Friday, January 17, 2014

வேன் ஹெல்சிங் வீரனும் வேற்றுகிரக தேவதையும்! -கவிதை

நான் வேன் ஹெல்சிங்கில்
வேம்பையரால் கடிக்கப்பட்ட வீரனைப் போன்றவன்

நீ வேற்றுக் கிரகத்திலிருந்து எனக்காகவே தவமிருந்து
வந்திணைந்த தேவதையைப் போன்றவள்

மாறும் என் முகத்தின் உணர்ச்சி பாவங்களை கவனிக்காது
என் மீது சாய்ந்து என் வெற்று மார்புகளை வருடிக் கொண்டிருக்கிறாய்

நீ சந்தேகங்களோ அவநம்பிக்கைகளோ பயமோ இல்லாது வாழ
வரத்தைப் பெற்று வந்தவள்

நானோ கோபப்படும் பொழுதெல்லாம் இரத்தம் குடிக்கும் மிருகமாகச் சபிக்கப்பட்டவன்

என்னிலிருந்து உன்னைக் காப்பது எனக்குப் பெரும் சுமையாக மாறிக்கொண்டிருக்கிறது

என் உருவம் ஒரு நொடியில் விகாரமாவதில்லை
என் முகம் ஒரு நொடியில் அருவருப்பாவதில்லை
என் பற்கள் ஒரு நொடியில் கோரையாவதில்லை
என்னை ஒவ்வொரு நொடியும் நீ கூர்ந்து கவனிப்பதில்லை.

நான் உன்னைத் தொட்டு விலகி ஓடச் சொல்லும் பொழுது
நீ ஏதோ வேலையாய் அசட்டையாய் என் கைகளைத் தட்டிவிடுகிறாய்

என் குரல் கரகரப்பாகும் போதும்
நீ உன்னைக் குறித்து கவலைப்படுவதில்லை
என்னைக் குறித்தே கவலை கொள்கிறாய்.

தோழியே! நீ எப்பொழுதும் என் வார்த்தைகளை உற்றுக் கவனி
தோழியே! நீ எப்பொழுதும் என் நடவடிக்கைகளின் மீது கவனமாக இரு

நீ என்னை விடாது விரும்புவதாய் இருந்தால் 

சற்றே விலகி நிற்கவும் கற்றுக் கொள்

இந்த ஜென்மத்தில் இனி நான் முழு மனிதனாய் மாறுவது
சாத்தியமில்லை என புரிந்து கொள்

நானும் என் கோரைப்பற்களும் கொடும் நகங்களும்
உன்னைச் சீண்டிவிடாதவாறு
எப்பொழுதும் உன்னை எச்சரித்துக் கொண்டே இருக்கிறேன்.

நான் வேன் ஹெல்சிங் வீரனாய் இருப்பதை
விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை
என்பது மட்டும் உனக்குப் புரிந்திருந்தால் போதுமென்று விரும்புகிறேன்.

- மகேஷ்


 பின்குறிப்பு :  பொதுவாக யாருடைய பதிவுகளையும் தளத்தில் பதிவிடுவதில்லை.  இதை ஒரு தளக் கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.  அதையும் மீறி சில பதிவுகள் மிகுந்த அகவிருப்பத்திற்குரியனவாகி விடுகின்றன.
 

இந்த கவிதை எனக்காக எழுதப்பட்டதுபோலவே இருக்கிறது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை வித்தியாசமாக தான் இருக்கிறது...