Friday, June 15, 2012

சாப்பாடு - சில குறிப்புகள்!

நான்கு ஆண்டுகள் இருக்கலாம்.  வேலை தொடர்பாக சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்து போகும் பொழுது, புரசைவாக்கம் சரவணபவனில் மதிய சாப்பாடு சாப்பிடுவேன். சாம்பார், துவையல், பொரியல், கூட்டு என எல்லாமும் சுவையாக இருக்கும்.  மதுரை 'டச்' இருக்கும்.  இரண்டுமுறையாவது பொரியலும், கூட்டும் வாங்கி சாப்பிடுவேன்.

நாவில் இருந்த சுவையின் ஆர்வத்தில் இன்று அண்ணாநகரில் உள்ள சரவணபவன் போயிருந்தேன்.  சாம்பார் துவங்கி எல்லாவற்றிலும் 50% சுவை குறைந்திருந்தது. எல்லாவற்றிலும் உப்பு 70% தான் இருந்தது.  பக்கத்தில் உப்பு புட்டியை வைத்திருந்தார்கள்.  பில்வரும் பொழுது தான் அர்த்தம் புரிந்தது.  அளவு சாப்பாடே ரூ. 75.  வசதியானவர்கள் வரக்கூடிய இடமாகி போனதால், உப்பின் அளவை குறைத்திருக்கிறார்கள் என அறிந்தேன்.  முன்பெல்லாம் எல்லா குழம்பு வகைகளையும், பொரியல், கூட்டு வகைகளை கையில் வைத்து, கூப்பிடாமலே பரிமாறுவார்கள்.  இன்றோ வாய்விட்டு கேட்டு, காக்க வைத்து தான் பரிமாறினார்கள்.

சென்னையில் மதுரை 'டச்'சில் சாப்பாடு கிடைப்பது அபூர்வம்.  கிடைத்த ஒரு கடையை இழந்ததில் வருத்தம் அதிகம். :(

***

நானும் பலமுறை கவனித்துவிட்டேன்.  ஒரு பகுதியில் குடியேறி, ஒவ்வொரு உணவகமாக சாப்பிட்டு, பகுதிக்கு ஒரு கடை தான் சாப்பிடும்படி தேறுகிறது.  நானாவது பரவாயில்லை.  வீட்டில் சமைப்பதற்கு ஒரு அம்மா வருகிறார்.  மூன்று வேளையும் சென்னையில் உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உண்மையிலே 'சாபம்' வாங்கியவர்கள்.  பர்சு காலியாகும். வயிறும் புண்ணாகும்.  நாக்கு செத்துப்போகும்!

***

சமையல் என்பது ஒரு வேதியியல் தொழிற்சாலை தான். நம் தமிழக சமையல்முறை என்பதோ பல பொருட்கள் சேர்க்கப்படும் சுவையான சமையல்.  நான் ஒவ்வொருமுறை சமைக்கும் பொழுதும் சாம்பார் ஒவ்வொரு சுவையுடன் வருகிறது.  அம்மாக்களின் கைப்பக்குவத்தில் எப்படி ஒரே மாதிரி அருமையான சுவையுடன் வருகிறது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்.  தண்ணீரை சுடவைத்தால், ஒரு நிலையில் ஆவியாகும் அல்லவா!  அது போல நம் அக்காக்கள் பல காலம் சமைத்து ஒரு "சிறப்பு தேர்ச்சி" பெற்றிருக்கிறார்கள் என்பதாக அறிகிறேன்.

நமது சமையல் முறை கொஞ்சம் அதிக பொருட்கள் அடங்கியிருப்பதாலே நிறைய நேரத்தை சாப்பிட்டுவிடுகிறது.  அதைவிட சலிப்பூட்டும் வேலை.  பாத்திரங்களை கழுவும் வேலை.  இதற்காகவே பலமுறை சமைக்காமல் விட்டதுண்டு!

சமையலறை இன்னொரு துயரம்.  சமைப்பதில் ஏற்படும் சோர்வு இருமடங்காகிறது.  காரணம் சமையலறை சிறியதாக, காற்று உள்ளே வராத அளவிற்கு, இருட்டாக இருக்கிறது.  ஆண்கள் சமையல் கட்டு பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது.  பெண்களும் ஏன் இவ்வளவு சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்.

சமையலில் புழங்கும்பொழுது ஒரு விஷயம் மண்டையில் உறைக்கிறது.  நம் அம்மாக்களையும், அக்காக்களையும் பல காலம் அடுப்படியில் தள்ளி அவர்களை காலி செய்திருக்கிறோம்.  இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு தற்காலிகமாக ஆண்களும் சமையலில் ஈடுபடவேண்டும். கொஞ்சம் தூரப்பார்வையில் சமையல் அறை இல்லாத வீடுகள் உருவாக்கப்படவேண்டும்.  தெருவுக்கு ஒரு சமையல் கட்டு.  கூட்டு சமையல். கூட்டு சாப்பாடு என்பதாக வாழ்க்கை விரியவேண்டும்.

***

2 comments:

rajamelaiyur said...

//இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு தற்காலிகமாக ஆண்களும் சமையலில் ஈடுபடவேண்டும்
//
திருமணம் முடிந்ததும் பார்ப்போம் .. யார் சமையல்ன்னு

CS. Mohan Kumar said...

மிக உண்மை