Wednesday, June 26, 2013

Raanjhanaa - ஒரு பார்வை

வெகுநாட்களுக்கு பிறகு திரையரங்கில் பார்த்த இந்திப்படம்.  யாராவது பிற மொழியில் நல்ல படம் என தெரிவித்தால், சப் டைட்டிலுடன் டிவிடியில் பார்ப்பது தான் வழக்கம்.  நேற்று ஒரு நண்பருடன் எதைச்சையாக இந்த படத்தை பார்த்தேன். நமக்கு எவ்வளவு இந்தி தெரியும்னா!

'இன்றைக்கு நான் இந்தியில பேசினேன் ஜி!' என இந்தி கற்றுத்தருகிற ஆசிரியரிடம் சொன்னேன். அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். பிராத்மிக் படிக்கிற நம்ம மாணவன் இந்தி பேசிட்டானேன்னு!  என்ன பேசினீங்க! என்றார். இன்றைக்கு ஒருவர் என்னிடம் இந்தியில் வேகமாக பேசி, முகவரி கேட்டார்.  'முஜே இந்தி னஹி மாலும்' என்றேன். போய்விட்டார் என்றேன். அவர் காதில் புகை வந்தது. வேகமாய் நழுவிவிட்டேன்.

எனக்காவது 'ப்யார்', 'சோர்' என பல வார்த்தைகள் தெரியும். நண்பருக்கு சுத்தம். உணர்வுகள் தானே திரைமொழி! அதனால் துணிந்து பார்க்கப் போனோம்.

****

வாரணாசியில் துவங்குகிறது படம். சிறுவயதில் இருந்தே (இந்தியிலுமா!) நாயகன் நாயகியை காதலிக்கிறார். நாயகன் இந்து. நாயகி முஸ்லீம். தொடர் முயற்சியில் நாயகி நெருங்கி வர, இந்து என தெரிந்ததும் விலகுகிறார். பிறகு மீண்டும் நெருக்கம் வர, வீட்டிற்கு தெரிந்து, மேல்படிப்புக்கு தில்லிக்கு அனுப்புகிறார்கள். புதிய உலகம். புதிய சூழல். அங்கு கல்லூரியில் ஒருவரை காதலிக்கிறார். 8 வருடம் கழித்து மீண்டும் ஊருக்கு திரும்ப, நாயகனோ இன்னும் காதலுடன் காத்திருக்கிறார்.  பிறகு வேறொருவரை காதலிக்கும் விசயம் தெரிந்து, நொந்து, அவர்களின் காதலுக்கு உதவி செய்கிறார். (விக்ரமன் படம் நினைவுக்கு வருகிறது!). கல்லூரி காதலன் இந்து. முஸ்லீம் என பெண் வீட்டில் சொல்லியிருப்பது நாயகனுக்கு தெரியவர, கோபத்தில் போய் வீட்டில் உண்மையை சொல்லிவிட, ஏக களேபரமாகிவிடுகிறது. இடைவேளைக்கு பிறகு, அரசியல் அப்படி இப்படி என படம் நகருகிறது. (யப்பா! இத எழுதறதுக்கே எவ்வளவு நாக்கு தள்ளுது)

****

காதல் மட்டும் இல்லையென்றால் இந்தி சினிமாக்காரர்கள் செத்துவிடுவார்கள் போலிருக்கிறது.  இடைவேளை வரை காதல் படமாக நகருவது. இடைவேளைக்கு பிறகு அரசியல் கலந்த படமாக நகருகிறது.  அதிலும் இறுக்கமாக போகாமல், அங்கும் இங்கும் அலைபாய்கிறது.  அந்த அரசியலும் மணிரத்னம் பாணியிலான அரசியலாக இருப்பதால், ஒட்டவில்லை.

தனுஷ்க்கு ஒரு நல்ல அறிமுகத்தை இந்த படம் தந்திருக்கிறது. தனுஷின் நண்பன், தோழியாக வருபவர்கள் இயல்பாக வலம்வருகிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியில் இசை அமைத்திருக்கிறார் என்கிறார்கள்.  ஓரிரு பாடல்கள் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு 'மிளகா' நட்ராஜ். பளிச்சென ஒளிப்பதிவு. இந்தியில் வேலை செய்து சம்பாதித்து, தமிழில் கதாநாயகனாக நடித்து காசை செலவு செய்கிற ஒரு மனுசன். :)

ஆஜானுபானுவான ஆட்கள் இந்தியில் வலம் வரும் பொழுது, அங்கு தனுஷின் நுழைவு பெரிய ஆச்சரியம் தான். தனுஷின் இந்தி உச்சரிப்பு நன்றாக இருந்தது ஆச்சரியம் எனக்கு. வேலை நாளான நேற்று எஸ்கேப்பில் அரங்கு நிறைந்த கூட்டமாக இருந்தது. படத்தில் வசனம் இயல்பாக நன்றாக இருந்ததாக சொல்கிறார்கள்.  பின்னாளில், அம்பிகாபதி டிவிடி பார்த்து புரிந்துகொள்ளவேண்டும். :)  இந்தி சினிமாகாரர்கள் மூன்று மணி நேரம் படம் எடுத்து கொல்வார்கள். அதனாலேயே பெரிய அலுப்பு ஏற்பட்டுவிடுவதுண்டு. பரவாயில்லை. இப்பொழுதெல்லாம் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார்கள். இந்த படம் இரண்டே கால்மணி நேரம் தான் படம்.

****

1 comment:

Anonymous said...

nice, naanum padam parthen mmmmmm sumaar ragam thaan.