Saturday, November 27, 2010

நொந்தகுமாரனின் பக்கங்கள் - எலி வேட்டை!


கடந்த வாரத்தில் ஒரு நாள் அனைவரும் தூங்கி கொண்டிருந்த பொழுது, நான் படித்துக்கொண்டிருந்தேன். சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் விட்டு விட்டு வந்தது. சத்தமில்லாமல் போய் பார்த்தால், பின்னால் இருந்த வீட்டிலிருந்து வந்தது அந்த சத்தம். அமைதியானேன்.

அன்றிலிருந்து நாலாம் நாளில் வீட்டின் பொருட்களின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்ததில்... ஒரு எலியின் நடமாட்டம் லேசாக தெரிந்தது. அந்த வீட்டில் என்னையும் சேர்த்து ஐந்து பேர் வாழ்கிறோம். காலையில் எழுந்தால், அரக்க பரக்க வேலை. இரவானதும் வீட்டில் அடைகிறோம். நாங்கள் ஏதோ ஒரு பொந்துக்குள் வாழும் பெருச்சாளிகள் போலவே மனதில் அவ்வப்பொழுது தோன்றும். வீட்டு நிலையும் அப்படித்தான். ஆங்காங்கே துவைக்காத ஆடைகள், துவைத்த ஆடைகள், இரண்டு மூன்று கீ போர்டுகள் என எல்லாம் கலந்து காக்டெயிலாக வீடு இருக்கும். இப்போதைய உடனடி கவலை நடமாடுவது சுண்டெலியா, எலியா, பெருச்சாளியா என தெரியவில்லை.

வழக்கமாய் அறிவிப்பது போலவே அறிவித்தேன். "எலி நடமாட்டம் தெரியுது. என்ன சைஸ்னு தெரியல! கடந்த முறை மாதிரி ஏதும் நடந்துடக்கூடாது. ஆதலால், உஷாரா இருங்க". மண்டையில் அலாரம் அடித்திருக்கும் போல! துவைக்காத துணிகளை லாண்டரியில் போட்டார்கள். மீதி துணிகளை தேய்க்க கொடுத்தார்கள். தேவையில்லாத குப்பைகள் சேர வேண்டிய இடத்திற்கு போயின. இரண்டு நாளில் அறை சுத்தமாக மாறியது. நானும் கரடியா கத்திகிட்டு இருந்தேன். அப்ப எல்லாம் மதிக்காதவங்க...இப்ப ஒரு எலிக்கு பயப்படுகிறார்கள் பாவிகள்.

சனி, ஞாயிறு இரண்டு நாள்களில் ஊருக்கு கிளம்பிவிட்டோம். மீண்டும் திரும்பினால், சமையலறையில் ஒரே களேபரம். எலி சுதந்திரமாக விளையாடிருந்தது. டீத்தூள், ஜாம், சமையலறை சாமான்கள் என சேதப்படுத்தியிருந்தது. சேத விவரத்தை கணக்கிட்டால் ஐநூறை தாண்டியது. ஆளாளுக்கு ஆத்திரமாகி, அந்த எலிக்கு எங்கள் அறைக்கோர்ட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டது. எப்படி நிறைவேற்றுவது? மருந்து, பொறி என பலவாகவும் பேசி இறுதியில் நேரடியாக தாக்குவது என முடிவெடுத்தோம்.

அன்று மாலை முதலில் வந்தவன் எலியின் நடமாட்டத்தை உணர்ந்து, பின்னாலே போய், மோப்பம் பிடித்து...அட்டை பெட்டிக்குள் இருக்கிறது என கண்டுபிடித்து வைத்திருந்தான். நாங்கள் எல்லோரும் வந்ததும் ஆளாளுக்கு ஒரு வலுவான ஆயுதத்தை எடுத்துக்கொண்டார்கள். நால்வரையும் பார்த்தேன். கண்களில் கொலை வெறி. போட்டு தள்ள நெருங்கும் பொழுது, என் மண்டைக்குள் ஒரு அசரிரீ 'டாம் & ஜெர்ரி யில் அந்த குட்டி எலி.. என்னவெல்லாம் செய்து பெருநகர மன அழுத்தத்தலிருந்து உன்னை விடுவித்திருக்கிறது. அதை கொல்லப் பார்க்கிறாயே!" கேட்டது. என்னையறியாமல்..."அப்படியே விட்டுவிடலாம். போகட்டும்" என்றேன் கையில் உள்ளதை கீழே போட்டு. எல்லோரும் என்னையே திரும்பி பார்த்தார்கள். "என்னடா இவன் எலி ஜூரம் வந்தவன் போல பினாத்துறான்" என்றான் ஒருவன். இப்படி பேசிக்கொண்டிருந்த பொழுதே, எலி ஓடிவிட்டது. " தப்பிக்க விட்ட எலியோ, அதனுடைய தோஸ்த்தோ திரும்ப வந்து எங்க பேன்ட், சட்டையெல்லாம் கடிச்சு துப்பிச்சுன்னா, மவனே நீதான் பொறுப்பு" என எச்சரித்து கலைந்தார்கள். எலி போன திசை பார்த்து சிரிப்பு வந்தது ஜெர்ரி நினைவில்.

5 comments:

Anonymous said...

Tom And jerry cartoon is like by everybody including adults. my sisters favourite cartoon. when i read this post i got the experience of one more tom and jerry episode.

Anonymous said...

உங்க அனுதாபம் தாங்க முடியல நொந்தகுமார்

sathya said...

எலியை விரட்ட ஒரு படத்தில் ரொம்ப கக்ஷ்டபடுவாங்க முரளியும், வடிவேலுவும் அந்த படம் நியபகத்துக்கு வருகிறது

Anonymous said...

adapaavingala.... ithellaam over peeling-a theriyala?

குமரன் said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனானி அவர்களுக்கு, சத்யா, பிரேம்குமார் மாசிலாமணி அவர்களுக்கும் நன்றிகள். நமக்கு கொஞ்சம் இரக்க சுபாவம் ஜாஸ்தி. குழந்தைதனமும் இன்னும் விட்டுப்போகலை என்பது தெரிகிறது.