Friday, April 25, 2014

(அ)சுத்தம் – சில குறிப்புகள்!

காலை 9 மணி. வாஷ்பேசனில் தனது அழுக்கான கையை கழுவ ஆரம்பித்தாள். மதியம் 12 மணி.  இன்னும் அங்கிருந்து நகரவில்லை. கையை கழுவிக்கொண்டிருந்தாள்.  இது எத்தனையாவது முறை. அவளுக்கு அது நினைவில் இல்லை. அழுக்கு போகவில்லை என நம்பினாள்.  மீண்டும் திருப்தி வராமல், அழுக்கை துரத்திவிட வேண்டும் என வெறிகொண்டு கைமுட்டி வரை மீண்டும் சோப்பு போட்டு கழுவ ஆரம்பித்தாள்.
******

வீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக பார்க்க பார்க்க எல்லாமே அழுக்காய் தெரிந்தது.  ஒவ்வொரு பொருளாக வெளியே எறிய ஆரம்பித்தாள்.  மதியத்திற்குள் அந்த வீட்டில் அவள் மட்டும் தனியாக இருந்தாள்.  வேர்த்தது. உடம்பில் கொஞ்சம் பிசுபிசுப்பாய் உணர்ந்தாள்.  குளிக்க ஆரம்பித்தாள்.  குளித்துக்கொண்டே இருந்தாள்.
******

ஒரு தவளை வீட்டிற்குள் வந்து நின்றது.  உற்றுப்பார்த்தாள்.  தவளை ரெம்பவும் அழுக்காய் இருந்தது.  சில நிமிடங்களில் அது ரத்த சகதியில் மிதந்தது.  தவளை எங்கிருந்து வந்தது? யோசிக்க ஆரம்பித்தாள்.  கிணற்றுக்குள்ளிருந்து வந்ததாக தம்பி சொன்னான்.  அந்த தண்ணீரையா நாம் தினமும் பயன்படுத்துகிறோம் என மிக சீரியசாக சிந்திக்க ஆரம்பித்தாள்.
*****

தன் பெண்ணுக்கு குறை இருப்பதாக மாப்பிள்ளை பொய் சொல்வதாக அப்பா நம்பினார்.  ஒரு மாதத்திற்கு தன்னுடன் இருக்கட்டும் என அழைத்து சென்றார்.

“அப்பா! அந்த பிச்சைக்காரன் கடந்து போனேனே!  என் துப்பட்டா பட்டுச்சாப்பா!”
“இல்லம்மா! அவன் ரெம்ப தள்ளிப்போனாம்மா!  அதெப்படிம்மா பட்டு இருக்கும்?”
“இல்லப்பா! துப்பட்டா காத்துல பறந்து, அவன் மேலே பட்டுருச்சுப்பா!  நீங்க கவனிக்கல!” என ஆணித்தரமாய் சொன்னாள்.  துப்பட்டாவை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு நகர்ந்ததும் கொஞ்சம் நிம்மதியடைந்தாள். 

“நீங்க சொன்னது உண்மை மாப்பிள்ள!  நானே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்!” என சின்னப்பிளை போல அழ ஆரம்பித்தார்.
****

கணவனுக்கு போன் அடித்து “நம்ம வீட்டுல இருந்த நகைகளை காணோம்!” என்றாள்.  மதியத்திற்குள் 10வது முறை போன் அடித்து, “போலீசு ஸ்டேசனில் புகார் கொடுக்கனும். சீக்கிரம் வாங்க!” என்றாள் படபடப்பாய்!
நகையும் கொஞ்சம் அழுக்காக தானே இருக்கும்! 30 பவுன் நகைகள். எப்பொழுது தூக்கிப்போட்டாளோ என கணவனுக்கு கவலை அரிக்க ஆரம்பித்தது! L

****

3 comments:

Anonymous said...

வணக்கம்
சிறு பிள்ளை விளையாட்டுப் போல....அவள்..பகிர்வுக்கு நன்றி
என்பக்கம் கவிதையாக
எப்போது ஒளிருமட வசந்த காலம்...... வாருங்கள் அன்போடு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

துளசி கோபால் said...

இது மன அழுத்தத்தின் அறிகுறி.

OCD என்ற ஒரு வகை:(

சுரேஷ் said...

கேட்டாலே பயமாக தான் இருக்கிறது. சம்பந்தபட்டவரும், அவருடைய குடும்பத்தினரும் எவ்வளவு சிரமப்படுவார்கள் என நினைக்கும் பொழுது, வருத்தமாக இருக்கிறது. விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.