்கு போயிருந்த பொழுது, அவரின் அப்பா பெருமையாக சொன்னார். என் சின்னப் பொண்ணை தைரியமாக ஒரு பையனை போல வளர்த்து இருக்கிறேன் என்றார்.

*****

இவையெல்லாம் நடந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரிலிருந்து தம்பி செய்தி சொன்னான்.

சித்ரா டிவிஎஸ் 50ல் போய், துப்பட்டா சக்கரத்தில் சிக்கி, கீழே விழுந்து, பின் மண்டையில் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்தான்.

***

இரண்டு நாள்களுக்கு முன்பு ஊருக்கு போயிருந்தேன். மருத்துவமனையில்  சித்ராவை பார்த்தேன்.  இரண்டு ஆண்டுகளில் நிறைய மாற்றம்.  விபத்தும் தன் பங்குக்கு முகத்தை மாற்றியிருந்தது. துறு துறுவென்று வளைய வந்த சித்ராவை ஆளுமை சிதைந்த நிலையில் பார்க்க நிறைய சங்கடமாக இருந்தது.

தன் குடும்பத்து ஆட்களையே சித்ராவால் அடையாளம் காணமுடியவில்லை.  என்னை சுத்தமாகவே தெரியவில்லை.  எப்பொழுது சரியாகும் என்றதற்கு, தொடர்ச்சியான மருத்துவம், ஓய்வுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் என்றார்கள்.

****

அறையிலிருந்து வெளியே வந்தேன். ஒரு பெண் என்னை வேகமாக கடந்து சென்றாள். துப்பட்டா ஒரு பக்கமாய் நன்றாக சரிந்து, மருத்துவமனை தரையை கூட்டிக்கொண்டே சென்றாள்.

*****

2 comments:

நிகழ்காலத்தில்... said...

நானும் இதுபோல் போகிறவர்களைத் தாண்டிச் சென்று சொல்லி இருக்கிறேன். ஆனால் அவர்கள் அது குறீத்து பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை

Anonymous said...

test