Saturday, August 11, 2012

ராட்டினம் - ஒரு திரைப்பார்வை!

20 ஆண்டுகளுக்கு முன்பு மோகன், பூர்ணிமா நடித்த 'கிளிஞ்சல்கள்' என ஒரு படம்.  நம் பக்கத்து வீட்டில் நடந்தது போல ஒரு காதல் கதையாக இருக்கும். சினிமாத்தனம் இல்லாத படம் அது! அப்படி ஒரு படம் ராட்டினம்! என்னடா படம் வந்து சில மாதங்கள் கழித்து எழுகிறானே என நீங்கள் நினைக்கலாம்.  படங்களை உடனுக்குடன் பார்க்கிற ஆள் இல்லை நான்.  அப்படி உடனுக்குடன் பார்த்த உத்தமபுத்திரன், ராஜப்பாட்டை, எப்படி சித்ரவதை செய்தன என்பது புலம்பித்தீர்த்த எனக்கு தான் தெரியும்! அப்படி எவ்வளவு மோசமான படங்களை கூட படம் முடியும் வரை பார்த்து, நொந்து, வெந்து எழுதும் பதிவர்களுக்கு பதிவர்களும், சினிமா வாசகரும் நிறைய நன்றிகடன் பட்டவர்கள்.

****

கதை எனப் பார்த்தால்...

நண்பனின் காதலுக்கு நாயகன் உதவ போய், ஒரு +2 படிக்கும் பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்.  பெண்ணின் அப்பா தூத்துக்குடி துறைமுகத்தில் அரசு உயரதிகாரி.  மாமா வழக்கறிஞர்.  பையனின் அண்ணன் ஒரு கட்சியில் வளர்ந்து வரும் ஒரு நபர். அண்ணி கவுன்சிலர். 

காதல் இரண்டு குடும்பத்திலும் மோதலை உருவாக்குகிறது.  காதலில் உருகுகிறார்கள் காதலர்கள். களேபரங்களுக்கிடையில் நாயகன் நண்பர்களின் உதவியுடன் கல்யாணம் முடிக்கிறார். கட்சியின் மாவட்ட செயலருக்கு தன் தொழிலுக்கு பெண்ணுடைய அப்பாவின் தயவு தேவைப்படுகிறது.  ஆகையால் தன் கட்சிகாரனான நாயகனின் அண்ணனையே போட்டுத்தள்ளுகிறார். இந்த சாவுக்கு பிறகு காதலர்கள் இருவரும் வேறு வேறு திருமணங்கள் முடிந்து செட்டிலாகிறார்கள்.  இவர்களின் காதலால், தனது மூத்தப்பையனை இழந்த (நாயகனின்) அப்பா மாவட்ட செயலாளரை ஆள் வைத்து கொல்கிறார்.  படத்தின் இறுதியில் இறந்த பையனை நினைத்து கண் கலங்குவதோடு படம் முடிவடைகிறது.

****
'நாடோடிகள்' படத்தில் இறுதியின் மேட்டுக்குடி காதலைப் பற்றி நாயகன் நீண்ட லெக்சர் போல அடிக்காவிட்டாலும், அழுத்தமாக சில செய்திகளை, உணர்வுகளை படம் சொல்லி செல்கிறது. அது என்னவென்றால், விடலைப் பருவத்து காதல்கள் தங்கள் காதலால் தங்கள் சொந்த, பந்தங்களுக்கு ஏற்படும் துன்ப, துயரங்களை, இழப்புகளை காண மறுக்கிறது என்பது படம் சொல்லும் செய்தி.

படம் சொல்வது போல, அப்படி கணக்கிட்டு காதலிக்க முடியுமா?  என்றால் என்ன நடக்கும்?

"நீயும் நானும் ஒரு சாதி!
எந்தன் தந்தையும்,
உந்தன் தந்தையும்
மாமன் மச்சான்கள்!
செம்புல பெயல் நீர்ப்போல
ஒன்று கலந்தனவே!'

