Friday, July 13, 2012

ஒரு அரியர்ஸ்-ம் தொடர் சோகமும்!

நண்பரின் அண்ணன் அவர்.  இரண்டு நாள்களுக்கு முன்பு பார்த்தேன். தன் கதையை நீண்ட நேரம் சொல்லிக்கொண்டிருந்தார். சுருக்கமாய் அவர் சோகத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

ஆசிரியர் பயிற்சிக்காக 2003ல் ஒரு தனியார் கல்லூரியில் படித்தார்.  தனிப்பட்ட சில பிரச்சனைகளால், இறுதி தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாமல் போனார். அங்கு தொடங்கியது அவருக்கான சோதனை.

அந்த ஆண்டு அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அனுமதியில்லாமலும், முறையில்லாமலும் நடத்தப்பட்ட பல தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்தது.  அதில் அந்த ஆண்டு தேர்ச்சியடைந்தவர்கள் தப்பித்தார்கள்.  தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரசு தனது பயிற்சி கல்லூரிகளில் பெருந்தன்மையாக இடம் கொடுத்து படிக்க அனுமதித்தது.  மீண்டும் ஒரு வருடம் முதலிருந்து படித்தார்.

இன்னும் சில ஆண்டுகளில் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கட்டிட சூப்பிரவைசராக பணிபுரிந்தார்.  அவருடன் 2003ல் படித்த நபர்களுக்கு 2010 வாக்கில் வேலை கிடைத்தது. இவர் ஒரு வருடம் தள்ளி தேர்வானதால், அடுத்த வரும் ஆண்டுகளில் வேலை கிடைத்துவிடும் நம்பிக்கையோடு இருந்தார். 

அடுத்து வேலை வாய்ப்பு மூப்பு என்பது இனி மாவட்ட அளவில் இல்லை. மாநில அளவில் என அரசு ஒரு அறிவிப்பு செய்தது.  நொந்தே போனார்.  வேறு வழியில்லை.  காத்திருக்கலாம் என ஆறுதல் செய்துகொண்டார். 

அரசே அடுத்த அதிர்ச்சியும் தந்தது  'தகுதி தேர்வு எழுத வேண்டும்'!  பார்க்கிற வேலையையும் விட்டுவிட்டு, ரூ. 10000 கட்டி ஒரு கோச்சிங் வகுப்பில் சேர்ந்து ஒரு மாணவனை போல, விழுந்து விழுந்து படித்தார். படிக்கும் பொழுது, வயது 40 ஐ நெருங்கிவிட்டதால், நினைவாற்றல் மங்கி கொண்டு வருகிறது! என புலம்பினார்.ஒரு அரியர் வைச்சது தப்பாயா?! என வடிவேல் பாணியில் புலம்பிகொண்டு இருக்கிறார்.

நேற்று தகுதி தேர்வு எழுதி முடித்து, பேட்டி தந்த பல ஆசிரியர்கள் 'கேள்விகள் கடினமாக இருந்தது.  நேரம் குறைவாக இருந்தது' என கண்ணீர்விட்டார்கள்.   நண்பரின் அண்ணனுக்கு ஆறுதல் சொல்ல போன் அடித்தால், ரிங் போய்க்கொண்டே இருக்கிறது!

2 comments:

vimalanperali said...

வாழ்க்கையில் காத்திருக்கிற அரியர்ஸ்கள் பல/

bandhu said...

கொடுமை! He fell through the cracks in the system!