என புகழ்பெற்ற கவிதை போல ஆகும்!

இந்த படம் காதலுக்கு மரியாதையில் காதலால் கட்டுண்டாலும் கொஞ்சம் சுதாரித்து (!) குடும்பத்தின் பாசம், மானம், மரியாதை, கெளரவம் மற்றும் இன்னபிற இத்யாதி வஸ்துகளுக்கு மதிப்பளித்து பிரிவது என முடிவெடுப்பது தான் சரி என்ற முடிவுக்கு தான் வரமுடியும்.  இது காதலுக்கு செய்யும் மரியாதை அல்ல! அவமரியாதை!

அப்படி 'காதலுக்கு மரியாதை' காதலர்கள் போல, பிரிந்து, பெற்றொர்களிடம் பிள்ளைகள் போனால், பிள்ளைகளின் பெருந்தன்மை பார்த்து சேர்த்து வைப்பார்களா?  அதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும். இயல்பில், உடனே சட்டென்று தங்களுடைய சுயசாதியில், உட்பிரிவில் ஒரு பையனை/பெண்ணைப் பார்த்து திருமணம் முடித்துவிடுவார்கள்.

சாதிய சமுகம் உடைய வேண்டுமென்றால்  சாதி மறுப்பு திருமணம் செய்வது ஒரு வழி.  சமூகத்தில் இதை புரிந்துகொண்ட முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் தனது சொந்தங்களுடன் போராடி சாதிமறுப்பு திருமணம் செய்கிறார்கள்.  அந்த போராட்டத்தில் பலர் தோற்றுப் போவதும் உண்டு.   சமூகத்தில் முற்போக்கு எத்தனை சதவிகிதமோ அதைவிட குறைவாக தான் சாதிமறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன.  ஆக காதல் தான் பலரையும் சாதியை மறந்து திருமணத்தில் முடித்துவைக்கிறது.
இப்பொழுதெல்லாம் சமூகத்தில் காரியவாதம் மிஞ்சி நிற்பதால், காதலிப்பது ஒரு நபரை! சுயசாதி, பெரும்வரதட்சணை பலன்களுக்காக திருமணம் செய்வது வேறு ஒருவரை என்பதாக இருக்கிறது.

ஆக படம் சொல்லும் சேதிக்கு பின்னால், இப்படி பல அபாயங்கள் இருக்கிறது. படம் பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்!

மற்றபடி படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் புதுமுகங்களாக இருந்தாலும், இயல்பாக வலம்வருகிறார்கள்.  புதிய இயக்குநர் என தெரியாத அளவிற்கு படத்தின் தரம் இருக்கிறது. நாயகனின் அண்ணனாக வருகிறவர் தான் படத்தி இயக்குநர்.

இப்பொழுது தேடினாலும், திரையில் பார்க்க உங்களுக்கு வாய்ப்பில்லை. 30ரூக்கு நல்ல தெளிவான பிரிண்டில் டிவிடி கிடைக்கிறது. வாங்கிப்பாருங்கள்.  இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை.  இன்னும் சில நாள்களில் ஏதோ ஒரு சின்னத்திரையில் "உலக வரலாற்றில் முதன்முறையாக" என பில்டப் செய்து, வெளியிடுவார்கள்.  பார்த்து கொள்ளுங்கள்.

****

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான விமர்சனம்...

அடுத்த வாரத்தில் தொலைக்காட்ச்சியில் வந்தாலும் வந்து விடும்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

ஹாலிவுட்ரசிகன் said...

நான் கூட அண்மையில் தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். வித்தியாசமான நல்ல படம். அனேகமாக விஜய் டிவியில் வர வாய்ப்புக்கள் அதிகம்.

நல்ல விமர்சனம்.

Anonymous said...

Miga Arumaiyana padam.WWW.Einthusian .com -original print ulladhu.Teenagers with family kaana vendiya padam

ravisrad said...

Miga Arumaiyana padam.WWW.Einthusian .com -original print ulladhu.Teenagers with family kaana vendiya padam